திருக்குறள் செய்திகள்/14

விக்கிமூலம் இலிருந்து

14. ஒழுக்கம் உடைமை

இமயத்தின் உச்சி உயரமானது; அதனை நச்சி ஒருவன் ஏற முனைகிறான்; அதற்கு ஆற்றல், பிடிப்பு, நெஞ்சுறுதி இவை தேவைப்படுகின்றன; ஒழுக்கம் உயரமானது; அஃது உயர்வு தருகிறது. அஃது அவனை மிகவும் உயரத்தில் வைக்கிறது என்றாலும் அதன் படிகள் கடுமையானவை; பிடிப்பு விட்டால் தடுக்கி விழவேண்டியதுதான். ஒழுக்கம் உயர்வு தருவதால் அதனை உயிரினும் மேலாகக் கருதிப் போற்ற வேண்டும்.

ஒழுக்கம் ஒழுக்கம் என்று சொல்லி அறுத்துக்கொண்டு இருக்கிறார்கள்; அலுத்துவிட்டது; ஒழுக்கத்தைக் கை விட்டால் என்ன? விஷப்பரீட்சை செய்யாதே; ஒழுக்கத்தைக் கைவிட்டால் மிகப் பள்ளத்துக்குள் வழுக்கி விழுவாய். உன்னை மீட்பதற்கு எந்த நூல் ஏணியும் பயன்படாது.

குடுமிவைத்த பார்ப்பான் படித்து வைத்த வேதத்தை மறந்தான்; சாத்திரம் கற்ற ஐயன்மார்கள் அதற்காக அவனைச் சாதியில் இருந்து விலக்கவில்லை. “மறுபடியும் படித்துக் கொண்டு வா” என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். மறுநாள் நீதியை விட்டு நியதியை மறந்தான்; நல் ஒழுக்கத்தைத் துறுந்தான். அவன் பூணுால் அன்று முதல் களையப்பட்டது.

பழி ஏற்பட்டுவிட்டால் அதிலிருந்து மீள்வதற்கு வழியே ஏற்படுவதில்லை; வேதத்தை மறந்தாலும் படித்துக் கொள்ளலாம். ஒழுக்கத்தைத் துறந்தால் சரிப்படுத்திக் கொள்ள இயலாது.

அழுக்காறு கொண்டு அதே வேதனையில் ஒருவர் தாம் ஏதும் செய்யாமல் அழிந்துவிடுவதும் உண்டு. அதே போல ஒழுக்கம் தவறியவன் எவனுமே நிலைத்து முன்னேறுவதில்லை; உயர்வு அவனிடம் செல்ல மறுத்துவிடுகிறது.

ஒழுக்கம் உயர்வு தரும்; இழுக்கம் பழியைத் தரும். ஒழுக்கம் உடையவன் சொல்லாலும் சோர்வுபடப் பேச மாட்டான். கீழ்நிலையில் வாழும் ஒருவன் பேசும்மொழி, சேற்று நிலத்துச் சொற்களாக அமைவது உண்டு. வேற்று ஆள் ஒருவன் அதனைக் கண்டாலும் இவ்வாறு பேசக் கூடாது என்று சுட்டிக் காட்டமாட்டான். மேன்மக்கள் தவறியும் தாழ்சொற்களை உதிர்க்கமாட்டார்கள். வாய்தவறி அச்சொற்களில் கறை ஏற்பட்டால் அந்தக் குறை வெள்ளைச் சட்டையில் பட்ட கறுப்பு மையாக வெளிக்காட்டி விடும். அதனால் அவர்கள் விழிப்போடு இருப்ப்ார்கள்: வார்த்தை வழுச் செய்யமாட்டார்கள்.

கோபுரக் கலசம் அது கீழே இறங்குவதில்லை. அஃது ஒளிவிட்டுக் கொண்டே இருக்கிறது. குப்பைக் கோழி புழுப்பூச்சியைத் தின்றுகொண்டு தரையில் மேயும். ஒழுக்கத்தில் உயர்ந்தவன் மேலோன்; ஒழுக்கம் தாழ்ந்தோன் கீழோன் ஆகிறான்.

ஒழுக்கம் என்பது நன்னடத்தையும் ஆகும். உயர்ந்தோர் காட்டிய வழியில் நடப்பது உயர்வுதரும். நூல் பல கற்ற வராயினும் உலக நடை அறிந்து ஒழுகுவது அவசிமாகும். உலகநடை என்பது உயர்ந்தோர் சுட்டிக்காட்டும் நன்னெறிகளே.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/14&oldid=1106288" இலிருந்து மீள்விக்கப்பட்டது