திருக்குறள் புதைபொருள் 2/005-010

விக்கிமூலம் இலிருந்து

5. சுற்றம் கெடும்

       "கொடுப்ய தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
        உண்பதூஉம் இன்றிக் கெடும்."

என்பது திருக்குறளில் ஒரு குறள். இது “அழுக்காறாமை” என்ற தலைப்பில் வந்த ஒன்று.

அழுக்காறு என்பது பொறாமை எனப்படும். அழுக்காறாமை என்பது பொறாமையின்மை என்றாகும். “பொறையுடைமை” பற்றிக் கூறிய பின்னும், “பிறர் பொருளை விரும்பாமை” பற்றிக் கூறுவதன் முன்னும், “பொறாமை கொள்ளாமை” பற்றிக் கூறியிருப்பது பெரிதும் நயமுடையதாகும்.

அழுக்கறுத்தல் உள்ளத்தை அழுக்குப்படுத்தல். அழுக்கறுப்பான் உள்ளத்தை அழுக்குப்படுத்திக் கொள்பவன். பொறாமை அதன் விளைவு; தடுப்பது அவனது செயல்.

உள்ளத்தை அழுக்குப்படுத்திக் கொண்டவன் நினைப்பது—கேடு. சொல்வது-பழிச்சொல். செய்வது-இழிவினை. ஆதலாலே, அது தீநெறி ஆகிறது.

"ஒருவன் பிறனுக்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமைப்பட்டு, அதனைத் தடுப்பது தவறு. அது அவனையும், அவனது சுற்றத்தாரையும் கெடுத்துவிடும்" என்பது இக் குறளின் பொருள்.

ஒருவன் கொடுப்பதை-படிப்பதை-முன்னேறு வதைக் கண்டு விரும்பித் தானும் அவ்வாறு செய்ய வேண்டும் என முயற்சிப்பது “பொறாமை” ஆகாது. அது “ஊக்கம்” என்றாகிவிடும். தா னு ம் அவ்வாறு செய்யாமல், பிறர் செய்வதையும் பொறாமல், அவனைத் தடுக்கும் இழிசெயலே “அழுக்கறுத்தல்” என்றாகும். இதனையே இக் குறளிலுள்ள “கொடுப்ப தழுக் கறுத்தல்” என்பது கூறுகிறது.

“அழுக்காறு கொண்டு தடுப்பது தீது; அவன் கெடுவான்” எனக் கூறவந்த வள்ளுவர், அவ்வாறு கூறாமல் “தடுப்பவனது சுற்றம் கெடும்” என இக் குறளிற் கூறியிருப்பது ஆராயத் தக்கதாகும்.

“கேடு” அடைவதற்கும் ஒரு அளவுண்டு. உண்பதற்கு நல்லுணவு கிடைக்காத அளவிற்குச் சிலர் கேடடைவர்; ஆனால், இவனது சுற்றமோ உண்ணுவதற்கு எதுவுமே கிடைக்காத அளவிற்குக் கேடுறுமாம். அது மட்டுமல்ல, உடுத்துவதற்கு நல்லாடை கிடைக்காத அளவிற்குச் சிலர் கேடடைவர்; ஆனால், இவனது சுற்றமோ உடுத்து வதற்கு எதுவுமே கிடைக்காத அளவிற்குக் கேடுறுமாம். இவ்வுண்மையை, இக் குறளிலுள்ள “அழுக்கறுப்பான் சுற்றம் உண்பதூஉம், உடுப்பதூஉம் இன்றிக் கெடும்” என்ற சொற்றொடரால் நன்கறியலாம்.

உடையின்றேல் இழிந்துபோவான். உணவின்றேல் மெலிந்து போவான். அதுவும், ஒருவனுக்கு இந்த இழி நிலை; வீடு, நிலம், தொழில், பணம், பண்டம் முதலிய அனைத்தும் இழந்த பிறகே ஏற்படும். ஆதலின் இக் கேடு பெருங்கேடு ஆகும் என்பதையும், இவ்விழப்பு பேரிழவு ஆகும் என்பதையும், இக்குறளிலுள்ள “இன்றிக் கெடும்” என்ற இரு சொற்களும் அறிவித்துக் கொண்டிருக்கின்றன.

அழுக்காறு கொண்டவன் கெடும்பொழுது அவனது சுற்றத்தார் நன்னிலையில் இருந்தால், அவனைக் கெட விடாது காப்பாற்றிவிடுவர். ஆகவே, அதற்கும் வழியில்லாமல், அவர்களும் கெட்டுவிடுவர் என்பதே “சுற்றம் கெடும்” என்பதன் பொருள்.

ஒருவன் பிறரிடமிருந்து பெறுவதை நீ தடுத்தால், சுற்றத்தாரிடமிருந்து பெறவேண்டிய இழிநிலை உனக்கே வந்துவிடும் என எச்சரிப்பதாகவும், “சுற்றம் கெடும்” என்பது இக்குறளில் அமைந்திருக்கிறது.

அழுக்காறுகொண்டவனுடைய சுற்றத்தார் கெட்டு விடுவர். அப்பொழுது அவன் தன்னிடமிருப்பதையெல்லாம் அவர்களுக்கு வழங்கி வழங்கி, இறுதியில் அவனும் கெட நேரிட்டுவிடும். என்பதும், “சுற்றம் கெடும்” என்பதன் பொருளாகும்.

ஒருவன் பிறனுக்கு வழங்குவதை நீ தடுத்தால், உன் சுற்றத்தார்க்கு வழங்கவேண்டிய நிலை உனக்கே வந்துவிடும் என்பதையும், “சுற்றம் கெடும்” என்பது சொல்லிக் கொண்டிருக்கிறது.

நீயும் உனது சுற்றத்தினரும் ஒருவருக்கொருவர் வழங்கியோ, வழங்க முடியாமலோ, இருவருமே கெட்டு விடுவீர்கள் என்ற உண்மையும், “சுற்றம் கெடும்” என்பதில் அடங்கியிருக்கிறது.

நீயும் கெட்டு உனது சுற்றமுங் கெட்டுவிடும்; ஆதலின் உனக்கென் றில்லாவிடினும் உனது சுற்றத்தினரைக் காப்பாற்ற என்றாவது நீ பிறரிடம் சென்று இரக்கவேண்டி வரும் என்ற கருத்தும், "சுற்றம் கெடும்" என்பதில் இல்லாமலில்லை.

அழுக்கறுப்பவனும் கெட்டு, அவனது சுற்றத்தாரும் கெட்டு, இரந்து வாழும் இழிநிலைக்கு அவர்களின் கூட்டமே வந்துவிடுமானால், அவர்களால் சமூகத்திற்கு விளையப்போகும் கொடுமைகள் எது எதுவாக விருக்கும் என்பதையும், இக்குறளிலுள்ள "கெடும்" என்ற சொல் நம்மை சிந்திக்கச் செய்கிறது.

ஒருவனுக்குத் தான் கெடுவதைவிட தன் சுற்றத்தார் கெடுவதால் உண்டாகும் துன்பம் அதிகமாகும். ஆகவே அழுக்கறுக்கும் ஒருவன் அப்பெருந் துன்பத்தை அடைய நேரிட்டுவிடும் என்பதையும், "சுற்றம்கெடும்" என்றதால் வள்ளுவர் சுட்டிக்காட்டுகிறார் போலும்.

எப்போதுமே ஏதுமில்லாது தாழ்ந்து வாழ்ந்தவர் படும் துன்பத்தைவிட, உயர்ந்து வாழ்ந்தவர் தாழ்ந்து படுந் துன்பம் மிகக் கடுமையானதாக இருக்கும் என்பதை, இக்குறளிலுள்ள (கெடாது) 'சுற்றம் கெடும்' என்ற எச்சரிக்கையால் அறிய வேண்டியிருக்கிறது.

ஒருவன் பிறனுக்கு வழங்குவதைக் காண உன்னால் சிறிதும் பொறுக்கமுடியாமல் போகுமானால், பின்னால் அதனால் விளையும் உன் கேட்டினைக் கண்டும், உனது சுற்றத்தாரின் கேட்டினைக் கண்டும், பொறுக்க முடியாத துன்பங்களையெல்லாம் பொறுக்கவேண்டி வ ரு ம் என்பதே "சுற்றம் கெடும்" என்பதிலுள்ள புதை பொருளாகும்.

கொடுப்பதைத் தடுப்பதால் கொடுப்பவர் உள்ளமும் துன்பப்படும், பெற இருந்தவர் உள்ளமும் துன்பப்படும். ஆகவே, அழுக்கறுக்கும் ஒருவன் அவர்களிருவரின் துன்பங்களையும் தான் ஒருவனாகவே இருந்து தனித்து இரந்தும் அடைய நேரிடும் என்பதும் இக்குறளின் கருத்து.

ஒருவனுக்கு அவனது முயற்சி கொடுக்கும் செல்வத்தையும், பெற்றோர் தம் மக்களுக்கு வழங்கும் செல்வத்தையும் கண்டு அழுக்காறு கொள்வது தவறு என்பதையும், “கொடுப்ப தழுக்கறுப்பான்” என்ற சொற்றொடரிற் கண்டு மகிழலாம்.

பொறுமையை இழந்து, பொறாமையே கொள்ளும் குணம் படைத்த ஒருவனை, அவனது சுற்றத்தாரும் வெறுத்து ஒதுக்கி விடுவர். அவனைச் சுற்றி எவருமே இரார். ஆதலின் அவனுக்கு “சுற்றம் கெடும்” என நாமும் கூற வேண்டியதுதான்.

உடல் அழுக்கிலும் மன அழுக்கு மிகவும் வெறுக்கத்தக்கது. உடலிற்படும் அழுக்கு உடல் நலத்தைக் கெடுத்து விடுவதுபோல, மனத்திற் படும் அழுக்கு மகிழ்வதற்குரிய வாழ்வையே கெடுத்துவிடும் என்பது இக்குறள் கூறாமற் கூறும் கருத்தாகும்.

அழுக்கற்று வாழும் வாழ்வே உயர்ந்த வாழ்வு. ஆதலின் எவ்விடத்தும், எப்பொழுதும் அழுக்காறு கொள்ளாதே. அது உன்னைத் தீநெறியிற் புகுத்தித் தீயுழி உய்த்துவிடும். அதனால் நீ கெடுவது மட்டுமல்ல, உனது சுற்றமும் கெட்டுவிடும் என்பதே இக்குறளின் முடிந்த முடிவாகும். குறள் வேண்டுமா? படியுங்கள் மறுமுறையும்.

       "கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
        உண்பதூஉம் இன்றிக் கெடும்."

அழுக்காறின் கொடுமையையும், அதன் விளைவையும் விளக்கவந்த இக்குறள். அதோடு சுற்றத்தாரின் பெருமையையும், அவர்களை இழப்பதால் உண்டாகும் விளைவையும் விரிந்த அளவில் விளக்குகின்ற சிறப்பு, வியப்பிற்குரிய ஒன்றாகும்.

எப்படி இக்குறள்? எத்தகையர் வள்ளுவர்? எடுங்கள் குறளை; படியுங்கள் நன்றாக. அந்த அளவோடு விட்டுவிடாதீர்கள். செயலிலும் செய்து காட்டிச் சிறப்பெய்தி வாழுங்கள்.

        ஈத்துவக்கும் இன்பம் அறிந்தோர் சான்றோர்.
        ஈயாது வைத்திருக்கும் மக்கள் வறியவர்.
        ஈவதையும் தடுத்துக் கெடுவோர் கயவர்.
        இதனை அறிந்துகொண்டு வாழ்வதே நல்லது.

வாழட்டும் தமிழகம்!
வளரட்டும் குறள்நெறி!