திருக்கோவையார்/இருபத்திநான்காம் அதிகாரம் - பொருள் வயின் பிரிவு

விக்கிமூலம் இலிருந்து

இருபத்திநான்கம் அதிகாரம்
24. பொருள் வயின் பிரிவு

பேரின்பக் கிளவி
பொருட்பிரிவு இருபதும் அருட்பிரி வுயிரே
ஆனந்த மாகி அதுவே தானாய்த்
தானே அதுவாய்ப் பேசிய கருணை.

1. வாட்டங் கூறல்
முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னான் முடியுமெனப்
பனிவருங் கண்பர மன்திருச் சிற்றம் பலமனையாய்
துனிவரு நீர்மையி(து) என்னென்று தூநீர் தெளித்தளிப்ப
நனிவரு நாளிது வோஎன்று வந்திக்கும் நன்னுதலே. ... 332


கொளு
பிரிவு கேட்ட அரிவை வாட்டம்
நீங்கல் உற்றவன் பாங்கிக்கு உரைத்தது.

2. பிரிவு நினைவுரைத்தல்
வறியார் இருமை அறியார் எனமன்னும் மாநிதிக்கு
நெறியார் அருஞ்சுரம் செல்லலுற் றார்நமர் நீண்டிருவர்
அறியா அளவுநின் றோன்தில்லைச் சிற்றம்பலம் அனைய
செறிவார் கருங்குழல் வெண்ணகைக் செவ்வாய்த் திருநுதலே. ... 333


கொளு
பொருள்வயின் பிரியும் பொருவே லவனெனக்
கருளுறு குழலிக்குத் தோழி சொல்லியது.

3. ஆற்றாது புலம்பல்
சிறுவாள் உகிருற்(று) உறாமுன்னம் சின்னப் படுங்குவளைக்(கு)
எறிவாள் கழித்தனள் தோழி எழுதிற் கரப்பதற்கே
அறிவாள் ஒழுகுவ(து) அஞ்சனம் அம்பல வர்ப்பணியார்
குறியாழ் நெறிசெல்வர் அன்பரென்(று) அம்ம கொடியவளே. ... 334


கொளு
பொருள்தரப் பிரியும் அருள்தரு பவளெனப்
பாங்கி பகரப் பூங்கொடி புலம்பியது.

4. ஆற்றாமை கூறல்
வானக் கடிமதில் தில்லைஎம் கூத்தனை ஏத்தலர்போல்
கானக் கடஞ்செல்வர் காதலர் என்னக் கதிர்முலைகள்
மானக் கனகம் தரும்மலர்க் கண்கள்முத் தம்வளர்க்கும்
தேனக்க தார்மன்னன் என்னோ இனிச் சென்று தேர்பொருளே. ... 335


கொளு
ஏழை யழுங்கத் தோழி சொல்லியது.

5. திணை பெயர்த்து உரைத்தல்
கருள்தரு செஞ்சடை வெண்சுடர் அம்பல வன்மலயத்(து)
இருள்தரு பூம்பொழில் இன்னுயிர் போலக் கலந்திசைத்த
அருள்தரும் இன்சொற்கள் அத்தனை யும்மறந்து அத்தம்சென்றோ
பொருள்தரக் கிற்கின் றதுவினை யேற்குப் புரவலரே. ... 336


கொளு
துணைவன் பிரியத் துயருறு மனத்தோடு
திணை பெயர்த்திட்டுத் தேமொழி மொழிந்தது.

6. பொருத்தம் அறிந்து உரைத்தல்
மூவர்நின்(று) ஏத்த முதலவன் ஆடமுப் பத்துமுல்லைத்
தேவர்சென்(று) ஏத்தும் சிவன்தில்லை அம்பலம் சீர்வழுத்தாப்
பாவர்சென்(று) அல்கும் நரகம் அனைய புனையழற்கான்
போவர்நம் காதலர் என்நாம் உரைப்பது பூங்கொடியே. ... 337


கொளு
பொருள்வயின் பிரிவோன் பொருத்த நினைந்து
கருளுறு குழலிக்குத் தோழி சொல்லியது.

7. பிரிந்தமை கூறல்
தென்மாத் திசைவசை தீர்தரத் தில்லைச்சிற் றம்பலத்துள்
என்மாத் தலைக்கழல் வைத்தெரி யாடும் இறைதிகழும்
பொன்மாப் புரிசைப் பொழில்திருப் பூவணம் அன்னபொன்னே
வன்மாக் களிற்றொடு சென்றனர் இன்றுநம் மன்னவரே. ... 338


கொளு
எதிர் நின்று பிரியின் கதிர் நீ வாடுதற்கு
உணர்த்தா(து) அகன்றான் மணித்தேரோன் என்றது.

8. இரவுறு துயரத்திற்கு இரங்கி உரைத்தல்
ஆழியன்(று) ஈர்அடி யும்இலன் பாகன்முக் கண்தில்லையோன்
ஊழியன் றாதன நான்கும்ஐம் பூதமும் ஆறொடுங்கும்
ஏழியன் றாழ்கட லும்எண் திசையும் திரிந்திளைத்து
வாழியன் றோஅருக் கன்பெருந் தேர்வந்து வைகுவதே. ... 339


கொளு
அயில்தரு கண்ணியைப் பயில்தரும் இரவினுள்
தாங்குவ(து) அரிதெனப் பாங்கி பகர்ந்தது.

9. இகழ்ச்சி நினைந்து அழிதல்
பிரியார் எனஇகழ்ந் தேன்முன்னம் யான்பின்னை எற்பிரியின்
தரியாள் எனஇகழ்ந் தார்மன்னர் தாந்தக்கன் வேள்விமிக்க
எரியார் எழில்அழிக் கும்எழில் அம்பலத் தோன்எவர்க்கும்
அரியான் அருளிலர் போலன்ன என்னை அழிவித்தவே. ... 340


கொளு
உணர்த்தாது பிரிந்தாரென
மணித்தாழ் குழலி வாடியது.

10. உறவு வெளிப்பட்டு நிற்றல்
சேணும் திகழ்மதில் சிற்றம் பலவன்தெண் ணீர்க் கடல்நஞ்(சு)
ஊணும் திருத்தும் ஒருவன் திருத்தும் உலகின்னல்லாம்
காணும் திசைதொறும் கார்க்கய லும்செங் கனியடுபைம்
பூணும் புணர்முலை யுங்கொண்டு தோன்றுமொர் பூங்கொடியே. ... 341


கொளு
பொருள்வயின் பிரிந்த ஒளியுறு வேலவன்
ஓங்கழற் கடத்துப் பூங்கொடியை நினைந்தது.

11. நெஞ்சொடு நோதல்
பொன்னணி ஈட்டிய ஒட்டரும் நெஞ்சம்இப் பொங்குவெங்கா
னின்னணி நிற்கும்இ(து) என்னென்ப தேஇமை யோர்இறைஞ்சும்
மன்னணி தில்லை வளநகர் அன்னஅன் னந் நடையாள்
மின்னணி நுண்ணிடைக் கோபொருட் கோநீ விரைகின்றதே. ... 342


கொளு
வல்லழற் கடத்து மெல்லியலை நினைந்து
வெஞ்சுடர் வேலோன் நெஞ்சொடு நொந்தது.

12. நெஞ்சொடு புலத்தல்
நாய்வயின் உள்ள குணமும்இல் லேனைநற் றொண்டுகொண்ட
தீவயின் மேனியன் சிற்றம் பலமன்ன சின்மொழியைப்
பேய்வயி னும்அரி தாகும் பிரி(வு)எளி தாக்குவித்துச்
சேய்வயின் போந்தநெஞ் செஅஞ்சத் தக்க(துஐஉன் சிக்கெனவே. ... 343


கொளு
அழறகடத்(து) அழுக்க மிக்கு நிழற்கதிர் வேலோன் நீடு வாடியது.

13. நெஞ்சொடு மறுத்தல்
தீமே வியநிருத் தன்திருச் சிற்றம் பலம்அனைய
பூமே வியபொன்னை விட்டுப்பொன் தேடியிப் பொங்குவெங்கான்
நாமே நடக்க ஒழிந்தனம் யாம்நெஞ்சம் வஞ்சியன்ன
வாமே கலையைவிட் டோபொருள் தேர்ந்தெம்மை வாழ்விப்பதே. ... 344


கொளு
நீணெறி சென்ற நாறிணர்த் தாரோன்
சேணெறி யஞ்சி மீணெறி சென்றது.

14. நாள் எண்ணி வருந்தல்
தெண்ணீர் அணிசிவன் சிற்றம் பலம்சிந்தி யாதவரின்
பண்ணீர் மொழியிவ ளைப்பையுள் எய்தப் பனித்தடங்கண்
உண்ணீர் உகஒளி வாடிய நீடுசென் றார்சென்றநாள்
எண்ணீர் மையின்நிலனுங் குழி யும்விரல் இட்டறவே. ... 345


கொளு
சென்றவர் திறத்து நின்றுநணி வாடும்
குழிருங் கூந்தற்குத் தோழிநனி வாடியது.

15. ஏறு வரவு கண்டு இரங்கி உரைத்தல்
சுற்றம் பலம்இன்மை காட்டித்தன் தொல்கழல் தந்ததொல்லோன்
சிற்றம் பலமனை யாள்பர மன்றுதிண் கோட்டின்வண்ணப்
புற்றங்(கு) உதர்த்துநல் நாகொடும் பொன்னார் மணிபுலம்பக்
கொற்றம் மருவுகொல் ஏறுசெல்லா நின்ற கூர்ஞ்செக்கரே. ... 346


கொளு
நீடிய பொன்னின் நெஞ்சம் நெகிழ்ந்து
வாடியவன் வரவுற்றது.

16. பருவங் கண்டு இரங்கல்
கண்ணுழை யாதுவிண் மேகம் கலந்து கணமயில்தொக்(கு)
எண்ணுழை யாத்தழை கோலிநின்(று) ஆலும் இனமலர்வாய்
மண்ணுழை யாவும் அறிதில்லை மன்னன(து) இன்னருள்போல்
பண்ணுழை யாமொழி யாள்என்ன ளாங்கொல்மன் பாவியற்கே. ... 347


கொளு
மன்னிய பருவம் முன்னிய செலவின்
இன்னல் எய்தி மன்னன் ஏகியது.

17. முகிலொடு கூறல்
அற்படு காட்டில்நின்(று) ஆடிசிற் ற்ம்பலத் தான்மிடற்றின்
முற்படு நீள்முகில் என்னின்முன் னேல்முது வோர்குழுமி
விற்படு வாணுத லாள்செல்லல் தீர்ப்பான் விரைமலர்தூய்
நெற்படு வான்பலி செய்(து)அய ராநிற்கும் நீள்நகர்க்கே. ... 348


கொளு
எனைப்பல துயரமோ(டு) ஏகா நின்றவன்
துனைக்கார் அதற்குத் துணிந்துசொல் லியது.

18. தேர் வரவு கூறல்
பாவியை வெல்லும் பரிசில்லை யேமுகில் பாவையஞ்சீர்
ஆவியை வெல்லக் கறுக்கின்ற போழ்தத்தின் அம்பலத்துக்
காவியை வெல்லும் மிடற்றோன் அருளிற் கதுமெனப் போய்
மேவிய மாநிதி யோ(டு)அன்பர் தேர்வந்து மேவினதே. ... 350


கொளு
வேந்தன் பொருளோடு விரும்பி வருமென
ஏந்திழைப் பாங்கிஇனி(து)இயம் பியது.

19. இளையர் எதிர்கோடல்
யாழின் மொழிமங்கை பங்கன்சிற் றம்பலத் தான்அமைத்த
ஊழின் வலியதொன்(று) என்னை ஒளிமே கலையுகளும்
வீழும் வரிவளை மெல்லியல் ஆவிசெல் லாதமுன்ன
சூழும் தொகுநிதி யோ(டு)அன்பர் தேர்வந்து தோன்றியதே. ... 351


கொளு
செறிக ழலவன் திருநகர் புகுதர
ஏறிவேல் இளைஞர் எதிர்கொண்டது.

20. உள் மகிழ்ந்து உரைத்தல்
மயில் மன்னு சாயல்இம் மானைப் பிரிந்து பொருள்வளர்ப்பான்
வெயில் மன்னு வெஞ்சுரம் சென்றதெல்லாம் விடை யோன்புலியூர்க்
குயில் மன்னு சொல்லிமென் கொங்கைஎன் அங்கத் திடைகுளிப்பத்
துயில் மன்னு பூவணை மேலணை யாமுன் துவள் உற்றதே. ... 352


கொளு
பெருநிதி யோடு திருமனை புகுந்தவன்
வளமனைக் கிழத்தியோ(டு) உள்மகிழ்ந்(து) உரைத்தது.