திருக்கோவையார்/ஏழாம் அதிகாரம் - குறையுற வுணர்தல்

விக்கிமூலம் இலிருந்து

7. குறையுற வுணர்தல்

நூற்பா
குறையற்று நிற்றல் அவன்குறிப்பு அறிதல்
அவள் குறிப்(பு) அறிதலோ(டு) அவர்நினை(வ) எண்ணல்
கூறிய நான்கும் குறையுற உணர்வெனத்
தேறிய பொருளிற் தெளிந்திசி னோரே.

பேரின்பக் கிளவி
குறையுற உணர்தல் துறைஒரு நான்கும்
உயிர்சிவத்(து) இடைசென்(று) ஒருப்படுந் தன்மை
பணியாற் கண்டு பரிவால் வினாயது.

1. குறையுற்று நிற்றல்
மடுக்கோ கடலின் விடுதிமில் அன்றி மறிதிரைமீன்
படுக்கோ பணிலம் பலகுளிக் கோபரன் தில்லைமுன்றில்
கொடுக்கோ வளைமற்று நும்ஐயர்க்(கு) ஆயகுற் றேவல் செய்கோ
தொடுக்கோ பணியீர் அணியீர் மலர்நும் கரிகுழற்கே. .. 63


கொளு
கறையற்ற வேலவன் குறையுற்றது.

2. அவன் குறிப்பறிதல்
அளியமன் னும்மொன்று உடைத்(து) அண்ணல் எண்ணரன் தில்லையன்னாள்
கிளிமைமன்னுங்கடியச் செல்ல நிற்பின் கிளர்அளகத்(து)
அளியமர்ந்(து) ஏறின் வறிதே யிருப்பின் பளிங்கடுத்த
ஒளியமர்ந் தாங்கொன்று போன்றுறொன்று தோன்றும் ஒளிமுகத்தே. .. 64


கொளு
பொற்றொடித் தோளிதன் சிற்றிடைப் பாங்கி
வெறிப்பூஞ் சிலம்பன் குறிப்ப றிந்தது.

3. அவள் குறிப்பறிதல்
பிழைகொண்(டு) ஒருவிக் கெடா(து)அன்பு செய்யின் பிறவியென்னும்
முழைகொண்(டு) ஒருவன்செல் லாமைநின்(று) அம்பலத்(து) ஆடுமுன்னோன்
உழைகொண்(டு) ஒருங்(கு)இரு நோக்கம் பயின்றஎம் ஒண்ணுதல்மாந்
தழைகொண்(டு) ஒருவன்என் னாமுன்னம் உள்ளம் தழைத்திடுமே. .. 65


கொளு
ஆங்கவள் குறிப்புப் பாங்கி பகர்ந்தது.

4. இருவர் நினைவும் ஒருவழி உணர்தல்
மெய்யே இவற்(கு)இல்லை வேட்டையின் மேல்மனம் மீட்(டு) இவளும்
பொய்யே புனத்தினை காப்பது இறைபுலி யூர்அனையாள்
மையேர் குவளைக்கண் வண்டினம் வாழும்செந் தாமரைவாய்
எய்யேம் எனினும் குடைந்தின்பத் தேனுண்(டு) எழில்தருமே. .. 66


கொளு
அன்புறு நோக்(கு) ஆங்கறிந்(து)
இன்புறு தோழி எண்ணியது.