திருவாசகத்தேன்/ஊர் நாயிற் கடையானேன்!

விக்கிமூலம் இலிருந்து
ஊர் நாயிற் கடையானேன்!

சுதந்திரம் என்பது அடிமை நிலையிலிருந்து விடுதலை பெறுவது மட்டுமல்ல; தற்சார்பு நிலையில் வாழ்வது மாகும்! இந்தச் சுத்ந்திரம் ஆன்மாக்களுக்கு, திருவருளைச் சார்ந்த வழிதான் கிடைக்கும். ஆன்மாக்கள் இறைவனுக்கு அடிமையாய் வாழ்வதில் சுதந்திரத்தை இழப்பதில்லை. ஏன்? இறைவன். குறியொன்றும் இல்லாதவன். ஆதலால், ஆன்மாக்களை அடிமைப்படுத்தமாட்டான். சீவன் மூத்த நிலையில் ஆன்மாக்களின் அடிமைப் பண்பு தன் விருப்பமேயாம்.

சுதந்திரம் இல்லாதன எல்லாம் சுதந்திரமான ஒன்றிற்கு உடைமையாக இருத்தல் இயல்பு. ஆன்மாக் களுக்குச் சுதந்திரம் இல்லை. ஆன்மாக்கள் ஆணவத்துடன் கூடி, ஆணவத்தின் ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டு இருக்கும் பொழுது, ஆணவத்தின் வழியிலேயே வாழும். அருட்சத்தியின் அருளால் தெய்வம் என்னும் சித்தம் உண்டாகி மடைமாற்றம் ஏற்பட்டு விருப்பு-வெறுப்புக்களிலிருந்து ஆன்மா விடுதலை பெறும். திருவருளைக் கண்ணாகக் கொண்டு வாழும் இந்த நிலையில் ஆன்மா திருவருள் ஆட்டுவிக்கும் வழியிலேயே வாழும்; ஆடும்! இந்த உலகம் முழுதும், உயிர்கள் அனைத்தும் கடவுளுக்கே உரிமை உடையன. ஆதலால் இறைவனுக்கு ஆன்மாக்கள் உடைமைப் பொருள்கள்! உடைமை என்பது ஒது மந்திரச்சொல். மனிதர்கள் தன் உடைமைகளைக் காப்பதற்குப் போராடுகிறார்கள். ஆனால், பொது உடைமையைப் பேண யாரும் போராடுவதில்லை. ஏன்? பொது உடைமையை அழிக்காமல் இருந்தாலே பாராட்டலாம். பழங்காலத்தில் உடைமையைப் பொது நலத்திற்காகத் தியாகம் செய்தனர். வீட்டையே நாட்டிற்கு அர்ப்பணித்தார்கள். இப்பொழுது நாட்டையே வீட்டிற்குக் கொண்டு போகிறார்கள். ஆதலால், உடைமை என்ற உரிமையில் இறைவன் ஆன்மாவை- மாணிக்கவாசகரைக் காக்கக் கடமைப்பட்டுள்ளான். "அப்படிக் காக்கத் தவறினால் உன்னை ஊர்ப் பிச்சன் என்று கூறி உன்னைச் சிரிப்பிப்பன்; பழி துாற்றுவன்" என்று இறைவனை எச்சரிக்கிறார் மானிக்கவாசகர், உடையவன் உடைமையைக் கவனிக்க வேண்டாமா? பேண வேண்டாமா? "இறைவன் உடைமையாளன்; ஆன்மா உடைமை" என்பது திருவாசகத்தின் திரண்ட கருத்து.

வீட்டுப் பிராணிகளில் நாய் ஒன்று. நாய் வளர்ப்பது இதயத்திற்கு இதத்தைத் தரும். நாய் அளவற்ற பரிவைக் காட்டும். வளர்ப்பவனைக் காணும் பொழுதெல்லாம் குழைந்து வாலாட்டும். சில உயரிய நாய்கள் வளர்ப்பவனின் சாவிலும் ஒன்றாகச் செல்லும்! இந்த இயல்புகள் நாய்க்கு இயற்கையாய் அமைந்தவையல்ல; வளர்ப்பில் வருபவை நாய் வளர்ப்பில் கவனம் தேவை: ஒருவர் கைப்பட் வளர்க்க வேண்டும். பொதுவாக நாய்க்கு நன்றியுண்டு என்று கற்பிக்கப்படுகிறது! நாய். நன்றியுடையதாயிருத்தல் பொதுப் பண்பு அல்ல; சிறப்புப் பண்பேயோம். வளர்ப்பவனைப் பொறுத்தே இது. அமைகிறது. நாய்களில் தாய் நாயும் குட்டி நாயும் குரைத்துச் சண்டையிட்டுக் கொள்வதைப் பார்த்தாலும் தெரியுமே! ஏன்? சில நாள்களுக்கு வீட்டுப் பணியாள் நாய்க்குத் தீனி கொடுத்து அதை வயப்படுத்திக் கொண்டு கொலை, கொள்ளைகள் செய்துவிடுகின்றானே!" அப்போது இந்த நாய் காவல் தொழிலை இழந்து விடுகிறது; குரைப்பதும்கூட இல்லை. இந்தக் குற்றங்' குறைகள் வளர்ப்பு. நாய்க்கேயாம்! ஆனால், திருவாசகத்தில் நாய் நன்றியில் உயர்ந்த்து என்றே பேசப் பெறுகிறது. 'நாய்' முப்பது இடங்களுக்கும் மேலாகப் பேசப்படுகிறது. இதில் பொதுவாக நாயின் கிறப்புக் கூறப்பெறுகிறது. மனிதன் நாயினும் கீழானவனாக, இருக்கிறான். ஆம்! நாய்! உணவளித்து உண்டு கொண்டு இருக்கும் பொழுது உணவளிப்பவனுக்கு எந்தத் தீங்கும் நினைப்பதில்லை; செய்வதில்லை! உணவளிப்பவன் உணவளிக்காமல் வேறு ஒருவர் உணவளித்தால் அவனுக்கும் நன்றிப் பெருக்குடையதாக இருக்கிறது. அவ்வளவுதான்! ஆனால், மனிதனோ உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்கிறான்; உண்டுகொண்டு இருக்கும் போதேகூட தீமை நினைக்கிறான்! நாய், தான் பெற்ற பேற்றை எண்ணிப் பார்ப்பதில்லை. நாய், - வளர்ப்பு நாய் வளர்ப்பவனின் அருமை உணர்வதில்லை. நாய் பெற்ற தெங்கம் பழ"த்திற்கு "ஏது பயன்?" அதுபோல் மனிதரில் பலர் இறைவனின் அருமையை உணர்வதில்லை. இறைவனின் அருட்கொடையால் எத்தனை எத்தனை கோடி இன்பங்கள் இந்த உலகில் உள்ளன? இவற்றை உணர்வார் யார்? இவற்றினைத் தந்தருளிய கடவுளை நினைப்பார் யார்?

நாயில் ஊர் நாய் ஒருவகை அதாவது வளர்ப்பார் இல்லாத நாய்! அது சுதந்திரமாய்த் திரியும். காலையில் அம்மம்ம, எவ்வளவு சுறுசுறுப்பு! எழுந்து ஊர் சுற்றும்! தன்னை ஒத்த ஊர் நாய்கள் நிற்கும் இடங்களில் நிற்கும்! விளையாடும்! சண்டைபோடும்! குடும்பம் நடத்தும்! எச்சில் இலைகளைத் தேடி ஒடும் ஆங்கும் ஒரு யுத்தம்! படுகளம்! கிடைக்கும் எலும்பைக் கடிக்கும். செங்குருதி சொட்டச் சொட்ட ஒதுங்கிப் போய் இருக்கும்! மீண்டும் எழுந்து எலும்பினைக் கடிக்கும்! உடம்பு. முழுதும் வங்கு பிடித்து இருக்கும்! போதாக் குறைக்குச் சொறியும் உண்டு! இவையே ஊர் நாயின் இலக்கணம்! இந்த ஊர் நாயை உவமிக்கின்றார் மாணிக்கவாச்கர்! ஆம்! கூர்ந்து நோக்கின் பல மனிதர்கள் ஊர் நாய்கள்தாம்! இல்லை, இல்லை! ஊர் நாயினும், கடையர்கள். கடவுளின் ஆணை வழி திரோதான் சக்தியால் வளர்க்கப்பெறாத மனிதன் வளராத மனிதன் ஊர் நாய்! இல்லை, இல்லை! ஊர் நாயைவிட மோசமானவன்! ஆம்! இவனும் எழுந் திருக்கிறான்; ஊர் சுற்றுகிறான். மூலைக்கு மூலை நின்று புறணி பேசுகிறான்; புறம் பேசுகிறான்; வம்பு செய் கிறான்; வம்பு வளர்க்கின்றான்! வம்பு வழக்குகளைத் தூண்டி விடுகிறான்; கிடைத்த இடத்தில் தின்கிறான்; இரந்து , திரிகின்றான், இரந்தும் தின்கிறான், இழிதொழில்கள் செய்தும் தின்கின்றான், பல இடங்களில் குடும்பம் நடத்துகிறான். இவனுடைய உடல், நோய்களின் கொள்கலன். இப்படியும் மனிதர்கள் இன்று வாழவில்லையா? இவர்களைச் சொன்னால் உடம்பெல்லாம் பற்றி எரியும் என்பதால் மாணிக்கவாசகர் தம்மீது பழிசுமத்திக் கொள்கிறார்.

ஊர் நாயிற் கடையனானேன் என்கிறார். இந்த ஊர் நாய்கள் தரங்கெட்டுப் போனதோடு அல்லாமல் வளர்ப்பு நாய்களையும் கவர்ச்சித்து கெடுக்கும்! வளர்ச்சியில் முதிர்ச்சி பெறாத வளர்ப்பு நாய்கள் பல விதிமுறைகள், கட்டுப்பாடுகள், தண்டனைகளுக்கு அஞ்சி வளர்ப்பி லிருந்து வழுவி ஊர் நாய்க் கூட்டத்தில் போய்ச் சேர்ந்து விடுவது உண்டு. ஐயோ பாவம் விதிவழியே நடத்தல் பாதுகாப்பு! விதிமுறைகளின்படி வாழ்தல், பழக்கப்பட்ட வர்களுக்கு எளிது! பாதுகாப்பும்கூட விதிமுறைகளே தவறுகளிலிருந்தும் பிழைகளிலிருந்தும் பாதுகாப்பளிக்கும். அயர்ந்தறியாது. செய்யும் தவறுகளுக்குக் கண்டித்தலும் தண்டனைகளும் பெறுவது மருத்துவமேயாகும். "புளியம் வளாரினால் மோதுவிப்பாய் பின்னை உசுப்பாய்!" என்று அப்பரடிகள் கூறுவார். தெரிந்தும் தெரியாமலும் அயர்ந்தும் சோர்ந்தும் செய்யும் மனிதரின் பிழைகளைப் பொறுத்தாற்றாது தேவசிகாமணி குருதேவர் சுடுவது அவரையல்ல; தவறு செய்பவர்களின் பாசத்தினையே குற்றங்களையே என்று கூறுவர். ஆதலால் வளர்ப்பு நாய் வளர்ந்து வாழ்ந்து பேறடைய முயல்வதே சிறப்பு! ஊர் நாய்க் கூட்டத்தில் போய்ச் சேரக்கூடாது.

வளர்ப்பின் இலக்கணம் என்ன? அடையாளம் என்ன? வளர்ப்பில் கல்வி இருக்கும்! கலைஞானம். இருக்கும்! கல்வியும் கலைஞானமும் வாழ்க்கையை வளர்ப்பனவாம்! வாழ் நிலையில் உயிர் நிலையாகிய அன்பு, கலைஞானத்தின் பயனேயாம். அதனால்தான் சிவகோசரி யாருக்குக் கிட்டாத "கலைமலித்த சீர் நம்பி" என்ற சிறப்பு, கண்ணப்பருக்குக் கிடைத்தது. மனம் இயல்பாக நல்லதும் அல்ல கெட்டதுவும் அல்ல. நல்லது செய்வதும் அல்ல, ஒயாது ஒழியாது சலித்துக்கொண்டே இருக்கும். அதாவது இயக்க நிலையில் இருக்கும். இந்த இயக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டு எவ்வழியில் இயக்கினாலும் அவ்வழியில், ஆன்மா இயங்கும். ஆன்மாவின் இயல்பு சார்ந்த தன் வண்ணம் ஆதல், ஆன்மாவைச் சார்பு இயக்கினால் ஊர் நாயைப்போல் இயங்கும். திருவருட்சார்பு இயக்கினால் வளர்ப்பு நாய்போல் இயங்கும். உண்மையில் ஆன்மாவை இயக்குவது சார்புநிலை; சுற்றுப்புறச் சூழ்நிலை. அதனால்தானே "மனம் போனபோக்கெல்லாம் போகவேண்டாம்!" என்றார் ஒளவை மூதாட்டி. மனத்தைப் பக்குவப்படுத்துவது கல்வியும். கலைஞானமுமாம்! ஈசன் கூட கல்லார் நெஞ்சில் நில்லான்! கல்லா மனத்தகராக இருப்பவர்களே, ஊர் நாய்போல வாழ்வார்கள்.

கல்வியும் கலைஞானமும் இல்லாதாருக்கு உடம்பின் அருமை தெரியாது. அதனால் உடம்பினைப் பேணவும். மாட்டார்கள்! உடம்பினை வளர்க்கவும் மாட்டார்கள்! அவர்களுடைய உடம்பு புழுக்கூடாகத்தான் விளங்கும்.' முடைநாற்ற்ம் வீசும் புழுக்கூடாகத்தான் விளங்கும். ஐயகோ, இந்த உடல் அற்புதமான உடல்! ஞான விளக்கெரிய வேண்டிய உடல்! இறைவன் எழுந்தருளும் விமானமாக விளங்கவேண்டியது இந்தப் பொன்னுடல்! இறைவன் விரும்பி எழுந்தருளும் திருக்கோயில் இந்த உடம்புதான்! ஆயினும் என்? அருமைகள், அறிவோருக்குத் தானே! உடம்பு, இறைவன் எழுந்தருளும் திருக்கோயி லானால் விடுதலை உண்டு! இந்த நிலையில் உடல், உயிரைக் காக்கும். ஆனால் உடம்பை. இகழ்ந்து புழுக் கூடாக்கினால் உடம்பு காவல். தகுதியை இழக்கும். உடம்பைக் காத்துக் கிடக்கும் பணி வேறு வரும்.

கல்வியும் கலைஞானமும் தேடாது இறைவன் திருவருட் சிந்தனை வழி வளர்ப்பாக வாழக் கற்றுக் கொள்ளாது போனால் மானிட வாழ்வு வறிதே பாழாகும். திருவுடல், ஊனுடலாக, புழுக்குரம்பையர்க மாறி, மனிதன் சுமந்து காத்து நிற்க வேண்டிய பொருளாகும்! இதனால் பிறவியும் நீங்காது! செத்துப் பிறக்கும் தொழிலுக்கு ஆட்பட்டு இங்கேயே ஊனுடலைக் காத்துக்கிடக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்படும்! ஊர் நாய் வாழ்க்கையை வெறுத்திடுக! வளர்ப்பு நாய் வாழ்க்கையை ஏற்றிடுக!

வளர்ப்பிலும் பின்பற்றுதலிலும் தொடர்ச்சி தேவை. இடையீடு வந்ததோ, தொலைந்தது! ஆணவம் விழிப்புடன் இருக்கும்! திருவருள் வழிச் செல்வதில் அயர்வுசோர்வு தலைப்பட்டால் மீண்டும் ஆணவச் சார்பு பற்றிக் கொள்ளும்! உயிர்களுக்கு ஆணவச் சார்பு- அநாதிச் சார்பு, இயற்கையாக அமைந்தது. அது தேடாமலே, வந்தமையும். உயிர்களுக்குத் திருவருட் சார்பு பிறவிச் சார்பேயாம். இது வலியவந்து உயிர்களைப் புற்றாது. மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கி ஓடும் புனல் போன்றது ஆணவச் சார்பு. பள்ளத்திலிருந்து மேட்டினை நோக்கித் தண்ணீரை ஏற்றுவது போன்றது திருவருட் சார்பு. ஆதலால், ஞானப்பயிற்சியில்- திருவருட் சார்பில் கவனம் தேவை. இதனைத்தான் ஞானிகள் "விழித்திரு" என்றனர். ஆன்மாவின் விழிப்புணர்வே ஆணவச் சார்பை மட்டுப்படுத்தும்; திருவருட் சார்பைக் கூட்டுவிக்கும். திருவருட் சார்புடையவர்கள் எத்தொழில் செய்தாலும் ஏதவத்தைப்பட்டாலும் இறைவன் திருவருளையே பற்றுக் கோடாகக் கொள்வார்கள். கை வீசி நடக்கும் மோர்க்காரிக்குக் கவனம் முழுதும் மோர்ப்பானையில் இருப்பதைப் போலத் திருவருட் சார்புடையவர்கள் எந்தப் பணியை மேற்கொண்டாலும்- செய்தாலும் திருவருள் நினைப்பாக இருப்பார்கள். நின்றும் இருந்தும் கிடந்தும் தொழுவார்கள், தொழும்பாய்த் தொண்டு செய்வார்கள். இந்த நிலையை எண்ணி, அழும் கல்வியைத் தேடுக! கசிந்துருகி அழக் கற்றுக்கொள்க! இந்த நிலையில், இறைவனுக்கு உடைமையாகலாம். இறைவனுக்கு உடைமையாம் நிலை எய்திவிட்டால் அவன் காப்பான்! பெருங்காதல் மூளும் ஊனும் உயிரும் உருக வாழலாம்! இன்ப அன்பினை எய்தலாம்! யாதுமோர் குறைவில்லை!

உடையானே கின்றனை உள்கி
உள்ளம் உருகும் பெருங்காதல்
உடையா ருடையாய் கின்பாதம்
சேரக் கண்டு இங்கு ஊர் காயின்
கடையானேன், கெஞ் சுருகாதேன்;
கல்லா மனத்தேன்; கசியாதேன்;
முடையார் புழுக்கடு இது காத்திங்கு
இருப்பதாக முடித்தாயே!

(திருச்சதகம்- 60)