திருவாசகத்தேன்/எடுத்தாளும் இறைவன்!

விக்கிமூலம் இலிருந்து
எடுத்தாளும் இறைவன்!

மாணிக்கவாசகர் தமது வாழ்நிலையை எப்போதும் தாழ்த்திப் பேசுவார்! "தாழ்வெனும் தன்மை"--மாணிக்கவாசகருடைய அணி. மாணிக்கவாசகர் அமைச்ச ராக இருந்தபோதும் பழுத்த மனத்தடியாராக புளியம் பழம் போலவே இருந்தார் என்பதை அவருடைய வரலாறு உணர்த்துகிறது. எந்தச் சூழ்நிலையிலும் தன்முனைப்பே இல்லை. "நான்", "எனது" என்ற செருக்கிலிருந்து முற்றாக விடுதலை பெற்றவர் மாணிக்கவாசகர்.

அரசன் குதிரைகள் வாங்கத் தந்தனுப்பிய செல்வம் கொண்டு மாணிக்கவாசகர் குதிரை வாங்கவில்லை. ஏன்? குதிரை வாங்கினால் படைக்கும் பயன்படும். படை போருக்காகும். போரினால் ஏற்படுவது மரணங்கள்; இழப்புக்கள்! மாணிக்கவாசகர் போரைத் தவிர்க்க எண்ணினார். திருக்கோயில் கட்டினார். திருக்கோயில் கட்டினால் முதலில் மக்களுக்கு வேலை வாய்ப்பு: திருப் பெருந்துறை நன்செய் சூழ்ந்த ஊர். சில மாதங்களுக்கே வேலை இருக்கும். அதனால் மக்களுக்கு வேலை; சிற்பக் கலைக்கு ஆதரவு. மக்கள் வழிபடவும், சமுதாய நோக்கில் கூடி வாழவும் திருக்கோயில் பயன்படும். இசையும் கலையும் திருக்கோயில் வளாகத்தில் வளரும். இன்னிசை வீணையர், யாழினர் மக்கள், மக்கள் மன்றத்திற்குக் களிப்பையும், மகிழ்ச்சியையும் தந்து நல்வாழ்க்கை வாழ்வதற்குத் துணை செய்வர். ஆதலால், திருக்கோயில் தழுவிய சமுதாயம் வளர்ந்தது. களிப்பும்- மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கை தொழில் முயற்சிக்கு, பொருள் செயலுக்கு தேவையானது. வினை தொழில் செய்தலில் இருந்து மாணிக்கவாசகர் விடுதலை பெற்றதில்லை.

இந்திய தத்துவ ஞானத்தில் வினை என்ற சொல் ஆதிக்கம் செலுத்துகிறது. பொதுவாக வினை என்ற சொல்லுக்குச் செயல் என்று பெயர்; பொருள்.

வினையே ஆடவர்க்கு உயிரே!

என்பது குறுந்தொகை. தொழில் செய்தால்தான் ஆடவன்! இது சங்ககால வழக்கு. திருவள்ளுவரும் "வினைத் துய்மை" என்றார். வினை- செயல் செய்தல் உயிர் இயற்கை. வினை, கண்ணுக்குப் புலனாகும் பொறிகளால் செய்கிறார்கள். பொறிகளும், புலன்களும் சேர்ந்து செய்கிற செயல்களும் உண்டு. புலன்கள் மட்டுமே செயற்பாடுறுதலும் உண்டு. உயிரின் இயற்கை ஏதாவதொரு தொழிற்பாட்டில்-இயக்கத்தில் இருந்து கொண்டு தான் இருக்கும். செயலின்றிச் சும்மா இருத்தல் இயலாத ஒன்று.

          சும்மா இரு சொல் லறனன் றலுமே
          அம்மா பொருளொன்றும் அறிந்திலனே

என்பார் அருணகிரிநாதர் மனம் மாண்டுபோனால்தான் ஆன்மாவிற்குச் செயலாற்ற இயலா நிலை உருவாகும். அதுமட்டுமல்ல. மாந்தர் வினை- தொழில் செய்தால் தான்்் உலகம் வளரும்; வாழும் உயிர்க்குலமும் வாழ இயலும். வினை செய்தல் கோட்பாடு மாந்த்ருக்குத் தவிர்க்க முடியாத தேவை. வையகம் இயங்க- வாழ மாந்தர்தம் செயலே மூச்சு; உயிர்!

ஆதலால், மாந்தர் வினை செய்தல் இயற்கை. ஆக்கமும் கூட! இங்ங்ணம் நல்லனவே பயப்பது வினை. சமய உலகில் வினையின் எதிர்வினைவைப் பற்றி மட்டுமே எடுத்துக் கூறினார்கள்; கூறிவருகிறார்கள். வினையின் விளைவு மக்களுக்குப் பொருளாக்கம்: மக்களுக்கு வாழ்வு. சமய உலகமும் வினை செய்தலை வேண்டாம் என்று ஒரு பொழுதும் கூறியதில்லை; கூற இயலாது. இறைவனே ஐந்தெர்ழில் செய்கிறான். சமய உலகமும் தொண்டு செய்யுமாறு பணிக்கிறது. திருத்தொண்டு செய்யுமாறு உணர்த்துகிறது. சிந்தனை, சொல், தொண்டு எல்லாமே வினைதான்்்! புலன்களால், பொறிகளால் வரும் செயலாக்கங்களைவிட, சிந்தனையால் வரும் வினை யாக்கம் கூடுதல் என்பதே உண்மை. மாணிக்கவாசகரே கூடச் செயல் செய்தவர் தானே! திருக்கோயில் கட்டியவர் தானே! அது ஒரு வினை தானே! ஆதலால் வினை இயற்றல் இயற்கை வினை செய்யும்பொழுது கொள்ளும் மனப்பாங்குதான் முக்கியம். வினையை-தொழிலைச் செய்யும்பொழுது எத்தகைய மனப்பாங்குடன் செய் கிறோம் என்பதே கேள்வி! செய்யும் வினையைவிட, தொழிலைவிட மனப்ப்ாங்கே விளைவுகள், எதிர்விளைவு களுக்குக் காரணமாக அமைகின்றன. அல்லது விளைவு கள்ே இல்லாமலும் போகின்றன. வினைகளின் செயற்பாடுகள் மனம், மொழி. மெய்யால் அமைகின்றன். மனம் விரும்பியும் விரும்பாமலும் செய்யும் விண்ைகளுக்கும் பயன் உண்டு. மனம் விரும்பிச் செய்கின்ற வினைகள் இன்பநலத் துய்ப்பிற்குக் காரணமாக அமைவன. மனம் விருப்பமில்லாமல் செய்யும் வினைகள் எதிர்விளைவு களைத் தரும். மனம் வெறுப்பால் செய்யும் வினைகளும் , உண்டு. இத்தகு வினைகளின் விளைவு துன்பமேயாம். ஆதலால் வினை-தொழில் இன்பமோ துன்பமோ தருவ தில்லை. வினைகள் இயற்றும்போது மனம் நிற்கும் நிலை யைப் பொறுத்தே இன்பமும் துன்பமும் விளையும். வினைகளைச் செய்தவர்கள் அனுபவித்தே தீரவேண்டும். இது இயற்கை - நியதி கடவுளின் ஆணை!

கையால் நெருப்பை அள்ளிக்கொட்டினால் கைகளுக்குச் சூடு உண்டு. கை புண்ணாகும். இது இயற்கை. இதுபோல வினைகளை மனம் அழுந்திச் செய்தால், விருப்பு வெறுப்புகளுக்கு ஆளாகிச் செய்தால் அந்த வினையின் பயனை, செய்தவர் அனுபவிக்குமாறு செய்வது இயற்கை நியதி! இறைவனின் நெறிப்படுத்தும் தொழிற்பாடு! ஊட்டும் வினை' என்பார் திருஞானசம்பந்தர். வினை செய்தலில் மனமே விளைவு களுக்கு அல்லது எதிர் விளைவுகளுக்கு அடிப்படை என்பதற்கு எடுத்துக்காட்டு, சாக்கிய நாயனாரின் கல்லடியும் கண்ணப்பரின் செருப்படியும்! இவை இரண்டும் இறைவனுக்கு உவப்பாயின. காமவேளின் மலர்க்கனை உவப்பைத் தராதது மட்டுமல்ல. காமவேள் எரிய வேண்டியதாயிற்று. இவர்கள் வரலாற்றில் செய்த வினைப் பயன் கூட்டவில்லை. வினை செய்த நோக்கமும் உளப்பாங்குமே பயன் தந்தன. வினை இயற்றாமல் இருத்தல் கூடாது. வினைகள் இயற்றாமல் போனால் ஆன்மா வளராது; பக்குவப்படாது. குற்றங்களிலிருந்து விடுதலை பெறாது. வாழ்க்கையில் தேக்கம் ஏற்பட்டு விடும். அதுவும் ஒருவிதத்தில் குற்றமேயாம்! ஆதலால் வினைகள் இயற்றி வாழ்தல் வேண்டும். செய்யும் வினைகள்- காரியங்கள் தற்சார்பாக அமையாமல் பொதுமை அடிப்படை காரணமாக அமைய வேண்டும்! புவியை நடத்தும் வினைகள் இயற்றுதல்- நடத்துதல் வேண்டும். அதேபோழ்து பொதுவில் நடத்துதல் வேண்டும். செய்யும் வினைகளின் பயனை அவ்வப் பொழுது கணக்குப் பார்த்து நேர்செய்தல் வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால் வினைகளின் பயனும் தொகுநிலை அடைந்து எளிதில் அனுபவித்துக் கழிக்க இயலாத நிலையை அடையும். அன்றாடம் கணக்கு நேர் செய்தலே சிறந்த வாழ்வியல் முறை.

"வினையிலே கிடத்தல்'- மனிதன் பிறந்த நாள் தொட்டு ஏதேனும் செய்து கொண்டிருக்கிறான்; செய்து கொண்டே இருக்கிறான். ஏன் செய்கிறான்? எதற்காகச் செய்கின்றான்? இது அவனுக்கே புரியாத புதிர். பலர் பய்ன், இலாபம் கருதியே வினை இயற்றுகின்றனர்: தொழில் புரிகின்றனர். ஏன்? இலாபம் மட்டுமல்ல, சுரண்டுவதற்காகவேகூட வினை இயற்றுகின்றனர்; தொழில் செய்கின்றனர். இந்த மனப்போக்கில் செய்யும் வினைகள் இன்ப வட்டங்களாக அமையும். அந்த இன்பத்தைத் துய்க்கும் பொழுது மனம் அடையும் நிலை என்ன? யார் கூறமுடியும்? அந்த இன்பத்தை விருப்பு வெறுப்புக்களுடன் அனுபவித்தால் அந்த இன்பத் துய்ப்பு துன்பத்தின் விளைவுக்கு இரையாகும். அந்த இன்பத்தைப் பற்றின்றித் துய்த்தால் பின் தொடர்ச்சி இல்லாமல் போகிறது. அந்த இன்பத்தைத் தாமே துய்க்க வேண்டும் என்று துய்க்கும்பொழுது அது தொடர் நிலையாகிறது.

வினைகள் இயற்றும்போது உணர்வின்றிக் கிடத்தல் என்றால் என்ன? வினை இயற்றுகின்ற ஆன்மா இரு வேறு. நிலைகள் அடையும். ஒன்று மெய்மறந்த நிலை. இது நல்லது. பிறிதொன்று போதையில் பிறந்த கிறுக்கு நிலை. இது தீயது. உணர்வு, 'நான்' இழந்த நிலையில் வினை இயற்றும் வினை வரவேற்கத்தக்கது. பிறந்த உயிர்கள், வாழும் மாந்தர்கள் ஓயாது ஒழியாது வினை இயற்றிக் கொண்டே உள்ளனர். இந்த வினை, பிறவி வட்டத்தை நீர் அலையின் வட்டம் போல விரிவடையச் செய்து கொண்டே போகிறது, பிறப்பின் எண்ணிக்கை கூடிக், கொண்டே போகிறது. இந்தச் சூழ்நிலையில் இறைவன் கருணையால் பிறவிச் சூழலைக் கட்டுப்படுத்தி ஆட்கொண்டருள எண்ணி அருள்பாலிக்கிறான். இறைவன் வினைகள் இயற்றி வாழும் மாந்தரிடத்தில் தாயாக, தந்தையாக, ஆசிரியனாகக் காட்சி தருகின்றான். ஆனால், இந்த ஆட்கொள்ளலை எந்த ஆன்மாவும். விருப்புவதில்லை; விரும்பி வரவேற்பதில்லை, ஆனாலும் மனிதகுலம் ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாது போனாலும் சரி, இறைவன் உயிர்க்குலத்தை உய்யும் வகையில் எல்லாம் ஆட்கொண்டருளத் தவறிய தில்லை. அவனே வலிந்து செய்யும் கருணை நிறைந்த கடமை இது.

சாதாரணமாக உலகியலில் உயர் நிலையில் உள்ளவர்களிடம் தாழ்ந்தவர்கள் போய் அறிமுகம் செய்து கொள்வதே. பழக்கம். ஆனால், இறைவன் ஆட் கொண்டருளும் பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுதெல்லாம் பெரியோனாகிய இறைவன், அவனுடைய கருணையினால் ஆட்கொள்ளப்பட வேண்டிய நிலையில் உள்ள உயிர்களிடம் தாமே போய் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் நிலையே நடைமுறை. இந்த மண்ணகத்தில் வினைகள் இயற்றுதல், இலாபம் ஈட்டல், புகழ் பெறுதல், அதிகாரம் செய்தல் அம்மம்ம! எத்தனை வினைகள்! எத்தனை எத்தனை செயல்கள்! இந்தச் செயல்களைச் செய்யும் பொழுதெல்லாம் பொறிகளில் படியும் கறைகள்! புலன்களில் ஏறும் அழுக்குகள்! ஆன்மாவில் - உயிரில் ஏற்படும் விகாரங்கள்! இவையெல்லாவற்றையும் பொருட்படுத்தாது அழுக்குடலேயானாலும் அழுக்கேறிய ஆன்மாவேயானாலும் தாயினும் சாலப்பரிந்து ஆட்கொள்ள இறைவன் வருகின்றான். ஆனால் ஆன்மாக்கள் ஆட்பட ஒருப்படுவதில்லை; விரும்புவதில்லை. அறுவை மருத்துவத்துக்குப் பயந்து நோயினால் தொல்லைப்படுவாரில்லையா? பத்தியத்துக்குப் பயந்து நோய்ப் படுக்கையில் கிடப்பாரில்லையா? அதுபோலத்தான். ஆனால், இறைவனின் கருணை கைவிடுவதில்லை. நோயாளி அறுவை மருத்துவம் செய்து கொள்ள விரும்பாது போனால் மருத்துவன் விடலாமா? விடக்கூடாது. அது போல, இறைவன் உயிர்களை எப்போதும் நரகத்திலும் கூடக் கைவிடமாட்டான். இறைவன் சிறந்த மருத்துவன், வைத்தியநாதன், மூல நோய் தீர்க்கும் முதல்வன் இறைவன். ஆதலால், பிணியாளனைக் கைவிடுவதில்லை. அவன் பிணிகளை அடக்கியாளும் தலைவனாகின்றான். அவன் தலைவனானது மக்களுக்காகவே. வேறு காரணங். களுக்காக அல்ல. இறைவன் பைத்தியக்காரன்! குறியொன்றும் இல்லாதவன்! எது பற்றியும் கவலைப்படான்! ஏசினாலும் ஏத்தினாலும் உயிர்களை ஆட்கொண் டருளுவதே இறைவனின் தொழில்.

ஒரு செல்வன், செல்லமாக நாய் வளர்க்கிறான். வேளா வேளைக்குப் பாற்சோறு பஞ்சணை எல்லாம் கிடைக்கிறது. ஒருநாள் செல்வன் வீட்டு 'பேபி'யான நாய் தெருவில் சுற்றிய ஊர் நாயைப் பார்த்தது. அது சுதந்திர் மாகச் சுற்றியது. இந்த வளர்ப்பு பேபிக்கு ஊர் நாயுடன் சேர ஆசை பெரிய இடத்தில் இருந்தாலும் சின்னப் புத்தி எளிதில் போகுமா? பேபி சங்கிலியை தலையால் கழற்றிக் கொண்டு வீட்டைவிட்டு ஓடிவிட்டது. எங்கு ஓடிற்று! மாடி வீட்டில் பஞ்சணையில் கிடந்த நாய் அடுத்த வீட்டுக் குப்பை மேட்டுக்கு ஓடிற்று; அந்தக் குப்பை மேட்டில் ஊர் நாயுடன் கூடி விளையாடிக் கும்மாளமிட்டது. பேபியை வளர்த்தவன் பேபியைக் காணாமல் தவித்தான் தேடினான்; தேடிப் போன நிலையில் பேபி குப்பை மேட்டில் விளையாடுவதைப் பார்த்தான்; அங்கே சென்றான். செல்லமாக 'பேபி!' என்றழைத்தான். பேபி வரவில்லை; நிமிர்ந்து பார்த்தது; உறவைப் புரிந்து கொள்ளவில்லை; உறவை அது பாராட்டவில்லை; மதிக்கவில்லை. மிக நெருக்கமாகப் போய் 'பேபி!' என்று ஆசையோடு அழைத்தான்! ஊகூம்! ஊகூம்! பேபி தன்னை வளர்த்த தலைவனைப் புரிந்து கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல, நிராகரிக்கிறது! வளர்த்தவனுக்குப் பரிவு, பாசம் விடவில்லை! பேபியின் அருகில் போய் பேபியைக் குப்பை படிந்த உடலுடன் அள்ளித் தூக்குகிறான்! துடைக்கிறான்! முத்தமிடுகிறான்! பேபி செய்வதறியாமல் விழிக்கிறது! குப்பை மேட்டுச் சுகம் பறிபோவதில் கவலை தான்்்! ஆயிலும், வளர்த்தவனின் பிடி இறுக்கமான பிடி! ஒட இயலவில்லை! இந்தக் கதைதான்்் ஆன்மாவின் கதையும்!

இறைவன் எவ்வளவு அற்புதமான வாழ்க்கையைத் தந்திருக்கிறான்! இந்த உலகத்தில் வினைகள் பலவற்றை யும் தொழில்கள் பலவற்றையும் செய்து பாருள்ளோர் வாழத் தொண்டு செய்யலாம்! உலகம் உண்ண உண்டு வாழ்ந்தால், தீமையில்லை! நாடெல்லாம் வாழக் கேடொன்றும் இல்லை. ஏன் சண்டை கலகம்: அழுக்காற்றினால் உயர்ந்தார் உண்டா? கலகம் செய்து, காரியம் சாதித்தவர்கள் உண்டா? இல்லை! இல்லை!

இறைவனிடத்தில் பத்திமை செய்க! இறைவன். காந்தம்! நம்மை ஈர்த்து ஈர்த்து ஆட்கொண்டருளத் தக்க வகையில் ஈர்க்கப்படும் ஆற்றலுடைய இரும்பாக வாழ்வோம்! பட்டமரக் கட்டையாக கிடந்து என்ன பயன்? வினைகள் இயற்றுதல், தொழில் செய்தலில் இரும்பு போல உறுதியாக இருப்போம்! துருப்பிடித்து அழியும் இரும்பு போல் ஆன்மாவை ஆணவத்தால் ஆசையால் அழிந்து போகாமல் பாதுகாத்து அன்பு, தொண்டு ஆகிய வற்றால் ஆன்மாவை வளர்ப்போம். பாதுகாப்போம். ஆன்மாவை நாளும் தொழில் செய்யும் மனப்போக்கால் உயிர்ப்புள்ள ஆனந்தத்தை ஈர்க்கும் ஆற்றலுடையதாக பாதுகாப்போம்.

"வினை, வினை"யென்று பயந்து விடாதீர்கள்! வினை செய்தலே இயற்கை கடமை மனக்கோணலின்றி. பொதுவில் நன்மை செய்யுங்கள்!

வளர்க இவ்வையகம் வாழ்க இவ்வையகம்!

          வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று
             போதுநான் வினைக்கேடன் என்பாய் போல
          இனையன் நான் என்றுன்னை அறிவித்து என்னை
              ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு இரும்பின் பாவை
          அனையநான் பாடேன் நின்றாடேன் அந்தோ
              அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன்!
          முனைவனே முறையோ நான் ஆன வாறு
              முடிவறியேன் முதல் அந்தம் ஆயி னானே!

(திருச்சதகம்—22)