திருவாசகம்/திருப்பூவல்லி

விக்கிமூலம் இலிருந்து

மாயா விசயம் நீக்குதல்

(தில்லையில் அருளியது - நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

    இணையார் திருவடி என்தலைமேல் வைத்தலுமே
    துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்
    அணையார் புனற்றில்லை அம்பலத்தே ஆடுகின்ற
    புணையாளன் சீர்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 275

    எந்தையெந் தாய்சுற்றம் மற்றுமெல்லாம் என்னுடைய
    பந்தம் அறுந்தென்னை ஆண்டுகொண்ட பாண்டிப்பிரான்
    அந்த இடைமருதில் ஆனந்தத் தேனிருந்த
    பொந்தைப் பரவிநாம் பூவல்லி கொய்யாமோ. 276

    நாயிற் கடைப்பட்ட நம்மையுமோர் பொருட்படுத்துத்
    தாயிற் பெரிதுங் தயாவுடைய தம்பொருமான்
    மாயப் பிறப்பறுந் தாண்டானென் வல்வினையின்
    வாயிற் பொடியட்டிப் பூவல்லி கொய்யாமோ. 277

    பண்பட்ட தில்லைப் பதிக்கரசைப் பரவாதே
    எண்பட்ட தக்கன் அருக்கன் எச்சன் இந்துஅனல்
    விண்பட்ட பூதப் படைவீர பத்திரரால்
    புண்பட்ட வாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 278

    தேனாடு கொன்றை சடைக்கணிந்த சிவபெருமான்
    ஊனாடி நாடிவந் துள்புகுந்தான் உலகர்முன்னே
    நானாடி ஆடிநின் றோலமிட நடம்பயிலும்
    வானாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ. 279

    எரிமூன்று தேவர்க் கிரங்கியருள் செய்தருளிச்
    சிரமூன் றறத்தன் திருப்புருவம் நெரித்தருளி
    உருமூன்று மாகி உணர்வரிதாம் ஒருவனுமே
    புரமூன் றெரித்தவா பூவல்லி கொய்யாமோ. 280

    வணங்கத் தலை வைத்து வார்கழல்வாய் வாழ்த்தவைத்து
    இணங்தத்தன் சீரடியார் கூட்டமும்வைத் தெம்பெருமான்
    அணங்கொடணிதில்லை அம்பலத்தே ஆடுகின்ற
    குணங் கூரப் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 281

    நெறிசெய் தருளித்தன் சீரடியார் பொன்னடிக்கே
    குறிசெய்து கொண்டென்னை ஆண்டபிரான் குணம்பரவி
    முறிசெய்து நம்மை முழுதுடற்றும் பழவினையைக்
    கிறிசெய்த வாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 282

    பன்னாட் பரவிப் பணிசெய்யப் பாதமலர்
    என்ஆகம் துன்னவைத்த பெரியோன் எழிற்சுடராய்க்
    கல்நா ருரித்தென்னை யாண்டுகொண்டான் கழலிணைகள்
    பொன்னான வாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 283

    பேராசை யாமிந்தப் பிண்டமறப் பெருந்துறையான்
    சீரார் திருவடி யென் தலைமேல் வைத்தபிரான்
    காரார் கடல்நஞ்சை உண்டுகந்த காபாலி
    போரார் புறம்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 284

    பாலும் அமுதமுந் தேனுடனாம் பராபரமாய்க்
    கோலங் குளிர்ந்துள்ளங் கொண்டபிரான் குரைகழல்கள்
    ஞாலம் பரவுவார் நன்னெறியாம் அந்நெறியே
    போலும் புகழ்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 285

    வானவன் மாலயன் மற்றுமுள்ள தேவர்கட்கும்
    கோனவ னாய் நின்று கூடலிலாக் குணங்குறியோன்
    ஆன நெடுங்கடல் ஆலாலம் அமுதுசெய்யப்
    போனகம் ஆனவா பூவல்லி கொய்யாமோ. 286

    அன்றால நீழற்கீழ் அருமறைகள் தானருளி
    நன்றாக வானவர் மாமுனிவர் நாள்தோறும்
    நின்றார ஏத்தும் நிறைகழலோள் புனைகொன்றைப்
    பொன்தாது பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 287

    படமாக என்னுள்ளே தன்னிணைப்போ தவையளித்திங்
    கிடமாகக் கொண்டிருந் தேகம்பம் மேயபிரான்
    தடமார் மதில்தில்லை அம்பலமே தானிடமா
    நடமாடு மாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 288

    அங்கி அருக்கன் இராவணன் அந்தகன் கூற்றன்
    செங்கண் அரிஅயன் இந்திரனுஞ் சந்திரனும்
    பங்கமில் தக்கனும் எச்சனுந்தம் பரிசழியப்
    பொங்கியசீர் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 289

    திண்போர் விடையான் சிவபுரத்தார் போரேறு
    மண்பால் மதுரையிற் பிட்டமுது செய்தருளித்
    தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட
    புண்பாடல் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 290

    முன்னாய மாலயனும் வானவரும் தானவரும்
    பொன்னார் திருவடி தாமறியார் போற்றுவதே
    என்னாகம் உள்புகுந் தாண்டு கொண்டான் இலங்கணியாம்
    பன்னாகம் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 291

    சீரார் திருவடித் திண்சிலம்பு சிலம்பொலிக்கே
    ஆராத ஆசையதாய் அடியேன் அகமகிழத்
    தேராந்த வீதிப் பெருந்துறையான் திருநடஞ்செய்
    பேரானந் தம்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 292

    அத்தி யுரித்தது போர்த்தருளும் பெருந்துறையான்
    பித்த வடிவுகொண் டிவ்வுலகிற் பிள்ளையுமாம்
    முத்தி முழுமுதலுத் தரகோச மங்கைவள்ளல்
    புத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ. 293

    மாவார வேறி மதுரைநகர் புகுந்தருளித்
    தேவார்ந்த கோலந் திகழப் பெருந்துறையான்
    கோவாகி வந்தெம்மைக் குற்றவேல் கொண்டருளும்
    பூவார் கழல்பரவிப் பூவல்லி கொய்யாமோ. 294

    திருச்சிற்றம்பலம்