திருவிளையாடற் புராணம்/04

விக்கிமூலம் இலிருந்து

4. தடாதகைப் பிராட்டி திருவவதாரப் படலம்

வெற்றித் திருமகளைத் தன் தோள்களால் தழுவிய வீரத் திருமகனாகிய பாண்டியன் மலையத்துவசன் கல்வி கேள்விகளில் சிறந்து அறிவும் ஆற்றலும் மிக்க பேரரசனாகத் திகழ்ந்தான். வடமொழியும், தமிழ் மொழியும் அவன் கற்றுப் புலமை பெற்றிருந்தான். இருமொழி கற்று உற்ற வயது வந்ததும் அவன் காரிகை ஒருத்தியைத் தேர்ந்து இவ்வாழ்க்கைத் துணைவியாக்கக் கருதினான்.

சந்திரகுலத்தில் பிறந்த இப்பாண்டியன் சூரிய குலத்தில் பிறந்த பேரரசன் சூரசேனன் பெற்ற திருமகளாகிய காஞ்சனமாலை என்பவளை மணம் முடித்தான். பொன் மாலையென அவன் அப்பெண் மகளைப் போற்றி இல்லற வாழ்க்கை இனிது நடத்தினான்.

காதல் மனைவியிடம் அவன் அன்பு செலுத்தி இன்புற்று வாழ்ந்த போதும் துன்பம் தீர்க்க ஒரு மகவை அவர்கள் பெறவில்லை. மகப்பேறு இல்லாத குறையைப் போக்க அக்கால வழக்கப்படி புத்திர காமேட்டி யாகம் ஒன்று செய்தான். யாகக்குழியில் நெய், சமித்து, பொரி முதலியவற்றை இட்டு ஆகுதி செய்தான். அக்கினி சுடர் விட்டு எரிந்ததும் வேள்வியில் வெற்றித் திருமகளாகிய அழகிய பெண்குழந்தை எழுந்து அன்னை காஞ்சனமாலையின் மடியில் வந்து தவழ்ந்தது. உமையே அப்பெண் குழந்தை வடிவில் வந்தது என்பது அவர்களுக்குத் தெரியாது. அப்பிறவியில் ஒரு சிறுமாற்றம் காணப்பட்டது. மூன்று முலைகள் இயற்கைக்கு மாறாக அப்பெண்குழந்தை பெற்றிருந்தது. அது பாண்டியனுக்குத் திகைப்பை அளித்தது. வருத்தமும் உண்டாக்கியது கவலைப்பட்டான்.

மதுரைச் சொக்கநாதரிடம் முறையிட்டுத் தன் குறையைச் சொல்லி வருந்தினான். தெய்வத் திருவாக்கு அசரீரியாக எழுந்து அவன் துயரைப் போக்கியது. "வேள்வியில் பெற்ற செல்வி தெய்வத்தன்மை கொண்டவள். அவள் வயதுக்கு வந்ததும் வனப்புமிக்க அழகும் கவர்ச்சியும் பெற்று விளங்குவாள். தான் மணக்கும் கணவனை எதிர்ப்படும்போது மூன்றாவது முலை அவளை விட்டு மறைந்துவிடும்; அதனால் கவலைப்படவேண்டாம்" என்று உரைக்க அவன் மன நிறைவோடு அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு வேள்விச் சாலையை விட்டு நீங்கித் தன் அரண்மனையை அடைந்தான், தெய்வத் திருவாக்கு அறிவித்தபடி அவளுக்குத் தடாதகை என்று பெயரிட்டுச் சிறப்போடு அவ்வப்போது நடத்த வேண்டிய சடங்குகளைச் செய்து கல்வி கேள்விகளில் வல்லவள் ஆக்கினான். பெண்ணாக அவதரித்த போதும் அவளை வீர மறவனைப் போல யானை ஏற்றம், குதிரைப் பயிற்சி, வாள் வில் பயிற்சிகள் முதலியன கற்றுத் தந்து மறக்குலப் பெண்ணாக மாற்றினான், ஆட்சிக்குரிய தகுதிகள் எல்லாம் மாட்சி பெற அமையும்படி வளர்த்து வந்தான்.

பெண்ணுக்கு மதிப்புத் தந்த காலம் அது . அரசியாவதற்கு வேண்டிய தகுதிகள் அனைத்தும் அவள் பெறச் செய்தான். பராசக்தியாகிய பார்வதியே பாரில் வந்து பிறந்ததால் வீரத் திருமகளாக வளர்த்தார்கள். அவனும் தனக்கு ஆண்மகவு இன்மையால் அவளுக்குப் பட்டம் சூட்டி அரசியாக்கி வைத்தான். மீனாட்சி அம்மையே கோனாட்சி செய்யத் தொடங்கினாள்.

மலையத்துவசன் தன் மகளுக்கு மணிமுடிசூட்டியபின் மண்ணுலக வாழ்க்கையைச் சில ஆண்டுகளே நீட்டித்தான். இயற்கை அவன் ஆயுளை முடித்து விட்ட்து. அவன் பரலோகம் சென்று உயர்நிலை அடைந்தான்.

பெண்ணரசியாகிய தடாதகைப் பிராட்டியார் நீதி வழுவாமல் செங்கோல் ஆட்சி நடத்தினாள்; அறச் சாலைகளையும் அறிவுச் சாலைகளையும் நிறுவித் தருமமும், கல்வியும் வளர்த்துப் புகழைப் பரப்பினாள். காலையில் விழித்து எழுந்ததும் சிவனை நினைத்து வழிபட்டே தன் கடமைகளைச் செய்யத் தொடங்கினாள். சோமசுந்தரர் திருக்கோயிலுக்குச் சென்று விதிப்படி வலம் செய்து வணங்கி வழிபட்டு வந்தாள். அநிந்திதி கமலினி என்று தெய்வத் தோழியர் இருவரும் மானுட வடிவம் தாங்கி அவளுக்கு அணுக்கத் தொண்டராகப் பணியாற்றினர். அவ்வாறே திருமகளும், கலைமகளும் பிறவி எடுத்து இறைவியாகிய தடாதகைக்குப் பணிவிடை செய்தனர். நாடு கல்வியும் செல்வமும் பெற்று ஓங்கியிருந்தது. சேரனும் சோழனும் அம்மையாரின் அடிகளை வணங்கி இட்ட ஏவல்களைப் பணிவுடன் செய்து வந்தனர். பாண்டிய நாடு கன்னி நாடு என்றும் வழங்கப்பட்டது.

கயிலையில் சிவனோடு ஒரு பாகமாக இருந்து வரும் உமையம்மை ஒரு முறை தக்கன் மகளாக அவதரித்தார். அதே போல இமவானும் தவம் செய்து பார்வதியைப் பெற்றான். இருவரும் அவர்கள் செய்த தவப்பேற்றினால் உமையாரை மகளாகப் பெற்றனர். இங்கு இவர் மானுட மகளாகப் பிறந்தது பெரிதும் வியப்பைத் தந்தது. புதுமையாகவும் இருந்தது. அதற்குக் காரணம் என்ன? அதற்கு ஒரு வரலாறு பின்னணியாக இருந்தது. அதனை அகத்தியர் எடுத்துச் சொல்ல ஏனைய முனிவர்கள் கேட்டுத் தெளிவு பெற்றனர்.

விசுவாவசு என்னும் வித்தியாதரனுக்கு ஒரு மகள் இருந்தாள்; அவள் பெயர் வித்தியாவதி என்பதாகும்; பெயருக்கு ஏற்ப அவள் பல கலைகளையும் கற்றவளாக இருந்தாள். அவள் உமையம்மையிடம் மிக்க அன்பும் ஈடுபாடும் கொண்டிருந்தாள். தன் தந்தையை நோக்கித் தான் உமையாளிடத்து நெருங்கிய அன்பு காட்ட வேண்டும்; அவர்களைத் தொடர்ந்து வழிபட வேண்டும்; அதற்கு உபாயம் யாது என்று கேட்டாள். அதற்கு அவன் மதுரைத் தலத்தின் மகிமையைக் கூறி அது பூலோகச் சிவலோகம் எனப்படும் என்றும், அங்குள்ள மீனாட்சி கோயிலுக்குச் சென்று வழிபடுவதே உயர்வு தரும் என்றும் கூறினான்: உய்யும் நெறி அறிந்து உலக அன்னையின் திருவடிகளுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு அல்லும் பகலும் வழிபட மதுரை வந்து சேர்ந்தாள். அங்குத் தனி ஒருத்தியாக இருந்து விரதங்கள் பல நோற்றாள். மீனாட்சியம்மையின் கோயிலுக்குத் தினந்தோறும் சென்று வழிபட்டாள். உணவு உட்கொள்ளுதலைச் சுருக்கிக்கொண்டு ஊனைச் சுருக்கி உள்ளொளி பெருக்கும் உத்தமச் செயலில் ஈடுபட்டாள். நாளைக்கு ஒரு வேளையே உண்டு வந்தாள். தை மாதம் தொடங்கி மார்கழி வரை பன்னிரண்டு மாதம் விரதங்கள் அனுஷ்டித்து உணவைச் சுருக்கிக் கொண்டு வந்தாள். தையில் பகலில் ஒரு வேளை உண்டாள்; மாசியில் இரவு மட்டும் உண்டாள்; பங்குனியில் கிடைத்ததை உண்டு காலம் கழித்தாள்; சித்திரையில் இலை தழைகளையும், வைகாசி மாதம் எள்ளுப்பொடியையும் உண்டு வந்ததாள்; ஆனியில் சந்திராயன விரதம் மேற்கொண்டாள்; ஆடி மாதத்தில் பசுவின் பஞ்சகவ்வியத் துளியையும், ஆவணியில் பாலும், புரட்டாசியில் தண்ணிரும், ஐப்பசியில் தருப்பைப் புல்லில் நிற்கும் பனிநீரும் கார்த்திகையில் வெறும் காற்றையும் உண்டாள்; மார்கழியில் முழுப்பட்டினி கிடந்தாள், தை மாதம் பிறந்ததும் கோயில் சந்நிதியை அடைந்து மீனாட்சியம்மையைத் துதித்து யாழ் எடுத்து இன்னிசை மீட்டிப் பாடினாள்; மீனாட்சி அம்மையின் அருட்செய்கைகளை அழகாகப் பாடினாள்.

"வேதமுடிமேல் ஆனந்த உருவாய் நிறைந்து, வினளயாடு மாதரரசே 'முத்தநகை மானே, இமயமட மயிலே
மாதர் இமவான் தேவி மணிவடம் தோய் மார்பும் தடந்தோளும்
பாதமலர் சேப்புற மிதித்து விளையாட்டயரும் பரிசு என்னே!"

மீனாட்சி அம்மையைச் சிறு குழந்தையாக்கி உருவகித்துப் பாடிய பாடல் நெஞ்சை உருக்கும் தன்மையதாக விளங்கியது. தெய்வக் கோயிலில் குடி கொண்டிருந்த மீனாட்சியே குழந்தை வடிவாக அவள் முன் நின்று தவழ்ந்து விளையாடினாள். மூன்று வயது சிறுமியாக அவள் முன் காட்சி அளித்தாள்.

யாழினும் இனிய குரலில் அவள் இசைத்த பாட்டுக்கு உருகி நேரே வந்து காட்சி அளித்து அக்குழந்தை சிரித்து விளையாடி அவள் சிந்தனை யாது என்று கேட்டது. வந்தனை செய்து வழிபட்ட வித்தியாவதி என்னும் அக்காந்தருவப் பெண் மீனாட்சி அம்மையைத் தனக்கு மகளாகப் பிறந்து மகிழ்வளிக்க வேண்டும் என்று வேண்டினாள்.

அவ்வாறே வரம் கொடுத்து வாழ்த்தி அனுப்பினாள். அந்த வித்தியாவதியே காஞ்சனமாலையாகப் பிறந்து பாண்டியன் மலையத்துவசனை மணந்து தடாதகைப் பிராட்டியை மகளாகப் பெற்று உயர்பேறு பெற்றாள் என்பது கதை. இக்கதையை அகத்தியர் ஏனைய முனிவர்க்கு எடுத்து உரைத்து விளக்கம் தந்தார் என்று கூறப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருவிளையாடற்_புராணம்/04&oldid=1111279" இலிருந்து மீள்விக்கப்பட்டது