திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சாலமோனின் ஞானம் (ஞானாகமம்)/அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

விக்கிமூலம் இலிருந்து


"ஞானம் - கதிரவனைவிட அழகானது; விண்மீன் கூட்டத்திலும் சிறந்தது; ஒளியைக் காட்டிலும் மேலானது. இரவுக்குப் பகல் இடம் கொடுக்கிறது. ஆனால், ஞானத்தைத் தீமை மேற்கொள்ளாது." - சாலமோனின் ஞானம் 7:29-30.

சாலமோனின் ஞானம் (The Book of Wisdom)[தொகு]

அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

அதிகாரம் 7[தொகு]

ஞானத்தை மதித்தல்[தொகு]


1 எல்லா மனிதர்களையும்போல
நானும் இறப்புக்குரியவன்;
நிலத்தினின்று உண்டாக்கப்பட்ட முதல் மனிதரின் வழித்தோன்றல்.
என் தாய் வயிற்றில் என் உடல் உருவாயிற்று. [1]


2 ஆணின் உயிர்த்துளியினாலும் திருமண இன்பத்தினாலும்
பத்து மாத காலமாகக் குருதியோடு உறைந்து
என் உடல் உருவெடுத்தது.


3 நான் பிறந்தபொழுது எல்லாரையும்போல
நானும் வெறும் காற்றையே சுவாசித்தேன்;
என் உடலியல்புக்கு ஒத்த மண்ணில் கிடத்தப்பட்டேன்;
முதன்முதலில் அழுகுரல் எழுப்பினேன்.


4 துணிகளில் பொதியப்பட்டேன்;
பேணி வளர்க்கப்பட்டேன்.


5 எந்த மன்னரும் இதற்கு மாறுபட்ட வகையில்
வாழ்க்கையைத் தொடங்கியதில்லை.


6 எல்லோரும் ஒரே வகையில் பிறக்கின்றனர்;
ஒரே வகையில் இறக்கின்றனர். [2]


7 எனவே நான் மன்றாடினேன்;
ஞானம் எனக்குக் கொடுக்கப்பட்டது.
நான் இறைவனை வேண்டினேன்;
ஞானத்தின் ஆவி என்மீது பொழியப்பட்டது. [3]


8 செங்கோலுக்கும் அரியணைக்கும் மேலாக
அதை விரும்பித் தேர்ந்தேன்;
அதனோடு ஒப்பிடும்போது,
செல்வம் ஒன்றுமே இல்லை என்று உணர்ந்தேன்.


9 விலையுயர்ந்த மாணிக்கக்கல்லும் அதற்கு ஈடில்லை;
அதனோடு ஒப்பிடும்போது,
பொன்னெல்லாம் சிறிதளவு மணலுக்கே நிகர்;
அதற்குமுன் வெள்ளியும் களிமண்ணாகவே கருதப்படும்.


10 உடல் நலத்திற்கும் அழகிற்கும் மேலாக
அதன்மீது அன்புகொண்டேன்;
ஒளிக்கு மாற்றாக அதைத் தேர்ந்தெடுத்தேன்.
ஏனெனில் அதன் சுடரொளி என்றும் மங்காது.


11 ஞானத்தோடு எல்லா நலன்களும் என்னிடம் வந்து சேர்ந்தன.
அளவற்ற செல்வத்தை அது ஏந்தி வந்தது. [4]


12 அவற்றிலெல்லாம் நான் மகிழ்ந்தேன்;
ஏனெனில் ஞானமே அவற்றை வழிநடத்துகிறது;
அதுவே அவற்றையெல்லாம் ஈன்றெடுத்தது
என்பதை அறியாதிருந்தேன்.


13 நான் கள்ளங்கபடின்றிக் கற்றேன்.
கற்றதை முறையீடின்றிப் பிறரோடு பகிர்ந்து கொண்டேன்.
அதன் செல்வத்தை நான் மறைப்பதில்லை.


14 மனிதர்களுக்கு அது என்றும் குறையாத கருவூலம்.
அதை அடைவோர் கடவுளோடு நட்புக்கொள்வர்;
நற்பயற்சி அளிக்கும் கொடைகளால் நற்சான்று பெற்றவராவர்.


15 கடவுளது திருவுளத்திற்கு ஏற்பப் பேசவும்,
நான் பெற்றுக்கொண்ட கொடைகளுக்கு ஏற்பச் சிந்திக்கவும்,
கடவுள் எனக்கு அருள்புரிவாராக!
ஏனெனில் ஞானத்துக்கு அவரே வழிகாட்டி.
ஞானிகளைத் திருத்துகிறவரும் அவரே.


16 நாமும் நம் சொற்களும் அவருடைய கைகளில் இருக்கின்றோம்.
அதுபோல் எல்லா அறிவுத்திறனும்
கைத்திறனும் அவருடைய கைகளில் உள்ளன.


17 இருப்பவை பற்றிய உண்மையான அறிவை
எனக்கு அளித்தவர் அவரே;
உலகின் அமைப்பையும் மூலப்பொருள்களின் செயல்பாட்டையம்
நான் அறியச் செய்தவரும் அவரே.


18 காலங்களின் தொடக்கம், முடிவு, மையம்,
கதிரவனின் சுழற்சியால் ஏற்படும் மாற்றங்கள்,
பருவ கால மாறுபாடுகள்,


19 ஆண்டுகளின் சுழற்சிகள்,
விண்மீன்களின் நிலைக்களங்கள்,


20 உயிரினங்களின் இயல்பு,
காட்டு விலங்குகளின் சீற்றம்,
காற்று வகைகளின் வலிமை, [5]
மனிதர்களின் எண்ணங்கள்,
பல்வேறு செடிவகைகள்,
வேர்களின் ஆற்றல்,


21 இவைபோன்ற மறைவானவைபற்றியும்
வெளிப்படையானவைபற்றியும்
கற்றறிந்தேன்.
எல்லாவற்றையும் உருவாக்கிய ஞானமே
எனக்கு இவற்றைக் கற்றுக்கொடுத்தது.

ஞானத்தின் இயல்பும் மேன்மையும்[தொகு]


22 [6] ஞானம் - ஆற்றல் கொண்டது.
அவ்வாற்றல் அறிவுடையது;
தூய்மையானது;
பலவகைப்பட்டது;
நுண்மையானது;
உயிரோட்டம் உள்ளது;
தெளிவுமிக்கது;
மாசுபடாதது;
வெளிப்படையானது;
கேடுறாதது;
நன்மையை விரும்புவது;
கூர்மையானது.


23 ஞானம் -எதிர்க்கமுடியாதது;
நன்மை செய்வது;
மனிதநேயம் கொண்டது;
நிலைபெயராதது;
உறுதியானது;
வீண்கவலை கொள்ளாதது;
எல்லாம் வல்லது;
எல்லாவற்றையும் பார்வையிடுவது;
அறிவும் தூய்மையும் நுண்மையும் கொண்ட
எல்லா உள்ளங்களையும் ஊடுருவிச் செல்வது.


24 ஞானம் - அசைவுகள் எல்லாவற்றையும்விட மிக விரைவானது;
அதன் தூய்மையினால் எல்லாவற்றிலும் நிரம்பி நிற்கிறது;
எல்லாவற்றையும் ஊடுருவிச் செல்கிறது.


25 ஞானம் - கடவுளின் ஆற்றலிலிருந்து புறப்படும் ஆவி;
எல்லாம் வல்லவரின் மாட்சியிலிருந்து எழும் தூய வெளிப்பாடு.
எனவே மாசுபட்டது எதுவும் அதனுள் நுழையமுடியாது.


26 ஞானம் - என்றுமுள ஒளியின் சுடர்;
கடவுளது செயல்திறனின் கறைபடியாக் கண்ணாடி;
அவருடைய நன்மையின் சாயல்.


27 ஞானம் - ஒன்றே என்றாலும், எல்லாம் செய்ய வல்லது;
தான் மாறாது, அனைத்தையும் புதுப்பிக்கிறது;
தலைமுறைதோறும் தூய ஆன்மாக்களில் நுழைகிறது;
அவர்களைக் கடவுளின் நண்பர்கள் எனவும்
இறைவாக்கினர்கள் எனவும் ஆக்குகிறது.


28 ஞானத்தோடு வாழ்கின்றவர்கள்மீது அன்பு செலுத்துவது போல
வேறு எதன்மீதும் கடவுள் அன்பு செலுத்துவதில்லை.


29 ஞானம் - கதிரவனைவிட அழகானது;
விண்மீன் கூட்டத்திலும் சிறந்தது;
ஒளியைக் காட்டிலும் மேலானது.


30 இரவுக்குப் பகல் இடம் கொடுக்கிறது.
ஆனால், ஞானத்தைத் தீமை மேற்கொள்ளாது.


குறிப்புகள்

[1] 7:1 = சீஞா 33:10.
[2] 7:6 = யோபு 1:21.
[3] 7:7 = சாஞா 9:1-8; 1 அர 3:6-14.
[4] 7:11 = 1 அர 3:13; நீமொ 3:16.
[5] 7:20 - "ஆவிகளின் வலிமை" என்றும் மொழிபெயர்க்கலாம்.
[6] 7:22-8:1 = நீமொ 8:22-31; சீஞா 24:1-22.


அதிகாரம் 8[தொகு]


1 ஞானம் - ஒரு கோடி முதல் மறு கோடிவரை
ஆற்றலோடு செல்கிறது;
எல்லாவற்றையும் முறையாக ஒழுங்குபடுத்துகிறது. [1]

ஞானத்தின்மீது நாட்டம்[தொகு]


2 ஞானத்தின் மேல் நான் அன்பு கூர்ந்தேன்;
என் இளமைமுதல் அதைத் தேடினேன்;
என் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ள விரும்பினேன்;
அதன் அழகில் மயங்கினேன். [2]


3 கடவுளோடு ஒன்றுபட்ட வாழ்வினால்
ஞானம் தன் உயர்குடிப்பிறப்பில் மேன்மை பாராட்டுகிறது.
அதனால் அனைத்துலகின் ஆண்டவர்
அதன்மேல் அன்புகூர்ந்தார்.


4 ஞானமே கடவுளைப் பற்றிய மெய்யறிவுக்குப்
புகுமுகம் செய்து வைக்கிறது;
அவருடைய செயல்களைத் தேர்வுசெய்வதும் அதுவே.


5 வாழ்வில் விரும்பத்தக்க உடைமையாகச்
செல்வம் விளங்குமாயின்,
அனைத்தையும் ஆக்கும் ஞானத்தைவிடச்
சிறந்த செல்வம் ஏது?


6 அறிவுத்திறன் ஆற்றல் மிக்கது என்றால்,
ஞானத்தைவிட,
இருப்பவற்றை உருவாக்கும் கலைஞன் வேறு யார்?


7 ஒருவர் நீதியின்மேல் அன்புகூர்கின்றாரோ?
ஞானத்தின் உழைப்பு அவரிடம் நற்பண்புகளால் மிளிரும்.
ஏனெனில் தன்னடக்கம், விவேகம்,
நீதி, துணிவு ஆகியவற்றை ஞானம் கற்பிக்கின்றது.
இவற்றைத் தவிர வாழ்வில்
மனிதருக்குப் பயனுள்ளவை வேறு ஒன்றுமில்லை.


8 ஒருவர் பரந்த பட்டறிவு பெற ஏங்குகின்றாரோ?
ஞானம் இறந்த காலத்தை அறியும்;
எதிர்காலத்தை உய்த்துணரும்;
உரைகளின் நுட்பங்களையும்
புதிர்களின் விடைகளையும் அறியும்.
அடையாளங்களையும் வியத்தகு செயல்களையும்
பருவங்கள், காலங்களின் பயன்களையும் முன்னறியும்.


9 ஆகையால் என்னோடு கூடிவாழும் பொருட்டு
ஞானத்தைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தேன்;
ஏனெனில் நன்மை செய்ய அது என்னை ஆற்றுப்படுத்தும் என்றும்,
கவலைகளிலும் துயரத்திலும்
எனக்கு ஆறுதல் தரும் என்றும் நான் அறிவேன்.


10 அதை முன்னிட்டு மக்கள் கூட்டத்தில்
நான் பெருமை பெறுவேன்;
இளைஞனாய் இருந்தாலும்
மூப்பர்களிடையே நன்மதிப்பு அடைவேன். [3]


11 நீதிவழங்கும்போது அறிவுக்கூர்மையோடு காணப்படுவேன்.
ஆள்வோர் என்னைக் கண்டு வியப்புறுவர்.


12 நான் பேசாமல் இருக்கும்பொழுது
நான் பேசும்படி அவர்கள் காத்திருப்பார்கள்;
நான் பேசும்பொழுது எனக்குச் செவி சாய்ப்பார்கள்;
நான் நீண்ட உரையாற்றும் பொழுது வாயடைத்து நிற்பார்கள்.


13 ஞானத்தினால் நான் இறவாமை எய்துவேன்;
எனக்குப்பின் வருபவர்களுக்கு
என்றும் நீங்கா நினைவை விட்டுச்செல்வேன்.


14 நான் மக்கள்மீது ஆட்சி செலுத்துவேன்;
நாடுகள் எனக்கு அடிபணியும். [4]


15 அச்சுறுத்தும் மன்னர்கள்கூட
என்னைப்பற்றிக் கேள்வியுற்று அஞ்சுவார்கள்.
மக்கள் நடுவில் நல்லவனாகவும்
போரில் வல்லவனாகவும் இருப்பேன்.


16 நான் வீட்டிற்கு வந்தபின் ஞானத்தோடு இளைப்பாறுவேன்.
ஏனெனில் அதன் தோழமையில் கசப்பே இல்லை;
அதனோடு வாழ்வதில் துன்பமே இல்லை.
அது தருவதெல்லாம் இன்பமும் மகிழ்ச்சியுமே!


17 இவற்றைப்பற்றியயெல்லாம் எனக்குள் எண்ணிப் பார்த்தபொழுது -
ஞானத்துடன் கொள்ளும் உறவால் இறவாமை கிட்டும்;
அதனுடைய நட்புறவில் தூய மகிழ்ச்சி பிறக்கும்;


18 அதனுடைய உழைப்பால் குறைபடாத செல்வம் கொழிக்கும்;
அதன் தோழமையில் பயிற்சி பெறுவதால்
அறிவுத்திறன் உண்டாகும்;
அதனோடு கலந்துரையாடுவதால்
பெரும்புகழ் கிடைக்கும் என்றெல்லாம்
என் உள்ளத்தில் எண்ணிப் பார்த்த பொழுது -
அதை எனக்கென அடைவது எப்படி என்று தேடி அலைந்தேன்.


19 நான் குழந்தையாய் இருந்த பொழுது
நல்லியல்புடன் இருந்தேன்.
நல்ல உள்ளம் என் பங்காய் அமைந்தது.


20 நல்லவனாய் இருந்ததால் மாசற்ற உடலினுள் புகழ்ந்தேன்.


21 ஆனால், கடவுள் எனக்கு ஞானத்தை ஈந்தாலொழிய
அதை அடைய முடியாது என்று நான் உணர்ந்துகொண்டேன்.
அது யாருடைய கொடை என அறிவது
அறிவுத்திறனின் அடையாளம்.
எனவே நான் ஆண்டவரை வேண்டினேன்;
கெஞ்சி மன்றாடினேன்.
என் முழு உள்ளத்தோடு சொன்னேன்: [5]


குறிப்புகள்

[1] 7:22-8:1 = நீமொ 8:22-31; சாஞா 24:1-22.
[2] 8:2 = சீஞா 15:2.
[3] 8:10 = 1 அர 5:14; சீஞா 47:14-18.
[4] 8:14 = 1 அர 5:1.
[5] 8:21 நீமொ 2:6; சீஞா 1:1.


(தொடர்ச்சி): சாலமோனின் ஞானம்: அதிகாரங்கள் 9 முதல் 10 வரை