திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சீராக்கின் ஞானம் (சீராக் ஆகமம்)/அதிகாரங்கள் 17 முதல் 18 வரை

விக்கிமூலம் இலிருந்து
"மனிதருடைய வாழ்நாள்களின் எண்ணிக்கை கூடிப்போனால் நூறு ஆண்டுகள். நித்தியத்தோடு ஒப்பிடும்போது அந்தச் சில ஆண்டுகள் கடல்நீரில் ஒருதுளி போன்றவை. கடல் மணலில் ஒரு துகள் போன்றவை." - சீராக்கின் ஞானம் 18:9-10

சீராக்கின் ஞானம் (The Book of Sirach)[தொகு]

அதிகாரங்கள் 17 முதல் 18 வரை

அதிகாரம் 17[தொகு]


1 ஆண்டவர் மனிதரை மண்ணால் படைத்தார்;
மீண்டும் அந்த மண்ணுக்கே திரும்புமாறு செய்கிறார்.


2 அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலவரையை வகுத்தார்;
மண்ணுலகில் உள்ளவற்றின்மீது அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.


3 தமக்கு உள்ளதைப்போன்ற வலிமையை அவர்களுக்கு வழங்கினார்;
தமது சாயலாகவே அவர்களை உருவாக்கினார்.


4 எல்லா உயிரினங்களும் மனிதருக்கு அஞ்சும்படி செய்தார்;
விலங்குகள், பறவைகள்மீது அவர்களுக்கு அதிகாரம் அளித்தார். [1]


5 [2] [தம் ஐந்தறிவைப் பயன்படுத்தும் உரிமையை ஆண்டவர் அவர்களுக்கு அளித்தார்;
ஆறாவதாகத் தம் அறிவுத்திறனில் பங்கு கொடுத்தார்;
அந்த ஆறறிவையும் விளக்கும் பகுத்தறிவை ஏழாவது கொடையாக வழங்கினார்.]


6 விருப்புரிமை, நாக்கு, கண், காது ஆகியவற்றையும்
சிந்திப்பதற்கு ஓர் உள்ளத்தையும் அவர்களுக்குக் கொடுத்தார்.


7 [3] அவர்களை அறிவாலும் கூர்மதியாலும் நிரப்பினார்;
நன்மை தீமையையும் அவர்களுக்குக் காட்டினார்.


8 அவர்களின் உள்ளத்தைப்பற்றி விழிப்பாய் இருந்தார்;
தம் செயல்களின் மேன்மையைக் காட்டினார்.


9 [4] [தம் வியத்தகு செயல்கள் பற்றி
என்றும் பெருமைப்படும் உரிமையை அவர்களுக்கு அளித்தார்.]


10 அவர்கள் அவரது திருப்பெயரைப் புகழ்வார்கள்;
இவ்வாறு அவருடைய செயல்களின் மேன்மையைப் பறைசாற்றுவார்கள்.


11 அறிவை அவர்களுக்கு வழங்கினார்;
வாழ்வு அளிக்கும் திருச்சட்டத்தை அவர்களுக்கு உரிமையாக்கினார்.


12 அவர்களுடன் முடிவில்லா உடன்படிக்கை செய்துகொண்டார்;
தம் தீர்ப்புகளை அவர்களுக்கு வெளிப்படுத்தினார்.


13 அவர்களின் கண்கள் அவருடைய மாட்சியைக் கண்டன;
அவர்களின் செவிகள் அவரது மாட்சியின் குரலைக் கேட்டன.


14 'எல்லாவகைத் தீமைகள் குறித்தும் கவனமாய் இருங்கள்'
என்று அவர் எச்சரித்தார்;
அடுத்திருப்பவர்களைப் பற்றிய கட்டளைகளை
அவர்கள் ஒவ்வொருவருக்கும் கொடுத்தார். [5]

கடவுளே நடுவர்[தொகு]


15 மனிதரின் வழிகளை ஆண்டவர் எப்போதும் அறிவார்;
அவரின் பார்வையிலிருந்து அவை மறைந்திருப்பதில்லை.


16 [6] [இளமை தொட்டே அவர்களின் வழிகள் தீமையை நாடுகின்றன.
தங்களின் கல்லான இதயத்தை
உணர்ச்சியுள்ள இதயமாக மாற்ற அவர்களால் முடியாது.]


17 நாடுகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தலைவரை ஏற்படுத்தினார்;
இஸ்ரயேல் நாடோ ஆண்டவரின் பங்காகும். [7]


18 [8] [இஸ்ரயேல் அவருடைய தலைப்பேறு.
அதை நற்பயிற்சியில் வளர்க்கிறார்;
அதன்மீது தம் அன்பின் ஒளியை வீசுகிறார்;
அதைக் கவனியாது விட்டுவிடுவதில்லை.]


19 மனிதரின் செயல்கள் அனைத்தும்
கதிரவனின் ஒளிபோல் அவர் திருமுன் தெளிவாய்த் துலங்குகின்றன;
அவருடைய கண்கள் எப்போதும் அவர்களுடைய வழிகள் மீது இருக்கும்.


20 அவர்களுடைய அநீதியான செயல்கள் அவருக்கு மறைவாய் இருப்பதில்லை;
அவர்களின் பாவங்கள் அனைத்தையும் ஆண்டவர் அறிவார்.


21 [9] [ஆண்டவர் நல்லவர்; அவர் தம் படைப்புகளை அறிவார்.
அவற்றை அவர் விட்டுவிடவில்லை, கைவிடவுமில்லை;
மாறாகப் பாதுகாத்தார்.]


22 மனிதர் செய்யும் தருமங்கள் அவருக்குக் கணையாழிபோல் திகழ்கின்றன;
அவர்கள் புரியும் அன்புச் செயல்கள் அவருக்குக் கண்மணிபோல் விளங்குகின்றன.


23 பின்னர் அவர் எழுந்து அவர்களுக்குக் கைம்மாறு செய்வார்;
அவர்களுக்குச் சேரவேண்டிய வெகுமதியை அவர்களின் தலைமேல் பொழிவார்.


24 இருப்பினும் மனம் வருந்துவோரைத் தம்பால் ஈர்த்துக்கொள்கிறார்;
நம்பிக்கை இழந்தோரை ஊக்குவிக்கிறார்.


மனந்திரும்ப அழைப்பு[தொகு]


25 ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்;
பாவங்களை விட்டு விலகுங்கள்;
அவர் திருமுன் வேண்டுங்கள்;
குற்றங்களைக் குறைத்துக் கொள்ளுங்கள்.


26 உன்னத இறைவனிடம் திரும்பி வாருங்கள்;
அநீதியை விட்டு விலகிச் செல்லுங்கள்;
அவர் அருவருப்பதை அடியோடு வெறுத்திடுங்கள்.


27 வாழ்வோர் உன்னத இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றனர்;
ஆனால் கீழுலகில் அவரது புகழை யாரே பாடுவர்?


28 உயிர் வாழ்ந்திராதவர் போன்றே இறந்தவர்களும்
அவருக்கு நன்றி செலுத்துவதில்லை;
உடல் நலத்துடன் உயிர் வாழ்வோரோ அவரைப் போற்றுகின்றனர். [10]


29 ஆண்டவரின் இரக்கம் எத்துணைப் பெரிது!
அவரிடம் மனந்திரும்புவோருக்கு அவர் அளிக்கும் மன்னிப்பு எத்துணை மேலானது!


30 எல்லாமே மனிதரின் ஆற்றலுக்கு உட்பட்டதில்லை;
மனிதர் இறவாமை பெற்றவர் அல்லர்.


31 கதிரவனைவிட ஒளி மிக்கது எது?
ஆயினும் சூரிய கிரகணமும் உண்டு.
ஊனும் உதிரமும் கொண்ட மனிதர் தீமைகளைப் பற்றியே சிந்திக்கின்றனர்.


32 அவர் உயர் வானத்தின் படைகளை வகைப்படுத்துகிறார்.
மனிதர் அனைவரும் புழுதியும் சாம்பலுமே.


குறிப்புகள்

[1] 17:1-4 = தொநூ 1:26-28; 3:18. சாஞா 2:23.
[2] 17:5 - [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுவது.
[3] 17:7 = தொநூ 2:17.
[4] 17:9 - [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுவது.
[5] 17:14 = விப 20:12-17.
[6] 17:16 - [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுவது.
[7] 17:17 = இச 32:9.
[8] 17:18 - [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுவது.
[9] 17:21 - [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுவது.
[10] 17:27-28 = திபா 6:5; எசா 38:18-19. பாரூ 2:17-18.

அதிகாரம் 18[தொகு]

கடவுளின் பெருமை[தொகு]


1 என்றும் வாழும் ஆண்டவரே அண்டம் முழுவதையும் படைத்தார்.


2 ஆண்டவர் ஒருவரே நீதியுள்ளவர்.
[1] [அவரைத்தவிர வேறு எவரும் இலர்.


3 அவர் தம் கையின் அசைவினால் உலகை நெறிப்படுத்துகிறார்.
எல்லாம் அவருடைய திருவுளத்திற்கு அடிபணிகின்றன.
அவர் எல்லாவற்றிற்கும் மன்னர்;
தம் ஆற்றலால் தூயவற்றைத் தூய்மை அல்லாதவற்றினின்று பிரித்துவைக்கிறார்.]


4 அவர் தம் செயல்களை அறிவிக்க யாருக்கும் அதிகாரம் கொடுக்கவில்லை;
அவருடைய அரும்பெரும் செயல்களைக் கண்டுபிடிப்பவர் யார்?


5 அவரது பேராற்றலை எவரால் அளவிட்டுக் கூற முடியும்?
அவரது இரக்கத்தை எவரால் முழுவதும் விரித்துரைக்க இயலும்?


6 ஆண்டவரின் வியத்தகு செயல்களைக் குறைக்கவோ கூட்டவோ எவராலும் முடியாது;
அவற்றை ஆழ்ந்தறிய எவராலும் இயலாது.


7 மனிதர் அவற்றைக் கண்டுணர்ந்து விட்டதாக எண்ணும்போதுதான்
கண்டுணரவே தொடங்குகின்றனர்;
அவற்றைக் கண்டுணர்ந்து முடிக்கும்போது
மேலும் குழப்பம் அடைகின்றனர்.

மனிதரின் சிறுமை[தொகு]


8 மனிதர் என்போர் யார்?
அவர்களால் ஏற்படும் நன்மைகள் என்ன?
அவர்களிடம் இருக்கும் நன்மைகள் யாவை?
தீமைகள் யாவை? [2]


9 மனிதருடைய வாழ்நாள்களின் எண்ணிக்கை
கூடிப்போனால் நூறு ஆண்டுகள்.


10 நித்தியத்தோடு ஒப்பிடும்போது
அந்தச் சில ஆண்டுகள் கடல்நீரில் ஒருதுளி போன்றவை.
கடல் மணலில் ஒரு துகள் போன்றவை. [3]


11 இதனால்தான் ஆண்டவர் அவர்கள்மீது பொறுமையுடன் இருக்கிறார்;
தம் இரக்கத்தை அவர்கள்மீது பொழிகிறார்.


12 அவர்களின் அழிவு இரங்கத்தக்கது என அவர் கண்டறிகிறார்;
அளவுக்கு மிகுதியாகவே அவர்களை மன்னிக்கிறார்.


13 மனிதர் அடுத்திருப்பவருக்கே இரக்கம் காட்டுகின்றனர்;
ஆண்டவர் எல்லா உயிருக்கும் இரக்கம் காட்டுகிறார்;
அவற்றைக் கண்டிக்கிறார்;
பயிற்றுவிக்கிறார்;
அவற்றுக்குக் கற்றுக் கொடுக்கிறார்;
இடையர்கள் தங்கள் மந்தையைத்
தங்களிடம் மீண்டும் அழைத்துக்கொள்வதுபோல்
அவரும் செய்கிறார். [4]


14 தாம் அளிக்கும் நற்பயிற்சியை ஏற்றுக்கொள்வோர்மீதும்
தம் தீர்ப்புகளை ஆர்வத்துடன் தேடுவோர்மீதும் இரக்கம் காட்டுகிறார்.

ஈகையின் சிறப்பு[தொகு]


15 குழந்தாய், நீ நன்மை செய்யும்போது கடிந்துகொள்ளாதே;
கொடைகள் வழங்கும்போது புண்படுத்தும் சொற்களைக் கூறாதே.


16 கடும் வெப்பத்தைப் பனி தணிக்கும் அன்றோ?
உனது சொல் கொடையைவிடச் சிறந்தது.


17 ஒரு சொல் நல்ல கொடையைவிட மேலானது அன்றோ?
கனிவுள்ள மனிதரிடம் இவ்விரண்டுமே காணப்படும்.


18 அறிவிலிகள் கடுஞ்சொல் கூறுவார்கள்.
மனம் ஒப்பாது கொடுக்கும் ஈகை
அதனைப் பெறுவோருக்கு எரிச்சலையே கொடுக்கும்.

சிந்தனையும் முன்மதியும்[தொகு]


19 கற்றபின் பேசு;
நோய் வருமுன் உடல்நலம் பேணு.


20 ஆண்டவரின் தீர்ப்பு வருமுன் உன்னையே ஆராய்ந்து பார்;
கடவுள் சந்திக்க வரும் நாளில் நீ மன்னிப்பு பெறுவாய்.


21 நோய்வாய்ப்படுமுன் உன்னையே தாழ்த்திடு;
பாவம் செய்தபின் மனந்திரும்பு.


22 நேர்ச்சையைத் தகுந்த நேரத்தில் செலுத்த
எதுவும் தடையாய் இருக்க வேண்டாம்;
அதை நிறைவேற்ற இறக்கும்வரையில் நீ காத்திருக்கவேண்டாம். [5]


23 நேர்ச்சை செய்யுமுன் அதைக் கடைப்பிடிக்க ஆயத்தம் செய்துகொள்;
இதில் ஆண்டவரைச் சோதிப்பவனாய் இருந்துவிடாதே.


24 இறுதி நாளில் வரவிருக்கும் அவரது சீற்றத்தை நினைவில் கொள்;
அவர் தம் முகத்தைத் திருப்பிக்கொண்டு பழிவாங்கும் நேரத்தையும் எண்ணிப்பார்.


25 நீ உண்டு நிறைவுற்றிருக்கும்போது,
பட்டினி கிடந்த காலத்தை நினைவில் கொள்;
உனது செல்வச் செழிப்பின் காலத்தில், உன் வறுமை,
தேவையின் காலத்தை எண்ணிப்பார்.


26 காலை தொடங்கி மாலைக்குள் காலங்கள் மாறுகின்றன;
ஆண்டவர் திருமுன் அனைத்தும் விரைகின்றன.


27 ஞானிகள் எல்லாவற்றிலும் எச்சரிக்கையாய் இருக்கின்றார்கள்;
பாவம் பெருகும்பொழுது தீச்செயல்களினின்று தம்மைக் காத்துக் கொள்கின்றார்கள்.


28 அறிவுக்கூர்மை படைத்தோர் அனைவரும் ஞானத்தை அறிவர்;
அதை அடைந்தோரைப் போற்றுவர்.


29 நாவன்மை படைத்தோர் ஞானியர் ஆகின்றனர்;
பொருத்தமான நீதிமொழிகளைப் பொழிகின்றனர்.

தன்னடக்கம்[தொகு]


30 கீழான உணர்வுகளின்படி நடவாதே;
சிற்றின்ப உணர்வுகளைக் கட்டுப்படுத்து.


31 கீழான உணர்வுகளில் இன்பம் காண
உன் உள்ளத்தை அனுமதிக்கும்போது
உன் பகைவரின் நகைப்புக்கு அவை உன்னை உள்ளாக்கும்.


32 அளவு மீறி உண்டு குடிப்பதில் களிகூராதே;
அதனால் ஏற்படும் செலவு உன்னை ஏழையாக மாற்றிவிடும்.
33 உன் பணப்பையில் ஒன்றும் இல்லாதபோது
கடன் வாங்கி விருந்துண்டு ஏழையாகாதே.


குறிப்புகள்

[1] 18:2ஆ-3 [ ]சில சுவடிகளில் மட்டும் காணப்படுவது.
[2] 18:8 = யோபு 7:17.
[3] 18:10 = 2 பேது 3:8.
[4] 18:13 = திபா 145:9.
[5] 18:22 = இச 23:22.


(தொடர்ச்சி): சீராக்கின் ஞானம்: அதிகாரங்கள் 19 முதல் 20 வரை