திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/யூதித்து/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

விக்கிமூலம் இலிருந்து


"அசீரியப் படைத் தலைவன் ஒலோபெரின் அயல் நாட்டினர் அனைவரின் முன்னிலையிலும் அக்கியோரிடமும் மோவாபியர் அனைவரிடமும் பின்வருமாறு கூறினான்: 'இஸ்ரயேல் இனத்தாரோடு போரிட வேண்டாம்; ஏனெனில், அவர்களின் கடவுள் அவர்களைப் பாதுகாப்பார் என எங்களுக்கு இன்று இறைவாக்குரைக்க, அக்கியோரே, நீ யார்? எப்ராயிமின் கூலிப் படைகளே, நீங்கள் யார்? நெபுகத்னேசரைத் தவிர வேறு தெய்வம் உளரோ? அவர் தம் படையை அனுப்பி இஸ்ரயேலரை உலகிலிருந்தே அழித்தொழிப்பார். அவர்களின் கடவுள் அவர்களைக் காப்பாற்றமாட்டார்'". - யூதித்து 3:1-3

யூதித்து (The Book of Judith)[தொகு]

அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

அதிகாரம் 5[தொகு]

இஸ்ரயேலோடு போரிடத் திட்டம்[தொகு]


1 "இஸ்ரயேல் மக்கள் போருக்கு ஆயத்தமாகிவிட்டார்கள்;
மலைப்பாதைகளை மூடிவிட்டார்கள்;
உயர்ந்த மலையுச்சிகளைக் காவலரண் செய்து
வலிமைப்படுத்தியுள்ளார்கள்;
சமவெளிகளில் வழித்தடைகளை அமைத்துள்ளார்கள்" என்று
அசீரியரின் படைத்தலைவன் ஒலோபெரினுக்குத் தெரிவிக்கப்பட்டது.
2 அப்பொழுது அவன் கடுஞ் சினமுற்றான்;
மோவாபு நாட்டுத் தலைவர்கள், அம்மோன் நாட்டுப் படைத் தலைவர்கள்,
கடலோரப் பகுதிகளின் ஆளுநர்கள் ஆகிய அனைவரையும் அழைத்தான்.
3 "கானான் நாட்டு மக்களே, எனக்கு மறுமொழி கூறுங்கள்:
மலைநாட்டில் வாழும் இந்த மக்கள் யார்?
இவர்கள் குடியிருக்கும் நகர்கள் யாவை?
இவர்களுடைய படைவீரர்களின் எண்ணிக்கை என்ன?
இவர்களுடைய ஆற்றலும் வலிமையும் எதில் அடங்கும்?
இவர்களின் மன்னர் யார்? இவர்களுடைய படைத் தலைவன் யார்?
4 மேற்கு நாடுகளில் குடியிருக்கும் எல்லா மக்கள் நடுவிலும்
இவர்கள் மட்டும் வந்து என்னைச் சந்திக்க மறுத்தது ஏன்?"
என்று அவர்களை வினவினான்.

அக்கியோரின் உரை[தொகு]


5 அம்மோனியர் யாவருக்கும் தலைவரான அக்கியோர்
ஒலோபெரினிடம் பின்வருமாறு கூறினார்:
"என் தலைவரே, உம் பணியாளனின் வாயினின்று வரும் சொல்லைக் கேளும்.
மலைநாட்டில் உமக்கு அருகே வாழ்பவர்களான
இந்த மக்களைப்பற்றிய உண்மையை உமக்கு எடுத்துரைப்பேன்.
உம் பணியாளனின் வாயினின்று பொய் எதுவும் வராது.
6 இந்த மக்கள் கல்தேயரின் வழிமரபினர்.
7 கல்தேயா நாட்டில் வாழ்ந்த தங்கள் மூதாதையரின்
தெய்வங்களை இவர்கள் வழிபட விரும்பாததால்,
ஒரு காலத்தில் மெசப்பொத்தாமியாவில் குடியேறினார்கள். [1]
8 அதாவது, தங்கள் மூதாதையரின் வழியை விட்டுவிட்டு,
தாங்கள் அறியவந்த கடவுளான விண்ணக இறைவனைத் தொழுதார்கள்.
இதனால், கல்தேயர் தங்கள் தெய்வங்களின் முன்னிலையினின்று
இவர்களை விரட்டியடித்தபொழுது
இவர்கள் மெசப்பொத்தாமியாவுக்குத் தப்பியோடி
அங்கு நீண்டநாள் தங்கியிருந்தார்கள்.


9 "பின்னர் தாங்கள் தங்கியிருந்த இடத்தை விட்டுக்
கானான் நாட்டுக்குச் செல்லுமாறு,
அவர்களுடைய கடவுள் அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
அவ்வாறே அவர்கள் அங்குக் குடியேறி,
பொன், வெள்ளி, பெருந்திரளான கால்நடைகள்
ஆகியவற்றால் வளமையுற்றார்கள். [2]
10 கானான் நாடெங்கும் பஞ்சம் நிலவியபொழுது
அவர்கள் எகிப்து நாட்டுக்குச் சென்றார்கள்;
அங்கு உணவு வளம் நீடித்தவரை தங்கியிருந்தார்கள்.
அப்பொழுது அவர்களது இனம் எண்ண முடியாத அளவுக்குப் பல்கிப் பெருகியது. [3]
11 ஆகையால், எகிப்து மன்னன் அவர்கள்மீது பகைமை கொண்டு,
செங்கல் செய்யும் கடின வேலையை
அவர்கள் மீது வஞ்சகமாய்ச் சுமத்தினான்;
அவர்களைக் கொடுமைப்படுத்தி அடிமைகளாக்கினான். [4]
12 எனவே, அவர்கள் தங்கள் கடவுளை நோக்கிக் கூக்குரலிட்டார்கள்.
அவரும் எகிப்து நாடு முழுவதையும்
தீராக் கொள்ளைநோய்களால் தாக்கினார்.
ஆகையால், எகிப்தியர் அவர்களைத் தங்களிடமிருந்து விரட்டியடித்தனர். [5]
13 அப்பொழுது கடவுள் அவர்கள் கண்முன் செங்கடலை வறண்டுபோகச் செய்தார். [6]
14 அவர் சீனாய், காதேசு-பர்னேயா வழியாக அவர்களை நடத்திச் செல்ல,
அவர்கள் பாலைநிலத்தில் வாழ்ந்த யாவரையும் விரட்டியடித்தார்கள்;
15 பின்னர் எமோரியரின் நாட்டில் குடியேறினார்கள்;
தங்களின் வலிமையால் கெஸ்போனியர் யாவரையும் அழித்தொழித்தார்கள்;
யோர்தான் ஆற்றைக் கடந்து, மலைநாடு முழுவதையும்
தங்கள் உடைமையாக்கிக் கொண்டார்கள். [7]
16 கானானியர், பெரிசியர், எபூசியர்,
செக்கேமியர் ஆகியோரையும் கிர்காசியர் அனைவரையும்
அங்கிருந்து துரத்திவிட்டு, அங்கே நீண்டநாள் வாழ்ந்து வந்தார்கள். [8]


17 "அவர்கள் தங்கள் கடவுள் முன்னிலையில் பாவம் செய்யாதவரையில்
வளமுடன் வாழ்ந்தார்கள்;
ஏனெனில், அநீதியை வெறுக்கும் கடவுள் அவர்கள் நடுவே இருக்கிறார். [9]
18 ஆனால், அவர்களுக்கென்று அவர் வகுத்துக் கொடுத்திருந்த
வழியைவிட்டு விலகிச் சென்றபோது
அவர்கள் பல போர்களால் பெரிதும் அழிந்தார்கள்;
அயல்நாட்டுக்குக் கைதிகளாய்க் கொண்டு செல்லப்பட்டார்கள்.
அவர்களுடைய கடவுளின் கோவில் தரைமட்டமானது.
அவர்களின் நகர்களைப் பகைவர்கள் கைப்பற்றினார்கள். [10]
19 ஆனால், இப்பொழுது அவர்கள்
தங்கள் கடவுளிடம் மனந்திரும்பி வந்துள்ளார்கள்;
தாங்கள் சிதறடிக்கப்பட்ட இடங்களிலிருந்து திரும்பி வந்துள்ளார்கள்;
தங்களது திருவிடம் அமைந்துள்ள எருசலேமை
மீண்டும் உரிமையாக்கிக் கொண்டுள்ளார்கள்;
பாழடைந்து கிடந்த மலைநாட்டில் மீண்டும் குடியேறியுள்ளார்கள்."


20 "எனவே, தலைவர் பெருமானே,
இப்போது இந்த மக்களிடம் தவறு ஏதேனும் காணப்பட்டால்,
இவர்கள் தங்களின் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்திருந்தால்,
இவர்கள் செய்த பாவத்தை நம்மால் கண்டுபிடிக்க முடியுமானால்,
நாம் புறப்பட்டுச் சென்று இவர்களைப் போரில் முறியடிக்கலாம்.
21 ஆனால், இந்த இனத்தாரிடம் குற்றம் ஒன்றும் இல்லையானால்,
என் தலைவரே, இவர்களைத் தாக்காது விட்டுவிடும்;
இல்லையெனில் இவர்களின் கடவுளாகிய ஆண்டவர்
இவர்கள் சார்பாக இருந்து, இவர்களைப் பாதுகாக்க,
நாம் அனைத்துலகின் பழிப்புக்கும் உள்ளாவோம்." [11]

ஒலோபெரினின் மறுமொழி[தொகு]


22 அக்கியோர் பேசி முடித்தவுடன்
கூடாரத்தைச் சூழ்ந்து நின்று மக்கள் எல்லாரும் முறுமுறுத்தார்கள்.
ஒலோபெரினின் அலுவலர்களும்
கடலோரத்திலும் மோவாபிலும் வாழ்ந்தோர் யாவரும்,
"அக்கியோரைக் கொன்று போடுங்கள்.
23 இஸ்ரயேலருக்கு நாம் அஞ்சத் தேவையில்லை;
ஏனெனில், அம்மக்கள் கடுமையாய்ப் போரிடும்
வலிமையோ ஆற்றலோ அற்றவர்கள்.
24 ஆகவே, ஒலோபெரின், எம் தலைவரே,
நாம் மேலே முன்னேறிச் செல்வோம்.
உமது பெரும் படைக்கு அவர்கள் இரையாவார்கள்" என்று கூறினர்.


குறிப்புகள்

[1] 5:7 = தொநூ 11:31; யோசு 24:2.
[2] 5:9 = தொநூ 11:31-12:5.
[3] 5:10 = தொநூ 42:1-5; 46:1-7; விப 1:7.
[4] 5:11 = விப 1:8-14; திப 7:19.
[5] 5:12 = விப 7:1-12, 51.
[6] 5:13 = விப 14:21-22, 29.
[7] 5:15 = எண் 21:2-32.
[8] 5:16 = இச 7:1.
[9] 5:17 = இச 28:1-68.
[10] 5:18 = 2 அர 25:1-30.
[11] 5:20-21 = யூதி 8:18-23; 11:10.

அதிகாரம் 6[தொகு]


1 ஆட்சிமன்றத்துக்கு வெளியே நின்ற கூட்டம் எழுப்பிய கூச்சல் ஓய்ந்தபின்
அசீரியப் படைத் தலைவன் ஒலோபெரின்
அயல் நாட்டினர் அனைவரின் முன்னிலையிலும்
அக்கியோரிடமும் மோவாபியர் அனைவரிடமும் பின்வருமாறு கூறினான்:


2 "இஸ்ரயேல் இனத்தாரோடு போரிட வேண்டாம்;
ஏனெனில், அவர்களின் கடவுள் அவர்களைப் பாதுகாப்பார் என
எங்களுக்கு இன்று இறைவாக்குரைக்க, அக்கியோரே, நீ யார்?
எப்ராயிமின் கூலிப் படைகளே, நீங்கள் யார்?
நெபுகத்னேசரைத் தவிர வேறு தெய்வம் உளரோ?
அவர் தம் படையை அனுப்பி
இஸ்ரயேலரை உலகிலிருந்தே அழித்தொழிப்பார்.
அவர்களின் கடவுள் அவர்களைக் காப்பாற்றமாட்டார்.
3 ஆனால், மன்னரின் பணியாளர்களாகிய நாங்கள்
அவர்கள் எல்லாரையும் ஓர் ஆளை வீழ்த்துவதைப்போல்
எளிதாகக் கொன்றழிப்போம்.
எங்கள் குதிரைப்படையை அவர்களால் எதிர்த்து நிற்க முடியாது.
4 இப்படைகளைக் கொண்டு அவர்களைத் தீக்கிரையாக்குவோம்.
அவர்களின் மலைகளெங்கும் அவர்களது குருதி வழிந்தோடும்;
அவர்களின் சமவெளிகள் அவர்களுடைய சடலங்களால் நிரம்பும்.
அவர்களால் எங்களை எதிர்த்து நிற்க முடியாது.
அவர்கள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள்,
என்கிறார் உலகிற்கெல்லாம் தலைவரான நெபுகத்னேசர் மன்னர்.
அவர் உரைத்துவிட்டார். அவர் உரைத்த சொல் எதுவும் பொய்க்காது.
5 இன்று இச்சொற்களைப் பிதற்றிய அக்கியோரே,
நீ அம்மோனியரின் கைக்கூலி, நயவஞ்சகன்!
இன்றுமுதல், எகிப்தினின்று வெளிவந்த இந்த இனத்தை
நான் பழிவாங்கும்வரை நீ என் முகத்தில் விழிக்காதே.
6 நான் திரும்பிவரும்பொழுது,
என் படையின் வாளும் என் பணியாளர்களின் வேலும் [*]
உன் விலாவைக் குத்தி ஊடுருவும்.
இஸ்ரயேலரோடு நீயும் வெட்டி வீழ்த்தப்படுவாய்.


7 இப்போது என் பணியாளர்கள் உன்னை
மலைநாட்டுக்குக் கொண்டு செல்வார்கள்;
மலைப்பாதை அருகே உள்ள நகர் ஒன்றில் உன்னை விட்டுவிடுவார்கள்.
8 இஸ்ரயேலரோடு அழிக்கப்படும்வரை நீ சாகமாட்டாய்.
9 அவர்கள் பிடிபடமாட்டார்கள் என நீ மனமார நம்பினால்,
பிறகு ஏன் உன் முகம் வாட்டமுறவேண்டும்?
நான் கூறிவிட்டேன். என் சொற்களில் எதுவும் பொய்க்காது."

அக்கியோர் இஸ்ரயேலரிடம் கையளிக்கப்படல்[தொகு]


10 அக்கியோரைப் பிடித்துப் பெத்தூலியாவுக்குக் கொண்டு போய்,
இஸ்ரயேல் மக்களிடம் ஒப்படைக்கும்படி
ஒலோபெரின் தன் கூடாரத்தில் பணியாற்றிய பணியாளர்களுக்குக் கட்டளையிட்டான்.
11 எனவே பணியாளர்கள் அவனைப் பிடித்துப்
பாசறைக்கு வெளியே சமவெளிக்குக் கொண்டு சென்றார்கள்;
அங்கிருந்து மலைநாட்டுக்குப் போய்,
பெத்தூலியாவின் அடிவாரத்தில் இருந்த நீரூற்றுகளை அடைந்தார்கள்.


12 அந்நகரின் ஆண்கள் இவர்களை மலையுச்சியில் கண்டபொழுது
தங்கள் படைக்கலங்களை எடுத்துக்கொண்டு
நகரிலிருந்து வெளியேறி மலையுச்சிக்கு ஏறிச்சென்றார்கள்;
கவண் வீசுவோர் அனைவரும் ஒலோபெரினின் பணியாளர் மீது
கற்களை எறிந்து இவர்கள் மேலே ஏறிவராதவாறு தடுத்தார்கள்.
13 எனவே இவர்கள் மலையிடுக்கில் பதுங்கிக்கொண்டு,
அக்கியோரைக் கட்டி, மலையடிவாரத்தில் கிடத்தி விட்டுத்
தங்கள் தலைவனிடம் திரும்பினார்கள்.


14 அப்பொழுது இஸ்ரயேலர் தங்கள் நகரிலிருந்து கீழே இறங்கி வந்து,
அக்கியோரைக் கட்டவிழ்த்துப் பெத்தூலியாவுக்கு அழைத்துச் சென்று
தங்கள் நகரப் பெரியோர்முன்அவரை நிறுத்தினர்.
15 அக்காலத்தில் சிமியோன் குலத்தைச் சேர்ந்த மீக்காவின் மகன் ஊசியா,
தொதொனியேலின் மகன் காபிரி,
மெல்கியேலின் மகன் கார்மி ஆகியோர் நகரப் பெரியோராய் விளங்கினர்.
16 அவர்கள் நகரின் மூப்பர்கள் அனைவரையும் ஒன்று கூட்டினார்கள்.
மக்கள் நடுவில் அக்கியோரை நிற்க வைத்தார்கள்.
உடனே இளைஞர்கள், பெண்கள் ஆகிய அனைவரும்
கூட்டம் நடந்த இடத்திற்கு ஓடிவந்தார்கள்.
அப்பொழுது ஊசியா நிகழ்ந்தது என்ன என்று அக்கியோரை வினவினார்.
17 அவர் மறுமொழியாக, ஒலோபெரினின் ஆட்சி மன்றத்தில் நடந்தது,
அசீரியரின் தலைவர்கள் முன்னிலையில் தான் எடுத்துச்சொன்னது,
இஸ்ரயேல் இனத்தாருக்கு எதிராகத் தான் செய்யவிருந்ததை
ஒலோபெரின் இறுமாப்புடன் உரைத்தது
ஆகிய அனைத்தையும் அவர்களுக்குத் தெரிவித்தார்.
18 இதனால், மக்கள் குப்புற விழுந்து, கடவுளைத் தொழுதார்கள்.
19 "விண்ணகக் கடவுளாகிய ஆண்டவரே,
எங்கள் பகைவர்களின் இறுமாப்பைப் பாரும்;
எங்களுடைய இனத்தாரின் தாழ்நிலையைக் கண்டு மனமிரங்கும்.
இன்று தங்களையே உமக்கென்று அர்ப்பணித்துக் கொண்ட
மக்களைக் கண்ணோக்கும்" என்று மன்றாடினார்கள்.


20 பிறகு அவர்கள் அக்கியோருக்கு ஆறுதல்கூறி,
அவரைப் பெரிதும் பாராட்டினார்கள்.
21 ஊசியா அவரைக் கூட்டத்திலிருந்து
தம் வீட்டுக்கு அழைத்துச்சென்று
மூப்பர்களோடு விருந்தளித்தார்.
அவர்கள் இஸ்ரயேலின் கடவுளது துணையை வேண்டி
அன்று இரவு முழுவதும் மன்றாடினார்கள்.


குறிப்பு

[*] 6:6 - கிரேக்க பாடம்: "மக்கள்".


(தொடர்ச்சி): யூதித்து: அதிகாரங்கள் 7 முதல் 8 வரை