திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/யூதித்து/அதிகாரங்கள் 9 முதல் 10 வரை

விக்கிமூலம் இலிருந்து


"ஒலோபெரின் யூதித்தைப்பற்றி அறிந்ததும், வெள்ளி விளக்குகள் முன்செல்லத் தன் கூடாரத்துக்குமுன் வந்து நின்றான். அவன் முன்னும் அவனுடைய பணியாளர்கள் முன்னும் யூதித்து வந்தபோது, அவரது முக அழகைக் கண்டு அனைவரும் வியந்தார்கள். அவரோ ஒலோபெரின் முன்னிலையில் குப்புற விழுந்து வணங்கினார். அவனுடைய பணியாளர்கள் அவரைத் தூக்கிவிட்டார்கள்.- யூதித்து 10:22-23

யூதித்து (The Book of Judith)[தொகு]

அதிகாரங்கள் 9 முதல் 10 வரை

அதிகாரம் 9[தொகு]

யூதித்தின் மன்றாட்டு[தொகு]


1 யூதித்து குப்புற விழுந்தார்;
தலையில் சாம்பலைத் தூவிக்கொண்டார்;
தாம் அணிந்திருந்த சாக்கு உடையைக் களைந்தார்.
எருசலேமில் கடவுளின் இல்லத்தில் அன்றைய
மாலைத் தூப வழிபாடு நடந்துகொண்டிருந்த நேரத்தில்,
ஆண்டவரை நோக்கி உரத்த குரலில் பின்வருமாறு மன்றாடினார்: [1]
2 "என் மூதாதையான சிமியோனின் கடவுளாகிய ஆண்டவரே,
அயல்நாட்டாரைப் பழிவாங்குமாறு அவரது கையில் ஒரு வாளைக் கொடுத்தீர்.
அவர்கள் ஒரு கன்னிப் பெண்ணைக் கறைப்படுத்துவதற்காக
அவளது இடைக் கச்சையைத் தளர்த்தினார்கள்;
அவளை இழிவுபடுத்துவதற்காக அவளது ஆடையைக் கிழித்தார்கள்;
அவளைப் பழிக்குள்ளாக்குவதற்காக
அவளது கருப்பையைத் தீட்டுப்படுத்தினார்கள்.
'இவ்வாறு செய்யலாகாது' என்று நீர் உரைத்திருந்தும்
அதற்கு மாறாக அவர்கள் செயல்பட்டார்கள். [2]
3 எனவே, அவர்களின் ஆளுநர்கள் கொல்லப்பட ஒப்புவித்தீர்.
வஞ்சனையால் கறைபட்ட அவர்களது படுக்கை,
குருதி தோய்ந்திருக்கச் செய்தீர்;
அடிமைகளை அவர்களுடைய தலைவர்களோடும்,
தலைவர்களை அவர்களுடைய அரியணைகளோடும் அடித்து நொறுக்கினீர்.
4 மேலும், அவர்களுடைய மனைவியர் கவர்ந்து செல்லப்படவும்,
புதல்வியர் சிறைப்படுத்தப்படவும்,
கொள்ளைப் பொருள்கள் அனைத்தும் உம் அன்பான மக்களால்
பகிர்ந்துகொள்ளப்படவும் நீர் ஒப்புவித்தீர்.
உம் மக்கள் உம்மீது பற்றார்வம் கொண்டு,
தங்கள் குருதியால் ஏற்பட்ட தீட்டை அருவருத்து,
நீர் உதவி அளிக்கும்படி உம்மை மன்றாடினார்கள்.
கடவுளே, என் கடவுளே,
கைம்பெண்ணாகிய எனக்கும் செவிசாய்த்தருளும்.


5 "அப்போது நடந்தவை, அதற்கு முன்னும் பின்னும் நடந்தவை
ஆகிய அனைத்தையும் செய்தவர் நீரே;
இப்போது நிகழ்வனவற்றையும்
இனி நிகழவிருப்பனவற்றையும் நீரே திட்டமிட்டுள்ளீர்.
நீர் திட்டமிட்டவையெல்லாம் நிறைவேறின.
6 நீர் திட்டமிட்டவை அனைத்தும் உம்முன் நின்று,
'இதோ உள்ளோம்' என்றன;
உம் வழிகளெல்லாம் ஆயத்தமாய் உள்ளன;
உம் தீர்ப்பு முன்னறிவு மிக்கது. [3]
7 இப்போது அசீரியர்கள் பெருந்திரளான
படையோடு வந்திருக்கிறார்கள்;
தங்கள் குதிரைகளின் பொருட்டும்
குதிரை வீரர்களின் பொருட்டும்
இறுமாப்புக் கொண்டுள்ளார்கள்;
தங்கள் காலாட்களின் வலிமையால்
செருக்குக் கொண்டுள்ளார்கள்;
கேடயம், ஈட்டி, வில், கவண்
ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.
ஆனால், போர்களை முறியடிக்கும் ஆண்டவர் நீர்
என்பதை அவர்கள் அறியார்கள்.
8 ஆண்டவர் என்பது உமது பெயர்.
உமது ஆற்றலால் அவர்களது வலிமையை அடக்கிவிடும்;
உமது சினத்தால் அவர்களின் திறத்தை அழித்துவிடும்;
ஏனெனில், உமது திருவிடத்தைக் கறைப்படுத்தவும்,
உமது மாட்சிமிகு பெயர் விளங்கும் பேழைகளைத் தீட்டுப்படுத்தவும்
உமது பலிபீடத்தின் கொம்புகளை வாளால் நொறுக்கவும்
அவர்கள் திட்டமிட்டுள்ளார்கள்.
9 அவர்களுடைய இறுமாப்பை உற்றுநோக்கும்;
அவர்கள் தலைமேல் உமது சினத்தைக் கொட்டும்;
எனது திட்டத்தைச் செயல்படுத்தக்
கைம்பெண்ணாகிய எனக்கு வலிமை தாரும்.
10 என் உதடுகளின் வஞ்சனையால்
அடிமையை அவனுடைய ஆளுநனோடும்,
ஆளுநனை அவனுடைய பணியாளனோடும் தாக்கி வீழ்த்தும்;
அவர்களது செருக்கை ஒரு பெண்ணின் கைவன்மையால் நொறுக்கிவிடும்.


11 "உமது வலிமை ஆள் எண்ணக்கையைப் பொறுத்ததன்று;
உமது ஆற்றல் வலிமைவாய்ந்தோரைப் பொறுத்ததன்று.
நீர் தாழ்ந்தோரின் கடவுள்; ஒடுக்கப்பட்டோரின் துணைவர்;
நலிவுற்றோரின் ஆதரவாளர்;
கைவிடப்பட்டோரின் காவலர்;
நம்பிக்கையற்றோரின் மீட்பர்.
12 என் மூதாதையின் கடவுளே,
என் வேண்டுதலைக் கனிவோடு கேளும்;
இஸ்ரயேலின் உரிமைச்சொத்தாகிய இறைவா,
விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே,
நீரூற்றுகளைப் படைத்தவரே,
படைப்புகளுக்கெல்லாம் மன்னரே,
என் மன்றாட்டுக்குப் பரிவோடு செவிசாயும்.
13 உமது உடன்படிக்கைக்கும்
உமது தூய இல்லத்துக்கும் சீயோன் மலைக்கும்
உம் மக்கள் உரிமையாக்கிக் கொண்ட இல்லங்களுக்கும் எதிராகக்
கொடியவற்றைத் திட்டமிட்டுள்ளோரை
என் வஞ்சகச் சொற்கள் காயப்படுத்திக் கொல்லச் செய்யும்.
14 நீரே கடவுள் என்றும்,
எல்லா ஆற்றலும் வலிமையும் கொண்ட கடவுள் என்றும்,
இஸ்ரயேல் இனத்தைப் பாதுகாப்பவர்
உம்மைத் தவிர வேறு எவரும் இல்லை என்றும்
உம் மக்களினம் முழுவதும்,
அதன் எல்லாக் குலங்களும் அறியச் செய்யும்."


குறிப்புகள்

[1] 9:1 = விப 30:7-8; திபா 141:2.
[2] 9:2 = தொநூ 34:1-29.
[3] 9:6 = யோபு 38:35; பாரூ 3:35.

அதிகாரம் 10[தொகு]

யூதித்து ஒலோபெரினிடம் செல்லுதல்[தொகு]


1 இஸ்ரயேலின் கடவுளை நோக்கி யூதித்து கூக்குரலிடுவதை நிறுத்தி,
தம் மன்றாட்டை முடித்துக்கொண்டார்.
2 தாம் விழுந்துகிடந்த இடத்திலிருந்து எழுந்தார்;
தம் பணிப்பெண்ணை அழைத்தார்;
தாம் ஓய்வுநாள்களிலும் திருநாள்களிலும் தங்கிவந்த
வீட்டுக்கு இறங்கிச் சென்றார்.
3 தாம் அணிந்திருந்த சாக்கு உடையை அகற்றினார்;
கைம்பெண்ணுக்குரிய ஆடைகளைக் களைந்தார்;
நீராடி, விலையுயர்ந்த நறுமண எண்ணெய் பூசி,
வாரி முடித்துத் தலைமீது மணிமுடியை வைத்துக் கொண்டார்;
தம் கணவர் மனாசே இருந்தபோது தாம் உடுத்தியிருந்த
பகட்டான ஆடைகளை அணிந்துகொண்டார்.
4 தம்மைக் காணும் ஆண்கள் அனைவருடைய
கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம்
காலில் மிதியடி அணிந்தார்;
சிலம்பு, கைவளை, மோதிரம், காதணி போன்ற
தம் அணிகலன்கள் அனைத்தையும் அணிந்து
தம்மைப் பெரிதும் அழகுபடுத்திக் கொண்டார்.
5 தம் பணிப்பெண்ணிடம் திராட்சை இரசம் நிறைந்த தோல்பையையும்
எண்ணெய் அடங்கிய குப்பியையும் கொடுத்தார்;
வறுத்த தானியம், உலர்ந்த பழங்கள், நல்ல அப்பங்கள்
ஆகியவற்றை ஒரு பையிலிட்டு நிறைந்தார்.
அவை அனைத்தையும் சேர்த்துக் கட்டி,
தூக்கிக் கொண்டு வருமாறு அவளிடம் கொடுத்தார்.


6 அவர்கள் இருவரும் பெத்தூலியா நகர வாயிலை நோக்கிச் சென்றார்கள்;
அங்கு ஊசியாவும் நகர மூப்பர்களான காபிரியும் கார்மியும்
நின்று கொண்டிருக்கக் கண்டார்கள்.
7 இவர்கள் யூதித்தின் முகத் தோற்றம் வேறுபட்டிருப்பதையும்,
வழக்கத்திற்கு மாறாக ஆடை அணிந்திருப்பதையும் கண்டார்கள்.
அவரது அழகைக் கண்டு மிகவும் வியந்து,
8 "எங்கள் மூதாதையரின் கடவுள் உன்மீது அருள் பொழிவாராக;
இஸ்ரயேல் மக்களின் மாட்சியும் எருசலேமின் மேன்மையும் விளங்க,
உன் திட்டங்களை நிறைவேற்றுவாராக" என்று வாழ்த்தினார்கள்.


9 யூதித்து கடவுளைத் தொழுதபின் அவர்களிடம்,
"நகர வாயிலை எனக்குத் திறந்துவிடுமாறு கட்டளையிடுங்கள்.
நீங்கள் என்னிடம் கூறியவற்றை நிறைவேற்ற
நான் வெளியே செல்வேன்" என்று வேண்டினார்.
அவர் கேட்டுக்கொண்டபடி அவருக்கு வாயிலைத் திறந்துவிடுமாறு
மூப்பர்கள் இளைஞர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
10 இளைஞர்களும் அவ்வாறே செய்தார்கள்.
யூதித்து வெளியே செல்ல,
அவருடைய பணிப்பெண்ணும் அவரோடு சென்றாள்.
மலையிலிருந்து கீழே இறங்கிப்
பள்ளத்தாக்கைக் கடக்கும் வரை
நகர மாந்தர் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
அதன்பின் அவரை அவர்களால் காண முடியவில்லை.


11 பெண்கள் இருவரும் பள்ளத்தாக்கில் நேரே சென்று கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது அசீரியர்களின் சுற்றுக்காவல் படை யூதித்தை எதிர்கொண்டது.
12 அவர்கள் யூதித்தைப் பிடித்து,
"நீ எந்த நாட்டைச் சேர்ந்தவள்?
எங்கிருந்து வருகிறாய்? எங்குச் செல்கிறாய்?"
என வினவினார்கள்.
அதற்கு அவர், "நான் ஓர் எபிரேயப் பெண்,
ஆனால் எபிரேயர்களிடமிருந்து தப்பி ஓடிக்கொண்டிருக்கிறேன்;
ஏனெனில், அவர்கள் உங்களுக்கு இரையாகப் போகிறார்கள்.
13 நானோ உங்கள் படைத் தலைவர் ஒலோபெரினைப் பார்த்து
அவரிடம் உண்மை நிலையை எடுத்துரைக்கச் சென்று கொண்டிருக்கிறேன்.
அவர் மலைப்பகுதி முழுவதையும் கைப்பற்றக்கூடிய
வழியை அவருக்குக் காட்டுவேன்.
அவருடைய வீரர்களுள் யாரும் உயிரிழக்கமாட்டார்கள்.
அவர்களின் உடலுக்கோ உயிருக்கோ எவ்வகைத் தீங்கும் நேராது" என்றார்.
14 வீரர்கள் அவருடைய சொற்களைக் கேட்டு, அவரை உற்றுநோக்க,
அவருடைய முகம் எழில்மிக்கதாய் அவர்களுக்குத் தோன்றியது.
அப்பொழுது அவர்கள்,
15 "எங்கள் தலைவரைக் காண விரைவாகக்
கீழே இறங்கி வந்ததால் நீ உயிர் பிழைத்தாய்.
நீ இப்போது அவரது கூடாரத்துக்குச் செல்.
எங்களுள் சிலர் உன்னை அழைத்துச் சென்று அவரிடம் ஒப்படைப்பர்.
16 நீ அவர்முன் நிற்கும்போது அஞ்சாதே.
நீ எங்களிடம் சொன்னதையே அவரிடம் தெரிவி.
அவர் உன்னை நல்ல முறையில் நடத்துவார்" என்றார்கள்.


17 யூதித்தையும் அவருடைய பணிப்பெண்ணையும்
ஒலோபெரினிடம் அழைத்துச்செல்லத்
தங்களுள் நூறு வீரர்களைத் தெரிந்தெடுத்தார்கள்.
இவர்கள் பெண்கள் இருவரையும்
ஒலோபெரினுடைய கூடாரத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.


18 யூதித்தின் வருகை பற்றிய செய்தி பாளையம் முழுவதும் பரவியதால்,
எங்கும் ஒரே பரபரப்பாய் இருந்தது.
வீரர்கள் வந்து அவரைச் சூழ்ந்துகொண்டார்கள்.
அவர் ஒலோபெரினின் கூடாரத்துக்கு வெளியே காத்திருந்தார்.
அவரைப் பற்றி அவனிடம் தெரிவித்தார்கள்.
19 அவர்கள் அவரது அழகைக் கண்டு வியந்தார்கள்.
அவரை முன்னிட்டு இஸ்ரயேல் மக்களைப்பற்றியும் வியந்தார்கள்.
"இத்தகைய பெண்களைத் தங்களிடையே கொண்டிருக்கும்
இந்த மக்களை யாரே இழிவாகக் கருதுவர்!
இவர்களுள் ஓர் ஆணைக்கூட உயிரோடு விட்டுவைப்பது நல்லதன்று.
அவர்களை விட்டுவைத்தால்,
உலகம் முழுவதையும் வஞ்சித்துவிட இவர்களால் முடியும்"
என்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

யூதித்து-ஒலோபெரின் சந்திப்பு[தொகு]


20 பிறகு ஒலோபெரினின் காவலர்களும்
பணியாளர்கள் அனைவரும் வெளியே வந்து
யூதித்தைக் கூடாரத்துக்குள் அழைத்துச் சென்றார்கள்.
21 அப்போது, பொன், மரகதம், விலையுயர்ந்த கற்கள்
பதிக்கப்பட்ட கருஞ்சிவப்புத் துணியாலான மேற்கவிகையின்கீழ்த்
தன் படுக்கையில் ஒலோபெரின் ஓய்வு கொண்டிருந்தான்.
22 அவன் யூதித்தைப்பற்றி அறிந்ததும்,
வெள்ளி விளக்குகள் முன்செல்லத் தன் கூடாரத்துக்குமுன் வந்து நின்றான்.
23 அவன் முன்னும் அவனுடைய பணியாளர்கள் முன்னும் யூதித்து வந்தபோது,
அவரது முக அழகைக் கண்டு அனைவரும் வியந்தார்கள்.
அவரோ ஒலோபெரின் முன்னிலையில்
குப்புற விழுந்து வணங்கினார்.
அவனுடைய பணியாளர்கள் அவரைத் தூக்கிவிட்டார்கள்.


(தொடர்ச்சி): யூதித்து: அதிகாரங்கள் 11 முதல் 12 வரை