திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 57 முதல் 58 வரை

விக்கிமூலம் இலிருந்து
"ஆண்டவர் தொடர்ந்து உன்னை வழிநடத்துவார்;...நீயும் நீர் பாய்ந்த தோட்டம்போலும், ஒருபோதும் வற்றாத நீரூற்றுபோலும் இருப்பாய்." - எசாயா 58:11.

எசாயா (The Book of Isaiah)[தொகு]

அதிகாரங்கள் 57 முதல் 58 வரை

அதிகாரம் 57[தொகு]

இஸ்ரயேலின் சிலைவழிபாடு கண்டிக்கப்படல்[தொகு]


1 நேர்மையாளர் அழிந்து போகின்றனர்;
இதை மனத்தில் கொள்வார் எவரும் இல்லை;
இறைப்பற்றுடையோர் எடுத்துக்கொள்ளப்படுகின்றனர்;
அதைக் கருத்தில் கொள்வார் எவரும் இல்லை;
ஏனெனில் நேர்மையாளர் தீமையின் முன்னின்று
எடுத்துக் கொள்ளப்படுகின்றனர்.


2 அவர்கள் அமைதிக்குள் சென்றடைகின்றனர்;
நேர்மையான வழிமுறையைப் பின்பற்றுவோர்
தம் இறுதிப் படுக்கைகளில் இளைப்பாறுகின்றனர்.


3 சூனியக்காரியின் மக்களே,
விபசாரன், விலைமாதின் வாரிசே,
அருகில் வாருங்கள்.


4 யாரைப் பார்த்து நீங்கள் நகைக்கின்றீர்கள்?
யாருக்கு எதிராக வாயைப்பிளந்து நாக்கை நீட்டுகின்றீர்கள்?
நீங்கள் கொடுமையின் பிள்ளைகளன்றோ!
பொய்மையின் சந்ததியன்றோ!


5 கருவாலி மரத் தோப்பிலும்,
பசுமையான மரம் ஒவ்வொன்றின் கீழும்
காமத்தீயால் எரிகிறீர்கள்;
பள்ளத்தாக்குகளில், பாறைப் பிளவுகளின் அடிப்புறத்தில்,
உங்கள் பச்சிளங் குழந்தைகளைக் கொல்கிறீர்கள்.


6 பள்ளத்தாக்கின் வழவழப்பான கற்களினின்று
உருவான சிலைகளே உன் பங்கு;
ஆம், அவையே உன் பங்கு;
அவற்றிற்கு நீ நீர்மப்பலியை ஊற்றியுள்ளாய்;
உணவுப் படையலைப் படைத்துள்ளாய்;
இவற்றால் நான் அமைதி அடைவேனோ?


7 வானாளவ உயர்ந்து நிற்கும் மலைமேல்
உன் மஞ்சத்தை வைத்துள்ளாய்;
பலிசெலுத்துமாறு அங்கு ஏறிப்போனாய்.


8 கதவுக்கும் கதவின் நிலைக்கும் பின்னால்
உன் நினைவுக்குறியை வைத்தாய்;
என்னை விட்டுவிட்டு உன் மஞ்சத்தைத் திறந்தாய்;
ஏறிச்சென்று அதை விரிவாக்கினாய்;
நீ எவருடைய படுக்கையை விரும்பினாயோ,
அவர்களோடு ஓர் உடன்பாடு செய்து கொண்டாய்;
அவர்களின் திறந்த மேனியைக் கண்டாய்.


9 நீ எண்ணெயுடன் மோலேக்கிடம் சென்றாய்;
நறுமணப் பொருட்களைப் பெருக்கிக் கொண்டாய்;
தொலை நாடுகளுக்கு உன் தூதர்களை அனுப்பினாய்;
பாதாளம் மட்டும் அனுப்பினாய்.


10 உன் வழிப்பயணம் தொலைவானதால் களைத்துப் போனாய்;
ஆயினும், 'இது வீண்' என்று நீ சொல்லவில்லை;
உன் கையில் புதியதோர் ஆற்றல் பெற்றாய்;
ஆதலால் நீ சோர்ந்து போகவில்லை.


11 யாருக்கு நீ அஞ்சி நடுங்கினாய்?
நீ என்னிடம் பொய் சொன்னாயே!
நீ என்னை நினைவுகூரவில்லை;
என்னைப் பற்றி உன் மனத்தில் எண்ணவுமில்லை!
வெகுகாலமாய் நான் அமைதியாய் இருந்ததால் அன்றோ
நீ எனக்கு அஞ்சாதிருக்கின்றாய்?


12 உன் நேர்மையையும் செயல்களையும் எடுத்துரைப்பேன்;
அவை உனக்கு உதவா.


13 நீ துணை வேண்டிக் குரல் எழுப்பும்போது,
நீ திரட்டிய சிலைகள் உன்னை விடுவிக்கட்டும்!
காற்று அவை அனைத்தையும் அடித்துக் கொண்டுபோம்;
வெறும் மூச்சே அவற்றை ஊதித் தள்ளிவிடும்;
என்னிடம் அடைக்கலம் புகுவோர்
நாட்டை உரிமையாக்கிக் கொள்வர்;
என் திருமலையை உடைமையாய்ப் பெறுவர்.

நலமும் துணையும் நல்கும் ஆண்டவர்[தொகு]


14 'அமையுங்கள்; பாதையை அமையுங்கள்;
அதைத் தயார் செய்யுங்கள்;
என் மக்களின் வழியிலிருக்கும் தடையை அகற்றுங்கள்'
என்று கூறப்படும்.


15 உயர்ந்தவரும் உன்னதரும் காலம் கடந்து வாழ்பவரும்,
'தூயவர்' என்ற பெயரைக் கொண்டவரும் கூறுவது இதுவே:
உயர்ந்த தூய இடத்தில் நான் உறைகின்றேன்;
நொறுங்கிய, நலிந்த நெஞ்சத்தினரோடும் நான் வாழ்கின்றேன்;
நொறுங்கிய உள்ளத்தினரை ஊக்குவிக்கவும்
நலிந்த நெஞ்சத்தினரைத் திடப்படுத்தவும்
நான் குடியிருக்கின்றேன்.


16 ஏனெனில், என்றென்றும் நான் குற்றஞ்சாட்டமாட்டேன்;
எப்பொழுதும் சினம் கொண்டிருக்கமாட்டேன்;
ஏனெனில், நான் தோற்றுவித்த உயிர் மூச்சாகிய மனித ஆவி
என் திருமுன் தளர்ச்சியடைந்து விடும்.


17 பேராசை என்னும் தீமையை முன்னிட்டு
நான் இஸ்ரயேல் மீது சினமடைந்து,
அவனை அடித்து நொறுக்கினேன்;
சீற்றம் கொண்டு என்னை
அவனுக்கு மறைத்துக் கொண்டேன்;
அவனோ என்னைவிட்டு விலகி
மனம்போன போக்கிலே சென்றான்.


18 அவன் சென்ற பாதைகளைக் கண்டேன்;
ஆயினும் அவனைக் குணமாக்குவேன்;
அவனை நடத்திச் சென்று
அவனுக்கு மீண்டும் ஆறுதல் அளிப்பேன்.


19 அவனுக்காக அழுவோரின் உதடுகளில்
நன்றி ஒலி எழச்செய்வேன்;
அமைதி! தொலையில் இருப்போருக்கும்
அருகில் இருப்போருக்கும் அமைதி!
என்கிறார் ஆண்டவர்.
அவர்களை நான் நலமடையச் செய்வேன்,
என்கிறார் ஆண்டவர்.


20 கொடியவரோ கொந்தளிக்கும் கடல்போல் இருக்கின்றனர்;
அந்தக் கடலால் அமைதியாயிருக்க இயலாது;
அதன் நீர்த்திரள்கள் சேற்றையும் சகதியையும் கிளறிவிடுகின்றன;


21 கொடியவர்களுக்கு அமைதியே இல்லை,
என்கிறார் என் கடவுள்.


அதிகாரம் 58[தொகு]

உண்மையான நோன்பு[தொகு]


1 பேரொலி எழுப்பிக் கூப்பிடு, நிறுத்திவிடாதே;
எக்காளம் முழங்குவது போல் உன் குரலை உயர்த்து;
என் மக்களுக்கு அவர்களின் வன்செயல்களையும்,
யாக்கோபின் குடும்பத்தாருக்கு அவர்களின் பாவத்தையும் எடுத்துக்கூறு.


2 அவர்கள், நேர்மையானவற்றைச் செய்யும் மக்களினம்போலும்,
தங்கள் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடிப்போர் போலும்
நாள்தோறும் என்னைத் தேடுகின்றார்கள்;
என் நெறிமுறைகள் பற்றிய அறிவை நாடுகின்றார்கள்;
நேர்மையான நீதித்தீர்ப்புகளை என்னிடம் வேண்டுகின்றார்கள்;
கடவுளை அணுகிவர விழைகின்றார்கள்.


3 'நாங்கள் உண்ணா நோன்பிருந்த பொழுது,
நீர் எங்களை நோக்காதது ஏன்?
நாங்கள் எங்களைத் தாழ்த்திக் கொண்டபோது
நீர் எங்களைக் கவனியாதது ஏன்? என்கிறார்கள்.
நீங்கள் நோன்பிருக்கும் நாளில்
உங்கள் ஆதாயத்தையே நாடுகின்றீர்கள்;
உங்கள் வேலையாள்கள் அனைவரையும் ஒடுக்குகின்றீர்கள்.


4 இதோ, வழக்காடவும், வீண்சண்டையிடவும்,
கொடும் கையால் தாக்கவுமே நீங்கள் நோன்பிருக்கிறீர்கள்!
இன்றுபோல் நீங்கள் உண்ணா நோன்பிருந்தால்
உங்கள் குரல் உன்னதத்தில் கேட்கப்படாது.


5 ஒருவன் தன்னை ஒடுக்கிக்கொள்ளும் நாளையா
நான் உண்ணாநோன்பின் நாளாகத் தெரிந்து கொள்வது?
ஒருவன் நாணலைப் போல் தன் தலையைத் தாழ்த்திச்
சாக்கு உடையையும் சாம்பலையையும் அணிந்து கொள்வதா
எனக்கு ஏற்ற நோன்பு?
இதையா நீங்கள் நோன்பு என்றும்
ஆண்டவருக்கு உகந்த நாள் என்றும் அழைக்கின்றீர்கள்?


6 கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும்,
நுகத்தின் பிணையல்களை அறுப்பதும்
ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும்,
எவ்வகை நுகத்தையும் உடைப்பதும் அன்றோ
நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு!


7 பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும்
தங்க இடமில்லா வறியோரை
உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும்,
உடையற்றோரைக் காணும்போது
அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும்
உங்கள் இனத்தாருக்கு
உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ
நான் விரும்பும் நோன்பு! [*]


8 அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும்;
விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்;
உன் நேர்மை உனக்கு முன் செல்லும்;
ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின்சென்று காக்கும்.


9 அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்;
அவர் உனக்குப் பதிலளிப்பார்;
நீ கூக்குரல் இடுவாய்;
அவர் 'இதோ! நான்' என மறுமொழி தருவார்.
உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு,
சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும்
பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு,


10 பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து,
வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால்,
இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்;
இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும்.


11 ஆண்டவர் தொடர்ந்து உன்னை வழிநடத்துவார்;
வறண்ட சூழலில் உனக்கு நிறைவளிப்பார்;
உன் எலும்புகளை வலிமையாக்குவார்;
நீயும் நீர் பாய்ந்த தோட்டம்போலும்,
ஒருபோதும் வற்றாத நீரூற்றுபோலும் இருப்பாய்.


12 உன் மக்கள் பண்டை நாளிலிருந்து
பாழடைந்து கிடப்பவற்றைக் கட்டியெழுப்புவர்;
தலைமுறை தலைமுறையாக உள்ள
அடித்தளங்களின் மேல் கட்டியெழுப்புவாய்;
தகர்ந்த மதிலைத் திரும்பக் கட்டுபவன் என்றும்
குடியிருப்பதற்குத் தெருக்களைச்
சீர்படுத்துபவன் என்றும் பெயர் பெறுவாய்.

ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பதன் நற்பயன்[தொகு]


13 ஓய்வுநாளின் முறைமைகளினின்று விலகிச் செல்லாது,
என் புனித நாளில் உன் விருப்பம் போல் செய்யாதிருந்து,
ஓய்வு நாள் 'மகிழ்ச்சியின் நாள்' என்றும்
"ஆண்டவரின் மேன்மைமிகு புனித நாள்" எனவும் சொல்லி
அதற்கு மதிப்புத் தந்து,
உன் சொந்த வழிகளில் செல்லவோ
உன் சொந்த ஆதாயத்தை நாடவோ
வெற்றுப் பேச்சுகளைப் பேசவோ செய்யாதிருந்தால்,


14 அப்பொழுது, ஆண்டவருக்கு ஊழியம் புரியும்
மகிழ்ச்சியைப் பெறுவாய்;
நானோ, மண்ணுலகின் உயர்விடங்களில்
உன்னை வலம்வரச் செய்வேன்;
உன் மூதாதையாகிய யாக்கோபின் உரிமைச் சொத்தின் மூலம்
உனக்கு உணவளிப்பேன்;
ஆண்டவரின் வாய் இதை உரைத்தது.


குறிப்பு

[*] 58:7 மத் 25:35

(தொடர்ச்சி): எசாயா:அதிகாரங்கள் 59 முதல் 60 வரை