திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 55 முதல் 56 வரை

விக்கிமூலம் இலிருந்து
"மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன." - எசாயா 55:9.

எசாயா (The Book of Isaiah)[தொகு]

அதிகாரங்கள் 55 முதல் 56 வரை

அதிகாரம் 55[தொகு]

ஆண்டவரின் பேரிரக்கம்[தொகு]


1 தாகமாய் இருப்பவர்களே,
நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்;
கையில் பணமில்லாதவர்களே,
நீங்களும் வாருங்கள்;
தானியத்தை வாங்கி உண்ணுங்கள், வாருங்கள்,
காசு பணமின்றித் திராட்சை இரசமும் பாலும் வாங்குங்கள். [1]


2 உணவாக இல்லாத ஒன்றிற்காக நீங்கள்
ஏன் பணத்தைச் செலவிடுகின்றீர்கள்?
நிறைவு தராத ஒன்றிற்காய்
ஏன் உங்கள் உழைப்பை வீணாக்குகிறீர்கள்?
எனக்குக் கவனமாய்ச் செவிகொடுங்கள்;
நல்லுணவை உண்ணுங்கள்;
கொழுத்ததை உண்டு மகிழுங்கள்.


3 எனக்குச் செவிகொடுங்கள், என்னிடம் வாருங்கள்;
கேளுங்கள்; அப்பொழுது நீங்கள் வாழ்வடைவீர்கள்.
நான் உங்களுடன்
ஓர் என்றுமுள உடன்படிக்கையைச் செய்து கொள்வேன்;
தாவீதுக்கு நான் காட்டிய மாறாத பேரன்பை
உங்களுக்கும் காட்டுவேன். [2]


4 நான் அவனை மக்களினங்களுக்குச் சாட்சியாகவும்,
வேற்றினங்களுக்குத் தலைவராகவும்
தளபதியாகவும் ஏற்படுத்தினேன்.


5 இதோ, நீ அறியாத பிற இன மக்களை அழைப்பாய்;
உன் கடவுளாகிய ஆண்டவரை, இஸ்ரயேலின் தூயவரை முன்னிட்டு,
உன்னை அறியாத பிறஇனத்தார் உன்னிடம் ஓடிவருவர்.
ஏனெனில், அவர் உன்னை மேன்மைப்படுத்தியுள்ளார்.


6 ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்;
அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள்.


7 கொடியவர் தம் வழிமுறையையும்,
தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக;
அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்;
அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்;
அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்;
ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர்.


8 என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல,
உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல,
என்கிறார் ஆண்டவர்.


9 மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம்
மிக உயர்ந்து இருப்பதுபோல
உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும்,
உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும்
மிக உயர்ந்திருக்கின்றன.


10 மழையும் பனியும்
வானத்திலிருந்து இறங்கி வருகின்றன;
அவை நிலத்தை நனைத்து,
முளை அரும்பி வளரச் செய்து,
விதைப்பவனுக்கு விதையையும்
உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல்,
அங்குத் திரும்பிச் செல்வதில்லை. [3]


11 அவ்வாறே,
என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும்.
அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி,
எதற்காக நான் அதை அனுப்பினேனோ
அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல்
வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை.


12 மகிழ்ச்சியுடன் நீங்கள் புறப்பட்டுச் செல்வீர்கள்;
அமைதியுடன் நடத்திச் செல்லப் படுவீர்கள்;
மலைகளும் குன்றுகளும் உங்கள் முன் முழங்கி மகிழ்ந்து பாடும்;
காட்டு மரங்கள் கைகொட்டி ஆர்ப்பரிக்கும்.


13 முட்செடிக்குப் பதிலாக தேவதாரு மரம் முளைத்து வளரும்;
காஞ்சொறிக்குப் பதிலாக நறுமணச் செடி துளிர்த்து வளரும்;
இது, ஆண்டவருக்கு நற்பெயர் ஏற்படச் செய்யும்;
அழிவில்லா, என்றுமுள நினைவுச் சின்னமாய் அமையும்.


குறிப்புகள்

[1] 55:1 = திவெ 21:6; 22:17.
[2] 55:3 = திப 13:34.
[3] 55:10 = 2 கொரி 9:10.


அதிகாரம் 56[தொகு]

மக்களினத்தார் யாவரும் ஆண்டவரின் மக்கள்[தொகு]


1 ஆண்டவர் கூறுவது இதுவே:
நீதியை நிலைநாட்டுங்கள்,
நேர்மையைக் கடைபிடியுங்கள்;
நான் வழங்கும் விடுதலை அண்மையில் உள்ளது;
நான் அளிக்கும் வெற்றி விரைவில் வெளிப்படும்.


2 இவ்வாறு செய்யும் மனிதர் பேறு பெற்றவர்;
ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தாது கடைப்பிடித்து,
எந்தத் தீமையும் செய்யாது தம் கையைக் காத்துக் கொண்டு,
இவற்றில் உறுதியாய் இருக்கும் மானிடர் பேறுபெற்றவர்.


3 ஆண்டவரோடு தம்மை இணைத்துக்கொண்ட பிறஇனத்தவர்,
'தம் மக்களிடமிருந்து ஆண்டவர் என்னைப் பிரித்துவிடுவது உறுதி'
என்று சொல்லாதிருக்கட்டும்;
அவ்வாறே அண்ணகனும்,
'நான் வெறும் பட்டமரம்' என்று கூறாதிருக்கட்டும்.


4 ஆண்டவர் கூறுவது இதுவே:
என் ஓய்வுநாளைக் கடைப்பிடித்து,
நான் விரும்புகின்றவற்றையே தேர்ந்து கொண்டு,
என் உடன்படிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும் அண்ணகர்களுக்கு,


5 என் இல்லத்தில்,
என் சுற்றுச்சுவர்களுக்குள்
நினைவுச்சின்னம் ஒன்றினை எழுப்புவேன்;
புதல்வர் புதல்வியரைவிடச் சிறந்ததொரு பெயரை வழங்குவேன்;
ஒருபோதும் அழியாத என்றுமுள பெயரை அவர்களுக்குச் சூட்டுவேன்.


6 ஆண்டவருக்குத் திருப்பணி செய்வதற்கும்,
அவரது பெயர்மீது அன்பு கூர்வதற்கும்,
அவர்தம் ஊழியராய் இருப்பதற்கும்,
தங்களை ஆண்டவரோடு இணைத்துக்கொண்டு
ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தாது கடைப்பிடித்து,
தம் உடன்படிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும்
பிற இன மக்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது:


7 அவர்களை நான் என் திருமலைக்கு அழைத்து வருவேன்;
இறைவேண்டல் செய்யப்படும் என் இல்லத்தில்
அவர்களை மகிழச் செய்வேன்;
அவர்கள் படைக்கும் எரிபலிகளும்
மற்றப் பலிகளும் என் பீடத்தின் மேல் ஏற்றுக்கொள்ளப்படும்;
ஏனெனில், என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய
'இறைமன்றாட்டின் வீடு' என அழைக்கப்படும். [*]


8 சிதறிப்போன இஸ்ரயேல் மக்களை
ஒருங்கே சேர்க்கும் என் தலைவராகிய ஆண்டவர் கூறுவது:
அவர்களுள் ஏற்கெனவே கூட்டிச் சேர்க்கப்பட்டவர்களோடு
ஏனையோரையும் சேர்த்துக் கொள்வேன்.

இஸ்ரயேலின் தலைவர்கள் கண்டிக்கப்படல்[தொகு]


9 வயல்வெளி விலங்குகளே,
காட்டு விலங்குகளே,
நீங்களெல்லாம் இரை விழுங்க வாருங்கள்.


10 அவர்களின் சாமக்காவலர் அனைவரும் குருடர், அறிவற்றவர்;
அவர்கள் அனைவரும் குரைக்க இயலா ஊமை நாய்கள்;
படுத்துக்கிடந்து கனவு காண்கின்றவர்கள்;
தூங்குவதையே விரும்புகின்றவர்கள்.


11 தீராப் பசிகொண்ட நாய்கள்;
நிறைவு என்பதையே அறியாதவர்;
பகுத்தறிவு என்பதே இல்லாத மேய்ப்பர்;
அவர்கள் அனைவரும் அவரவர் தம்
வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனர்;
ஒவ்வொருவரும் தம் சொந்த ஆதாயத்தைத் தேடுகின்றனர்.


12 ஒவ்வொருவரும், 'வாருங்கள்; நான் திராட்சை இரசம் கொண்டு வருவேன்;
போதையேற நாம் மது அருந்துவோம்;
நாளை இன்று போலும் இதைவிடச் சிறப்பாகவும் அமையும்' என்கின்றனர்.


குறிப்புகள்

[*] 56:7 = மத் 21:13; மாற் 11:17; லூக் 46.


(தொடர்ச்சி): எசாயா:அதிகாரங்கள் 57 முதல் 58 வரை