திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசேக்கியேல்/அதிகாரங்கள் 33 முதல் 34 வரை

விக்கிமூலம் இலிருந்து
"தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நானே என் மந்தையைத் தேடிச் சென்று பேணிக் காப்பேன். ஓர் ஆயன் தன் மந்தையினின்று சிதறுண்ட ஆடுகளைத் தேடிச் செல்வதுபோல, நானும் என் மந்தையைத் தேடிப் போவேன்." - எசேக்கியேல் 34:11-12

எசேக்கியேல் (The Book of Ezekiel)[தொகு]

அதிகாரங்கள் 33 முதல் 34 வரை

அதிகாரம் 33[தொகு]

கடவுள் எசேக்கியேலைக் காவலாளியாக அமர்த்தல்[தொகு]

(எசே 3:16-21)


1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 மானிடா! உன் மக்களிடம் பேசி, அவர்களுக்குச் சொல்:
ஒரு நாட்டின்மேல் நான் வாளைக் கொணரும்போது,
அந்நாட்டின் மக்கள் தங்கள் நடுவிலிருந்து ஒரு மனிதனைத் தேர்ந்தெடுத்து
அவனைத் தங்கள் காவலாளியாக ஆக்கியிருக்க,
3 அவன் அந்நாட்டின்மேல் வாள் வருவதைக் கண்டு
எக்காளம் ஊதி மக்களை எச்சரிக்கை செய்யும்போது,
4 எக்காளத்தின் ஒலியை எவராவது கேட்டும்,
எச்சரிப்புக்குச் செவிகொடாமல் இருக்க,
வாள் வந்து அவர்களை வீழ்த்திச் சென்றால்
அவர்கள் தம் இரத்தப்பழியைத் தாமே சுமப்பர்.
5 எக்காளத்தின் ஒலியைக் கேட்டிருந்தும்
அவர்கள் அந்த எச்சரிப்பைப் பொருட்படுத்தவில்லை.
எனவே, அவர்கள் தம் இரத்தப்பழியைத் தாமே சுமப்பர்.
6 ஆனால், அந்தக் காவலாளி வாள் வருவதைக் கண்டும்
எக்காளம் ஊதாமல் இருந்து,
அதன் மூலம் மக்கள் எச்சரிக்கைப்படாமல் இருக்கையில்,
வாள் வந்து அவர்களுள் எவரையாவது வீழ்த்தும்போது,
அவர் தம் குற்றத்திலிருந்து வீழ்த்தப்பட்டிருப்பினும்,
அவரது இரத்தப்பழியை நான் காவலாளியின் மேல் சுமத்துவேன்.
7 அவ்வாறே, மானிடா!
நான் உன்னை இஸ்ரயேல் வீட்டாருக்கும் காவலாளியாக ஏற்படுத்தியுள்ளேன்.
என் வாயினின்று வரும் வாக்கைக் கேட்கும்போதெல்லாம்
நீ என் பொருட்டு அவர்களை எச்சரிக்கைவேண்டும்.
8 தீயோரிடம் நான், 'ஓ தீயோரே! நீங்கள் உறுதியாகச் சாவீர்கள்' என்று சொல்ல,
அத்தீயோர் தம் வழியிலிருந்து திரும்பும்படி நீ அவர்களை எச்சரிக்காவிடில்,
அத்தீயோர் தம் குற்றத்திலேயே சாவர்;
ஆனால், அவர்களது இரத்தப்பழியை உன் மேலேயே சுமத்துவேன்.
9 ஆனால் தீயோரை அவர்கள் தம் வழியிலிருந்து திரும்ப வேண்டுமென்று
நீ எச்சரித்தும் அவர்கள் தம் வழியிலிருந்து திரும்பாவிட்டால்,
அவர்கள் தம் குற்றத்திலேயே சாவர்.
நீயோ, உன் உயிரைக் காத்துக் கொள்வாய்.

ஒவ்வொருவரின் பொறுப்பு[தொகு]


10 நீயோ, மானிடா! இஸ்ரயேல் வீட்டாரிடம் சொல்:
நீங்கள் சொல்கிறீர்கள்: 'எங்கள் குற்றங்களும் பாவங்களும்
எங்கள்மேல் இருப்பதால் நாங்கள் உருகிப்போகிறோம்.
எப்படி நாங்கள் வாழமுடியும்?'
11 அவர்களிடம் சொல்: "தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
என் மேல் ஆணை! தீயோர் சாகவேண்டுமென்பது என் விருப்பம் அன்று;
ஆனால், அத்தீயோர் தம் வழிகளினின்று திரும்பி,
வாழ வேண்டும் என்பதே என் விருப்பம்.
ஆகவே உங்கள் தீய வழிகளினின்று திரும்புங்கள்.
இஸ்ரயேல் வீட்டாரே! நீங்கள் ஏன் சாகவேண்டும்?


12 மேலும், மானிடா! உன் மக்களிடம் சொல்:
நேர்மையாளர் தவறிழைக்கும்போது,
அவர்களுடைய நற்செயல்கள் அவர்களை விடுவிக்கா.
தீயோரோ தம் தீமையினின்று மனம் மாறிவிட்டால்,
தம் தீமையை முன்னிட்டு வீழ்ச்சியடையார்.
நேர்மையாளர் தவறிழைக்கும்போது
தம் முன்னைய நற்செயல்களை முன்னிட்டு வாழமுடியாது.
13 நேர்மையாளரிடம் அவர்கள் உறுதியாக வாழ்வது உறுதி
என்று நான் சொன்னாலும், அவர்கள் தம்
முன்னைய நற்செயல்களை நம்பித் தவறிழைத்தால்,
அவர்களுடைய நற்செயல்களில் எதுவுமே எண்ணப்படமாட்டாது.
அவர்கள் தம் குற்றத்திலேயே சாவர்.
14 மாறாக, தீயோரிடம் 'நீங்கள் சாவது உறுதி'
என்று நான் சொன்னாலும்,
அவர்கள் தம் பாவத்தினின்று விலகி,
நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால் -
15 அவர்கள் தாங்கள் வாங்கிய பணயப் பொருள்களைத்
திருப்பிக் கொடுத்தால்,
திருடிக் கவர்ந்தவற்றைத் திருப்பித் தந்தால்,
வாழ்வளிக்கும் நியமங்களின்படி நடந்து,
தீச்செயல் எதுவும் செய்யாதிருந்தால் -
அவர்கள் வாழ்வது உறுதி; சாகார்.
16 அவர்கள் செய்த பாவம் எதுவுமே
அவர்களுக்கெதிராக எண்ணப்படமாட்டாது.
நீதியையும் நேர்மையையும் அவர்கள் கடைப்பிடித்தால்,
அவர்கள் வாழ்வது உறுதி.


17 இருப்பினும், 'ஆண்டவரின் நெறிமுறை நீதியற்றது' என
உன் மக்கள் சொல்கிறார்கள்.
ஆனால் அவர்களின் நெறிமுறைதான் நீதியற்றது.
18 நேர்மையாளர் தம் நன்னெறியினின்று பிறழ்ந்து
தவறிழைத்தால் அதன்பொருட்டு அவர்கள் சாவர்.
19 தீயோரும் தம் தீமையினின்று விலகி
நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால்
அதன்பொருட்டு அவர்கள் வாழ்வர்.
20 இருப்பினும், 'ஆண்டவரின் நெறிமுறை நீதியற்றது'
என நீங்கள் சொல்கின்றீர்கள்.
இஸ்ரயேல் வீட்டாரே!
உங்களில் ஒவ்வொருவரையும்
அவரவர் நெறிமுறைக்குத் தக்கவாறு நான் தீர்ப்பிடுவேன்."

எருசலேமின் வீழ்ச்சி[தொகு]


21 எங்கள் சிறையிருப்பின் பன்னிரண்டாம் ஆண்டில்,
பத்தாம் மாதத்தின் ஐந்தாம் நாள்,
எருசலேமிலிருந்து தப்பியோடி வந்த ஒருவன் என்னிடம் வந்து,
"நகர் வீழ்ந்துவிட்டது" என்றான். [*]
22 தப்பியவன் வருவதற்குமுன் மாலையில்
ஆண்டவரின் கை என் மேல் இருந்தது.
அம்மனிதன் காலையில் என்னிடம் வருமுன்
ஆண்டவர் என்னை வாய்திறக்கச் செய்தார்.
ஆகவே என் வாய் திறக்கப்பட்டிருக்க,
நான் பேச இயலாதவனாய் இல்லை.

மக்களின் பாவங்கள்[தொகு]


23 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.
24 மானிடா! இஸ்ரயேல் நாட்டின் பாழிடம்வாழ் மக்கள்,
"ஆபிரகாம் தனியொரு மனிதராக இருந்தும் அவர்
நாட்டை அவர்தம் உடைமையாகக் கொண்டிருந்தார்.
அப்படியிருக்க, நாம் பலராய் இருக்கும் போது,
இந்த நாடு நமக்கே உரிமையாய்த் தரப்பட்டுள்ளதன்றோ?"
என்று சொல்கிறார்கள்.


25 எனவே அவர்களிடம் சொல்:
தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
நீங்கள் குருதியுடன் சேர்ந்து இறைச்சியை உண்கிறீர்கள்;
உங்கள் தெய்வச் சிலைகளுக்கு வணக்கம் செலுத்துகிறீர்கள்!
கொலை செய்கிறீர்கள்.
அவ்வாறிருக்க நீங்கள் நாட்டை உரிமையாக்கிக் கொள்வீர்களோ?
26 உங்கள் வாள்களின் மீது நம்பிக்கை வைக்கிறீர்கள்;
அருவருப்பான செயல்களைச் செய்கிறீர்கள்.
ஒவ்வொருவனும் அடுத்தவன் மனைவியைக் கெடுக்கிறான்.
அவ்வாறிருக்க நீங்கள் நாட்டை உரிமையாக்கிக் கொள்வீர்களோ?


27 அவர்களுக்கு இதைச் சொல்:
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
என் மேல் ஆணை!
பாழிடம்வாழ் எஞ்சியோர் வாளால் வீழ்வர்.
வயல் வெளியில் இருப்போரைக்
காட்டு விலங்குகளுக்கு இரையாய் அளிப்பேன்.
கோட்டையிலும் குகையிலும் தங்கியிருப்போர்
கொள்ளை நோயால் மடிவர்.
28 அழிவுக்கும் வெறுமைக்கும் நாட்டைக் கையளிப்பேன்.
அதன் வலிமையின் பெருமை முடிவுக்குக் கொண்டுவரப்படும்.
இஸ்ரயேலின் மலைகள் பாழாய்ப்போம்.
அங்கே நடமாட்டம் ஏதும் இராது.
29 அவர்கள் செய்த எல்லா அருவருப்புகளின் பொருட்டும்
நான் நாட்டைப் பாழாக்குகையில்
நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வர்.

இறைவாக்கினரது அறிக்கையின் விளைவுகள்[தொகு]


30 மானிடா! உன் மக்களினத்தார் உன்னைக் குறித்து
சுவர்களின் அருகிலும் வீடுகளின் கதவருகிலும் பேசிக்கொள்கின்றனர்.
அவர்களுள் ஒவ்வொருவரும் அடுத்திருப்பாரிடம்
'ஆண்டவரிடமிருந்து வரும் செய்தி என்ன
எனக் கேட்க வாருங்கள்' எனக் கூறுகின்றார்கள்.
31 என் மக்கள் வழக்கம்போல் உன்னிடம் வருகின்றனர்.
அவர்கள் முன்னிலையில் அமர்ந்து உன் சொற்களைக் கேட்கின்றனர்.
ஆனால் அவற்றையோ கடைப்பிடிப்பதில்லை.
அவர்களின் உதடுகள் அன்பொழுகப் பேசுகின்றன;
உள்ளமோ நேர்மையற்ற பொருளைத் தேடி ஓடுகின்றது.
32 அவர்களுக்கு நீ இசைக்கருவியுடன் இயைந்து
இனிய குரலில் காதல் பாடல் பாடும் பாடகன் போல் உள்ளாய்.
அவர்கள் உன் சொற்களைக் கேட்கின்றனர்;
ஆனால் அவற்றைக் கடைப்பிடிப்பதில்லை.
33 உண்மையில் இவை வரப்போகின்றன.
அப்பொழுது தங்கள் நடுவே ஓர் இறைவாக்கினர் இருந்தார்
என உணர்ந்து கொள்வர்.


குறிப்பு

[*] 33:21 = 2 அர 25:3-10; எரே 39:2-8; 52:4-14.


அதிகாரம் 34[தொகு]

இஸ்ரயேலின் ஆயர்கள்[தொகு]


1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.
2 மானிடா! இஸ்ரயேலின் ஆயர்களுக்கு எதிராக இறைவாக்குரை.
அவர்களுக்கு இறைவாக்குரைத்துச் சொல்.
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
தாங்களே மேய்ந்துகொள்ளும் இஸ்ரயேலின் ஆயர்களுக்கு ஐயோ கேடு!
ஆயர்கள் மந்தையையன்றோ மேய்க்க வேண்டும்!
3 நீங்கள் கொழுப்பானதை உண்டு,
ஆட்டு மயிராடையை உடுத்தி,
மந்தையில் சிறந்ததை அடிக்கிறீர்கள்.
மந்தையையோ மேய்ப்பதில்லை.
4 நீங்கள் நலிந்தவற்றைத் திடப்படுத்தவில்லை;
பிணியுற்றவற்றிற்குக் குணமளிக்கவில்லை.
காயமுற்றவற்றிற்குக் கட்டுப்போடவில்லை;
வழிதப்பியவற்றைத் திரும்பக் கூட்டி வரவில்லை.
காணாமல் போனவற்றைத் தேடவில்லை.
ஆனால், அவற்றைக் கொடுமையுடனும் வன்முறையுடனும் நடத்தினீர்கள்.
5 ஆயன் இல்லாமையால் அவை அலைந்து திரிந்தன.
அப்போது எல்லாக் காட்டு விலங்குகளுக்கும் அவை இரையாயின. [*]
6 என் ஆடுகள் எல்லா மலைகளிலும்
உயர்ந்த குன்றுகளிலும் அலைந்து திரிந்தன.
பூவுலகில் எவ்விடத்திலும் என் மந்தை சிதறுண்டு போனது;
அதைத் தேடவோ கூட்டிச் சேர்க்கவோ எவரும் இலர்.


7 எனவே ஆயர்களே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்:
8 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
என் மேல் ஆணை! என் மந்தை கொள்ளையிடப்பட்டது;
எல்லாக் காட்டு விலங்குகளுக்கும் இரையானது.
ஏனெனில் அதற்கு ஆயன் இல்லை.
என் ஆயர்கள் என் மந்தையைத் தேடவில்லை.
என் மந்தையை அவர்கள் மேய்க்காமல் தாங்களே மேய்ந்து கொள்கிறார்கள்.
9 எனவே, ஆயர்களே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்:
10 தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
நான் ஆயர்களுக்கு எதிராக இருக்கிறேன்.
என் மந்தையை அவர்களிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொள்வேன்.
மந்தை மேய்ப்பினின்று அவர்களை நீக்கிவிடுவேன்.
எனவே தாங்களே மேய்ந்து கொள்ளும் அவர்கள்
இனி என் மந்தையை மேய்க்க மாட்டார்கள்.
அவர்கள் வாயினின்று என் மந்தையை மீட்பேன்.
அவை இனி அவர்களுக்கு உணவாகா.

நல்ல ஆயன்[தொகு]


11 எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
நானே என் மந்தையைத் தேடிச் சென்று பேணிக் காப்பேன்.
12 ஓர் ஆயன் தன் மந்தையினின்று சிதறுண்ட
ஆடுகளைத் தேடிச் செல்வதுபோல,
நானும் என் மந்தையைத் தேடிப் போவேன்.
மப்பும் மந்தாரமுமான நாளில் அவற்றை
எல்லா இடங்களினின்றும் மீட்டு வருவேன்.
13 மக்களினங்களினின்று அவற்றை வெளிக்கொணர்ந்து,
நாடுகளினின்று கூட்டிச்சேர்த்து,
அவற்றின் சொந்த நாட்டிற்கு அழைத்து வருவேன்.
அவற்றை இஸ்ரயேலின் மலைகளிலும்
ஓடையோரங்களிலும் நாட்டின் எல்லாக் குடியிருப்புகளிலும் மேய்ப்பேன்.
14 நல்ல மேய்ச்சல் நிலத்தில் அவற்றை மேய்ப்பேன்.
இஸ்ரயேலின் மலையுச்சிகளில் அவற்றின் மேய்ச்சல் நிலம் இருக்கும்.
அங்கே வளமான மேய்ச்சல் நிலத்தில் அவை இளைப்பாறும்.
இஸ்ரயேலின் மலைகளின்மேல் செழிப்பான மேய்ச்சல் நிலத்தில் அவை மேயும்.
15 நானே என் மந்தையை மேய்த்து, இளைப்பாறச் செய்வேன்,
என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
16 காணாமல் போனதைத் தேடுவேன்;
அலைந்து திரிவதைத் திரும்பக்கொண்டுவருவேன்;
காயப்பட்டதற்குக் கட்டுப்போடுவேன்;
நலிந்தவற்றைத் திடப்படுத்துவேன்.
ஆனால், கொழுத்ததையும் வலிமையுள்ளதையும் அழிப்பேன்.
இவ்வாறு நீதியுடன் அவற்றை மேய்ப்பேன்.
17 எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
உன்னைப் பொறுத்தவரை, என் மந்தையே,
நான் ஆட்டுக்கும் ஆட்டுக்கும் இடையேயும்
ஆட்டுக் கிடாய்களுக்கும், வெள்ளாட்டுக் கிடாய்களுக்கும் இடையேயும்
நீதி வழங்குவேன்.
18 நீங்கள் நல்ல மேய்ச்சல் நிலத்தில் மேய்வது போதாதென்றா,
எஞ்சிய மேய்ச்சல் நிலங்களைக் காலால் மிதிக்கிறீர்கள்?
நல்ல நீரைக் குடித்துவிட்டு எஞ்சிய நீரைக்காலால் கலக்குகிறீர்கள்!
19 உங்கள் கால்களால் மிதிக்கப்பட்டதை
என் மந்தை உண்ண வேண்டுமா?
உங்கள் கால்களால் கலக்கப்பட்டதை என் மந்தை குடிக்க வேண்டுமா?
20 எனவே, தலைவராகிய ஆண்டவர் அவர்களுக்கு இவ்வாறு கூறுகிறார்:
நானே கொழுத்த ஆட்டுக்கும் நலிந்த ஆட்டுக்குமிடையே நீதி வழங்குவேன்.
21 நலிந்த ஆடுகளை விலாவினாலும்
முன்னந்தொடையினாலும் இடித்துத் தள்ளி,
உங்கள் கொம்புகளால் முட்டி அவற்றை வெளியே விரட்டியடிக்கிறீர்கள்.
22 எனவே, நான் என் மந்தையை மீட்பேன்.
அவை இனிமேல் கொள்ளையிடப்படா.
நான் ஆட்டுக்கும் ஆட்டுக்குமிடையே நீதி வழங்குவேன்.
23 எனவே, அவற்றிற்கு என் ஊழியன் தாவீதை
ஒரே ஆயனாய் அமர்த்துவேன்.
அவன் அவற்றை மேய்த்து அவற்றிற்கு ஆயனாய் இருப்பான்.
24 ஆண்டவராகிய நான் அவர்கள் கடவுளாய் இருப்பேன்.
என் ஊழியன் தாவீது அவர்கள் நடுவே தலைவனாய் இருப்பான்.
ஆண்டவராகிய நானே இதை உரைத்தேன்.
25 சமாதான உடன்படிக்கையை அவர்களோடு செய்து கொள்வேன்.
காட்டு விலங்குகளை நாட்டினின்று வெளியேற்றுவேன்.
எனவே என் மந்தை திறந்த வெளியில்
பாதுகாப்பாய் வாழ்ந்து காடுகளில் உறங்கும்.
26 அவர்களுக்குக் குன்றினைச் சுற்றிய இடங்களை ஆசியாகக் கொடுப்பேன்.
ஏற்ற காலத்தில் மழையை வரச் செய்வேன்.
அவர்கள் ஆசிமழையாக இருப்பர்.
27 வயல்வெளி மரங்கள் கனி கொடுக்கும்.
நிலமோ நல்விளைச்சல் நல்கும்.
அவர்கள் தங்கள் நாட்டில் பாதுகாப்பாய் இருப்பர்.
நான் அவர்களின் தளைகளைத் தகர்த்து,
அடிமைப்படுத்தியவர் கையினின்று அவர்களை விடுவிக்கையில்
நானே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்வர்.
28 இனிமேல் அவர்கள் மக்களுக்குக் கொள்ளைப் பொருளாய் இரார்.
நாட்டின் கொடிய விலங்குகளும் அவர்களை விழுங்க மாட்டா.
அவர்கள் எத்தகைய அச்சுறுத்தலுமின்றிப் பாதுகாப்பாய் வாழ்வர்.
29 சிறப்புமிகு பண்ணை ஒன்று அவர்களுக்கு எழும்பச் செய்வேன்.
அவர்கள் இனி நாட்டில் பஞ்சத்தால் வாடமாட்டார்கள்.
மக்களினங்களின் இழி சொல்லையும் இனிச் சுமக்கமாட்டார்கள்.
30 அப்போது அவர்களுடைய கடவுளும்
ஆண்டவருமாகிய நான் அவர்களோடு இருக்கிறேன் என்பதையும்,
இஸ்ரயேலின் வீட்டாராகிய அவர்கள்
என் மக்களாக இருக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்வார்கள்,
என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
31 நீங்கள் என் மேய்ச்சலின் மந்தையாகிய மக்கள்,
நான் உங்கள் கடவுள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.


குறிப்பு

[*] 34:5 = எண் 27:17; 1 அர 22:17; மத் 9:36; மாற் 6:34.


(தொடர்ச்சி): எசேக்கியேல்:அதிகாரங்கள் 35 முதல் 36 வரை