திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசேக்கியேல்/அதிகாரங்கள் 37 முதல் 38 வரை

விக்கிமூலம் இலிருந்து
"ஆண்டவர் என்னிடம் உரைத்தது: நீ இந்த எலும்புகளுக்கு இறைவாக்குரை. 'உலர்ந்த எலும்புகளே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்' என்று சொல். தலைவராகிய ஆண்டவர் இந்த எலும்புகளுக்கு இவ்வாறு கூறுகிறார்: நான் உங்களுக்குள் உயிர்மூச்சு புகச் செய்வேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள்." - எசேக்கியேல் 37:4-5

எசேக்கியேல் (The Book of Ezekiel)[தொகு]

அதிகாரங்கள் 37 முதல் 38 வரை

அதிகாரம் 37[தொகு]

உலர்ந்த எலும்புகளின் பள்ளத்தாக்கு[தொகு]


1 ஆண்டவரின் ஆற்றல் என் மீது இறங்கியது.
அவர் என்னைத் தம் ஆவியால் தூக்கிக் கொண்டு போய்ப்
பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தினார்.
அங்கே எலும்புகள் மிகுதியாய்க் கிடந்தன.
2 அவர் அவற்றைச் சுற்றி என்னை நடத்திச் சென்றார்.
அங்கே பள்ளத்தாக்கின் அடியில் மிகப் பல எலும்புகள் கிடந்தன.
அவை மிகவும் உலர்ந்தவையாய் இருந்தன.
3 அவர் என்னிடம், 'மானிடா! இந்த எலும்புகள் உயிர்பெறமுடியுமா?' என்று கேட்டார்.
நான், 'தலைவராகிய ஆண்டவரே! உமக்குத் தெரியுமே' என்று மறுமொழி அளித்தேன்.
4 அவர் என்னிடம் உரைத்தது: நீ இந்த எலும்புகளுக்கு இறைவாக்குரை.
'உலர்ந்த எலும்புகளே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்' என்று சொல்.
5 தலைவராகிய ஆண்டவர் இந்த எலும்புகளுக்கு இவ்வாறு கூறுகிறார்:
நான் உங்களுக்குள் உயிர்மூச்சு புகச் செய்வேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள்.
6 நான் உங்களை நரம்புகளால் தொடுப்பேன்; உங்கள்மேல் சதையைப் பரப்புவேன்.
உங்களைத் தோலால் மூடுவேன். பின் உங்களுக்குள் உயிர்மூச்சு புகச் செய்வேன்.
நீங்களும் உயிர்பெறுவீர்கள். அப்போது நானே ஆண்டவர் என அறிந்து கொள்வீர்கள்.
7 எனவே, எனக்குக் கட்டளையிடப்பட்டபடி இறைவாக்குரைத்தேன்.
நான் இறைவாக்குரைக்கையில், உராயும் ஓசை கேட்டது.
ஒவ்வொரு எலும்பும் தனக்குரிய எலும்புகளுடன் சேர்ந்து கொண்டது.
8 நான் பார்க்கையிலேயே அவற்றில் நரம்புகள் ஏற்பட்டு,
சதை தோன்றித் தோல் அவற்றின்மேல் மூடியது.
ஆனால் அவற்றில் உயிர் இன்னும் வரவில்லை.
9 பின்னர் அவர் என்னிடம், உயிர்மூச்சுக்கு இறைவாக்குரை;
மானிடா! இறைவாக்குரைத்து, உயிர்மூச்சிடம் சொல்.
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
நான்கு காற்றுகளிலிருந்தும் 'உயிர்மூச்சே வா, நீ வந்து கொலையுண்ட இவர்களுக்குள் புகு.
அப்பொழுது இவர்கள் உயிர் பெறுவர்.'
10 எனவே அவர் எனக்குக் கட்டளையிட்டவாறு இறைவாக்குரைத்தேன்.
உடனே அவர்களுக்குள் உயிர்மூச்சு புகுந்தது.
அவர்கள் உயிர்பெற்று, காலூன்றி, மாபெரும் படைத்திரள்போல் நின்றனர். [1]
11 அவர் மேலும் என்னிடம் கூறியது:
மானிடா! இந்த எலும்புகள் இஸ்ரயேல் வீட்டார் அனைவரையும் குறிக்கும்.
அவர்களோ 'எங்கள் எலும்புகள் உலர்ந்து போயின.
எங்கள் நம்பிக்கை அற்றுப் போய்விட்டது.
நாங்கள் துண்டிக்கப்பட்டு விட்டோம்' எனச் சொல்கிறார்கள்.
12 எனவே, இறைவாக்குரைத்து அவர்களிடம், சொல்:
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
என் மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன்.
உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டுவருவேன்.
உங்களுக்கு இஸ்ரயேல் நாட்டைத் திரும்பக் கொடுப்பேன்.
13 அப்போது, என் மக்களே! நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து
உங்களை அவற்றிலிருந்து வெளிக்கொணர்கையில்,
நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள்.
14 என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள்.
நானும் உங்களை உங்கள் சொந்த நாட்டில் குடியமர்த்துவேன்.
'ஆண்டவராகிய நான் உரைத்தேன்; நானே இதைச் செய்தேன்' என
அப்போது அறிந்து கொள்வீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

யூதாவும் இஸ்ரயேலும் ஒரே அரசாதால்[தொகு]


15 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
16 மானிடா! நீ ஒரு கோலை எடுத்துக்கொள்.
அதில் 'யூதாவுக்கும் அவனோடு சேர்ந்திருக்கும்
இஸ்ரயேல் மக்களுக்கும் உரியது' என்று எழுது.
பின்னர் இன்னொரு கோலை எடுத்து அதில்
'யோசேப்புக்கும் அவனோடு சேர்ந்த இஸ்ரயேல் வீட்டார்
அனைவருக்கும் உரிய எப்ராயிமின் கோல்' என்று எழுது.
17 அவை இரண்டும் உன் கையில் ஒரே கோலாயிருக்கும்படி,
அவற்றை ஒன்றாகச் சேர்.
18 உன் மக்களினத்தார் உன்னிடம்,
'இவற்றால் என்ன சுட்டிக்காட்ட விழைகிறீர்?' எனக் கேட்கையில்,
19 அவர்களுக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
நான் எப்ராயிமின் கையிலிருக்கும் யோசேப்பு மற்றும்
அதனுடன் சேர்ந்த இஸ்ரயேல் குலங்களின் கோலை எடுத்து
அதை யூதாவின் கோலுடன் சேர்த்து அவற்றை ஒரே கோலாய் மாற்றுவேன்.
அவை என் கையில் ஒரே கோலாய் இருக்கும்.
20 நீ எழுதிய கோல்களை அவர்கள் கண்முன்னால் உன் கையில் பிடித்து,
21 அவர்களுக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
இதோ நான் இஸ்ரயேலர் சிதறுண்ட நாடுகளிலிருந்து
அவர்களை அழைத்து எம்மருங்கினின்றும் கூட்டிச் சேர்த்து,
அவர்களின் சொந்த நாட்டிற்குக் கொணர்வேன்.
22 இஸ்ரயேலின் மலைகள்மீது அவர்களை ஒரே நாட்டினர் ஆக்குவேன்.
அவர்கள் எல்லாருக்கும் ஒரே அரசன் இருப்பான்.
அவர்கள் இனிமேல் ஒருபோதும் இரு நாடுகளாகவோ இரு அரசுகளாகவோ பிரிந்திரார்.
23 அவர்கள் இனிமேல் ஒருபோதும் தங்கள் தெய்வச் சிலைகளாலோ
இழிந்த அருவருப்பான பொருள்களாலோ
தங்கள் வேறெந்தக் குற்றங்களாலோ தங்களைத் தீட்டுப்படுத்திக் கொள்ள மாட்டார்கள்.
ஏனெனில் அவர்கள் பாவம் செய்த எல்லாக் குடியிருப்புகளிலிருந்தும்
அவர்களை நான் மீட்டுத் தூய்மையாக்குவேன்.
அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பர்; நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்.
24 என் ஊழியன் தாவீது அவர்களுக்கு அரசானய் இருப்பான்.
அவர்கள் அனைவருக்கும் ஒரே ஆயன் இருப்பான்.
என் நீதிநெறிகளின்படி அவர்கள் நடப்பர்;
என் நியமங்களைக் கருத்தாய்க் கடைப்பிடிப்பர். [2]
25 நான் என் ஊழியன் யாக்கோபுக்குக் கொடுத்ததும்,
உங்கள் மூதாதையர் வாழ்ந்ததுமாகிய நாட்டில் அவர்கள் வாழ்வர்.
அவர்களும் அவர்களின் மக்களும், மக்களின் மக்களும்
அங்கு என்றென்றும் வாழ்வர்.
என் ஊழியன் தாவீது என்றென்றும் அவர்களின் தலைவனாய் இருப்பான்.
26 நான் அவர்களுடன் நல்லுறவு உடன்படிக்கை செய்துகொள்வேன்.
அது அவர்களுடன் என்றென்றும் நிலைத்திருக்கும்.
நான் அவர்களை நிலைபெறச் செய்து அவர்களைப் பெருகச் செய்வேன்.
என் தூயகத்தை அவர்கள் நடுவே என்றென்றும் நிலைக்கச் செய்வேன்.
27 என் உறைவிடம் அவர்கள் நடுவே இருக்கும்;
நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பர். [3]
28 என் தூயகம் அவர்கள் நடுவே என்றென்றும் நிலைத்திருக்கையில்,
இஸ்ரயேலைத் தூய்மைப்படுத்துபவர் ஆண்டவராகிய நானே
என வேற்றினத்தார் அறிந்து கொள்வர்.


குறிப்புகள்

[1] 37:10 = திவெ 11:11.
[2] 37:24 = எசே 34:24.
[3] 37:27 = 2 கொரி 6:16; திவெ 21:3.


அதிகாரம் 38[தொகு]

ஆண்டவரின் கருவியான கோகு[தொகு]


1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 மானிடா! மெசேக்கு மற்றும் தூபால் இனத்தவர்களின் தலைவனும்
மாகோகு நாட்டினனுமான கோகு என்பவனுக்கு நேராக உன் முகத்தைத் திருப்பி,
அவனுக்கு எதிராக இறைவாக்குரை. [*]
3 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
மெசேக்கு மற்றும் தூபால் இவர்களின் முதன்மைத் தலைவனாகிய கோகே!
நான் உனக்கு எதிராய் இருக்கிறேன்.
4 நான் உன்னைத் திருப்பி உன் தாடைகளில் கடிவாளங்கள் பூட்டி,
முழுப்போர்க்கவசம் அணிந்த உன்னையும், உன் குதிரைகளையும்,
குதிரைவீரர்களையும், சிறியதும் பெரியதுமான கேடயங்களுடன்
கூரிய வாளேந்திய பெரும் படையின் வீரர் யாவரையும் வெளியேற்றுவேன்.
5 அவர்களுடன் கேடயமும் தலைச்சீராவும் அணிந்த
பாரசீகம், கூசு மற்றும் பூத்து மக்களும் வெளியேறுவர்.
6 கோமேர் மற்றும் அதன் அனைத்துப் படைகளும்,
தொலை வடக்குப் பெத்தொகர்மா மற்றும் அதன் படைகளும் -
உன்னுடன் இருக்கும் பல மக்களினங்களும் வெளியேறுவர்.
7 நீ தயாராயிரு; உன்னுடன் சேர்ந்திருக்கும் கூட்டத்தினரையும் தயாராய் இருக்கச் சொல்.
நீ அவர்களுக்குத் தலைமை தாங்குவாய்.
8 பல நாள்களுக்குப்பின் நீ போரிட அழைக்கப்படுவாய்.
வாளினின்று விடுபட்டு நீண்ட காலம் பாழாய்க் கிடந்த,
இஸ்ரயேல் மலைகளில் வேற்றினத்தாரினின்று
பெருங்கூட்டமாய்க் கூட்டிச் சேர்க்கப்பட்ட மக்களின் நாட்டை,
வரப்போகும் ஆண்டுகளில் முற்றுகையிடுவாய்.
வேற்றினத்தாரிடமிருந்து கூட்டி வரப்பட்ட அவர்களோ
இப்போது பாதுகாப்புடன் வாழ்கிறார்கள்.
9 நீ புயல்போல் முன்னேறி, மேகம்போல் நாட்டை மூடுவாய்.
நீயும் உன்னுடனுள்ள அனைத்துப் படைகளும்
உன்னுடனுள்ள பல மக்களினங்களும் இவ்வாறு செய்வீர்கள்.
10 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
அந்த நாளில் உன் மனத்தில் எண்ணங்கள் எழவே, நீ தீய திட்டத்தைத் தீட்டுவாய்.
11 நான் அரணற்ற ஊர்கள் நிறைந்த நாடொன்றை முற்றுகையிடுவேன்.
அமைதியிலும் பாதுகாப்பிலும் வாழும் மக்கள் மீது பாய்வேன்.
அவர்களுக்கு அரண் இல்லை; அடைக்கும் தாழ் இல்லை; வாயில் கதவும் இல்லை.
12 எனவே நான் பாழிடங்களாயிருந்து குடியிருப்புகளாய் மாறிய இடங்களுக்கும்
நாடுகளிலிருந்து கூட்டிச் சேர்க்கப்பட்ட மக்களினத்துக்கும்
வளமையான கால்நடைகளும், பொருள்களும் கொண்டு
நாட்டின் நடுவில் வாழும் அவர்களுக்கும் எதிராக என் கையை ஓங்கி,
அவர்களைக் கொள்ளையடிப்பேன், சூறையாடுவேன் என்று உனக்குள் சொல்லிக் கொள்வாய்.
13 சேபா நாட்டினரும் தெதான் நாட்டினரும்,
தர்சீசு நகர வணிகர்களும், அதன் எல்லா இளம் வீரரும் உன்னிடம்
'உண்மையாகவே கொள்ளையிட வந்தாயோ,
பெருந்திரளான மக்களைச் சேர்த்துக் கொண்டு சூறையாட வந்தாயோ,
பொன்னையும் வெள்ளியையும் வாரிக்கொண்டு,
கால்நடைகளைக் கவர்ந்துகொண்டு,
மிகுதியான பொருள்களைக் கொள்ளையிடுமாறு இவ்வாறு செய்தாயோ?' எனக் கேட்பார்கள்.
14 எனவே, மானிடா! நீ இறைவாக்குரைத்துக் கோகுக்குச் சொல்:
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
என் மக்கள் இஸ்ரயேலர் பாதுகாப்பாய் வாழும் நாளை நீ அறிவாயோ?
15 தொலை வடக்குப் பகுதிகளிலிருந்து நீ
உன்னுடன் இருக்கும் பல மக்களினங்களுடன் வருவாய்.
நீங்கள் யாவரும் குதிரையில் ஏறிய பெரிய வலிய படைகளாய் வருவீர்கள்.
16 நீ என் மக்கள் இஸ்ரயேலருக்கு எதிராய்ப் புறப்பட்டு,
நாட்டை மூடும் மேகம்போல் முற்றுகையிடுவாய்.
கோகே! இனிவரும் நாள்களில் நான் உன்னை
என் நாட்டிற்கு எதிராய் எழும்பச் செய்வேன்.
நான் மக்களினங்களின் கண்முன்னே
என்னை உன் வழியாய்த் தூயவர் என வெளிப்படுத்தும்போது
அவர்கள் நான் யாரென அறிந்து கொள்வர்.
17 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
நான் முற்காலத்தில் என் ஊழியர்களாம் இஸ்ரயேல் இறைவாக்கினர் வழியாய்
எவனைக் குறித்துப் பேசினேனோ அவன் நீதானே!
அக்காலத்தில் அவர்கள் நான் உன்னை அவர்களுக்கு எதிராய்க்
கூட்டி வருவேன் எனப் பல்லாண்டு இறைவாக்குரைத்தனர்.

கோகுக்குக் கடவுளின் தண்டனை[தொகு]


18 அந்நாளில் நடப்பது இதுவே:
கோகு இஸ்ரயேல் நாட்டுக்கு எதிராய் எழும்புகையில்,
என் கொதிக்கும் சினம் கிளர்ந்தெழும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
19 என் சினத்திலும் கனல் பறக்கும் சீற்றத்திலும் நான் உரைக்கிறேன்.
உண்மையாகவே அந்நாளில் இஸ்ரயேல் நாட்டில் பெரிய நிலநடுக்கம் உண்டாகும்.
20 கடல்வாழ் மீனினமும், வான்வெளிப் பறவையினமும்,
காடுவாழ் விலங்கினமும், மண்ணில் ஊரும் எல்லா உயிரினமும்,
உலகில் வாழும் எல்லா மக்களும் என் முன்னிலையில் நடுங்குவர்.
மலைகள் சரியும்; முகடுகள் சாயும்;
எல்லா அரண்களும் மண்ணில் விழும்.
21 நான் கோகுக்கு எதிராய் என் எல்லா மலைகளிலும்
வாளை வரச்செய்வேன் என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
ஒவ்வொருவரின் வாளும் தம் தோழருக்கு எதிராய் இருக்கும்.
22 நான் அவன்மீது கொள்ளையையும் கொலையையும் அனுப்பித்
தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன்.
பெருமழையையும், கல்மழையையும், நெருப்பையும்,
கந்தகத்தையும் அவன்மீதும் அவன் படைகள் மீதும்
அவனோடு இருக்கும் எல்லா மக்களினங்கள்மீதும் கொட்டுவேன்.
23 இவ்வாறு நான் என் மேன்மையையும் தூய்மையையும் நிலைநாட்டிப்
பல மக்களினங்களின் கண்முன்னால் என்னை வெளிப்படுத்துவேன்.
அப்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்துகொள்வர்.


குறிப்பு

[*] 38:2 = திவெ 20:8.


(தொடர்ச்சி): எசேக்கியேல்:அதிகாரங்கள் 39 முதல் 40 வரை