திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசேக்கியேல்/அதிகாரங்கள் 41 முதல் 42 வரை

விக்கிமூலம் இலிருந்து
"பின்னர் அவர் கோவிலை அளந்தார். அது நூறு முழம் நீளமுடையதாய் இருந்தது. கோவிலின் முற்றமும் சுவர்களோடு சேர்ந்து கட்டடமும் நூறு முழ நீளமுடையதாய் இருந்தன.." - எசேக்கியேல் 41:13

எசேக்கியேல் (The Book of Ezekiel)[தொகு]

அதிகாரங்கள் 41 முதல் 42 வரை

அதிகாரம் 41[தொகு]


1 பின்னர் அவர் என்னைக் கோவிலின் கூடத்திற்கு அழைத்துச் சென்று
அதன் புடைநிலைகளை அளந்தார்.
அவை ஒருபுறம் ஆறு முழ அகலமும் மறுபுறம் ஆறு முழ அகலமும் கொண்ட
கூடார அளவுடையதாய் இருந்தது.
2 வாயிலின் அகலம் பத்து முழம்,
வாயிலின் புடைநிலைகள் ஒவ்வொரு பக்கமும் ஐந்து முழம் இருந்தன.
பின்பு அவர் கோவிலின் கூடத்தை அளந்தார்.
அது நாற்பது முழ நீளமும், இருபது முழ அகலமும் உடையதாயிருந்தது.
3 பின்னர் அவர் உட்கூடத்திற்குப் போய்,
அதன் வாயிலின் புடைநிலைகளை அளந்தார்.
அவை ஒவ்வொன்றும் இரண்டு முழ அகலம் உடையதாயிருந்தன.
வாயில் ஆறு முழ அகலம் உடையதாயிருந்தது.
அதன் வெளிப் புடைநிலை ஒவ்வொரு பக்கமும் ஏழு முழ அகலம் கொண்டிருந்தது.
4 அவர் உட்கூடத்தின் நீளத்தை அளந்தார்.
அது இருபது முழம், அதன் அகலம் வெளிக்கூட விளம்பு வரை இருபது முழமாக இருந்தது.
அவர் என்னிடம், 'இதுவே திருத்தூயகம்' என்றார்.

கோவில் சுவர்களுக்கு எதிரே அமைந்த அறைகள்[தொகு]


5 பின்னர் அவர் கோவிற் சுவரை அளந்தார்.
அதன் அகலம் ஆறு முழம்,
கோவிலைச் சுற்றியுள்ள ஒவ்வோர் அறையும் நான்கு முழ அகலம் கொண்டிருந்தது.
6 பக்கத்து அறைகள் ஒன்றன்மேல் ஒன்றாய் மூன்று அடுக்குகளாய் இருந்தன.
ஒவ்வொரு அடுக்கிலும் முப்பது அறைகள் இருந்தன.
இந்த அறைகள் கோவில் சுவர்மேல் ஊன்றியிராமல்,
இருபுறத்திலுமுள்ள சுற்றுக் கட்டுகளின் விளிம்பை ஆதாரமாகக் கொண்டிருந்தன.
7 கோவிலைச் சுற்றியிருந்த பக்க அறைகள், அடுக்குகள் உயர உயர,
அகலம் மிகுதியானவையாய் இருந்தன.
கோவிலைச் சுற்றிய அமைப்பு மேலே போகப் போக
அகலமானதாய்க் கட்டப்பட்டிருந்தது.
அதனால் மேலே இருந்த அறைகள் தமக்குக் கீழே இருந்த
அறைகளைவிட அகலம் கூடியனவாயிருந்தன.
கீழ்த்தளத்திலிருந்து நடுத்தளம் வழியாக மேல்தளத்திற்கு ஒரு படிக்கட்டு இருந்தது.
8 கோவிலைச் சுற்றிலும் அதன் தளமேடை உயர்ந்திருக்கக் கண்டேன்.
அதுவே பக்க அறைகளின் தளமேடையாகவும் இருந்தது.
அது ஒரு கோலின் அளவாகிய ஆறு முழம் இருந்தது.
9 பக்க அறைகளின் வெளிச்சுவர் ஐந்து முழ அகலம் உடையதாய் இருந்தது.
ஆலயத்தின் பக்க அறைகளுக்கும்,
10 குருக்களின் அறைக்கும் இடையிலுள்ள திறந்தவெளி
இருபது முழமளவாய் கோவிலைச் சுற்றி இருந்தது.
11 பக்க அறைகளுக்குத் திறந்த வெளியிலிருந்து
வடக்குப் பக்கம் ஒன்றும் தெற்குப் பக்கம் ஒன்றுமாக இரு வாயில்கள் இருந்தன.
திறந்த வெளியைத் தொட்ட தளமேடை
எப்பக்கமும் ஐந்து முழம் அகலமுடையதாய் இருந்தது.

மேற்கே அமைந்த கட்டடம்[தொகு]


12 மேற்குப் பக்கத்தில் கோவில் முற்றத்தை நோக்கிய கட்டடம்
எழுபது முழ அகலம் கொண்டிருந்தது.
கட்டடத்தின் சுவர் எப்பக்கமும் ஐந்து முழ அகலமும்,
தொண்ணூறு முழ நீளமும் கொண்டிருந்தது.

கோவிலின் வரையளவுகள்[தொகு]


13 பின்னர் அவர் கோவிலை அளந்தார்.
அது நூறு முழம் நீளமுடையதாய் இருந்தது.
கோவிலின் முற்றமும் சுவர்களோடு சேர்ந்து கட்டடமும்
நூறு முழ நீளமுடையதாய் இருந்தன.
14 கோவிலின் முகப்பும் அதன் கிழக்கு முற்றமும்
நூறு முழ அகலமுடையனவாய் இருந்தன.
15 பின்னர் அவர் கோவிலின் அருகிலிருந்த முற்றத்தை நோக்கிய
கட்டடத்தை அதன் ஒவ்வொரு பக்கமுமிருந்த மேடை இருக்கையுடன் அளந்தார்.
அது வெளிக்கூடம், உட்கூடம், முற்றத்தை நோக்கிய
புகுமுக மண்டபம் உட்பட நூறு முழமாய் இருந்தது.

கோவில் அமைப்பு விளக்கம்[தொகு]


16 அவை மூன்றையும் சுற்றிய மேடை இருக்கைகள்,
வாயிற்படிகள், குறுகலான பலகணிகள்,
வாயிற்படிகளை உள்ளடக்கியதும் தாண்டியதுமான அனைத்தும்
மரத்தினால் செய்யப்பட்டிருந்தன.
தளத்திலிருந்து பலகணிவரை சுவர் முழுவதும்
பலகணிகளும் மரத்தினால் வேயப்பட்டிருந்தன.
17 வாயிலிலிருந்து உள்கூடம் வரையிலும் வெளியேயும்
சுற்றிலுமிருந்த சுவர்களில் உள்ளேயும் வெளியேயும்
18 கெருபுகள், பேரீச்ச மரங்களின் வடிவங்கள் இருந்தன.
ஒவ்வொரு கெருபையும் அடுத்து ஒரு பேரீச்ச மர வடிவம் அமைந்திருந்தது.
ஒவ்வொரு கெருபுக்கும் இரு முகங்கள் இருந்தன.
19 அவற்றுள் ஒன்று பேரீச்ச மரத்தை நோக்கிய மனித முகமாகவும்,
மற்றொன்று அடுத்த பேரீச்ச மரத்தை நோக்கிய சிங்க முகமாகவும்
கோவில் முழுவதும் அமைந்திருந்தன.
20 தளத்திலிருந்து வாயிலின் மேற்பகுதி வரை
வெளிக்கூடச் சுவர்களில் கெருபுகள்,
பேரீச்ச மர வடிவங்கள் அமைந்திருந்தன.
21 கோவில் கூடத்திற்கு நீள்சதுர வாயிற்கதவு இருந்தது;
திருத்தூயகத்தின் முன்னும் அதுபோன்றே இருந்தது.

மரப் பலிமேடை[தொகு]


22 அங்கே மூன்று முழ உயரமும் இரு முழ நீளமும் கொண்ட ஒரு பீடம் இருந்தது.
அதன் முனைகளும் அடிப்பகுதியும் பக்கங்களும்
மரத்தினால் செய்யப்பட்டிருந்தன.
அந்த மனிதர் என்னிடம் 'ஆண்டவரின் திருமுன்னிலை மேசை இதுவே' என்றார்.

வாயிற்கதவுகள்[தொகு]


23 கோவிற் கூடத்திற்கும், திருத்தூயகத்திற்கும் இரு வாயில்கள் இருந்தன.
24 வாயில்கள் ஒவ்வொன்றுக்கும் இரட்டைக் கதவுகள் இருந்தன.
25 கோவிற் கூடத்தின் கதவுகளில்,
சுவர்களில் அமைக்கப் பெற்றிருந்தது போலவே கெருபுகள்,
பேரீச்ச மரங்களின் வடிவங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
புகுமுக மண்டபத்தின் முன்னால் மரத்தினாலான விதானம் இருந்தது.
26 புகுமுக மண்டபத்தின் பக்கச் சுவர்களில் குறுகலான பலகணிகளும்,
ஒவ்வொரு பக்கத்திலும் பேரீச்ச மர வடிவங்களும் இருந்தன.
கோவிலின் பக்க அறைகளில் விதானங்கள் இருந்தன.


அதிகாரம் 42[தொகு]

கோவில் அருகே அமைந்த இரு கட்டடங்கள்[தொகு]


1 பின்னர், அம்மனிதர் என்னை வடதிசை வழியாய்
வெளி முற்றத்திற்கு அழைத்துச் சென்று
கோவில் முற்றத்திற்கு எதிரிலும் வடதிசையில் உள்ள வெளிச் சுவருக்கு எதிரிலும்
இருந்த அறைகளுக்கு இட்டுச் சென்றார்.
2 வடதிசை நோக்கி வாயில் இருந்த கட்டடம் நூறு முழ நீளமும்
ஐம்பது முழ அகலமும் கொண்டிருந்தது.
3 உள் முற்றத்திற்கு இருபது முழத்திற்கு இரு பக்கமும் இருந்த பகுதியிலும்,
வெளி முற்றத்தின் நடைமேடைக்கு எதிரில் இருந்த பகுதியிலும்
எதிர் எதிரான மேடையிருக்கைகள் மூன்று அடுக்குகளாய் இருந்தன.
4 அறைகளின் முன்னே ஓர் உள் வழிப்பாதை இருந்தது.
அதன் அகலம் பத்து முழம்; நீளம் நூறு முழம்.
அவ்வறைகளின் கதவுகள் வடக்குப் பக்கத்தில் இருந்தன.
5 மாடி அறைகள் குறுகியவையாக இருந்தன.
ஏனெனில் மேடையிருக்கைகள் கீழ்த்தள அறைகளிலிருந்தும்
நடுத்தள அறைகளிலிருந்தும் கொண்ட இடத்தை விட
மிகுதியான இடத்தை மேலறைகளிலிருந்து எடுத்துக்கொண்டன.
6 முற்றங்களில் இருந்தது போல மூன்றாம் தளத்தில் தூண்கள் இல்லை.
எனவே கீழ்த்தளம் மற்றும் நடுத்தள அறைகளைவிட
அவை இடம் குறைந்தனவாய் இருந்தன.
7 அறைகளுக்கும், வெளிமுற்றத்திற்கும் இணையாக ஒரு வெளிச்சுவர் இருந்தது.
அது அறைகளின் முன்னால் ஐம்பது முழ நீளமுடையதாய் இருந்தது.
8 வெளிமுற்றத்தை ஒட்டிய அறைகள் ஐம்பது முழ நீளமுடையவை;
ஆனால், கோவிலின் வெளிக்கூடத்தின் முன் இருந்தவையோ நூறு முழ நீளம் உடையவை.
9 கீழ்த்தள அறைகளுக்கு வெளிமுற்றத்திலிருந்து நுழைய
கிழக்குப் பக்கத்திலே ஒரு வாயில் இருந்தது.
10 கிழக்குப் பக்கத்தில் வெளிமுற்றத்தைத் தொட்டவாறும்,
வெளிச்சுவருக்கு எதிரிலுமாக அறைகள் இருந்தன.
11 அவற்றின் முன்னால் ஒருவழிப்பாதை இருந்தது.
இவை வடக்குப் பக்க அறைகளைப் போலவே இருந்தன.
அவற்றைப்போலவே நீள அகலங்களும் வெளிச் செல்லும் வாயில்களும்
மற்றும் அமைப்புத் தோற்றங்களும் இருந்தன.
12 வடக்குப் புறவாயில் வழிகளைப்போலவே
தெற்குப் புற அறைகளுக்கும் வாயில் வழிகள் இருந்தன.
கிழக்குப் புறம்வரை செல்லும் சுவருக்கு இணையான
வழிப்பாதையின் தொடக்கத்தில் ஒரு வாயில் இருந்தது.
அதன் வழியாய் அறைகளுக்குச் செல்ல இயலும்.
13 பின்னர் அம்மனிதர் என்னிடம் சொன்னார்:
கோவில் முற்றத்தை நோக்கியிருக்கும்
வடக்கு மற்றும் தெற்கு அறைகள் யாவும் தூய அறைகளாகும்.
அங்கே ஆண்டவரை அணுகிவரும் குருக்கள்
உன்னத பலிப்பொருள்களை உண்ணுவர்.
அவர்கள் அங்கே உன்னத பலிப்பொருள்களான தானியப் படையல்,
பாவம் போக்கும் பலிப்பொருள்கள்,
குற்றநீக்கப் பலிப்பொருள்கள் ஆகியவற்றை வைப்பர்.
ஏனெனில், அது தூய இடமாகும்.
14 குருக்கள் தூய இடங்களில் நுழைந்தபின்
அவர்கள் பணிபுரியப் பயன்படுத்திய திருஉடைகளை
அங்கேயே கழற்றி வைக்காமல் அங்கிருந்து வெளியேறக் கூடாது.
ஏனெனில், அவை தூயவை.
மக்கள் பகுதிக்குப் போகுமுன் அவர்கள்
வேறு ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.

கோவில் பகுதிகளின் வரையளவுகள்[தொகு]


15 கோவிலின் உட்புறப் பகுதிகளை அளந்து முடிந்தபின்,
அவர் என்னைக் கிழக்கு வாயில் வழியாக வெளிக்கொணர்ந்து,
கோவிலைச் சுற்றிலும் அளந்தார்.
16 அவர் கிழக்குப் பகுதியை அளவுகோலால் அளந்தார்.
அது ஐந்நூறு கோல்கள் இருந்தது.
17 அவர் வடக்குப் பகுதியை அளந்தார்.
அதுவும் ஐந்நூறு கோல்கள் இருந்தது.
18 அவர் தெற்குப் பகுதியை அளந்தார்.
அதுவும் ஐந்நூறு கோல்கள் இருந்தது.
19 பின்னர் அவர் மேற்குப் பக்கம் திரும்பி அளந்தார்.
அதுவும் ஐந்நூறு கோல்கள் இருந்தது.
20 இவ்வாறு அவர் அப்பகுதியை நாற்புறமும் அளந்தார்.
ஒவ்வொரு புறமும் சுவர் ஐந்நூறு முழம் இருந்தது.
அச்சுவர் தூயகத்தை மக்கள் பகுதியிலிருந்து பிரித்தது.


(தொடர்ச்சி): எசேக்கியேல்:அதிகாரங்கள் 43 முதல் 44 வரை