திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எரேமியா/அதிகாரங்கள் 11 முதல் 12 வரை

விக்கிமூலம் இலிருந்து
" என் உரிமைச்சொத்து எனக்குப் பல வண்ணப் பறவைபோல் ஆயிற்று; சுற்றிலுமுள்ள பறவைகள் எல்லாம் அதற்கு எதிராய் எழுந்துள்ளன" - எரேமியா 12:9.

எரேமியா (The Book of Jeremiah)[தொகு]

அதிகாரங்கள் 11 முதல் 12 வரை

அதிகாரம் 11[தொகு]

உடன்படிக்கை[தொகு]


1 ஆண்டவர் எரேமியாவுக்கு அருளிய வாக்கு:
2 "இவ்வுடன்படிக்கையின் விதிமுறைகளைக் கேட்டு
யூதாவின் மக்களுக்கும்
எருசலேமில் குடியிருப்போருக்கும் அறிவிப்பாய்.
3 நீ அவர்களுக்குச் சொல்லவேண்டியது:
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
இவ்வுடன்படிக்கையின் விதிமுறைகளுக்குச்
செவி கொடுக்காதவன் சபிக்கப்படுக!
4 இரும்புச் சூளையாகிய எகிப்து நாட்டிலிருந்து
நான் உங்கள் மூதாதையரைக் கூட்டிக்கொண்டு வந்த நாளில்,
அவர்களுக்குக் கட்டளையிட்டது இதுவே:
என் குரலுக்குச் செவிசொடுத்து,
நான் கட்டளையிடுவது அனைத்தையும் செய்யுங்கள்.
அப்போது நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள்;
நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.
5 இன்று இருப்பதுபோல, அப்பொழுது,
பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டை
அவர்களுக்குக் கொடுப்பதாக
உங்கள் மூதாதையருக்கு நான் ஆணையிட்டுக்
கூறியதை உறுதிப்படுத்துவேன்." அதற்கு நான்,
'ஆண்டவரே! அப்படியே ஆகுக!'
என்று மறுமொழி கூறினேன்.


6 ஆண்டவர் என்னிடம் கூறினார்:
யூதா நகர்களிலும் எருசலேம் தெருக்களிலும்
இந்த விதிமுறைகளை அறிவிப்பாய்.
'உடன்படிக்கையின் விதிமுறைகளைக் கேட்டு
அவற்றின்படி ஒழுகுங்கள்' என்று கூறுவாய்.
7 உங்கள் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து
கூட்டிக்கொண்டுவந்த நாளிலிருந்து இன்றுவரை
அவர்களைத் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளேன்.
என் குரலுக்குச் செவிகொடுங்கள் என்று
வற்புறுத்திக் கூறியுள்ளேன்.
8 அவர்களோ கீழ்ப்படியவும் இல்லை;
செவிசாய்க்கவும் இல்லை.
மாறாக, ஒவ்வொருவரும் தங்கள்
தீய இதயப் பிடிவாதத்தின்படி நடந்தனர்.
ஆகவே நான் கட்டளையிட்டும்
அவர்கள் கடைப்பிடிக்காத
இந்த உடன்படிக்கையின் விதிமுறை அனைத்தின்படி
அவர்களுக்கு எதிராகச் செயல்படுவேன்.


9 ஆண்டவர் என்னிடம் கூறியது:
யூதா மக்களிடமும் எருசலேம் வாழ் மக்களிடமும்
சதித்திட்டம் ஒன்று தோன்றியுள்ளது.
10 என் சொற்களுக்குச் செவிசாய்க்க மறுத்து,
முன்பு தம் மூதாதையர் செய்த குற்றங்களை
இவர்களும் செய்தார்கள்.
வேற்றுத் தெய்வங்களுக்குப்பின் திரிந்து,
அவற்றுக்கு ஊழியம் செய்து,
நான் அவர்கள் மூதாதையரோடு செய்த உடன்படிக்கையை
இஸ்ரயேல் வீட்டாரும் யூதாவின் வீட்டாரும் முறித்துவிட்டனர்.
11 ஆகவே ஆண்டவர் கூறுவது இதுவே:
இதோ நான் அவர்கள் மீது
தீமை வருவிக்கப்போகிறேன்.
அதிலிருந்து அவர்கள் தப்பமுடியாது.
அவர்கள் என்னை நோக்கி அழுகுரல் எழுப்பினாலும்
நான் அவர்களுக்குச் செவிசாய்க்கமாட்டேன்.
12 அப்போது யூதா நகர்களில் குடியிருப்போரும்
எருசலேம் வாழ் மக்களும்
தாங்கள் தூபம் காட்டி வணங்கும் தெய்வங்களிடம்
ஓடிச்சென்று அழுகுரல் எழுப்புவார்கள்.
ஆனால் அவர்களுக்குத் தீமை நேர்ந்த காலத்தில்
அவற்றால் அவர்களை விடுவிக்கவே முடியாது.
13 யூதாவே, உன் நகர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு
உனக்குத் தெய்வங்கள் உள்ளன.
எருசலேமிலுள்ள தெருக்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு,
வெட்கக் கேட்டிற்கு - பாகாலுக்கு -
தூபம் காட்டப் பீடங்கள் அமைத்தீர்கள்.


14 எனவே இந்த மக்களுக்காக நீ மன்றாட வேண்டாம்.
இவர்களுக்காகக் குரல் எழுப்பவோ
வேண்டுதல் செய்யவோ வேண்டாம்.
ஏனெனில் அவர்களுக்குத் தீமை நேரிடும்பொழுது
அவர்கள் என்னை வருந்தி அழைத்தாலும்
நான் செவிசாய்க்கமாட்டேன்.
15 என் இல்லத்தில் இருக்க
என் அன்புக்குரியவளுக்கு என்ன உரிமை?
அவள்தான் தன் எண்ணற்ற
இழிசெயல்களைச் செய்துவருகிறாளே!
உனக்கு வரவிருக்கும் தீமையைப்
பலி இறைச்சி உன்னிடமிருந்து அகற்றிவிடுமா?
அப்படியிருக்க ஏன் அக்களிக்கிறாய்?
16 'பசுமையான, அழகிய,
பார்வைக்கினிய பழங்களைக் கொண்ட ஒலிவ மரம்'
என்பது ஆண்டவர் உனக்கு இட்ட பெயர்.
இப்போதோ கொடும் புயற்காற்றின் இரைச்சலுடன்
அது தீப்பற்றி எரியச் செய்கிறார்.
அதன் கிளைகள் தீய்ந்து போயின.
17 உன்னை நட்டுவளர்த்த படைகளின் ஆண்டவரே
உனக்குத் தீமை வரும் என்று சொல்லிவிட்டார்.
ஏனெனில் இஸ்ரயேல் வீட்டாரும்
யூதா வீட்டாரும் தீச்செயல் செய்தார்கள்.
எனக்குச் சினமூட்டும்படி பாகாலுக்குத் தூபம் காட்டினார்கள்.

எரேமியாவைக் கொல்லச் சதி[தொகு]


18 'ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தினார்;
நானும் புரிந்து கொண்டேன்.
பின்னர் நீர் அவர்களின் செயல்களை எனக்குக் காட்டினீர்.


19 வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும்
சாந்தமான செம்மறிபோல் இருந்தேன்;
அவர்கள் எனக்கு எதிராய்,
'மரத்தைப் பழத்தோடு அழிப்போம்;
வாழ்வோரின் நாட்டிலிருந்து அவனை அகற்றிவிடுவோம்;
அவன் பெயர் மறக்கப்படட்டும்'
என்று சொல்லிச் சதித் திட்டம்
தீட்டியதை நான் அறியாதிருந்தேன்.


20 படைகளின் ஆண்டவரே,
நீர் நேர்மையோடு தீர்ப்பிடுபவர்;
உள்ளுணர்வுகளையும்
இதயச் சிந்தனைகளையும் சோதித்தறிபவர்;
நீர் அவர்களைப் பழிவாங்குவதை நான் காணவேண்டும்.
ஏனெனில், என் வழக்கை உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன்.


21 'ஆண்டவரின் பெயரால் இறைவாக்கு உரைக்காதே;
உரைத்தால் எங்கள் கைகளாலே சாவாய்'
என்று கூறி உன் உயிரைப் பறிக்கத் தேடும்
அனத்தோத்தைச் சார்ந்த ஆள்களைப்பற்றி,
22 படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
இதோ நான் அவர்களைத் தண்டிக்கப் போகிறேன்.
இளைஞர்கள் வாளால் மடிவர்;
புதல்வர், புதல்வியர் பஞ்சத்தால் அழிவர்.
23 அவர்களுள் யாரும் எஞ்சியிருக்க மாட்டார்கள்.
அனத்தோத்தைச் சார்ந்த ஆள்கள் மேல்,
அவர்களைத் தண்டிக்கும் ஆண்டில்,
தீமை வரச்செய்வேன்.


அதிகாரம் 12[தொகு]

எரேமியாவின் முறையீடு[தொகு]


1 ஆண்டவரே! நீர் நீதியுள்ளவர்;
ஆயினும் உம்மோடு நான் வழக்காடுவேன்;
ஆம்; உம் தீர்ப்புக்கள் பற்றி
உம்மிடம் முறையிட விரும்புகிறேன்;
தீயோரின் வாழ்வு வளம் பெறக் காரணம் என்ன?
நம்பிக்கைத் துரோகம் செய்வோர்
அமைதியுடன் வாழ்வது ஏன்?


2 அவர்களை நீர் நட்டுவைத்தீர்;
அவர்களும் வேரூன்றி வளர்ந்தார்கள்;
கனியும் ஈந்தார்கள்;
அவர்களின் உதடுகளில் நீர் எப்போதும் இருக்கின்றீர்;
அவர்கள் உள்ளத்திலிருந்தோ வெகு தொலையில் உள்ளீர்.


3 ஆனால் ஆண்டவரே!
நீர் என்னை அறிவீர்;
என்னைப் பார்க்கின்றீர்;
என் இதயம் உம்மோடு உள்ளது என்பதைச்
சோதித்து அறிகின்றீர்;
அவர்களையோ வெட்டப்படுவதற்கான ஆடுகளைப் போலக்
கொலையின் நாளுக்கெனப் பிரித்து வைத்தருளும்.


4 எவ்வளவு காலம் மண்ணுலகம் புலம்பிக் கொண்டிருக்கும்?
வயல்வெளி புற்பூண்டுகள் எல்லாம் வாடிக் கிடக்கும்?
மண்ணுலகில் குடியிருப்போர் செய்த தீமைகளின் காரணமாக,
விலங்குகளும் பறவைகளும் அழிந்து போயின;
'நம் செயல்களைக் கடவுள் காண்பதில்லை'
என்று அவர்கள் சொல்லிக்கொண்டார்கள்.


5 காலாள்களோடு ஓடியே நீ களைத்துப்போனாய்;
குதிரைகளோடு நீ எவ்வாறு போட்டியிட முடியும்?
அமைதியான நாட்டிலேயே நீ அஞ்சுகிறாய் என்றால்,
யோர்தானின் காடுகளில் நீ என்ன செய்வாய்?


6 உன் சகோதரரும் உன் தந்தை வீட்டாரும்கூட
உனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தார்கள்;
அவர்களும் உனக்கு எதிராக உரக்கக் கத்தினார்கள்;
அவர்கள் உன்னிடம் இனிமையாகப் பேசினாலும்
நீ அவர்களை நம்பாதே.

ஆண்டவரின் முறையீடு[தொகு]


7 நான் என் வீட்டைப் புறக்கணித்தேன்;
என் உரிமைச் சொத்தைத் தள்ளிவிட்டேன்;
என் உள்ளத்துக்கு இனியவளை
அவளின் எதிரிகளிடம் ஒப்புவித்துவிட்டேன்.


8 என் உரிமைச்சொத்து எனக்கு
ஒரு காட்டுச் சிங்கம்போல் ஆயிற்று;
அது எனக்கு எதிராய்க் கர்ச்சிக்கின்றது;
எனவே நான் அதனை வெறுக்கின்றேன்.


9 என் உரிமைச்சொத்து எனக்குப்
பல வண்ணப் பறவைபோல் ஆயிற்று;
சுற்றிலுமுள்ள பறவைகள் எல்லாம்
அதற்கு எதிராய் எழுந்துள்ளன;
வயல்வெளி விலங்குகளே, வாருங்கள்;
வந்து கூடுங்கள்; அதனை விழுங்குங்கள்.


10 மேய்ப்பர்கள் பலர்
என் திராட்சைத் தோட்டத்தை அழித்தார்கள்;
எனது பங்கை மிதித்துப் போட்டார்கள்;
எனது இனிய பங்கைப் பாழடைந்த
பாலைநிலம் ஆக்கினார்கள்.


11 அவர்கள் அதைப் பாழாக்கினார்கள்;
அது என்னை நோக்கிப் புலம்புகிறது;
நாடு முழுவதும் பாழாகிவிட்டது;
ஆனால் யாரும் அதுபற்றிக் கவலைப்படுவதில்லை.


12 பாழாக்குவோர் பாலைநிலத்தின்
மொட்டை மேடுகள் அனைத்தின் மேலும் வந்துசேர்ந்துள்ளனர்;
ஏனெனில் ஆண்டவரின் வாள்,
நாட்டை ஒரு முனை முதல் மறு முனைவரை அழித்துவிடும்;
அமைதி என்பது யாருக்குமே இல்லை.


13 கோதுமையை விதைத்தார்கள்;
ஆனால் முட்களையே அறுத்தார்கள்.
உழைத்துக் களைத்தார்கள்;
ஆயினும் பயனே இல்லை.
தங்கள் அறுவடையைக் கண்டு வெட்கம் அடைந்தார்கள்.
இதற்கு ஆண்டவரின் கோபக்கனலே காரணம்.

அண்டை நாட்டார்க்குத் தீர்ப்பும் மீட்பும்[தொகு]


14 ஆண்டவர் கூறுவது இதுவே:
என் மக்களாகிய இஸ்ரயேல் என்னிடமிருந்து
பெற்றுக்கொண்ட உரிமைச் சொத்தின்மேல் கைவைக்கும்
சுற்றியுள்ள தீயோர் அனைவரையும்
அவர்கள் நாட்டிலிருந்து நான் பிடுங்கிவிடுவேன்.
அவர்கள் நடுவிலிருந்து யூதா வீட்டாரையும் பிடுங்கிவிடுவேன்.
15 அவர்களைப் பிடுங்கிவிட்டபின்,
நான் மீண்டும் அவர்கள்மேல் இரக்கம் காட்டுவேன்.
அவர்கள் ஒவ்வொருவரையும் தம் உரிமைச் சொத்துக்கும்
சொந்த நாட்டுக்கும் திரும்பக் கூட்டிவருவேன்.
16 அவர்கள் முன்பு பாகாலின் பெயரால் ஆணையிடும்படி
என் மக்களுக்குக் கற்றுக்கொடுத்தது போல்,
இப்போது என் மக்களின் வழிமுறைகளைக்
கவனமாய்க் கற்றுக்கொண்டு,
'வாழும் ஆண்டவர் மேல் ஆணை'
என்று என் பெயரால் ஆணையிடுவார்களாகில்,
அவர்கள் என் மக்கள் நடுவில் வாழ்ந்து வளம்பெறுவர்.
17 ஆனால், எந்த மக்களினமாவது கீழ்ப்படியாவிடின்,
அந்த மக்களினத்தை வேரோடு பிடுங்கி அழித்துவிடுவேன்,
என்கிறார் ஆண்டவர்.


(தொடர்ச்சி): எரேமியா:அதிகாரங்கள் 13 முதல் 14 வரை