திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எரேமியா/அதிகாரங்கள் 9 முதல் 10 வரை

விக்கிமூலம் இலிருந்து
"அவர் குரல் கொடுக்க வானத்து நீர்த்திரள் முழக்கமிடுகிறது; மண்ணுலகின் எல்லையினின்று மேகங்கள் எழச்செய்கிறார்; மழை பொழியுமாறு மின்னல் வெட்டச் செய்கிறார்; தம் கிடங்குகளினின்று காற்று வீசச் செய்கிறார்." - எரேமியா 10:13.

எரேமியா (The Book of Jeremiah)[தொகு]

அதிகாரங்கள் 9 முதல் 10 வரை

அதிகாரம் 9[தொகு]


1 என் தலை தண்ணீரால் நிறைந்ததாயும்
என் கண்கள் கண்ணீரின் ஊற்றுமாயும் இருக்கக் கூடாதா?
அப்படியானால், என் மகளாம் மக்களுள்
கொலையுண்டோருக்காக
இரவும் பகலும் நான் அழுதிருப்பேனே!

யூதாவின் தீய வாழ்வு[தொகு]


2 பாலை நிலத்தில் பயணியர் விடுதி ஒன்று
எனக்கு இருக்கக் கூடாதா?
நான் மக்களைப் புறக்கணித்து
அவர்களிடமிருந்து சென்று விடலாமே!
ஏனெனில், அவர்கள் யாவரும் விபசாரிகள்,
நம்பிக்கைத் துரோகிகளின் கூட்டம்.


3 பொய்பேசத் தங்கள் நாவை
வில்லைப்போல் அவர்கள் வளைக்கின்றனர்;
உண்மைக்காக நாட்டில் யாரும் நிமிர்ந்து நிற்பதில்லை;
அவர்கள் தீமையிலிருந்து தீமைக்கே
சென்று கொண்டிருக்கிறார்கள்;
என்னையோ அவர்கள் அறிந்து கொள்ளவில்லை,
என்கிறார் ஆண்டவர்.


4 ஒவ்வொருவரும் அடுத்திருப்பவரைப் பொறுத்தவரை
எச்சரிக்கையாய் இருக்கட்டும்.
எந்த உறவினரையும் நம்பவேண்டாம்.
ஏனெனில், எல்லா உறவினரும் ஏமாற்றுவர் என்பது உறுதி;
அடுத்திருப்பவர் அனைவரும் புறணி பேசுகின்றனர்;


5 எல்லாரும் அடுத்திருப்பவரை ஏமாற்றுகின்றனர்;
யாருமே உண்மை பேசுவதில்லை;
பொய் பேசத் தங்கள் நாவைப் பழக்கியுள்ளார்கள்;
குற்றம் புரிந்தே சோர்ந்து போனார்கள்.


6 நீயோ வஞ்சனை செய்வார் நடுவில் வாழ்கின்றாய்;
தங்கள் வஞ்சனையின் காரணமாக
என்னை அவர்கள் அறிந்து கொள்ள மறுக்கின்றார்கள்,
என்கிறார் ஆண்டவர்.


7 எனவே, படைகளின் ஆண்டவர்
இவ்வாறு கூறுகின்றார்:
நான் அவர்களைப் புடமிடுவேன்;
பரிசோதிப்பேன்;
என் மகளாகிய மக்களுக்கு நான்
வேறு என்னதான் செய்யமுடியும்?


8 அவர்கள் நாக்கு கொல்லும் அம்பு;
அது பேசுவது வஞ்சனை;
எல்லாரும் தம் வாயால்
அடுத்திருப்பவர்களோடு சமாதானமாய்ப் பேசுகின்றனர்;
உள்ளத்திலோ அவர்களுக்குக் குழி பறிக்கின்றனர்.


9 இவற்றின் பொருட்டு நான்
அவர்களைத் தண்டியாமல் விடுவேனோ?
இப்படிப்பட்ட ஒரு மக்களினத்தாரை
நான் பழிவாங்காமல் இருப்பேனோ?
என்கிறார் ஆண்டவர்.

சீயோனில் புலம்பல்[தொகு]


10 மலைகளைக் குறித்து அழுது புலம்புவோம்;
பாழ்வெளி மேய்ச்சல் நிலத்தின் பொருட்டு
ஒப்பாரி வைப்போம்;
ஏனெனில் அனைத்தும் தீய்ந்து போயின;
அவை வழியாய்ச் செல்வோர் யாருமில்லை;
கால்நடைகளின் ஒலியும் கேட்கவில்லை;
வானத்துப் பறவைகள் முதல் விலங்குகள் வரை
அனைத்துமே ஓடி மறைந்து விட்டன.


11 எருசலேமை அழித்துக் கற்குவியலாக்குவேன்;
அதனைக் குள்ளநரிகளின் வளையாக்குவேன்;
யூதா நகர்களை யாரும் வாழாப் பாழ்வெளியாக்குவேன்.


12 இதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஞானமுள்ளவர் எவர்?
இதை அறிவிக்குமாறு எவருக்கு ஆண்டவர்
வாய்மொழியாகக் கூறியுள்ளார்?
நாடு அழிந்து ஆள் நடமாட்டம் இல்லாத
பாலை நிலம் போல் தீய்ந்துவிட்டது ஏன்?
13 ஆண்டவர் கூறுவது:
நான் அவர்களுக்குக் கொடுத்த
சட்டத்தைப் புறக்கணித்தார்கள்.
என் சொல்லுக்கு அவர்கள் செவிகொடுக்கவில்லை;
அதன்படி நடக்கவும் இல்லை.
14 மாறாகத் தங்கள் பிடிவாதத்தின்படி நடந்தார்கள்;
தங்கள் மூதாதையர் கற்றுக்கொடுத்தபடி
பாகாலைப் பின்பற்றினார்கள்.
15 ஆதலால் இஸ்ரயேலின் கடவுளாகிய
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
இம்மக்கள் எட்டிக்காய் உண்ணச் செய்வேன்.
நஞ்சு கலந்த நீர் குடிக்கச் செய்வேன்.
16 அவர்களோ அவர்தம் மூதாதையரோ
அறிந்திராத மக்களினங்கள் நடுவில்
அவர்களைச் சிதறடிப்பேன்.
நான் அவர்களை முற்றிலும் அழிக்கும் வரை
அவர்களுக்குப் பின் வாளை அனுப்புவேன்.
போர் எழச் செய்வேன்.


17 படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
இதோ! கேளுங்கள்.
ஒப்பாரி வைக்கும் பெண்களை வரச்சொல்லுங்கள்;
அவர்களுள் தேர்ச்சி பெற்றவர்களுக்குச் சொல்லியனுப்புங்கள்.


18 அவர்கள் விரைந்து வந்து
நம்மைக் குறித்துப் புலம்பட்டும்;
நம் கண்கள் நீர் பொழியட்டும்;
நம் இமைகள் நீர் சொரியட்டும்.


19 ஏனெனில், சீயோனிலிருந்து புலம்பல் கேட்கின்றது:
"நாம் இப்படிப் பாழடைந்து விட்டோமே;
நம் மானமெல்லாம் போயிற்றே;
நாட்டைவிட்டுச் செல்ல வேண்டியதாயிற்றே.
நம் குடியிருப்புகள் தகர்க்கப்பட்டனவே."


20 பெண்டிரே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்;
உங்கள் செவிகள் அவர்தம் வாய்மொழியை ஏற்கட்டும்;
உங்கள் புதல்வியருக்குப் புலம்பக் கற்றுக்கொடுங்கள்.
ஒவ்வொருத்தியும் அடுத்தவளுக்கு
ஒப்பாரி வைக்கக் கற்றுக்கொடுக்கட்டும்.


21 ஏனெனில், சாவு பலகணிகள் வழியாய் வந்துவிட்டது;
நம் அரண்களுக்குள்ளும் நுழைந்து விட்டது;
தெருக்களில் சிறுவர்களையும்
பொதுவிடங்களில் இளைஞர்களையும் வீழ்த்திவிட்டது.


22 ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார் எனச் சொல்;
மனிதரின் பிணங்கள் சாணம்போல்
வயல்வெளிகளில் விழுந்து கிடக்கும்;
அறுவடை செய்வோனுக்குப் பின்னால் விடப்பட்ட
அரிகளைப் போலக் கிடக்கும்.

ஆண்டவரை அறிதலே பெருமை[தொகு]


23 ஆண்டவர் கூறுவது இதுவே:
ஞானி தம் ஞானத்தைக் குறித்துப்
பெருமை பாராட்ட வேண்டாம்.
வலியவர் தம் வலிமையைக் குறித்துப்
பெருமை பாராட்ட வேண்டாம்.
செல்வர் தம் செல்வத்தைக் குறித்துப்
பெருமை பாராட்ட வேண்டாம்.
24 பெருமை பாராட்ட விரும்புபவர்,
'நானே ஆண்டவர்' என்பதை அறிந்து புரிந்து கொள்வதிலும்,
பேரன்போடும் நீதியோடும் நேர்மையோடும்
உலகில் நான் செயலாற்றுகிறேன் என்பதிலும்
பெருமை பாராட்டுவாராக!
ஏனெனில் இவற்றில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,
என்கிறார் ஆண்டவர். [*]
25 இதோ! நாள்கள் வருகின்றன,
என்கிறார் ஆண்டவர்.
அப்போது நான் உடலில் மட்டும் விருத்தசேதனம்
செய்திருப்போர் அனைவரையும் தண்டிப்பேன்.
26 எகிப்து, யூதா, ஏதோம்,
அம்மோன், மோவாபு ஆகிய நாடுகளையும்
முன்தலையை மழித்துக் கொள்ளும்
பாலை நிலத்தாரையும் தண்டிப்பேன்;
ஏனெனில் வேற்றினத்தார் யாவரும்
விருத்தசேதனம் செய்து கொள்ளாதவர்கள்;
இஸ்ரயேல் வீட்டார் யாவரும்
இதயத்தில் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்கள்.


குறிப்பு

[*] 9:24 = 1 கொரி 1:31; 2 கொரி 10:17.


அதிகாரம் 10[தொகு]

சிலைகளும் உண்மைக் கடவுளும்[தொகு]


1 இஸ்ரயேல் வீட்டாரே!
ஆண்டவர் உங்களுக்குக் கூறும் சொல்லைக் கேளுங்கள்.


2 ஆண்டவர் கூறுவது இதுவே:
வேற்றினங்களின் வழியைக் கற்றுக் கொள்ளாதீர்;
வானத்தில் தோன்றும் அடையாளங்களைக்
கண்டு கலங்காதீர்;
வேற்றினத்தாரே அவற்றால் கலக்கமுறுவர்.


3 வேற்றினங்கள் வழிபடும் சிலைகள் வீணானவை;
அவை காட்டிலிருந்து வெட்டப்பட்ட மரத்தாலானவை;
கைவினைஞர் உளியால் செய்த வேலைப்பாடுகள்.


4 அவை பொன், வெள்ளியால் அணி செய்யப்பட்டவை.
அசையாதபடி ஆணி, சுத்தியல் கொண்டு பொருத்தப் பெற்றவை.


5 அவை வெள்ளரித் தோட்டத்துப் பொம்மை போன்றவை;
அவற்றால் பேச முடியாது;
அவற்றைத் தூக்கிக்கொண்டுதான் செல்லவேண்டும்.
அவற்றால் நடக்கவும் முடியாது.
அவை நன்மையும் செய்யா; தீமையும் செய்யா;
அவற்றைக் கண்டு அஞ்ச வேண்டாம்.


6 ஆண்டவரே! உமக்கு நிகர் யாருமிலர்;
நீர் பெரியவர்; உமது பெயர் ஆற்றல் மிக்கது.


7 மக்களினங்களின் மன்னரே!
உமக்கு அஞ்சாதவர் யார்?
அரசுரிமை உமதே;
வேற்றினத்தாரின் ஞானிகள் அனைவரிலும்
அவர்களின் அரசுகள் அனைத்திலும் உமக்கு நிகர் யாருமிலர். [*]


8 அவர்கள் மூடர்களும் முட்டாள்களுமாய் உள்ளனர்;
அவர்களது போதனையின் பொருளாம் சிலைகள் மரக்கட்டைகளே.


9 தர்சீசிலிருந்து வெள்ளித் தகடுகளும்,
ஊபாசிலிருந்து பொன்னும் வந்து சேர்கின்றன.
அவை கைவினைஞரின் வேலைப்பாடுகள்;
பொற்கொல்லனின் கைத்திறனால் ஆனவை;
ஊதா, கருஞ்சிவப்பு உடைகளைக் கொண்டவை.
அவை எல்லாமே தேர்ச்சிபெற்ற கைவினைஞரின் வேலைப்பாடுகள்.


10 ஆனால், ஆண்டவரே உண்மையான கடவுள்!
அவரே வாழும் கடவுள்! என்றும் ஆளும் அரசர்!
அவர் வெஞ்சினம் கண்டு நிலம் நடுங்கும்;
அவர் கடுங்கோபத்தை வேற்றினத்தார் தாங்கிக்கொள்ளார்.


11 நீ அவர்களுக்கு இவ்வாறு கூறு:
விண்ணையும் மண்ணையும் உருவாக்காத அந்தத் தெய்வங்கள்
மண்ணின் மீதும் விண்ணின் கீழும் இல்லாதொழியும்.


12 அவரே தம் ஆற்றலால் மண்ணுலகைப் படைத்தார்;
தம் ஞானத்தால் பூவுலகை நிலை நாட்டினார்;
தம் கூர்மதியால் விண்ணுலகை விரித்தார்.


13 அவர் குரல் கொடுக்க
வானத்து நீர்த்திரள் முழக்கமிடுகிறது;
மண்ணுலகின் எல்லையினின்று மேகங்கள் எழச்செய்கிறார்;
மழை பொழியுமாறு மின்னல் வெட்டச் செய்கிறார்;
தம் கிடங்குகளினின்று காற்று வீசச் செய்கிறார்.


14 மனிதர் யாவரும் மூடர்கள், அறிவிலிகள்;
கொல்லர் எல்லாரும் தம் சிலைகளால் இகழ்ச்சியுற்றனர்;
அவர்களின் வார்ப்புப் படிமங்கள் பொய்யானவை;
அவற்றுக்கு உயிர் மூச்சே இல்லை.


15 அவை பயனற்றவை;
ஏளனத்துக்குரிய வேலைப்பாடுகள்;
தம் தண்டனையின் காலத்தில் அவை அழிந்துவிடும்.


16 யாக்கோபின் பங்காய் இருப்பவரோ
இவற்றைப் போன்றவர் அல்லர்;
அவரே அனைத்தையும் உருவாக்கியவர்;
அவரது உரிமைச் சொத்தாகிய இஸ்ரயேல் இனத்தை
உருவாக்கியவரும் அவரே;
படைகளின் ஆண்டவர் என்பது அவர் பெயராகும்.

நடுகடத்தப்படவிருத்தல்[தொகு]


17 முற்றுகையிடப்பட்டவனே,
தலையில் கிடக்கும் உன் பொருள்களை மூட்டையாகக் கட்டு.


18 ஏனெனில் ஆண்டவர் கூறுவது இதுவே:
நாட்டில் வாழ்வோரை இத்தருணத்தில் வீசி எறிவேன்;
அவர்கள் என்னைக் கண்டுணருமாறு
அவர்களுக்குத் துன்பம் வருவிப்பேன்.


19 ஐயோ நான் நொறுங்குண்டேன்;
என் காயம் கொடியது;
நானோ "உண்மையில் இது ஒரு நோய்;
நான் இதைத் தாங்கியே ஆக வேண்டும்"
என்று எண்ணிக்கொண்டேன்.


20 என் கூடாரம் அழிக்கப்பட்டது;
அதன் கயிறுகளெல்லாம் அறுத்தெறியப்பட்டன;
என் மக்கள் என்னைவிட்டுச் சென்றுவிட்டனர்;
அவர்கள் இங்கு இல்லை;
என் கூடாரத்தை மீண்டும் எழுப்புவார் எவருமிலர்;
அதன் திரைகளைக் கட்டுவார் யாருமிலர்.


21 ஏனெனில், மேய்ப்பவர்கள் மூடர்களாய் இருந்தனர்;
அவர்கள் ஆண்டவரைத் தேடவில்லை;
எனவே, அவர்கள் வாழ்வு வளம் பெறவில்லை;
அவர்களின் மந்தைகள் எல்லாம் சிதறிப்போயின.


22 குரல் ஒலி ஒன்று கேட்கின்றது;
அது அண்மையில் ஒலிக்கின்றது;
வடக்கு நாட்டிலிருந்து பெருங் கொந்தளிப்பு எழுகின்றது;
யூதாவின் நகர்கள் பாழாகிக்
குள்ள நரிகளின் வளையாகப் போகின்றன.


23 ஆண்டவரே! நான் அறிவேன்;
மனிதர் செல்ல வேண்டிய வழி
அவர்களின் கையில் இல்லை;
நடப்பவன் காலடிப் போக்கும்
அவர்களின் அதிகாரத்தில் இல்லை.


24 ஆண்டவரே! உம் சினத்திற்கு ஏற்ப அன்று,
உம் நீதிக்கு ஏற்ப என்னைத் திருத்தியருளும்.
இல்லையெனில், நான் ஒன்றுமில்லாமை ஆகிவிடுவேன்.


25 உம்மை அறியாத வேற்றினத்தார் மேலும்,
உம் பெயரைச் சொல்லி மன்றாடாத குடும்பத்தார் மேலும்
உன் சீற்றத்தைக் காட்டியருளும்.
ஏனெனில், அவர்கள் யாக்கோபை விழுங்கிவிட்டார்கள்;
விழுங்கி முற்றிலும் அழித்து விட்டார்கள்;
அவர் குடியிருப்பையும் பாழாக்கிவிட்டார்கள்.


குறிப்பு

[*] 10:7 = திவெ 15:4.


(தொடர்ச்சி): எரேமியா:அதிகாரங்கள் 11 முதல் 12 வரை