திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எரேமியா/அதிகாரங்கள் 47 முதல் 48 வரை

விக்கிமூலம் இலிருந்து
"என் இதயம் புல்லாங்குழல் போன்று மோவாபுக்காகப் புலம்புகிறது; என் இதயம் புல்லாங்குழல் போன்று சீர்செரேசின் மனிதருக்காகச் சோகப் பண் இசைக்கிறது" - எரேமியா 48:36

எரேமியா (The Book of Jeremiah)[தொகு]

அதிகாரங்கள் 47 முதல் 48 வரை

அதிகாரம் 47[தொகு]

பெலிஸ்தியருக்கு எதிராக[தொகு]


1 பார்வோன் காசாவைத் தாக்கும் முன்னர்
பெலிஸ்தியரைக் குறித்து,
இறைவாக்கினர் எரேமியாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு:


2 ஆண்டவர் கூறுவது இதுவே:
வடக்கினின்று வெள்ளம் பொங்கி எழுகின்றது;
கரை புரண்டோடும் காட்டாறென அது மாறுகின்றது.
நாட்டையும் அதில் உள்ள அனைத்தையும்
நகரையும் அதன் குடிகளையும் மூழ்கடிக்கும்.
மனிதர் கூக்குரலிடுவர்;
நாட்டு மக்கள் அனைவரும் ஓலமிடுவர்.


3 போர்க் குதிரைகளின் குளம்பொலியையும்
தேர்களின் இரைச்சலையும்
அவற்றின் உருளை ஓசையையும் கேட்டு,
தந்தையர் கை சோர்ந்தமையால்
தம் குழந்தைகளையும் திரும்பிப் பார்க்கமாட்டார்கள்.


4 பெலிஸ்தியர் எல்லாரும் அழியும் நாள்,
தீர், சீதோனும் அவற்றின் எஞ்சியுள்ள
துணையாளர் எல்லாரும் ஒழியும் நாள் நெருங்கிவிட்டது.
ஆண்டவர் பெலிஸ்தியரையும்
கப்தோர் தீவின் எஞ்சியோரையும் அழிக்கவிருக்கிறார்.


5 காசா மொட்டையடிக்கப்படும்;
அஸ்கலோன் அழிக்கப்படும்;
அனாக்கியருள் [1] எஞ்சியிருப்போரே,
எத்துணைக் காலம் நீங்கள் உங்களையே காயப்படுத்திக் கொள்வீர்கள்?


6 ஓ, ஆண்டவரின் வாளே!
என்று நீ ஓய்ந்திருப்பாய்?
நீ உன் உறைக்குள் செல்!
அங்கே ஓய்வெடு, அமைதியாய் இரு.


7 ஆண்டவர் அதற்குக் கட்டளை கொடுத்திருக்கிறார்;
அது [2] எப்படி ஓய்ந்திருக்க முடியும்?
அஸ்கலோனுக்கும் கடற்கரைப் பகுதிக்கும் எதிராக
அவர் அதற்குப் பணி குறித்து வைத்துள்ளாரே! [3]


குறிப்புகள்

[1] 47:5 - 'அவர்களது பள்ளத்தாக்கு' என்பது எபிரேய பாடம்.
[2] 47:7 - 'நீ' என்பது எபிரேய பாடம்.
[3] 47:1-7 = எசா 14:29-31; எசே 25:15-17;
யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செப் 2:4-7; செக் 9:5-7.


அதிகாரம் 48[தொகு]

மோவாபுக்கு எதிராக[தொகு]


1 மோவாபைக் குறித்து, இஸ்ரயேலின் கடவுளாகிய
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
நெபோவுக்கு ஐயோ கேடு!
அது பாழடைந்து கிடக்கிறது.
கிரியத்தாயிம் அவமானத்துக்கு உள்ளாகிக்
கைப்பற்றப்பட்டுள்ளது.
அதன் கோட்டை இழிவுபடுத்தப்பட்டு,
தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.


2 போவாபின் புகழ் மங்கிவிட்டது;
எஸ்போனில் அதற்குத் தீங்கிழைக்கத் திட்டமிடப்படுகிறது:
'வாருங்கள்; அதனை ஒரு நாடாய் இல்லாதவாறு சிதைப்போம்'.
மத்மேன்! நீயும் அழிக்கப்படுவாய்;
வாள் உன்னைத் துரத்தி வரும்.


3 ஓரொனாயிமினின்று கூக்குரல் ஒலிக்கிறது:
'கொடுமை, பேரழிவு' எனக் கேட்கிறது.


4 மோவாபு அழிக்கப்பட்டுவிட்டது;
அதன் குழந்தைகளின் அழுகுரல் கேட்கின்றது.


5 லூகித்துக்கு ஏறிச்செல்லும் வழியில்
அவர்கள் அழுதுகொண்டே போகிறார்கள்;
ஓரொனாயிமுக்கு இறங்கிச் செல்லும் வழியில்
அழிவின் புலம்பல் [1] கேட்கிறது.


6 தப்பியோடுங்கள்,
உங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்;
பாலை நிலத்துக் காட்டுக்கழுதைபோல் மாறுங்கள்.


7 உன் கோட்டைகளையும் [2]
கருவூலங்களையும் நம்பியிருந்தாய்;
நீயும் கைப்பற்றப்படுவாய்.
கெமோசு தெய்வம் நாடுகடத்தப்படும்;
அதன் அர்ச்சகர்களும் தலைவர்களும் அதனோடு செல்வார்கள்.


8 'அழிப்போன்' ஒவ்வொரு நகருக்கும் வருவான்.
எந்த நகரும் தப்பாது.
ஆண்டவர் சொல்லியிருப்பது போல்
பள்ளத்தாக்குகள் பாழாகும்;
சமவெளிகள் அழிக்கப்படும்.


9 மோவாபுக்கு இறக்கைகள் கொடுங்கள்;
அது பறந்தோடட்டும்;
அதன் நகர்கள் பாழாக்கப்படும்;
அவை குடியிருப்பார் அற்றுப் போகும்.


10 ஆண்டவர்தம் அலுவலை
அக்கறையின்றிச் செய்பவன் சபிக்கப்பட்டவன்;
குருதி சிந்தாமல் தன் வாளை வைத்திருப்பவனும்
சபிக்கப்பட்டவனே.


11 மோவாபு இளமைமுதல் அமைதியில் வாழ்ந்துவருகிறது;
மண்டியை அடியில் கொண்ட
பழந் திராட்சை இரசம் அது.
அது கலத்தினின்று கலத்திற்கு மாற்றப்படாதது;
நாடுகடத்தப்படாதது;
அதன் சுவை குன்றவில்லை;
அதன் நறுமணம் மாறவில்லை.


12 எனவே நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர்.
அப்பொழுது நான் 'கவிழ்ப்போரை' அனுப்புவேன்.
அவர்கள் அதைக் கவிழ்ப்பார்கள்;
அதன் கலங்களை வெறுமையாக்குவார்கள்;
அதன் சாடிகளை நொறுக்குவார்கள்.
13 இஸ்ரயேல் வீட்டார்
தாம் நம்பிக்கை வைத்திருந்த பெத்தேலைக் குறித்து
இகழ்ச்சியுற்றது போல,
மோவாபு கெமோசைக் குறித்து இகழ்ச்சியுறும்.


14 'நாங்கள் படைவீரர்கள்; போரில் வல்லவர்கள்'
என்று நீங்கள் எப்படிச் சொல்லக்கூடும்?


15 'மோவாபையும் அதன் நகர்களையும்
அழிப்பவன் வந்துவிட்டான்;
அதன் சிறந்த இளைஞர்கள்
கொலைக் களத்திற்குப் போய் விட்டார்கள்,'
என்கிறார் படைகளின் ஆண்டவர்
என்னும் பெயருடைய மன்னர்.


16 மோவாபின் அழிவு அண்மையில் உள்ளது;
தீங்கு அதை நோக்கி விரைந்து வருகிறது.


17 அதைச் சுற்றியிருப்போரே,
நீங்கள் அனைவரும் அதற்காகத் துக்கம் கொண்டாடுங்கள்.
அதன் புகழை அறிந்திருப்போரே,
நீங்கள் அனைவரும்
'வலிமைமிக்க செங்கோல் முறிந்தது எங்ஙனம்?
மேன்மைமிக்க கோல் உடைந்தது எவ்வாறு?'
என்று கேளுங்கள்.


18 மகள் தீபோனின் குடிமகனே,
உன் மேன்மையை விட்டு இறங்கி வா;
வறண்ட நிலத்தில் வந்து அமர்ந்துகொள்.
மோவாபை அழிப்பவன் உனக்கு எதிராக எழுந்துவிட்டான்;
உன் கோட்டைகளை அவன் தகர்த்து விட்டான்.


19 அரோயேரின் குடிமகனே!
நீ சாலை ஓரமாய் நின்று கவனி;
ஓட்டம்பிடிக்கிறவனையும்
தப்பி ஓடுகிறவளையும் நோக்கி,
'என்ன நடந்தது?' என்று கேள்.


20 மோவாபு அழிக்கப்பட்டுச் சிறுமைக்குள்ளானது;
அழுது புலம்புங்கள்; கூக்குரலிடுங்கள்;
மோவாபு பாழடைந்துவிட்டது என
அர்னோனில் அறிவியுங்கள்.


21 சமவெளி நாடுகள்மீது
தண்டனைத் தீர்ப்பு வந்துவிட்டது;
ஓலோன், யாகுசா, மேப்பாத்து,
22 தீபோன், நெபோ, பெத்திப்லத்தாயிம்,
23 கிர்யத்தாயிம், பெத்-காமூல், பெத்-மெகோன்,
24 கெரியோத்து, போஸ்ரா மீதும்
அருகிலும் தொலைவிலும் உள்ள
மோவாபு நாட்டு நகர்கள் மீதும் வந்து விட்டது.
25 மோவாபின் கொம்பு முறிந்து விட்டது;
அதன் கையும் ஒடிந்து போயிற்று, என்கிறார் ஆண்டவர்.


26 மோவாபுக்குப் போதை வெறி ஏற்றுங்கள்;
ஏனெனில் அது ஆண்டவருக்கு எதிராகப்
பெருமையடித்துக் கொண்டது.
அது, தான் வாந்தி எடுத்ததில் கிடந்து புரளும்;
ஏளனத்துக்கு ஆளாகும்.
27 இஸ்ரயேல் உன் நகைப்புக்கு ஆளாகவில்லையா?
அவனைப் பற்றி நீ பேசும்போதெல்லாம்
உன் தலையை ஆட்டிப் பழித்தாயே?
அவன் என்ன, திருடர் கூட்டத்தைச் சேர்ந்தவனா?


28 மோவாபின் குடிமக்களே,
நகர்களை விட்டு வெளியேறுங்கள்;
பாறைப் பகுதியில் குடியேறுங்கள்.
பாறையின் இடுக்குகளில் கூடுகட்டி வாழும்
புறாவைப் போல் இருங்கள்.


29 மோவாபின் செருக்கைப் பற்றி
நாங்கள் கேள்வியுற்றோம்;
பெரிதே அதன் இறுமாப்பு!
அதன் ஆணவம், செருக்கு, அகங்காரம்,
அகந்தை பற்றி எல்லாம் கேள்வியுற்றோம்.


30 அதன் திமிரை நான் அறிவேன், என்கிறார் ஆண்டவர்.
அதன் தற்புகழ்ச்சி எல்லாம் பொய்;
அதன் செயல்கள் யாவும் பொய்.


31 மோவாபை முன்னிட்டு நான் ஓலமிடுவேன்;
மோவாபு முழுவதையும் குறித்து அலறியழுவேன்;
கீர்கெரேசின் மனிதர் பொருட்டுப் புலம்புவேன்.


32 சிப்மாவின் திராட்சைக் கொடியே,
யாசேருக்காக அழுவதைவிட அதிகமாய் உனக்காக அழுவேன்.
உன் கொடிகள் கடல் வரை படர்ந்துள்ளன;
யாசேர் கடலை எட்டியுள்ளன.
கோடைப் பழங்கள்மீதும் திராட்சைப் பழங்கள்மீதும்
'அழிப்போன்' பாய்ந்து வந்தான்.


33 செழிப்பான மோவாபு நாட்டினின்று மகிழ்ச்சியும்,
அக்களிப்பும் அகற்றப்பட்டுவிட்டன;
திராட்சை ஆலைகளில் இரசம் வற்றிப்போகச் செய்துள்ளேன்;
மகிழ்ச்சியோடு பழம் மிதிப்பவன் எவனும் இலலை;
மகிழ்ச்சியின் ஆரவாரம் அங்கு எழுவதில்லை.


34 எஸ்போனும் எலயாலேயும் கூக்குரலிடுகின்றன.
யாகாசு வரை அவற்றின் அழுகுரல் கேட்கிறது;
சோவாரிலிருந்து ஒரோனாயிம்,
எக்லாத்து செலிசியாவரை அது ஒலிக்கிறது.
ஏனெனில், நிம்ரிம் தண்ணீரும் வற்றிப்போனது.
35 மோவாபின் தொழுகைமேடுகளில்
தன் தெய்வங்களுக்குப் பலி செலுத்தித்
தூபம் காட்டுபவனை நான் அழித்து விடுவேன்,
என்கிறார் ஆண்டவர்.
36 எனவே, என் இதயம் புல்லாங்குழல் போன்று
மோவாபுக்காகப் புலம்புகிறது;
என் இதயம் புல்லாங்குழல் போன்று
சீர்செரேசின் மனிதருக்காகச் சோகப் பண் இசைக்கிறது.
ஏனெனில் அவர்கள் சேர்த்துவைத்திருந்த செல்வங்கள்
அழிந்து விட்டன.


37 அவர்கள் அனைவருடைய தலைகளும்
மழிக்கப்பட்டுள்ளன;
தாடிகள் அகற்றப்பட்டுள்ளன.
எல்லாக் கைகளிலும் வெட்டுக்காயங்கள் உள்ளன.
இடைகளில் சாக்கு உடை காணப்படுகிறது.
38 மோவாபின் வீட்டு மேல்தளங்கள் எல்லாவற்றிலும்,
அதன் தெருக்களிலும் ஒரே புலம்பல்;
ஏனெனில் யாரும் பொருட்படுத்தாத பாத்திரத்தைப் போன்று
மோவாபை நான் உடைத்தெறிந்தேன், என்கிறார் ஆண்டவர்.
39 இப்படி அது நொறுக்கப்பட்டுக் கிடக்கின்றதே!
இப்படி அவர்கள் புலம்புகின்றார்களே!
இப்படி மோவாபு வெட்கித் தலைகுனிந்து நிற்கின்றதே!
மோவாபு தன்னைச் சுற்றியிருப்போர் எல்லார் முன்னும்
ஏளனத்துக்கும் பேரச்சத்திற்கும் உள்ளாயிற்று.


40 ஆண்டவர் கூறுவது இதுவே:
ஒருவன் கழுகைப்போல் பாய்ந்து வருவான்;
மோவாபின்மீது தன் இறக்கைகளை விரிப்பான்.


41 நகர்கள் பிடிபடும்;
கோட்டைகள் கைப்பற்றப்படும்.
அந்நாளில் மோவாபிய படைவீரர்களின் இதயம்
பேறுகாலப் பெண்ணின் இதயத்தைப்போல் துடிக்கும்.


42 மோவாபு அழிக்கப்படும்;
இனி அது ஒரு மக்களினமாய் இராது.
அது ஆண்டவருக்கு எதிராகப்
பெருமை அடித்துக் கொண்டது.


43 மோவாபின் மகனே,
திகிலும் படுகுழியும் கண்ணியுமே
உன்முன் இருக்கின்றன,
என்கிறார் ஆண்டவர்.


44 திகிலுக்கு அஞ்சி ஓடுபவன் படுகுழியில் விழுவான்;
படுகுழியினின்று வெளியே வருபவன்
கண்ணியில் மாட்டிக்கொள்வான்.
அவர்களுடைய தண்டனைக் காலத்தில்
இவற்றை மோவாபின்மீது வரவழைப்பேன்,
என்கிறார் ஆண்டவர்.


45 தப்பியோடுவோர் எஸ்போனின் நிழலில்
வலுவிழந்து நிற்கின்றனர்;
எஸ்போனிலிருந்து நெருப்பு கிளம்பிற்று;
சீகோனிலிருந்து தீப்பிழம்பு புறப்பட்டது;
மோவாபின் நெற்றியை அது விழுங்கிற்று;
கலக்காரரின் உச்சந்தலையை அது பொசுக்கிற்று.


46 மோவாபே, உனக்கு ஐயோ கேடு!
கெமோசின் மக்கள் அழிந்துபோயினர்;
உன் புதல்வர் நாடு கடத்தப்பட்டனர்;
உன் புதல்வியரும் நாடுகடத்தப்பட்டனர்.


47 ஆயினும், இறுதி நாள்களில்
அடிமைத்தனத்தினின்று மோவாபை
நான் திரும்பக் கொணர்வேன்,
என்கிறார் ஆண்டவர்.
மோவாபின் மீதான தண்டனைத் தீர்ப்பு
இத்துடன் முற்றிற்று. [3]


குறிப்புகள்

[1] 48:5 - 'புலம்பலின் துயரம்' என்பது எபிரேய பாடம்.
[2] 48:7 - 'செயல்கள்' என்பது எபிரேய பாடம்.
[3] 48:1-47 = எசா 15:1-16:14; 25:10-12;
எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11.



(தொடர்ச்சி): எரேமியா:அதிகாரங்கள் 49 முதல் 50 வரை