திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எரேமியா/அதிகாரங்கள் 49 முதல் 50 வரை

விக்கிமூலம் இலிருந்து
"நீ கழுகைப் போல் உன் கூட்டை உயரத்தில் கட்டினாலும், நான் உன்னை அங்கிருந்து கீழே தள்ளிவிடுவேன், என்கிறார் ஆண்டவர்." - எரேமியா 49:16

எரேமியா (The Book of Jeremiah)[தொகு]

அதிகாரங்கள் 49 முதல் 50 வரை

அதிகாரம் 49[தொகு]

அம்மோனுக்கு எதிராக[தொகு]


1 அம்மோனியரைக் குறித்து,
ஆண்டவர் கூறுவது இதுவே:
இஸ்ரயேலுக்குப் புதல்வரே இல்லையா?
அதற்கு வழிமரபே கிடையாதா?
மில்க்கோம் [1] காத்தைக் கைப்பற்றியது ஏன்?
அவன் மக்கள் அதன் நகர்களில் குடியிருப்பது ஏன்?


2 இதோ, நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர்.
அம்மோனியரின் இராபாவுக்கு எதிராகப்
போர்முரசு ஒலிக்கச் செய்வேன்.
அது பாழடைந்த குவியல் ஆகும்;
அதன் ஊர்கள் [2] தீக்கிரையாகும்;
தன்னைக் கைப்பற்றியோரை
இஸ்ரயேல் கைப்பற்றிக் கொள்ளும்,
என்கிறார் ஆண்டவர்.


3 எஸ்போனே, புலம்பியழு;
ஆயி பாழடைந்துவிட்டது.
இராபாவின் புதல்வியரே ஓலமிடுங்கள்;
சாக்கு உடை உடுத்திக்கொள்ளுங்கள்;
ஒப்பாரி வையுங்கள்;
மதில்களுக்கிடையே அங்குமிங்கும் ஓடுங்கள்;
மில்க்கோம் நாடுகடத்தப்படுவான்.
அவன் அர்ச்சகர்களும் தலைவர்களும் அவனோடு செல்வார்கள்.


4 பற்றுறுதியற்ற மகளே,
உன் பள்ளத்தாக்குகள் பற்றி,
உன் செழிப்பான பள்ளத்தாக்குகள் பற்றி,
பெருமையடிப்பானேன்?
உன் செல்வங்களில் நம்பிக்கை வைக்கிறாய்;
'எனக்கு எதிராய் எவன் வருவான்?' எனச்
சொல்லிக்கொள்கின்றாய்.


5 உன்னைச் சுற்றியிருப்போர் அனைவரிடமிருந்தும்
உனக்குத் திகில் வருவிப்பேன்,
என்கிறார் படைகளின் ஆண்டவராகிய தலைவர்.
நீங்கள் எல்லாரும் தலை தெறிக்க ஓடுமாறு
விரட்டியடிக்கப்படுவீர்கள்;
தப்பியோடுவோரை ஒன்று சேர்க்க எவரும் இரார்.


6 பின்னர், அம்மோனியரின் சொத்து,
செல்வங்களைத் திரும்பக் கொடுப்பேன்,
என்கிறார் ஆண்டவர். [3]

ஏதோமுக்கு எதிராக[தொகு]


7 ஏதோமைக் குறித்து,
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
தேமானில் ஞானம் அற்றுப்போயிற்றா?
மதி நுட்பமுடையோரிடமிருந்து அறிவுரை ஒழிந்துபோயிற்றா?
அவர்களின் ஞானம் மறைந்து போயிற்றா?


8 தெதோன் குடிமக்களே, திரும்புங்கள்,
தப்பியோடுங்கள்;
பள்ளங்களில் பதுங்கிக்கொள்ளுங்கள்;
நான் ஏசாவைத் தண்டிக்கும் அவனது காலத்தில்
அழிவை அவன்மீது கொண்டுவருவேன்.


9 திராட்சைப் பழம் பறிப்போர் உன்னிடம் வந்தால்,
விடுபட்ட பழங்கள் எஞ்சியிராவோ?
இரவில் திருடர் வருவாராயின்,
தேவைக்குமேல் திருடமாட்டார் அன்றோ?


10 நானோ ஏசாவை வெறுமையாக்கிவிட்டேன்;
அவனுடைய பதுங்கிடங்களை வெளிப்படுத்திவிட்டேன்.
இனி அவனால் மறைந்திருக்க முடியாது.
அவன் வழிமரபினர், சகோதரர்,
அடுத்திருப்பார் அழிக்கப்படுவர்;
அவன் முற்றிலும் அழிந்து போவான்.


11 அனாதைகளைப்பற்றிக் கவலை கொள்ளாதே.
நான் அவர்களை வாழவைப்பேன்.
உன் விதவைகள் என்னில் நம்பிக்கை வைக்கட்டும்.


12 ஏனெனில் ஆண்டவர் கூறுவது இதுவே:
நியாயப்படி துன்பக்கலத்தில் குடிக்கத்
தேவையில்லாதவர்களே குடிக்கவேண்டியிருந்தது என்றால்,
நீ எவ்வாறு தண்டனைக்குத் தப்பமுடியும்?
இல்லை, நீ தண்டனை பெறாது போகமாட்டாய்;
நீ துன்பக்கலத்தில் குடித்தே தீருவாய்.
13 ஏனெனில் ஆண்டவர் கூறுகிறார்:
என்மேல் ஆணை!
பேரச்சம், கண்டனம், அழிவு,
பழிப்பு ஆகியவற்றுக்குப் போஸ்ரா ஆளாகும்;
அதன் நகர்கள் அனைத்தும் என்றென்றும் பாழாய்க் கிடக்கும்.


14 நான் ஆண்டவரிடமிருந்து ஒரு செய்தி கேட்டேன்.
'ஒன்றுகூடுங்கள், அதனை எதிர்க்க வாருங்கள்,
போருக்குப் புறப்படுங்கள்' என்று சொல்லுமாறு,
மக்களினத்தார்க்கு ஒரு தூதன் அனுப்பப்பட்டுள்ளான்.


15 பார்! மக்களினத்தாருள் உன்னைச் சிறியதாய் ஆக்குவேன்;
மாந்தர்தம் இகழ்ச்சிக்கு நீ ஆளாவாய்.


16 பாறை இடுக்குகளில் வாழ்பவனே,
குன்றின் உச்சியைப் பிடித்திருப்பவனே,
நீ விளைவித்த அச்சமும்
உன் உள்ளத்தின் இறுமாப்பும்
உன்னை ஏமாற்றிவிட்டன;
நீ கழுகைப் போல் உன் கூட்டை உயரத்தில் கட்டினாலும்,
நான் உன்னை அங்கிருந்து கீழே தள்ளிவிடுவேன்,
என்கிறார் ஆண்டவர்.


17 ஏதோம் பேரச்சம் தரக்கூடியதாய் மாறும்.
அதன் வழியே போகிறவன் எவனும் அதிர்ச்சியடைவான்;
அதன் அழிவு கண்டு ஏளனம் செய்வான்.
18 சோதோம், கொமோராவும்
அவற்றின் அண்டை நகர்களும்
வீழ்த்தப்பட்டபொழுது நிகழ்ந்ததுபோல்,
ஏதோமில் ஒருவனும் குடியிருக்கமாட்டான்;
எவனும் தங்கமாட்டான், என்கிறார் ஆண்டவர். [4]
19 யோர்தானை அடுத்த காட்டினின்று
சிங்கம் செழிப்பான மேய்ச்சல் நிலத்திற்கு வருவது போல்,
நான் அவர்களை அங்கிருந்து திடீரென விரட்டியடிப்பேன்;
நான் தேர்ந்துகொள்பவனை
அவனுக்குத் தலைவன் ஆக்குவேன்.
ஏனெனில் எனக்கு நிகர் யார்?
என்னைத் தட்டிக் கேட்பவன் யார்?
எந்தத் தலைவன் என்னை எதிர்த்து நிற்பான்?
20 எனவே ஏதோமுக்கு எதிராக
ஆண்டவர் தீட்டியுள்ள திட்டத்திற்கும்,
தேமானின் குடிகளுக்கு எதிராக
அவர் எடுத்துள்ள முடிவுகளுக்கும் செவிகொடுங்கள்;
மந்தையில் மிகச் சிறிய ஆடுகளும்
திண்ணமாய் இழுத்துச் செல்லப்படும்;
ஆட்டுப்பட்டி அதைக் கண்டு
உறுதியாய்த் திகைப்படையும்.
21 அவர்களுடைய வீழ்ச்சியின் ஒலியால்
நிலம் நடுங்கும்;
அவர்களின் கூக்குரல் செங்கடல் வரை கேட்கும்.
22 இதோ! கழுகைப் போல் ஒருவன்
வானளாவப் பறந்து, கீழ்நோக்கிப் பாய்வான்;
போஸ்ரா மேல் தன் இறக்கைகளை விரிப்பான்.
அந்நாளில் ஏதோமின் படைவீர்களுடைய இதயம்
பேறுகாலப் பெண்ணின் இதயத்தைப்போல் துடிக்கும். [5]

தமஸ்குவுக்கு எதிராக[தொகு]


23 தமஸ்கு குறித்து:
ஆமாத்தும் அர்ப்பாதும் கலக்கம் அடைந்துள்ளன;
கெட்ட செய்தியை அவை கேள்வியுற்றன;
அவை அச்சத்தால் நடுங்குகின்றன;
கடலைப்போல் தத்தளிக்கின்றன;
அவற்றுக்கு அமைதியே கிடையாது.


24 தமஸ்கு தளர்ந்துவிட்டது;
தப்பியோடப் பார்க்கின்றது;
அதனைக் கிலி பிடித்துக்கொண்டது;
வேதனை, துயரத்தின் பிடியில்
பேறுகாலப் பெண் தவிப்பதுபோல் அதுவும் தவிக்கின்றது.


25 புகழ் பெற்ற நகர் -
மகிழ்ச்சி பொங்கும் நகர் -
இப்படிக் கைவிடப்பட்டுக் கிடக்கிறதே!


26 அதன் இளைஞர்கள் தெருக்களில் வீழ்ந்து மடிவார்கள்.
அதன் படைவீரர்கள் அனைவரும்
அந்நாளில் அழிக்கப்படுவார்கள்,
என்கிறார் படைகளின் ஆண்டவர்.


27 தமஸ்குவின் மதில்களில் தீவைப்பேன்;
பென்அதாதின் கோட்டைகளை அது சுட்டெரிக்கும். [6]

கேதார், ஆட்சோர் அரசுகளுக்கு எதிராக[தொகு]


28 பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் வீழ்த்திய
கேதார், ஆட்சோர் அரசுகள் பற்றி,
ஆண்டவர் கூறுவது இதுவே:
புறப்படுங்கள், கேதாரை எதிர்த்துச் செல்லுங்கள்;
கீழ்த்திசை மக்களை அழித்தொழியுங்கள்.


29 அவர்களின் கூடாரங்களும் மந்தைகளும் பிடிபடும்;
கூடாரத் துணிகளும் மற்ற எல்லாப்
பொருள்களும் கைப்பற்றப்படும்;
அவர்களின் ஒட்டகங்களை
அவர்களிடமிருந்து ஓட்டிச்செல்வர்;
'எப்பக்கமும் ஒரே திகில்' என மனிதர் ஓலமிடுவர்.


30 ஆட்சோரின் குடிமக்களே! தப்பியோடுங்கள்,
தூரமாகச் சென்று பள்ளங்களில் பதுங்கிக்கொள்ளுங்கள்,
என்கிறார் ஆண்டவர்.
பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர்
உங்களுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டியுள்ளான்;
உங்களுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்துள்ளான்.


31 புறப்படுங்கள்;
கதவுகளோ தாழ்ப்பாள்களோ இன்றி
அமைதியோடும் பாதுகாப்போடும்
வாழும் மக்களினத்தார்க்கு எதிராக -
தனித்து வாழும் மக்களினத்தார்க்கு எதிராக
முன்னேறிச் செல்லுங்கள், என்கிறார் ஆண்டவர்.


32 அவர்களுடைய ஒட்டகங்கள் கொள்ளையடிக்கப்படும்;
அவர்களின் எண்ணற்ற மந்தைகள் பறிமுதலாகும்;
முன்தலையை மழித்துக்கொள்ளும் மக்களைக்
காற்றில் பறக்கவிடுவேன்;
எப்பக்கமுமிருந்தும் அவர்கள்மேல் அழிவைக் கொணர்வேன்,
என்கிறார் ஆண்டவர்.


33 ஆட்சோர், குள்ளநரிகளின் உறைவிடம் ஆகும்;
என்றும் பாழடைந்து கிடக்கும்;
அங்கு எவரும் குடியிருக்கமாட்டார்;
எவரும் அதில் தங்கவும் மாட்டார்.

ஏலாமுக்கு எதிராக[தொகு]


34 யூதாவின் அரசன் செதேக்கியாவினுடைய
ஆட்சியின் தொடக்கத்தில்
ஏலாமைக் குறித்து இறைவாக்கினர் ஏரேமியாவுக்கு
ஆண்டவர் அருளிய வாக்கு:


35 படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
ஏலாமின் வலிமைக்கு ஆதாரமான வில்லை
முறித்துப்போடுவேன்.


36 வானத்தின் நான்கு திசைகளினின்று
நால்வகைக் காற்றுகளை
ஏலாம்மீது வரவழைப்பேன்;
இந்த எல்லாக் காற்றுகளினாலும்
அவர்களைச் சிதறடிப்பேன்.
ஏலாமினின்று விரட்டியடிக்கப்பட்டோர்
சென்றடையாத நாடே இராது.


37 ஏலாமின் எதிரிகள் முன்னும்,
அதன் உயிரைப் பறிக்கத் தேடுவோர் முன்னும்
நான் அதை நடுங்கச்செய்வேன்;
அவர்கள்மேல் தண்டனை வருவிப்பேன்.
என் சினம் அவர்கள் மேல் மூண்டெழும்,
என்கிறார் ஆண்டவர்.
அவர்களை முற்றிலும் அழித்துத் தீர்க்கும்வரை,
அவர்களைப் பின்தொடருமாறு
வாளை அனுப்பி வைப்பேன்.


38 ஏலாமில் என் அரியணையை அமைப்பேன்;
அவர்களின் அரசரையும் தலைவர்களையும் அழிப்பேன்,
என்கிறார் ஆண்டவர்.


39 ஆயினும் இறுதி நாள்களில்
நான் ஏலாமின் சொத்து, செல்வங்களைத்
திரும்பக் கொணர்வேன், என்கிறார் ஆண்டவர்.


குறிப்புகள்


[1] 49:1 - 'அவர்களின் அரசன்' என்பது எபிரேய பாடம்.
[2] 49:2 - 'புதல்வியர்' என்பது எபிரேய பாடம்.
[3] 49:1-6 = எசே 21:28-32; 25:1-7;
ஆமோ 1:13-15; செப் 2:8-11.
[4] 49:18 = தொநூ 19:24-25.
[5] 49:7-22 = எசா 34:5-17; 63:1-6;
எசே 25:12-14; 35:1-15;
ஆமோ 1:13-15; ஒப 1-14; மலா 1:2-5.
[6] 49:23-27 = எசா 17:1-3; ஆமோ 1:3-5; செக் 9:1.


அதிகாரம் 50[தொகு]

பாபிலோனுக்கு எதிராக[தொகு]


1 [1] பாபிலோனைக் குறித்தும்
கல்தேயரின் நாட்டைக் குறித்தும்
இறைவாக்கினர் எரேமியா வாயிலாக
ஆண்டவர் அருளிய வாக்கு:


2 மக்களினத்தார் நடுவே அறிவியுங்கள்;
பறைசாற்றுங்கள்;
கொடியேற்றுங்கள்;
முழக்கம் செய்யுங்கள்;
'பாபிலோன் கைப்பற்றப்பட்டது;
பேல் சிறுமையுற்றது;
மெரோதாக்கு உடைக்கப்பட்டது;
அதன் சிலைகள் சிறுமையுற்றன;
அதன் உருவங்கள் உடைக்கப்பட்டன,' என்று
மறைக்காமல் அறிக்கையிடுங்கள்.


3 ஏனெனில், வடக்கினின்று ஓர் இனம் அதை எதிர்த்துவரும்.
அது பாபிலோனைப் பாழாக்கும்.
ஒருவனும் அதில் குடியிருக்கமாட்டான்.
மனிதனும் விலங்கும் அங்கிருந்து தப்பியோடுவர்.


4 ஆண்டவர் கூறுகிறார்:
அந்நாள்களில் -அக்காலத்தில் -
இஸ்ரயேல் மக்களும் யூதா மக்ளும்
சேர்ந்து வருவார்கள்;
அழுது கொண்டே திரும்பி வருவார்கள்;
தங்கள் கடவுளான ஆண்டவரை அவர்கள் தேடுவார்கள்.
5 அவர்கள் சீயோனை நோக்கியவண்ணம்,
அங்குப் போகும் வழியைக் கேட்பார்கள்;
'வாருங்கள்; மறக்கப்படாத, என்றுமுள
உடன்படிக்கை மூலம்
ஆண்டவரோடு நம்மையே இணைத்துக்கொள்வோம்' என்பார்கள்.
6 என் மக்கள் காணாமற்போன ஆடு போன்றவர்கள்.
அவர்களின் ஆயர்கள் அவர்களை வழி தவறிப் போகச் செய்தார்கள்;
மலைகள் மேல் அவர்களைக் கலங்கடித்தார்கள்.
மலைக்கும் குன்றுக்கும் இடையில்
மக்கள் அலைந்து திரிந்தார்கள்;
தங்கள் உறைவிடத்தை அவர்கள் மறந்துவிட்டார்கள்.
7 பார்த்தவர் எல்லாரும் அவர்களை விழுங்கினர்.
'நாங்கள் குற்றவாளிகள் அல்லர்;
ஏனெனில் அவர்கள் தங்களின் உண்மையான உறைவிடமும்,
தங்கள் மூதாதையரின் நம்பிக்கையுமான
ஆண்டவருக்கு எதிராய்ப் பாவம் செய்தார்கள்'
என்று அவர்களுடைய பகைவர் சொல்லிக்கொண்டனர்.


8 பாபிலோனினின்று தப்பியோடுங்கள்;
கல்தேயரின் நாட்டினின்று வெளியேறுங்கள்;
மந்தைக்கு முன் செல்லும் கிடாய்களைப்போல் இருங்கள்.
9 ஏனெனில் நான் வடக்கு நாட்டினின்று
பெரிய மக்களினங்களின் திரளைப்
பாபிலோனுக்கு எதிராகத் தூண்டி விட்டுப்
பாய்ந்து வரச்செய்வேன்.
அவை அதற்கு எதிராகப் படையெடுத்து வர,
அது கைப்பற்றப்படும்.
அவர்களின் அம்புகள்,
வெறுங்கையாய்த் திரும்பி வராத
தேர்ச்சி பெற்ற வீரர் போன்றவை.
10 கல்தேயா சூறையாடப்படும்;
அதைக் கொள்ளையிடுவோர் அனைவரும் நிறைவு பெறுவர்,
என்கிறார் ஆண்டவர்.


11 என் உரிமைச் சொத்தைச் சூறையாடியவர்களே,
நீங்கள் அக்களித்தாலும், அகமகிழ்ந்தாலும்,
புல்கண்ட இளம்பசுபோல் துள்ளிக் குதித்தாலும்,
பொலிகுதிரைப்போலக் கனைத்தாலும்,


12 உங்கள் அன்னை பெரும் அவமானத்துக்கு உள்ளாவாள்;
உங்களை ஈன்றெடுத்தவள் இகழ்சிக்கு ஆளாவாள்;
மக்களுள் அவளே கடையளாய் இருப்பாள்;
வறண்ட, வெறுமையான பாலைநிலம் ஆவாள்.


13 ஆண்டவருடைய வெஞ்சினத்தால்
அது குடியற்றுப்போகும்;
முற்றிலும் பாழடைந்துபோகும்;
பாபிலோனைக் கடந்து செல்லும் எவனும் அதிர்ச்சி அடைவான்;
அதன் தோல்வி கண்டு ஏளனம் செய்வான்.


14 வில்வீரர்களே, நீங்கள் அனைவரும்
பாபிலோனுக்கு எதிராக
எப்பக்கமும் அணிவகுத்து வாருங்கள்.
அதன்மீது அம்பு எய்யுங்கள்,
அம்பு மாரி பொழியுங்கள்;
அது ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்துள்ளது.


15 எப்பக்கமும் அதற்கு எதிராகக் குரல் எழுப்புங்கள்.
அது சரணடைந்துவிட்டது.
அதன்கொத்தளங்கள் வீழ்ந்தன;
அதன் மதில்கள் தகர்ந்தன.
இது ஆண்டவரின் பழிவாங்குதல் ஆகும்.
நீங்களும் அதனைப் பழிவாங்குங்கள்;
அது செய்ததுபோல் நீங்கள் அதற்குச் செய்யுங்கள்.


16 விதைப்பவனைப் பாபிலோனினின்று அழித்துப் போடுங்கள்;
அறுவடைக் காலத்தில் அரிவாள் எடுப்பவனையும் வீழ்த்தி விடுங்கள்;
கொடுங்கோலனின் வாளை முன்னிட்டு,
அவர்கள் ஒவ்வொருவனும்
தன் சொந்த மக்களிடம் திரும்பிப் போகட்டும்;
அவர்கள் எல்லாரும் தங்கள் சொந்த நாட்டுக்கே தப்பியோடட்டும்.


17 இஸ்ரயேல் வேட்டையாடப்படும் ஆட்டுக்கு ஒப்பாகும்.
அது சிங்கங்களால் துரத்தியடிக்கப்பட்டது.
முதன்முதலில் அசீரிய மன்னன் அதை விழுங்கினான்;
இறுதியாகப் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர்
அதன் எலும்புகளை முறித்துப் போட்டான்.
18 ஆகவே இஸ்ரயேலின் கடவுளாகிய
படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
இதோ! அசீரிய மன்னனை நான் தண்டித்தது போன்று,
பாபிலோனிய மன்னனையும்
அவனது நாட்டையும் தண்டிப்பேன்.
19 நான் இஸ்ரயேலை
அதன் மேய்ச்சல் நிலத்திற்குத் திரும்ப அழைத்து வருவேன்.
கர்மேலிலும் பாசானிலும் அது மேயும்;
எப்ராயிம் மலைகளிலும் கிலயாதிலும்
அது வயிறு புடைக்கத் தின்னும்.
20 அந்நாள்களில் - அக்காலத்தில் -
இஸ்ரயேலில் குற்றத்தை தேடிப் பார்ப்பர்;
ஆனால், ஒன்றும் தென்படாது.
யூதாவில் பாவங்களைத் தேடுவர்;
ஆனால் ஒன்றும் காணப்படாது.
ஏனெனில் நான் விட்டுவைத்த எஞ்சியோரை மன்னிப்பேன்,
என்கிறார் ஆண்டவர்.


21 மெரத்தாயிம் நாட்டுக்கு எதிராகப் புறப்படு;
பெக்கோதின் குடிகளை எதிர்த்து முன்னேறு;
அவர்களை வெட்டி வீழ்த்து;
முற்றிலும் அழித்துப்போடு;
நான் கட்டளையிட்ட அனைத்தையும் நிறைவேற்று,
என்கிறார் ஆண்டவர்.


22 நாட்டில் போரின் ஆரவாரம் கேட்கின்றது;
பேரழிவின் கூக்குரல் ஒலிக்கின்றது.


23 மண்ணுலகு முழுவதற்கும் சம்மட்டியாய்த் திகழ்ந்தது
நொறுங்கித் தூள்தூளானது எப்படி!
மக்களினங்கள் நடுவே பாபிலோன்
பாழடைந்துபோனது எவ்வாறு!


24 பாபிலோனே, நான் உனக்குக் கண்ணி வைத்தேன்;
தெரியாமலே நீ அதில் மாட்டிக் கொண்டாய்;
நீ கண்டுபிடிக்கப்பட்டுப் பிடிபட்டாய்;
ஏனெனில் நீ ஆண்டவரை எதிர்த்தாய்.


25 ஆண்டவர் தம் படைக்கலக் கொட்டிலைத் திறந்து விட்டார்;
தம் கடுங்கோபத்தின் படைக்கருவிகளை வெளிக்கொணர்ந்தார்;
கல்தேயர் நாட்டில் படைகளின் ஆண்டவராகிய கடவுள்
ஆற்றவேண்டிய அலுவல் இதுவே.


26 எல்லாத் திக்குகளினின்றும் அதை எதிர்த்து வாருங்கள்;
அதன் களஞ்சியங்களை உடைத்துத் திறங்கள்;
தானியக் குவியல்போல அதைக் குவித்து வையுங்கள்;
அதை முற்றிலும் அழித்துப் போடுங்கள்;
அதில் எதுவும் எஞ்சியிருக்க வேண்டாம்.


27 அதன் காளைகள் அனைத்தையும் வெட்டி வீழ்த்துங்கள்;
அவை கொலைக்களத்திற்குச் செல்லட்டும்;
அவற்றுக்கு ஐயோ கேடு!
அவற்றின் நாள் வந்துவிட்டது;
அவற்றின் தண்டனைக் காலம் நெருங்கிவிட்டது.


28 இதோ! அவர்கள் பாபிலோனிய நாட்டிலிருந்து தப்பி ஓடுகிறார்கள்;
தம் கோவிலை முன்னிட்டு நம் ஆண்டவராகிய கடவுள்
பழி வாங்கியதைச் சீயோனில் அறிவிக்க ஓடுகிறார்கள்.
29 வில்லாளர்கள், வில்வீரர்கள் அனைவரும்
பாபிலோனுக்கு எதிராக வருமாறு அழையுங்கள்;
அதைச் சுற்றி வளைத்துக் கொள்ளுங்கள்.
ஒருவனும் தப்பியோட விடாதீர்கள்;
அதன் செயல்களுக்குத் தக்கவாறு கைம்மாறு செய்யுங்கள்;
அது நடந்து கொண்டதற்கு ஏற்ப அதை நடத்துங்கள்;
ஏனெனில், இஸ்ரயேலின் தூயவராகிய ஆண்டவருக்கு எதிராக
அது இறுமாப்புடன் நடந்து கொண்டது. [2]
30 எனவே அதன் இளைஞர்கள் தெருக்களில் வீழ்ந்து மடிவார்கள்;
அதன் படைவீரர்கள் அனைவரும் அந்நாளில் அழிக்கப்படுவார்கள்,
என்கிறார் ஆண்டவர்.


31 இறுமாப்புக் கொண்டவனே!
நான் உனக்கு எதிராய் இருக்கிறேன்,
என்கிறார் படைகளின் ஆண்டவராகிய தலைவர்.
உனது நாள் வந்துவிட்டது;
உன்னை நான் தண்டிக்கும் காலம் நெருங்கி விட்டது.


32 இறுமாப்புக் கொண்டவன் இடறிக் கீழே விழுவான்;
அவனைத் தூக்கிவிட யாரும் இலர்;
அவன் நகர்களில் நான் தீ வைப்பேன்;
சுற்றிலும் உள்ள அனைத்தையும் அது சுட்டெரிக்கும்.


33 படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
இஸ்ரயேல் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள்;
யூதாவின் மக்களும் அவர்களோடு சேர்ந்து
துன்புறுத்தப் படுகிறார்கள்.
அவர்களை அடிமைப் படுத்தியோர் அனைவரும்
அவர்களைக் காவலில் வைத்திருக்கிறார்கள்;
அவர்களை விடுதலை செய்ய மறுக்கிறார்கள்;
34 அவர்களின் மீட்பர் வலிமைமிக்கவர்;
'படைகளின் ஆண்டவர்' என்பது அவர் பெயர்.
அவரே அவர்கள் வழக்கை நடத்துவார்;
நாட்டுக்கு அமைதியைக் கொணர்வார்;
பாபிலோன் குடிமக்களுக்கோ அமைதியின்மையை அளிப்பார்.


35 கல்தேயர்மேலும், பாபிலோன் குடிமக்கள்மேலும்,
அதன் தலைவர்கள், ஞானிகள் மேலும்
ஒரு வாள் வரும், என்கிறார் ஆண்டவர்.


36 குறிசொல்வோர் மேல் வாள் வரும்;
அவர்கள் அறிவிலிகளாக மாறுவார்கள்;
அதன் படை வீரர்கள் மேல் வாள் வரும்;
அவர்கள் அழிக்கப்படுவார்கள்.


37 அதன் குதிரைகள்மேலும்,
தேர்கள் மேலும்
அதன் நடுவே இருக்கும் கூலிப் படைகள்மேலும் வாள் வரும்;
அவர்கள் பேடிகள் ஆவார்கள்;
அதன் செல்வங்கள் அனைத்தின் மேலும் வாள் வரும்;
அவை கொள்ளையடிக்கப்படும்.


38 அதன் நீர்நிலைகள் மேல் வாள் வரும்;
அவை வறண்டுபோகும்;
அது சிலைகள் மலிந்த நாடு;
அதன் மக்கள் சிலைப் பைத்தியங்கள்.


39 எனவே பாபிலோனின் காட்டு விலங்குகள்
கழுதைப் புலிகளோடு வாழும்;
தீக்கோழிகள் அங்குக் குடியிருக்கும்.
மக்கள் என்றுமே அங்குக் குடியேறப்போவதில்லை;
காலமெல்லாம் அது குடியிருப்பாரற்றுக் கிடக்கும். [3]
40 கடவுள் சோதோம், கொமோராவையும்
அவற்றின் அண்டை நகர்களையும்
வீழ்த்தியபொழுது நிகழ்ந்ததுபோல்,
அங்கு எவரும் குடியிருக்க மாட்டார்;
எவரும் தங்கவுமாட்டார், என்கிறார் ஆண்டவர். [4]


41 இதோ! வடக்கினின்று ஓர் இனம் வருகின்றது;
வலிமை வாய்ந்த மக்களினமும்
மன்னர் பலரும் மண்ணுலகின் கடை எல்லைகளினின்று
கிளர்ந்தெழுகின்றனர்.


42 அவர்கள் வில்லும் ஈட்டியும் ஏந்தியுள்ளார்கள்;
அவர்கள் இரக்கமற்ற அரக்கர்கள்;
அவர்களின் ஆரவாரம் கடலின் இரைச்சலைப் பேன்றது;
மகளே பாபிலோன்!
அவர்கள் போருக்கு அணிவகுத்துக்
குதிரைகள் மீது சவாரி செய்து கொண்டு
உனக்கு எதிராய் வருகின்றார்கள்.


43 அவர்கள் வரும் செய்திபற்றிக் கேள்வியுற்ற,
பாபிலோனிய மன்னனின் கைகள் தளர்ந்துபோயின;
கடுந்துயர் அவனை ஆட்கொண்டது;
பேறுகாலப் பெண்ணைப்போல் அவன் தவிக்கின்றான்.


44 யோர்தானை அடுத்த காட்டினின்று
சிங்கம் செழிப்பான மேய்ச்சல் நிலத்திற்கு வருவதுபோல்,
நான் அவர்களை அங்கிருந்து திடீரென்று விரட்டியடிப்பேன்.
நான் தேர்ந்து கொள்பவனை
அவனுக்குத் தலைவன் ஆக்குவேன்.
ஏனெனில் எனக்கு நிகர் யார்?
என்னைத் தட்டிக்கேட்பவன் யார்?
எந்த மேய்ப்பன் என்னை எதிர்த்து நிற்பான்?
45 எனவே பாபிலோனுக்கு எதிராக
ஆண்டவர் தீட்டியுள்ள திட்டத்திற்கும்,
கல்தேய நாட்டுக்கு எதிராக
அவர் கொண்டுள்ள எண்ணங்களுக்கும் செவிகொடுங்கள்;
மந்தையில் மிகச் சிறிய ஆடுகளும்
திண்ணமாய் இழுத்துச் செல்லப்படும்;
ஆட்டுப்பட்டி அதைக் கண்டு உறுதியாய்த் திகைப்படையும்.
46 பாபிலோனுடைய வீழ்ச்சியின் ஒலியால் நிலம் நடுங்கும்;
அதன் கூக்குரல் மக்களினத்தார் நடுவே கேட்கும்.


குறிப்புகள்

[1] 50:1-51:64 = எசா 13:1; 14:23; 47:1-15.
[2] 50:29 = திவெ 18:18.
[3] 50:39 = திவெ 18:2.
[4] 50:40 = தொநூ 19:24-25.



(தொடர்ச்சி): எரேமியா:அதிகாரங்கள் 51 முதல் 52 வரை