திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எஸ்ரா/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

விக்கிமூலம் இலிருந்து
யூத மக்கள் நாடு திரும்ப பாரசீக மன்னர் சைரசு இசைவு வழங்குகிறார். ஓவியர்: ழான் ஃபூக்கே. ஆண்டு: 1470 அளவில்.

எஸ்ரா (The Book of Ezra) [1][தொகு]

முன்னுரை

'எஸ்ரா' என்னும் இந்நூல் 'குறிப்பேட்டின்' தொடர்ச்சியாகும். கி.மு. 538இல் பாரசீக மன்னர் சைரசு பாபிலோனியாவைக் கைப்பற்றினார். அதே ஆண்டில் அவர் இஸ்ரயேல் மக்களுக்கு விடுதலை அளித்து யூதாவுக்குத் திரும்பிச் செல்ல அனுமதித்தார். செருபாபேலின் தலைமையில் இசுரயேல் மக்களுள் ஒரு பகுதியினர் முதலில் திரும்பி வந்தனர். திரும்பிவந்த இசுரயேலர் எருசலேமில் அழிந்திருந்த கோவிலைத் திரும்பவும், 515இல் கட்டியெழுப்பிப் புனிதப்படுத்தினர்; மீண்டும் அங்கு வழிபாடுகள் நடத்தினர். சில ஆண்டுகளுக்குப் பின் எஸ்ராவின் தலைமையில் இசுரயேல் மக்களுள் மற்றொரு பகுதியினர் திரும்பி வந்தனர்.

எஸ்ரா ஒரு குரு; திருச்சட்ட வல்லுநர். உடன்படிக்கையின் மக்களாகவும், இறைவனின் புனித மக்களாகவும் தேர்ந்துகொள்ளப்பட்ட இசுரயேல் மக்களின் சிறப்பு நிலையைக் காக்குமாறு அவர்களின் மறைவாழ்விலும், சமூக வாழ்விலும் மறுமலர்ச்சி ஏற்படுத்தினார். மேலும் அவர் 'இறையாட்சி' இஸ்ரயேல் மக்களிடையே நிலவுமாறு அரசியல், மறை ஆகிவற்றின் பொறுப்பைக் குருக்களிடமே ஒப்படைத்து, அவற்றிற்கான சட்டதிட்டங்களை வகுத்துத் தந்தார்.

எஸ்ரா[தொகு]

நூலின் பிரிவுகள்


பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. சிறையிருப்பினின்று திரும்பி வருதலின் முதல் பகுதி 1:1 - 2:70 714 - 716
2. கோவில் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டு அர்ப்பணிக்கப்படல் 3:1 - 6:22 716 - 722
3. சிறையிருப்பினின்று எஸ்ராவின் தலைமையில் திரும்பி வருதலின் இரண்டாம் பகுதி 7:1 - 10:44 722 - 728

எஸ்ரா[தொகு]

அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

அதிகாரம் 1[தொகு]

யூதர்கள் நாடு திரும்பச் சைரசு மன்னனின் ஆணை[தொகு]

1 எரேமியா வழியாக வெளிப்படுத்தப்பட்ட இறைவாக்கு நிறைவேறும்படி பாரசீக மன்னர் சைரசின் முதல் ஆண்டில் அவரது உள்ளுணர்வை ஆண்டவர் தூண்டினார். எனவே சைரசு ஆணை ஒன்றைப் பிறப்பித்து, அதைத் தம் நாடெங்கும் எழுத்துமூலம் வெளியிட்டார். [1]


2 "பாரசீக மன்னர் சைரசு கூறுவது: விண்ணகக் கடவுளான ஆண்டவர் மண்ணகத்திலுள்ள எல்லா அரசுகளையும் என்னிடம் ஒப்படைத்துள்ளார். மேலும், யூதாவிலுள்ள எருசலேமில் தமக்கென ஒரு கோவிலைக் கட்டும்படி அவர் என்னை நியமித்துள்ளார். [2]
3 அவருடைய எல்லா மக்களிலும் யார் யார் அவரைச் சார்ந்துள்ளனரோ - கடவுள் அவர்களோடு இருப்பாராக! - அவர்கள், யூதாவிலுள்ள எருசலேமுக்குச் சென்று, இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு ஒரு கோவிலைக் கட்டுவார்களாக! எருசலேமில் இருக்கும் அவரே கடவுள்!
4 எஞ்சியுள்ளவன் ஒவ்வொருவனும் எங்குத் தங்கியிருந்தாலும் அங்கு வாழும் மக்கள், எருசலேமிலுள்ள கடவுளின் கோவிலுக்குத் தன்னார்வக் காணிக்கை அனுப்புவதோடு, அவனுக்கும் வெள்ளி, பொன், மற்றப்பொருள்கள், கால்நடைகள் ஆகியவற்றைக் கொடுத்து உதவுவார்களாக!"


5 அப்போது யூதா, பென்யமினுடைய குலத்தலைவர்களும், குருக்களும் லேவியரும், எருசலேமில் ஆண்டவரின் கோவிலைக் கட்டச் செல்லுமாறு ஆண்டவரால் தூண்டப்பெற்ற அனைவரும் புறப்பட்டார்கள்.
6 அவர்களைச் சூழந்து வாழ்ந்த மக்கள் தன்னார்வக் காணிக்கை அனைத்தும் கொடுத்ததுமல்லாமல் அவர்களுக்கு வெள்ளிப் பாத்திரங்களையும், பொன்னையும் மற்றப் பொருள்களையும், கால்நடைகளையும், விலையுயர்ந்த பொருள்களையும் கொடுத்து உதவினார்கள்.


7 நேபுகத்னேசர் எருசலேமில் இருந்த ஆண்டவரின் கோவிலுக்கு உரிமையான பாத்திரங்களை எடுத்து வந்து தன் தெய்வங்களின் கோவிலில் வைத்திருந்தான். அவற்றைச் சைரசு மன்னர் திரும்பிக் கொடுத்தார்.
8 பாரசீக மன்னரான சைரசின் பொருளாளரான மித்ரதாத்தின் கையில் அவற்றை ஒப்படைத்தார். அவர் அவற்றை யூதாவின் தலைவரான சேஸ்பட்சரிடம் எண்ணிக் கொடுத்தார்.
9 அவற்றின் எண்ணிக்கை பின் வருமாறு: பொற்பாத்திரங்கள் முப்பது, வெள்ளிப் பாத்திரங்கள் ஆயிரம், கத்திகள் இருபத்தொன்பது.
10 பொற் கிண்ணங்கள் முப்பது, வேறு வகையான வெள்ளிக் கிண்ணங்கள் நானூற்றுப் பத்து, மற்றப் பாத்திரங்கள் ஆயிரம்.
11 பொன், வெள்ளியாலான பாத்திரங்கள் அனைத்தும் ஐயாயிரத்து நானூறு. அவற்றையெல்லாம் சேஸ்பட்சரும், பாபிலோன் அடிமைத்தனத்திலிருந்து எருசலேமுக்குத் திரும்பி வந்தவர்களும் கொண்டு வந்தார்கள்.

குறிப்புகள்

[1] 1:1 = எரே 25:11; 29:10.
[2] 1:2 = எசா 44:28.

அதிகாரம் 2[தொகு]

சிறையிருப்பினின்று திரும்பி வந்தோரின் பட்டியல்[தொகு]

(நெகே 7:4-73)

1 அடிமைத்தனத்திலிருந்தும் நாடு கடத்தப்பட்ட இடத்தனின்றும் திரும்பி வந்த அம் மாநில மக்கள் இவர்களே. அவர்களைப் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர், பாபிலோனுக்கு அடிமைகளாக இட்டுச் சென்றிருந்தான். இவர்களே எருசலேமுக்கும் யூதாவிலுள்ள தம் நகர்களுக்கும் திரும்பிச் சென்றவர்கள்.


2 செருபாபேலோடு வந்தவர்கள்: ஏசுவா, நெகேமியா, செராயா, இரகேலயா, மொர்தக்காய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், இரகூம், பானா. இஸ்ரயேல் மக்களுள் ஆண்களின் எண்ணிக்கை:
3 பரோசின் மக்கள் இரண்டாயிரத்து நூற்று எழுப்பத்திரண்டு பேர்.
4 செபத்தியாவின் மக்கள் முன்னூற்று எழுபத்திரண்டு பேர்.
5 ஆரகின் மக்கள் எழுநூற்று எழுபத்தைந்து பேர்.
6 ஏசுவா, யோவாபு இவர்களின் வழிவந்த பகத்து, மோவாபு மக்கள் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டு பேர்.
7 ஏலாமின் மக்கள் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்கு பேர்.
8 சத்தூவின் மக்கள் தொள்ளாயிரத்து நாற்பத்தைந்து பேர்.
9 சக்காயின் மக்கள் எழுநூற்று அறுபது பேர்.
10 பானியின் மக்கள் அறுநூற்று நாற்பத்திரண்டு பேர்.
11 பேபாயின் மக்கள் அறுநூற்று இருபத்து மூன்று பேர்.
12 அசகாதின் மக்கள் ஆயிரத்து இருநூற்று இருபத்திரண்டு பேர்.
13 அதோனிக்காமின் மக்கள் அறுநூற்று அறுபத்தாறு பேர்.
14 பிக்வாயின் மக்கள் இரண்டாயிரத்து ஐம்பத்தாறு பேர்.
15 அதீனின் மக்கள் நானூற்று ஐம்பத்து நான்கு பேர்.
16 எசேக்கியாவின் வழிவந்த ஆற்றேரின் மக்கள் தொண்ணூற்றெட்டுப் பேர்.
17 பேசாயின் மக்கள் முந்நூற்று இருபத்து மூன்று பேர்.
18 யோராவின் மக்கள் நூற்றுப் பன்னிரண்டு பேர்.
19 ஆசுமின் மக்கள் இருநூற்று இருபத்து மூன்று பேர்.
20 கிப்பாரின் மக்கள் தொண்ணூற்றைந்து பேர்.
21 பெத்லகேமின் மக்கள் நூற்று இருபத்து மூன்று பேர்.
22 நெற்றோபாவின் ஆண்கள் ஐம்பத்தாறு பேர்.
23 அனாதோதின் ஆண்கள் நூற்று இருபத்தெட்டுப் பேர்.
24 அஸ்மாவேத்தின் மக்கள் நாற்பத்திரண்டு பேர்.
25 கிரியத்துஆரிம், கெபீரா, பெயரோத்து மக்கள் எழுநூற்று நாற்பத்து மூன்று பேர்.
26 இராமா, கேபா மக்கள் அறுநூற்று இருபத்தொருபேர்.
27 மிக்மாசின் ஆண்கள் நூற்றுஇருபத்திரண்டு பேர்.
28 பெத்தேலிலும், ஆயிலும் உள்ள ஆண்கள் இருநூற்று இருபத்து மூன்று பேர்.
29 நெபோவின் மக்கள் ஐம்பத்திரண்டு பேர்.
30 மக்பீசின் மக்கள் நூற்றைம்பத்தாறு பேர்.
31 மற்றொரு ஏலாமின் மக்கள் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்கு பேர்.
32 ஆரிமின் மக்கள் முந்நூற்றிருபது பேர்.
33 லோது, ஆதிது, ஒனோ ஆகியோரின் மக்கள் எழுநூற்றிருபத்தைந்து பேர்.
34 எரிகோவின் மக்கள் முந்நூற்று நாற்பத்தைந்து பேர்.
35 செனா மக்கள் மூவாயிரத்து அறுநூற்று முப்பது பேர்.


36 குருக்கள்: யோசுவாவின் வீட்டாரான எதாயாவின் மக்கள் தொள்ளாயிரத்து எழுபத்து மூன்று பேர்.
37 இம்மேரின் மக்கள் ஆயிரத்து ஐம்பத்திரண்டு பேர்.
38 பஸ்கூரின் மக்கள் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழு பேர்.
39 ஆரிமின் மக்கள் ஆயிரத்துப் பதினேழு பேர்.


40 லேவியர்கள்: ஓதவியாவின் வழிவந்த யேசுவா கத்மியேலின் மக்கள் எழுபத்து நான்கு பேர்.
41 பாடகர்கள்: ஆசாபு மக்கள் நூற்று இருபத்தெட்டுப் பேர்.
42 வாயிற்காவலரின் வழிவந்த சல்லூம், ஆற்றேர், தல்மோன், அக்கூபு, அத்தித்தா, சோபாய் ஆகியவரின் மக்களனைவரும் நூற்று முப்பத்தொன்பது பேர்.


43 கோவில் ஊழியர்கள்: சிகாபின் மக்கள், அசுபாவின் மக்கள், தபாயோத்தின் மக்கள்.
44 கேரோசின் மக்கள், சீயகாவின் மக்கள், பாதோனின் மக்கள்,
45 இலபானாவின் மக்கள், அகாபாவின் மக்கள், அக்கூபின் மக்கள்,
46 காகாபின் மக்கள், சம்லாயின் மக்கள், கானானின் மக்கள்,
47 கிதேலின் மக்கள், ககாரின் மக்கள், இரயாயாவின் மக்கள்,
48 இரத்சீனின் மக்கள், நெக்கோதாவின் மக்கள், கசாம் மக்கள்,
49 ஊசாவின் மக்கள், பர்சயாகின் மக்கள், பேசாயின் மக்கள்,
50 அஸ்னாவின் மக்கள், மெய்யோனிம் மக்கள், நெபிசிம் மக்கள்,
51 பக்பூக்கின் மக்கள், அகுப்பாவின் மக்கள், அர்கூரின் மக்கள்,
52 பட்கலூத்தின் மக்கள், மெகிதாவின் மக்கள், அர்சாவின் மக்கள்,
53 பர்கோசின் மக்கள், சீசராவின் மக்கள், தேமாவின் மக்கள்,
54 நெட்சியாகின் மக்கள், அத்திபாவின் மக்களுமே!


55 சாலமோன் ஊழியரின் மக்கள்:
56 சோற்றாயின் மக்கள், அசோபரேத்தின் மக்கள், பெருதாவின் மக்கள், யாலாவின் மக்கள், தர்கோனின் மக்கள், கிதேலின் மக்கள்,
57 செபற்றியாவின் மக்கள், அற்றலின் மக்கள், சபாயிம் வழிவந்த போக்கரேத்தின் மக்கள், ஆமியின் மக்கள்.
58 கோவில் ஊழியர்களும் சாலமோன் ஊழியரின் மக்களுமாக மொத்தம் முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டு பேர்.


59 மற்றும், தெல்மெலகு, தெல்லர்சா, கெருபு, அதான், இம்மேர் என்ற ஊர்களிலிருந்து புறப்பட்டு வந்தவர்களும், தங்கள் மூதாதையரின் குடும்பத்தையும், வழிமரபையும், தாங்கள் இஸ்ரயேலைச் சார்ந்தவர்களா என்பதையும் நிருபிக்க அறியாதவர்கள் இவர்களே;
60 தெலாயாவின் மக்களும், தோபியாவின் மக்களும், நெக்கோதாவின் மக்களும் சேர்ந்து அறுநூற்று ஐம்பத்திரண்டு பேர்.


61 மற்றும், குருக்களின் புதல்வர்கள்: அபய்யாவின் மக்கள், அக்கோசின் மக்கள், கிலயாதைச் சார்ந்த பர்சில்லாயின் புதல்வியருள் ஒருத்தியை மனைவியாகக் கொண்டதால் அவர்தம் பெயரைத் தாங்கிய பர்சில்லாயின் மக்கள்.
62 இவர்கள் தங்கள் பெயர்ப் பதிவைத் தலைமுறை அட்டவணையில் தேடியும் காணாததால் தீட்டுப்பட்டவர்கள் எனக் கருதப்பட்டு குருத்துவப் பணியிலிருந்து நீக்கப்பட்டார்கள்.
63 அவர்கள் தூய்மையிலும் தூய்மையான பொருள்களை ஊரிம், தும்மிமைக் காட்டுவதற்கு ஒரு குரு வரும்வரை உண்ணக்கூடாது என்று ஆளுநர் அவர்களிடம் கூறினார். [1]


64 மக்கள் சபையின் மொத்த எண்ணிக்கை நாற்பத்து இரண்டாயிரத்து முந்நூற்று அறுபது.
65 அவர்களைத் தவிர அவர்களின் ஆண், பெண், ஊழியர்களின் எண்ணிக்கை, ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழு. மேலும் அவர்களுடன் இருநூறு பாடகர்களும், பாடகிகளும் இருந்தனர்.
66 அவர்களின் குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு; கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து.
67 ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து; கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது.


68 குலத் தலைவர்களில் சிலர் எருசலேமில் உள்ள ஆண்டவரின் இல்லத்திற்கு வந்து, கடவுளின் கோவிலை அதே இடத்தில் கட்டி எழுப்பத் தன்னார்வக் காணிக்கை ஒப்புக் கொடுத்தனர்.
69 அவர்கள் ஒவ்வொருவரும் தம் வசதிக்கேற்ப, ஐநூறு கிலோகிராம் [2] பொன்னும், மூவாயிரத்து நானூற்று இருபத்தைந்து கிலோகிராம் [3] வெள்ளியும், நூறு குருத்துவ ஆடைகளும் கொடுத்தார்கள்.
70 குருக்கள், லேவியர், வேறு சிலர், பாடகர், வாயிற்காப்பாளர், கோவில் ஊழியர் ஆகியோர் தம் நகர்களிலும், எல்லா இஸ்ரயேலருள் ஏனையோரும் தம் நகர்களிலும் குடியேறியிருந்தார்கள். [4]

குறிப்புகள்

[1] 2:63 = 27:21.
[2] 2:69 'அறுபத்தோராயிரம் திராக்மா' என்பது எபிரேய பாடம்.
[3] 2:69 'ஐயாயிரம் மினா' என்பது எபிரேய பாடம்.
[4] 2:70 = 1 குறி 9:2; நெகே 11:3.


(தொடர்ச்சி): எஸ்ரா:அதிகாரங்கள் 3 முதல் 4 வரை