திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/குறிப்பேடு (நாளாகமம்) - முதல் நூல்/அதிகாரங்கள் 23 முதல் 24 வரை

விக்கிமூலம் இலிருந்து
தாவீது அரசர். பளிங்குச் சிலை உருவாக்கிய கலைஞர்: நிக்கொலாசு கொர்தியே. இடம்: மரியா பேராலயம், உரோமை நகர்.


1 குறிப்பேடு (The First Book of Chronicles)[தொகு]

அதிகாரங்கள் 23 முதல் 24 வரை

அதிகாரம் 23[தொகு]


1 தாவீது வயது முதிர்ந்து கிழவரான போது, தம் மகன் சாலமோனை இஸ்ரயேலுக்கு அரசனாக்கினார். [1]

லேவியரின் அலுவல்[தொகு]


2 அவர் இஸ்ரயேலின் எல்லாத் தலைவர்களையும், குருக்களையும் லேவிரையும் ஒன்றுகூட்டினார்.
3 லேவியருள் முப்பதும் அதற்கு மேற்பட்ட வயதினரும் எண்ணப்பட்டனர். அவர்கள் மொத்தம் முப்பத்து எட்டாயிரம் ஆண்கள்.
4 அவர்களுள் இருபத்து நாலாயிரம் பேரை ஆண்டவரின் இல்லப் பணிகளுக்குப் பொறுப்பாளராகவும், ஆறாயிரம் பேரை அலுவலர், நீதிபதிகளாகவும்,
5 நாலாயிரம் பேரை வாயில்காப்போராகவும், நாலாயிரம் பேரை ஆண்டவரைப் புகழ்வதற்காகத் தாம் செய்து வைத்திருந்த இசைக்கருவிகளுடன் புகழ் பாடுவோராகவும் நியமித்தார்.
6 தாவீது அவர்களை லேவிய மக்களான கேர்சோன், கோகாத்து, மெராரி என்னும் குடும்பங்களின்படி பிரித்தார்:


7 கேர்சோனியரில் இலாதானும் சிமயியும்;
8 இலாதானின் புதல்வர்: தலைவரான எகியேல், சேத்தாம், யோவேல் ஆகிய மூவர்;
9 சிமயின் புதல்வர்: செலமோத்து, அசியேல், ஆரான், ஆகிய மூவர். இவர்கள் இலாதானின் மூதாதையரில் தலைவர்கள்.
10 சிமயின் புதல்வர்: யாகாத்து, சீனா, எயூசு, பெரியா. இந்த நால்வர் சிமயியின் புதல்வர்.
11 இவர்களுள் யாகாத்து மூத்தவர், சீசா இரண்டாம் மகன், எயூசுக்கும் பெரியாவுக்கும் புதல்வர் பலர் இல்லாததால், ஒரே மூதாதையரின் குடும்பத்தினராய்க் கணக்கிடப்பட்டனர்.


12 கோகாத்தின் புதல்வர்: அம்ராம், இட்சகார், எப்ரோன், உசியேல் ஆகிய நால்வர்.
13 அம்ராமின் புதல்வர்: ஆரோன், மோசே. ஆரோனும் அவர் புதல்வரும் திருத்தூயகத்தை என்றும் புனிதமாய்க் காக்கவும், என்றென்றும் ஆண்டவருக்கு முன்பாகத் தூபங்காட்டவும், அவர்தம் திருமுன் பணிசெய்யவும், அவர் பெயரால் ஆசி வழங்கவும் அர்ப்பணிக்கப்பட்டனர். [2]
14 கடவுளின் அடியவரான மோசேயின் புதல்வரும் லேவி குலத்தாரோடு சேர்த்துக் கணக்கிடப்பட்டனர்.
15 மோசேயின் புதல்வர்: கெர்சோம், எலியேசர்,
16 கெர்சோமின் புதல்வருள் செபுயேல் தலைவராய் இருந்தார்.
17 எலியேசர் புதல்வருள் இரகபியா தலைவராய் இருந்தார். எலியேசருக்கு வேறு புதல்வர் இல்லை. ஆனால் இரகபியாவுக்குப் புதல்வர் பலர் இருந்தனர்.


18 இட்சகார் புதல்வருள் செலோமித்து தலைவராய் இருந்தார்.
19 எப்ரோன் புதல்வர்: தலைவரான எரிய்யா, இரண்டாமவர் அமரியா, மூன்றாமவர் யாகசியேல், நான்காமவர் எக்கமயாம்.
20 உசியேல் புதல்வர்: தலைவரான மீக்கா, இரண்டாமவர் இசியா.


21 மெராரியின் புதல்வர்: மக்லி, மூசி. மக்லியின் புதல்வர்: எலயாசர், கீஸ்.
22 எலயாசர் இறந்தபோது அவருக்குப் புதல்வியரேயன்றிப் புதல்வர் எவரும் இல்லை. அவர் சகோதரராகிய கீசின் புதல்வர் அவர்களை மணந்து கொண்டனர்.
23 மூசியின் புதல்வர் மக்லி, ஏதேர், எரேமோத்து ஆகிய மூவர்.


24 தங்கள் மூதாதையரின் குலங்களின்படியே, மூதாதையர் குடும்பத் தலைவர்களாய் இருந்த லேவியரின் புதல்வர் இவர்களே. இவர்கள் இருபதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடையவர்கள். தனித்தனியே நபர்களின் பெயர்களின் எண் வரிசைப்படியே பதிவு செய்யப்பட்டு ஆண்டவரின் திருக்கோவிலின் பணியோடு தொடர்புகொண்ட வேலைகளைச் செய்யவேண்டியவர்கள்.
25 ஏனெனில், "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதி தந்து, எருசலேமில் என்றும் குடியிருக்கிறார்.
26 அதுவுமன்றி, லேவியர் திருக்கூடாரத்தையும் வழிபாட்டுக்கான அனைத்துக் கலங்களையும் இனிச் சுமக்க வேண்டுவதில்லை" என்று தாவீது கூறினார். [3]


27 தாவீதின் இறுதிச் சொற்களின்படி லேவியருள் இருபதும் அதற்கு மேற்பட்ட வயதினர் யாவரும் பதிவு செய்யப்பட்டனர்.
28 அவர்கள், ஆண்டவரின் இல்லப்பணியில் ஆரோனின் புதல்வரின்கீழ் வேலை செய்யவும், முற்றங்களையும் உள்ளறைகளையும் புனிதக் கலங்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்தவும், கோவிலில் எவ்வகைப் பணியையும் செய்யவும் வேண்டும்;
29 திருமுன்னிலை அப்பங்கள், உணவுப்பலிக்கான மிருதுவான மாவு, புளிப்பற்ற அப்பம், சட்டிகளில் சுட்ட, பொரித்த அடைகள் ஆகியவற்றைத் தயாரித்து, அவற்றின் எடையையும் அளவையும் கணக்கிடுதல் வேண்டும்.
30 ஒவ்வொரு காலையிலும் மாலையிலும் ஆண்டவருக்கு நன்றி கூறவும் அவரைப் போற்றவும் வேண்டும்;
31 அத்தோடு, ஓய்வு நாள்களிலும் அமாவாசை நாள்களிலும் மற்றைய விழாக்களிலும் ஆண்டவருக்கு எரிபலி செலுத்தும்போது எண்ணிக்கைப்படியும் பிரிவுகளின்படியும் ஆண்டவர் முன் எப்போதும் நிற்கவேண்டும்.
32 ஆண்டவர் தங்கும் சந்திப்புக் கூடாரத்தையும், திருத்தலத்தையும் கண்காணிக்கவும், ஆரோனின் வழிமரபில் வந்த அவர்கள் சகோதரரான குருக்களுக்கு ஆண்டவரின் இல்லப் பணியில் உதவி செய்யவும் வேண்டும். [4]

குறிப்புகள்

[1] 23:1 = 1 அர 1:1-40.
[2] 23:23 = விப 28:1.
[3] 23:26 = இச 10:8.
[4] 23:28-32 = எண் 3:5-9.

அதிகாரம் 24[தொகு]

குருக்களின் பணிகள்[தொகு]


1 ஆரோனின் புதல்வர்தம் பிரிவுகளாவன: ஆரோனின் புதல்வர் நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர்.
2 நாதாபும், அபிகூவும் புதல்வரின்றி அவர்கள் தந்தைக்கு முன்னரே இறந்து போயினர். எலயாசரும், இத்தாமரும் குருக்களாகப் பணி செய்தனர்.
3 தாவீது எலயாசரின் குடும்பத்தைச் சார்ந்த சாதோக்கு, இத்தாமர் குடும்பத்தைச் சார்ந்த அகிமெலக்கு ஆகியோரின் துணைகொண்டு பதவிவாரியாகவும் பணிவாரியாகவும் அவர்களில் பிரிவுகளை ஏற்படுத்தினார்.
4 இத்தாமரின் குடும்பத்தை விட எலயாசரின் குடும்பம் மிகுதியான தலைவர்களைக் கொண்டிருந்தது. எனவே எலயாசரின் புதல்வரில் பதினாறு பேர் அவர்கள் மூதாதையரின் குடும்பத்துக்கும், இத்தாமரின் புதல்வரிலும் எட்டுப்பேர் அவர்கள் மூதாதையரின் குடும்பத்துக்கும் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.
5 எலயாசர், இத்தாமர் ஆகிய இரு குடும்பங்களின் புதல்வரிலும் திருத்தலத் தலைவர்களும் இறைப்பணித் தலைவர்களும் இருந்தமையால், சீட்டுக் குலுக்கல் முறையில் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன.
6 நெத்தனியேலின் மகனும் லேவியனும் எழுத்தனுமான செமாயா, அரசர் அலுவலர்கள், குருக்களாகிய சாதோக்கு, அபியத்தாரின் மகன் அகிமெலக்கு, குருத்துவக் குடும்பங்களின் தலைவர்கள், லேவியர் குடும்பங்களின் தலைவர்கள் முன்னிலையில் பதிவுசெய்தான். எலயாசரின் குடும்பத்திற்கும், இத்தாமரின் குடும்பத்திற்கும் சீட்டுப் போடப்பட்டது.


7 சீட்டு விழுந்த முறை: முதல் சீட்டு யோயாரிபுக்கு; இரண்டாம் சீட்டு எதாயாவுக்கு;
8 மூன்றாவது ஆரிமுக்கு; நான்காவது செயோரிமுக்கு;
9 ஐந்தாவது மல்கியாவுக்கு; ஆறாவது மியாமினுக்கு;
10 ஏழாவது அக்கோட்சுக்கு; எட்டாவது அபியாவுக்கு;
11 ஒன்பதாவது ஏசுவாவுக்கு; பத்தாவது செக்கனியாவுக்கு;
12 பதினொன்றாவது எலியாசிபுக்கு; பன்னிரண்டாவது யாக்கிமுக்கு;
13 பதின்மூன்றாவது உப்பாவுக்கு; பதினான்காவது எசேபயாவுக்கு;
14 பதினைந்தாவது பில்காவுக்கு; பதினாறாவது இம்மேருக்கு;
15 பதினேழாவது ஏசீருக்கு; பதினெட்டாவது அப்பிசேசுக்கு;
16 பத்தொன்பதாவது பெத்தகியாவுக்கு; இருபதாவது எசக்கேலுக்கு;
17 இருபத்தொன்றாவது யாக்கினுக்கு; இருபத்திரண்டாவது காமுலுக்கு;
18 இருபத்து மூன்றாவது தெலாயாவுக்கு; இருபத்து நான்காவது மாசியாவுக்கு.


19 இவர்களே தங்கள் மூதாதையாகிய ஆரோன் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து தந்த விதிமுறைகளை, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புக்கேற்ற வரிசை முறைப்படி ஆண்டவரின் இல்லம் சென்று, அங்கு நிறைவேற்றுவதற்காகப் பதிவு செய்யப்பட்டவர்கள்.

லேவியர் அட்டவணை[தொகு]


20 எஞ்சிய லேவியின் மக்களுள், அம்ராமின் புதல்வருள் சூபாவேல்; சூபாவேலின் புதல்வருள் எகதியா;
21 இரகபியாவின் புதல்வர்களுள் இசியா தலைவராய் இருந்தார்.


22 இசுராகியரில் செலமோத்தும், செலமோத்தின் புதல்வருள் யாகாத்தும்;
23 இவருடைய புதல்வருள் முதல் மகன் எரிய்யா, இரண்டாம் மகன் அமரியா, மூன்றாம் மகன் யாகசியேல், நான்காவது மகன் எகமயாம்.
24 உசியேலின் புதல்வர், மீக்கா; மீக்காவின் புதல்வர் சாமீர்;
25 மீக்காவின் சகோதரர் இசியா; இசியாவின் புதல்வருள் செக்கரியா;
26 மெராரியின் புதல்வர் மக்லி, மூசி; மற்றும் அவர் மகன் யகசியா;
27 மெராரியின் மகனான யகசியாவின் புதல்வர்கள்: சோகாம், சக்கூர், இப்ரி.
28 மக்லியின் புதல்வர்: புதல்வர்கள் இல்லாத எலயாசர்;
29 மற்றும் கீசு; கீசின் புதல்வர் எரகுமவேல்.
30 மூசியின் புதல்வர் மக்லி, ஏதேர், எரிமோத்து. தங்கள் மூதாதையர் வீட்டு லேவியரின் புதல்வர் இவர்களே.


31 இவர்களும், தங்கள் சகோதரர்களாகிய ஆரோனின் புதல்வர் செய்ததுபோல, தாவீது அரசர், சாதோக்கு, அகிமலேக்கு, குருத்துவக் குடும்பங்களின் தலைவர், லேவியர் குடும்பங்களின் தலைவர் ஆகியோர் முன்னிலையில் ஒவ்வொரு குடும்பத்தின் தலைவரும் அவர் இளைய சகோதரருள் ஒருவருமாகச் சீட்டுப் போட்டு, தங்கள் பணிகளைப் பங்கிட்டுக் கொண்டனர்.

(தொடர்ச்சி): குறிப்பேடு - முதல் நூல்: அதிகாரங்கள் 25 முதல் 26 வரை