திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/குறிப்பேடு (நாளாகமம்) - முதல் நூல்/அதிகாரங்கள் 25 முதல் 26 வரை

விக்கிமூலம் இலிருந்து
தாவீது அரசர் யாழிசை எழுப்புகிறார். கிரேக்க கத்தோலிக்க உருவப்படம். 18ஆம் நூற்றாண்டு. அங்கேரி நாடு.


1 குறிப்பேடு (The First Book of Chronicles)[தொகு]

அதிகாரங்கள் 25 முதல் 26 வரை

அதிகாரம் 25[தொகு]

கோவில் பாடற்குழுவினர்[தொகு]


1 தாவீதும் படைத்தலைவர்களும் ஆசாபு, எமான், எதுத்தூன் ஆகியோரின் புதல்வருள் சிலரைத் தெரிந்தெடுத்தனர். அவர்கள் சுரமண்டலங்களையும், தம்புருகளையும், கைத்தாளங்களையும் இசைத்து இறைவாக்குரைக்க நியமிக்கப்பட்டனர். பணியாளர் பட்டியலும், அவர்கள் செய்த பணிகளும் பின்வருமாறு:


2 ஆசாபின் புதல்வர் சக்கூர், யோசேப்பு நெத்தனியா, அசரேலா. இவர்கள் ஆசாபின் மேற்பார்வையில் அரச கட்டளைப்படி இறைவாக்குரைத்தனர்.


3 எதுத்தூனும், கெதலியா, செரீ, ஏசாயா, அசபியா, மத்தித்தயா ஆகிய எதுத்தூனின் புதல்வர்கள் மொத்தம் அறுவர். இவர்கள் தந்தை எதுத்தூனின் மேற்பார்வையில் சுரமண்டலத்துடன் இறைவாக்குரைத்து ஆண்டவருக்கு நன்றியும் புகழும் செலுத்தினர்.


4 ஏமானின் புதல்வர் புக்கியா, மத்தனியா, உசியேல், செபுவேல், எரிமோத்து, அனனியா, அனானி, எலியாத்தா, கிதல்த்தி, ரோமம்த்தி, எசேர், யோசபக்காசா, மல்லோத்தி, ஓதிர், மகசியோத்து.


5 இவர்கள் அனைவரும் அரசரின் திருக்காட்சியாளரான ஏமானின் புதல்வர். ஆற்றலை உயர்த்துவதாகக் கூறிய வாக்குறுதியின்படியே, கடவுள் ஆமானுக்குப் பதினான்கு புதல்வரையும் மூன்று புதல்வியரையும் அளித்திருந்தார்.
6 இவர்கள் எல்லாரும் தங்கள் தந்தையின் மேற்பார்வையில் ஆண்டவரின் கோவிலில் கைத்தாளம், தம்புரு, சுரமண்டலம் ஆகியவற்றை இசைத்துக் கடவுளின் கோவிலில் பணியாற்றினர். இவ்வாறு ஆசாபு, எதுத்தூன், ஏமான் ஆகியோர் அரசரின் கட்டளைப்படி செயல்பட்டனர்.
7 இவர்களும் இவர்களின் உறவின்முறையினராக ஆண்டவரின் பாடல்களில் தேர்ச்சி பெற்றவர்களும் மொத்தம் இருநூற்று எண்பத்து எட்டுப்பேர்.
8 முதியோரும் இளைஞரும், ஆசிரியரும் மாணவரும் யாவரும் ஒன்றுபோல் திருவுளச்சீட்டின் மூலமாக முறைப்பணிக்கு நியமிக்கப்பட்டார்கள்.


9 சீட்டு விழுந்த முறை: முதல் சீட்டு ஆசாபு குடும்பத்தின் யோசேப்புக்கு; இரண்டாவது கெதலியா, அவர் சகோதரர்களும் அவர் புதல்வர்களும் ஆகிய பன்னிருவர்க்கும்,
10 மூன்றாவது சக்கூர், அவர் புதல்வர்கள் அவர் சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
11 நான்காவது இட்சரி, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
12 ஐந்தாவது, நெத்தனியா, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
13 ஆறாவது புக்கியா, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
14 ஏழாவது அசரேலா, அவர் புதல்வர்கள் சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
15 எட்டாவது ஏசாயா, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
16 ஒன்பதாவது மத்தனியா, அவர் புதல்வர்கள் சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
17 பத்தாவது சிமயி, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
18 பதினொன்றாவது அசரியேல், அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
19 பன்னிரண்டாவது அசபியா, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
20 பதின்மூன்றாவது சூபாவேல், அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
21 பதினான்காவது மத்தித்தியா, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
22 பதினைந்தாவது எரேமோத்து, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
23 பதினாறாவது அனனியா, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
24 பதினேழாவது யோசபக்காசா, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
25 பதினெட்டாவது அனானி, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
26 பத்தொன்பதாவது மல்லோத்தி, அவர் புதல்வர்கள், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
27 இருபதாவது எலியாத்தா, அவர் புதல்வர், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
28 இருபத்து ஒன்றாவது ஓதீர், அவர் புதல்வர், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
29 இருபத்து இரண்டாவது கிதல்த்தி, அவர் புதல்வர், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்,
30 இருபத்து மூன்றாவது மகசியோத்து, அவர் புதல்வர், சகோதரர்கள் ஆகிய பன்னிருவர்க்கும்.
31 இருபத்து நான்காவது ரோமம்த்திஎசேர், அவர் புதல்வர், சகோதரர்கள் பன்னிருவர்க்கும்.

அதிகாரம் 26[தொகு]

வாயிற்காவலர்[தொகு]


1 வாயில் காப்போரின் பிரிவுகளாவன: கோராகியரில், ஆசாபின் குடும்பத்தைச் சேர்ந்த கோரேயின் மகன் மெசலேமியா;
2 மெசலேமியாவின் புதல்வருள் செக்கரியா மூத்தவர்; இரண்டாமவர் எதியவேல், மூன்றாமவர் செபதியா, நான்காமவர் யாத்தனியேல்
3 ஐந்தாமவர் ஏலாம், ஆறாமவர், யோகனான், ஏழாவது எல்யகோவெனாய்.


4 ஓபேது ஏதோமின் புதல்வருள், செமாயா மூத்தவர், இரண்டாமவர் யோசபாத்து, மூன்றாமவர் யோவாகு, நான்காமவர் சாக்கார், ஐந்தாமவர் நெத்தனியேல்,
5 ஆறாமவர் அம்மியேல், ஏழாமவர் இசக்கார், எட்டாமவர் பெயுலத்தாய்; கடவுள் ஓபேது ஏதோமுக்கு ஆசி வழங்கியிருந்தார். [*]
6 அவருடைய புதல்வர் செமாயாவுக்கும் புதல்வர் பிறந்தனர்; அவர்கள் ஆற்றல் மிக்கவராய் இருந்தனர்; தங்கள் தந்தையின் குடும்பத்தின்மீது ஆட்சி செய்தனர்.
7 செமாயாவின் புதல்வர்: ஒத்னி, இரபாவேல், ஓபேது, எல்சபாது. அவர்கள் சகோதரர் எலிகூ, செமக்கியா ஆகியோர் ஆற்றல் மிக்கவராயிருந்தனர்.
8 ஓபேது ஏதோமின் புதல்வருள் அவர்களின் புதல்வரும் உறவின் முறையினரும் அறுபத்து இரண்டு பேர். அவர்கள் தங்கள் வேலையில் திறமைமிக்கவராய் இருந்தனர்.
9 மெசலேமியாவின் புதல்வருள் அவர்கள் சகோதரரும் திறமைமிக்கவர்கள்; இவர்கள் பதினெட்டுப் பேர்.
10 மெராரியின் புதல்வருள் ஒருவர் கோசா. இவர்தம் புதல்வருள் சிம்ரி தலைமகன் அல்லாதவராயிருந்தும், அவர் தந்தை அவரைத் தலைவராக்கியிருந்தார்.
11 இரண்டாமவர் இலிக்கியா, மூன்றாமவர் தெபலியா, நான்காமவர் செக்கரியா. கோசாவின் புதல்வரும் சகோதரருமாகப் பதின்மூன்று பேர்.


12 இந்தப் பிரிவுகளில் இருந்த அவர்கள் சகோதரரைப் போல் வாயில்காப்போர் தங்கள் தலைவர்கள்கீழ் ஆண்டவரின் கோவிலில் பணிபுரிய நியமிக்கப்பட்டனர்.
13 அவர்கள், தாங்கள் காவல் புரியவேண்டிய வாயிலைத் தெரிந்துகொள்ளுமாறு, தங்கள் தந்தையின் குடும்பங்களின்படி, சிறியோர் பெரியோர் என்னும் வேறுபாடின்றி, சீட்டுப்போட்டனர்.
14 கிழக்கு வாயிலுக்கான சீட்டு செலேமியாவுக்கு விழுந்தது. அவர் மகனும் விவேகமுள்ள ஆலோசகருமான செக்கரியாவுக்கு வடக்கு வாயிலுக்கான சீட்டு விழுந்தது.
15 தெற்கு வாயிலுக்கான சீட்டு ஓபேது ஏதோமுக்கு விழுந்தது; அவர் புதல்வருக்குப் பண்டசாலைகளுக்கானது விழுந்தது.
16 சுப்பிமுக்கும், ஓசாவுக்கும் மேற்கு வாயிலும், மேட்டுப்பாதை நோக்கிய சல்லக்கேத்து வாயிலும் விழுந்தன. காவல் முறை ஒரே சீராக அமைந்திருந்தது.
17 கிழக்கே லேவியர் ஆறு பேரும், வடக்கே நாளுக்கு நான்கு பேரும், தெற்கே நாளுக்கு நான்கு பேரும், கருவூலத்தில் இரண்டு இரண்டு பேரும்,
18 நெடுஞ்சாலை நோக்கிய மேற்கு தூண்வரிசை வாயிலில் நால்வரும், உட்புறத்தில் இருவரும் நியமிக்கப்பட்டனர்.
19 கோராகின் புதல்வருக்கும், மெராரியின் புதல்வருக்கும் குறிக்கப்பட்ட காவல்முறை இதுவே.

கோவிலின் பிற பணிகள்[தொகு]


20 லேவியருள் அகியா என்பவர் கடவுளுடைய கோவிலின் கருவூலத்திற்கும் புனிதப் பொருள்கள் வைக்கப்பட்ட கருவூலத்திற்கும் பொறுப்பேற்றிருந்தார்.
21 இலாதானின் புதல்வர்: இலாதான் வழிவந்த கெர்சோனியர்; கெர்சோனியரான இலாதாவின் வழிமரபில் மூதாதையர் குடும்பத் தலைவரான எகியேலி,
22 எகியேலியின் புதல்வருள் சேத்தாமும் அவர் சகோதரராகிய யோவேலும் ஆண்டவரின் இல்லக் கருவூலத்திற்குப் பொறுப்பேற்றிருந்தனர்.
23 அம்ராமியர், இட்சகாரியர், எப்ரோனியர், உசியேலியர் ஆகியோருக்கும் பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன.


24 மோசேயின் மகனான கெர்சோமின் வழிமரபில் தோன்றிய செபுவேல் கருவூலத்திற்குப் தலைமைப் பொறுப்பேற்றிருந்தார்.
25 அவர் சகோதரர் எலியேசர், இவர் மகன் இரகபியா, இவர் மகன் ஏசாயா, இவர் மகன் யோராம், இவர் மகன் சிக்ரி, இவர் மகன் செலோமித்து.
26 தாவீது அரசரும், மூதாதையர் குடும்பத் தலைவர்களும், ஆயிரத்தவர் தலைவர்களும், நூற்றுவர் தலைவர்களும், படைத்தளபதிகளும், அர்ப்பணித்த புனித பொருள்களின் கருவூலம் முழுவதற்கும் இந்தச் செலோமித்தும் அவர் சகோதரரும் பொறுப்பாய் இருந்தனர்.
27 அவர்கள் போரில் கைப்பற்றிய கொள்ளைப் பொருள்களினின்றும் எடுத்து ஆண்டவரின் இல்லத்தைப் பழுது பார்ப்பதற்காக அர்ப்பணித்திருந்தனர்.
28 அவ்வாறே, திருக்காட்சியாளர் சாமுவேல், கீசின் மகன் சவுல், நேரின் மகன் அப்னேர், செருயாவின் மகன் யோவாபு ஆகியோர் அர்ப்பணித்திருந்தவை யாவும், செலோமித்தினுடையவும், அவர் சகோதரருடையவும் பொறுப்பில் இருந்தன.

மற்ற லேவியரின் பணிகள்[தொகு]


29 இட்சகாரியரில், கெனனியாவும் அவர் புதல்வரும் இஸ்ரயேலின் மேல் பொதுநிர்வாகப் பணியை ஏற்று அதிகாரிகளாகவும் நீதிபதிகளாகவும் செயல்பட்டனர்.


30 எப்ரோனியரில், அசபெயாவும் அவர் உறவின்முறையினருள் திறமை மிக்க ஆயிரத்து எழுநூறுபேர் யோர்தானுக்கு மேற்குப்புற இஸ்ரயேலின் மேல் ஆண்டவரின் பணி, அரசரின் பணி அனைத்திலும் நிர்வாகப் பொறுப்பேற்றிருந்தனர்.
31 எப்ரோனியரில், எரியா தன் மூதாதையின் தலைமுறை அட்டவணைப்படி தலைவராய் இருந்தார். தாவீது ஆட்சி நாற்பதாம் ஆண்டில் எப்ரோனியருள் ஆற்றல்மிகு வீரர்களைத் தேடியபோது, அவர்கள் கிலயாதிலுள்ள யாசேரில் இருப்பதாகத் தெரிய வந்தது.
32 ரூபன் குலம், காத்தின் குலம், மனாசேயின் பாதிக்குலம் ஆகியோர்க்குக் குறிக்கப்பட்ட ஆண்டவரின் பணி, அரசரின் பணி அனைத்துப் பொறுப்பையும் வலிமைமிகுந்தவர்களும் மூதாதையர் குடும்பத் தலைவர்களுமான எரியாவின் உறவின்முறையினர் இரண்டாயிரத்து எழுநூறு பேரிடம் அரசர் தாவீது ஒப்படைத்தார்.

குறிப்பு

[*] 26:4-5 = 2 சாமு 6:11; 1 குறி 13:14.

(தொடர்ச்சி): குறிப்பேடு - முதல் நூல்: அதிகாரங்கள் 27 முதல் 29 வரை