திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/சபை உரையாளர் (சங்கத் திருவுரை ஆகமம்)/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

விக்கிமூலம் இலிருந்து
"மனிதர் தாயின் வயிற்றிலிருந்து வெற்றுடம்போடு வருகின்றனர்; வருவது போலவே இவ்வுலகை விட்டுப் போகின்றனர். அவர் தம் உழைப்பினால் ஈட்டும் பயன் எதையும் தம்மோடு எடுத்துச் செல்வதில்லை" - சபை உரையாளர் 5:15.


சபை உரையாளர் (The Book of Ecclesiastes)[தொகு]

அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

அதிகாரம் 5[தொகு]


1 கடவுளின் கோவிலுக்குச் செல்லும்போது விழிப்புடனிரு.
மதிகேடரைப்போலப் பலிசெலுத்துவதை விட,
உள்ளே சென்று கேட்டறிவதே மேல்.
ஏனெனில், அவர்கள் தாங்கள் செய்த
தீவினைகளை உணர்வதில்லை.
2 கடவுள் முன்னிலையில் சிந்தித்துப் பாராமல்
எதையும் பேசாதே;
எண்ணிப் பாராமல் வாக்குக் கொடுக்காதே.
கடவுள் விண்ணுலகில் இருக்கிறார்;
நீயோ மண்ணுலகில் இருக்கிறாய்;
எனவே, மிகச்சில சொற்களே சொல்.
3 கவலை மிகுமானால் கனவுகள் வரும்;
சொல் மிகுமானால் மூடத்தனம் வெளியாகும்.
4 கடவுளுக்கு நீ ஏதாவதொரு வாக்குக் கொடுத்திருந்தால்,
அதை நிறைவேற்றுவதில் காலந்தாழ்த்தாதே.
ஏனெனில், பொறுப்பின்றி நடப்போரிடம்
அவர் விருப்பங்கொள்வதில்லை.
என்ன வாக்குக் கொடுத்தாயோ அதைத் தவறாமல் நிறைவேற்று. [1]
5 கொடுத்த வாக்கை நிறைவேற்றாமற் போவதைவிட,
வாக்குக் கொடாமல் இருப்பதே மேல்.
6 வாய் தவறிப் பேசிப் பழிக்கு ஆளாகாதபடி பார்த்துக்கொள்;
தவறுதலாய்ச் செய்துவிட்டேன் என்று
வான தூதரிடம் சொல்லும்படி நடந்துகொள்ளாதே.
உன் பேச்சின் பொருட்டுக் கடவுள் உன்மீது சினங்கொண்டு,
நீ செய்தவற்றை அழிக்கும்படி நடந்துகொள்வானேன்?
7 கனவுகள் பல வரலாம்;
செயல்களும் சொற்களும் எத்தனையோ இருக்கலாம்.
நீயோ கடவுளுக்கு அஞ்சி நட.

உலக வாழ்க்கை பயனற்றது[தொகு]


8 ஒரு மாநிலத்தில் ஏழைகள் ஒடுக்கப்படுவதையும்
அவர்களுக்கு நீதி நியாயம் வழங்கப்படாதிருப்பதையும்
நீ காண்பாயானால் வியப்படையாதே.
ஏனெனில், அலுவலர்களுக்குமேல் அதிகாரிகள் உள்ளனர் என்றும்,
அவர்களுக்கும் மேலதிகாரிகள் உள்ளனர் என்றும் சொல்வார்கள்.
9 'பொதுநலம்', 'நாட்டுத் தொண்டு'
என்ற சொற்களும் உன் காதில் விழும்.


10 பண ஆசை உள்ளவருக்கு எவ்வளவு பணம் இருந்தாலும்
ஆவல் தீராது;
செல்வத்தின்மேல் மிகுந்த ஆசை வைப்பவர்
அதனால் பயனடையாமற்போகிறார். இதுவும் வீணே.
11 சொத்து பெருகினால் அதைச் சுரண்டித் தின்போரின்
எண்ணிக்கையும் பெருகும்.
செல்வர்களுக்குத் தங்கள் சொத்தைக்
கண்ணால் பார்ப்பதைத் தவிர வேறு என்ன பயன் உண்டு?
12 வேலை செய்கிறவரிடம் போதுமான சாப்பாடு இருக்கலாம்
அல்லது இல்லாதிருக்கலாம்;
ஆனால் அவருக்கு நல்ல தூக்கமாவது இருக்கும்.
செல்வரது செல்வப் பெருக்கே அவரைத் தூங்கவிடாது.


13 உலகில் ஒரு பெருந்தீங்கை நான் கண்டேன்.
ஒருவர் சேமிக்கும் செல்வம் அவருக்குத்
துன்பத்தையே விளைவிக்கும்.
14 ஒருவர் ஒரு நட்டம்தரும் தொழிலில் ஈடுபட்டு
தம் செல்வத்தை இழக்கிறார்.
அவருக்கு ஒரு பிள்ளை உள்ளது.
ஆனால் அப்பிள்ளைக்குக் கொடுப்பதற்கோ ஒன்றுமில்லை.
15 மனிதர் தாயின் வயிற்றிலிருந்து வெற்றுடம்போடு வருகின்றனர்;
வருவது போலவே இவ்வுலகை விட்டுப் போகின்றனர்.
அவர் தம் உழைப்பினால் ஈட்டும் பயன் எதையும்
தம்மோடு எடுத்துச் செல்வதில்லை. [2]


16 இது கொடிய தீங்காகும்.
அவர் எப்படி வந்தாரோ அப்படியே மீளுகிறார்;
காற்றைப் பிடிக்கப் பாடுபடுகிறார்.
17 அவர் அடையும் பயன் என்ன?
வாழ்நாள் முழுவதும் இருள், கவலை, பிணி, எரிச்சல், துன்பம்.
18 ஆகையால், நான் இந்த முடிவுக்கு வந்தேன்:
தமக்குக் கடவுள் வரையறுத்திருக்கும் குறுகிய வாழ்நாளில் மனிதர்
உண்டு குடித்து, உலகில் தம் உழைப்பின் பயனைத் துய்ப்பதே நலம்;
அதுவே தகுந்ததுமாகும்.
19 கடவுள் ஒருவருக்குப் பெருஞ்செல்வமும் நல்வாழ்வும் கொடுத்து,
அவற்றை அவர் துய்த்து மகிழும் வாய்ப்பையும் அளிப்பாரானால்,
அவர் நன்றியோடு தம் உழைப்பின் பயனை நுகர்ந்து இன்புறலாம்.
அது அவருக்குக் கடவுள் அருளும் நன்கொடை.
20 தம் வாழ்நாள் குறுகியதாயிருப்பதைப்பற்றி அவர் கவலைப்படமாட்டார்.
ஏனெனில் கடவுள் அவர் உள்ளத்தை மகிழ்ச்சியோடிருக்கச் செய்கிறார்.


குறிப்புகள்

[1] 5:4 = திபா 66:13-14.
[2] 5:15 = யோபு 1:21; திபா 49:17; 1 திமொ 6:7.


அதிகாரம் 6[தொகு]


1 உலகில் மனிதரைக் கவலையில் ஆழ்த்திக்கொண்டிருக்கும்
ஒரு தீங்கைக் கண்டேன்.
2 கடவுள் ஒருவருக்குச் செல்வத்தையும் நல்வாழ்வையும்
மேன்மையையும் கொடுக்கிறார்.
ஆம், அவர் விரும்புவதெல்லாம் அவருக்குக் கிடைக்கின்றன.
ஆனால் அவற்றைத் துய்க்கவோ கடவுள் அவருக்கு வாய்ப்பளிப்பதில்லை.
அடுத்தவர் ஒருவர் அவற்றைத் துய்த்து மகிழ்கிறார்.
இங்கே பயனின்மையும் கடுந்துயரமும் காணப்படுகின்றன.
3 ஒருவருக்கு நூறு பிள்ளைகள் இருக்கலாம்.
அவர் நீண்ட ஆயுளுடனும் வாழலாம்.
அவர் நெடுங்காலம் உயிரோடிருந்தும்,
தமக்குள்ள செல்வத்தால் இன்பம் அடையாமலும்,
இறந்தபின் அடக்கம் செய்யப்படாமலும் மறைவாரானால்,
அவரைவிடக் கருச்சிதைந்த பிண்டமே மேல் என்கிறேன்.
4 அப்பிண்டம் தோன்றுவதால் பயனில்லை.
அது இருளில் மறைகிறது; அதன் பெயரை இருள் மூடிவிடும்.
5 அது கதிரவனைக் கண்டதுமில்லை; எதையும் அறிந்ததுமில்லை.
ஆனால் அதன் நிலை அவருடையதை விட மேலானது.
6 வாழ்கையில் இன்பம் துய்க்காமல்
இரண்டாயிரம் ஆண்டுகள் உயிர் வாழும் மனிதர் கூட
அதைவிட மேலானவர் இல்லை.
ஏனெனில், இருவரும் ஒரே இடத்திற்கு செல்கின்றனர் அல்லவா?
7 வயிற்றுக்காகவே ஒருவர் வேலை செய்கிறார்;
ஆனால் அவருக்குப் போதுமான உணவு கிடைப்பதில்லை.
8 இப்படியிருக்க, மதிகேடரைவிட ஞானமுள்ளவர்
எவ்வகையில் மேலானவர்?
அல்லது ஏழை ஒருவருக்கு மனிதர்முன் திறமையுடன்
நடந்துகொள்ளத் தெரிந்திருந்தும்,
அதனால் அவருக்குப் பயனென்ன?
9 இல்லாத ஒன்றை அடைய விரும்பி அலைந்து திரிவதை விட
உள்ளதே போதும் என்ற மனநிறைவோடியிருப்பதே மேல்.
ஆனால், இதுவும் வீணே; காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்.


10 இப்பொழுது நடக்கும் ஒவ்வொன்றும்
நெடுங்காலத்திற்கு முன்பே முடிவு செய்யப்பட்டதாகும்.
மனிதர் யாரென்று நமக்குத் தெரியும்.
தம்மைவிட வலிமை வாய்ந்தவருடன் வாதாட அவரால் இயலாது.
11 பேச்சு நீள நீள, அதன் பயன் குறைந்து கொண்டே போகும்.
அதனால் மனிதர் அடையும் நன்மை என்ன?
12 மனிதருடைய வாழ்நாள் குறுகியது; பயனற்றது;
நிழலைப்போல மறைவது.
அதில் தமக்கு நலமானது எது என்பதை யாரால் அறியக் கூடும்?
தம் மறைவிற்குப் பிறகு உலகில் என்ன நடக்கும் என்பதை
யாரால் தெரிந்து கொள்ள இயலும்?


(தொடர்ச்சி):சபை உரையாளர்:அதிகாரங்கள் 7 முதல் 8 வரை