திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/சாமுவேல் - முதல் நூல்/அதிகாரங்கள் 17 முதல் 18 வரை

விக்கிமூலம் இலிருந்து
தாவீது கோலியாத்தின் தலையைக் கொய்தல் (1 சாமு 17:41-54). ஓவியர்: கார்லோ டோல்சி (1616-1686). காப்பகம்: பாஸ்டன்.

1 சாமுவேல் (The First Book of Samuel)[தொகு]

அதிகாரங்கள் 17 முதல் 18 வரை

அதிகாரம் 17[தொகு]

கோலியாத்து இஸ்ரயேலரை அச்சுறுத்தல்[தொகு]


1 பெலிஸ்தியர் போருக்குப் படைகளை யூதாவிலுள்ள சோக்கோவில் ஒன்று திரட்டினர். சோக்கோவுக்கும் அசேக்காவுக்கும் இடையேயுள்ள எபெசுதம்மில் அவர்கள் பாசறை அமைத்தனர்.
2 சவுலும் இஸ்ரயேல் மக்களும் ஒன்றுதிரண்டு ஏலா என்ற பள்ளத்தாக்கில் பாசறை அமைத்து, பெலிஸ்தியருக்கு எதிராகப் போரிட அணிவகுத்தனர்.
3 பெலிஸ்தியர் அப்பக்கம் ஒரு மலையின் மீதும், இஸ்ரயேலர் இப்பக்கம் ஒரு மலையின் மீதும் நின்றிருக்க, அவர்களுக்கு நடுவே பள்ளத்தாக்கு இருந்தது.


4 அப்பொழுது காத்து நகரைச் சார்ந்த கோலியாத்து என்ற வீரன் பெலிஸ்தியர் பாசறையிலிருந்து புறப்பட்டு வந்தான். அவன் உயரம் ஆறரை முழம்.
5 அவன் வெண்கலத் தலைக்கவசமும் ஐம்பத்தேழு கிலோ வெண்கலத்தாலான மீன் செதிலைப் போன்ற மார்புக் கவசமும் அணிந்திருந்தான்.
6 கால்களில் வெண்கலக் கவசமும் தோள்களுக்கிடையில் வெண்கல எறிவேலும் அவன் அணிந்திருந்தான்.
7 அவனது ஈட்டிக்கோல் தறிக்கட்டை போல் பெரிதாயிருந்தது. அவனது ஈட்டியின் முனை ஏழு கிலோ இரும்பால் ஆனது. அவனுடைய கேடயம் தாங்குவோன் அவனுக்கு முன்பாக நடப்பான்.
8 அவன் இஸ்ரயேல் படைகளுக்கு எதிரே நின்று உரத்த குரலில், "நீங்கள் போருக்கா அணிவகுத்து வந்தீர்கள்? நான் ஒரு பெலிஸ்தியன்! நீங்கள் சவுலின் அடிமைகள் அல்லவா! உங்களில் ஒருவனைத் தேர்ந்தெடுங்கள். அவன் என்னிடம் வரட்டும்.
9 அவன் என்னுடன் போரிட்டு என்னைக் கொன்றால் நாங்கள் உங்களுக்கு அடிமைகளாவோம்; நான் அவனை வென்று அவனைக் கொன்று விட்டால் நீங்கள் அடிமைகளாகி எங்களுக்குப் பணி செய்ய வேண்டும்" என்றான்.
10 மேலும் அந்தப் பெலிஸ்தியன், "இதோ, இஸ்ரயேல் படைகளுக்குச் சவால் விடுகிறேன். என்னோடு போரிட இப்பொழுதே ஒருவனை அனுப்புங்கள்" என்றான்.
11 சவுலும் இஸ்ரயேலர் அனைவரும் பெலிஸ்தியனின் இவ்வார்த்தைகளைக் கேட்டுக் கலங்கிப் பெரிதும் அச்சமுற்றனர்.

சவுலின் பாளையத்தில் தாவீது[தொகு]


12 தாவீது யூதாவின் பெத்லகேமைச் சார்ந்த எப்ராத்தியரான ஈசாய் என்பவரின் மகன். ஈசாய்க்கு எட்டுப் புதல்வர் இருந்தனர்; சவுலின் காலத்திலேயே ஈசாய் மிகவும் முதிர்ந்தவராயிருந்தார்.
13 இவருடைய மூத்த புதல்வர் மூவர் சவுலுடன் போருக்குச் சென்றிருந்தனர். அம் மூவரில், மூத்தவன் பெயர் எலியாபு, அடுத்தவன் பெயர் அபினதாபு, மூன்றாமவன் பெயர் சம்மாகு.
14 தாவீது எல்லாருக்கும் இளையவன். மூத்தவர்களாகிய அம்மூவர்களே சவுலோடு சென்றிருந்தனர்.
15 ஆனால் தாவீது சவுலை விட்டுத் திரும்பிச் சென்று பெத்லகேமில் தன் தந்தையின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.
16 அந்தப் பெலிஸ்தியன் காலையிலும், மாலையிலும் நாற்பது நாள்கள் இவ்வாறு சவால் விட்டான்.
17 ஈசாய் தம் மகன் தாவீதிடம் "உன் சகோதரர்களுக்காக இந்த இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவையும், பத்து அப்பத்துண்டுகளையும் எடுத்துக் கொண்டு பாளையத்தில் இருக்கும் உன் சகோதரர்களிடம் உடனே விரைந்து செல்.
18 இந்தப் பத்துப் பால் கட்டிகளை ஆயிரத்தவர் தலைவனிடம் அளித்து விட்டு, உன் சகோதரர் நலமுடன் இருக்கிறார்களா என்று கேட்டு, அவர்களிடமிருந்து அடையாளமொன்று பெற்றுவா" என்று கூறினார்.
19 அப்பொழுது சவுலும், அவர்களும், இஸ்ரயேலர் எல்லாரும் ஏலா பள்ளத்தாக்கில் பெலிஸ்தியருடன் போரிட்டுக் கொண்டிருந்தனர்.


20 தாவீது விடியற் காலையில் எழுந்து ஆடுகளைக் காவலன் ஒருவனிடம் ஒப்படைத்துவிட்டு, உணவுப் பொருள்களை எடுத்துக் கொண்டு, ஈசாய் தமக்குக் கட்டளையிட்டவாறு புறப்பட்டுச் சென்று பாசறையை அடைந்தார்; அப்பொழுது இஸ்ரயேலரின் படைகள் அணிவகுப்பு நடத்திப் போர்க்குரல் எழுப்பின.
21 இஸ்ரயேலரும் பெலிஸ்தியரும் எதிர் எதிராக அணிவகுத்து நின்றனர்.
22 தாவீது தாம் கொண்டுவந்தவற்றைப் பொருள்களைப் பாதுகாக்கும் காவலன் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு போர்க்களத்திற்குள் ஓடினார். அங்கே தம் சகோதரர்களைக் கண்டு நலம் விசாரித்தார்.
23 அவர் அவர்களோடு பேசிக்கொண்டிருக்கையில் இதோ காத்து நகரைச் சார்ந்த பெலிஸ்திய வீரனான கோலியாத்து என்பவன் பெலிஸ்தியர் அணிகளினின்று வெளித்தோன்றி, தான் முன்பு சொன்ன வார்த்தைகளையே மீண்டும் சொன்னான்; தாவீது அதைக் கேட்டார்.
24 அவனைக் கண்ட இஸ்ரயேலர் அனைவரும் மிகவும் அச்சமுற்று அவன் முன்னின்று ஓடினர்.
25 "இதோ நிற்கிற இம்மனிதனைப் பார்த்தீர்களா? இஸ்ரயேலை உண்மையாகவே இழிவுபடுத்த இவன் வந்துள்ளான்! இவனைக் கொல்பவனுக்கு அரசர் மிகுந்த செல்வம் அளித்துத் தம் மகளையும் மணமுடித்துக் கொடுப்பார்; அத்துடன் இஸ்ரயேலரிடையே அவன் தந்தை வீட்டார்க்கு மட்டும் வரிவிலக்குச் செய்வார்" என்று இஸ்ரயேலர் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
26 அப்பொழுது தாவீது தம்மருகிலிருந்தவர்களை நோக்கி, "இந்தப் பெலிஸ்தியனைக் கொன்று இஸ்ரயேலின் இழிவை நீக்குகிறவனுக்கு என்ன கிடைக்கும்? வாழும் கடவுளின் படைகளைப் பழிப்பதற்கு விருத்தசேதனம் இல்லாத பெலிஸ்தியனாகிய இவன் யார்?" என்று கேட்டார்.
27 அதற்கு மக்கள், "அவனைக் கொல்பவனுக்கு இவை அனைத்தும் அளிக்கப்படும்" என்று முன்பு சொன்னவாறே பதிலளித்தனர்.


28 மக்களோடு அவர் பேசிக் கொண்டிருந்ததை அவர் மூத்த சகோதரன் எலியாபு கேட்டு, தாவீதின் மேல் வெஞ்சினமுற்று "நீ ஏன் இங்கு வந்தாய்? அந்தச் சில ஆடுகளையும் பாலைநிலத்தில் நீ யாரிடம் ஒப்படைத்தாய்? உன் செருக்கையும் ஆணவத்தையும் நான் அறிவேன்; ஏனெனில் போரை வேடிக்கை பார்க்கத்தான் நீ இங்கு வந்துள்ளாய்" என்றான்.
29 அதற்குத் தாவீது, "இப்பொழுது நான் என்ன செய்து விட்டேன்? ஒரு கேள்விதானே கேட்டேன்?" என்று கூறி,
30 அவனைவிட்டு, வேறொருவனிடம் சென்று அவ்வாறே கேட்டார்; மக்களும் முன்போலவே அவருக்குப் பதிலளித்தனர்.


31 தாவீது கூறிய வார்த்தைகளைக் கேட்டவர்கள் அவற்றைச் சவுலிடம் தெரிவித்தனர்; அப்பொழுது சவுல் அவரை வரவழைத்தார்.
32 தாவீது சவுலை நோக்கி, "இவன் பொருட்டு யாருடைய இதயமும் கலங்க வேண்டியதில்லை; உம் அடியானாகிய நானே சென்று அந்தப் பெலிஸ்தியனோடு போரிடுவேன்" என்றார்.
33 அதற்குச் சவுல் தாவீதிடம், "இந்தப் பெலிஸ்தியனை எதிர்த்துப் போரிட உன்னால் இயலாது; நீயோ இளைஞன், ஆனால் அவனோ தன் இள வயது முதல் போரில் பயிற்சியுள்ளவன்" என்றார்.


34 தாவீது சவுலை நோக்கி, "உம் அடியானாகிய நான் என் தந்தையின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது, சிங்கமோ அல்லது கரடியோ மந்தையில் புகுந்து ஆட்டைக் கவ்விக் கொண்டு ஓடினால்,
35 நான் பின்தொடர்ந்து ஓடி, அதை அடித்து, அதன் வாயினின்று ஆட்டை விடுவிப்பேன்; அது என் மீது பாய்ந்தால் அதன் தாடியைப் பிடித்து நன்றாக அடித்துக் கொல்வேன்.
36 உம் அடியானாகிய நான் சிங்கங்களையும் கரடிகளையும் இவ்வாறு கொன்றிருக்கிறேன்; விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தியனும் அவற்றில் ஒன்றைப் போல்தான்; ஏனெனில் அவன் வாழும் கடவுளின் படைகளை இழிவுபடுத்தியுள்ளான்" என்றார்.
37 மேலும் தாவீது, "என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த ஆண்டவர் இந்தப் பெலிஸ்தியனின் கைக்கும் தப்புவிப்பார்" என்றார். அதற்குச் சவுல் தாவீதிடம், "சென்று வா! ஆண்டவர் உன்னோடு இருப்பார்" என்றார்.


38 பின்பு சவுல் தாவீதுக்குத் தம் உடைகளை அணிவித்து, வெண்கலத் தலைக்கவசத்தை அவர் தலைமேல் வைத்து, மார்புக்கவசத்தையும் அவருக்கு அணிவித்தார்.
39 தாவீது சவுலின் வாளைத் தம் உடைமீது கட்டிக்கொண்டு தமக்குப் பழக்கமில்லாததால் நடந்து பார்த்தார். தாவீது சவுலை நோக்கி, "இவற்றுடன் என்னால் நடக்கவியலாது, ஏனெனில் இதில் எனக்குப் பழக்கம் இல்லை" என்று கூறி அவற்றைக் களைந்துவிட்டார்.
40 தாவீது தம் கோலைக் கையில் எடுத்துக் கொண்டார்; நீரோடையிலிருந்து வழுவழுப்பான ஐந்து கூழாங்கற்களைத் தேர்ந்தெடுத்து இடையனுக்குரிய தம் பையில் போட்டுக் கொண்டார். தம் கவணைக் கையில் பிடித்துக்கொண்டு பெலிஸ்தியனை நோக்கிச் சென்றார்.

தாவீது கோலியாத்தைத் தோற்கடித்தல்[தொகு]


41 தன் கேடயமேந்துபவன் முன் செல்ல, அந்தப் பெலிஸ்தியனும் தாவீதை நோக்கி நடந்து அவரை நெருங்கினான்.
42 பெலிஸ்தியன் தாவீதைக் கூர்ந்து பார்த்து ஏளனம் செய்தான்; ஏனெனில் அவன் சிவந்த மேனியும் அழகிய தோற்றமும் உடைய இளைஞனாய் இருந்தான்.
43 அப்பெலிஸ்தியன் தாவீதைப் பார்த்து, "நீ கோலுடன் என்னிடம் வர நான் என்ன நாயா?" என்று சொல்லி தன் தெய்வங்களின் பெயரால் தாவீதைச் சபிக்கத் தொடங்கினான்.
44 மீண்டும் பெலிஸ்தியன் தாவீதை நோக்கி, "அருகே வா! வானத்துப் பறவைகளுக்கும் வனத்து விலங்குகளுக்கும் உன் உடலை இரையாக்குவேன்" என்றான்.


45 அப்பொழுது தாவீது பெலிஸ்தியனிடம், "நீ வாளோடும் ஈட்டியோடும் எறிவேலோடும் என்னிடம் வருகிறாய்; நானோ நீ இகழ்ந்த இஸ்ரயேலின் படைத்திரளின் கடவுளாகிய, படைகளின் ஆண்டவர்தம் பெயரால் வருகிறேன்.
46 இன்றே ஆண்டவர் உன்னை என் கையில் ஒப்புவிப்பார்; நான் உன்னை வீழ்த்தி உன் உடலைத் துண்டிப்பேன்; பெலிஸ்தியரின் பிணங்களை வானத்துப் பறவைகளுக்கும் பூவுலக விலங்குகளுக்கும் கையளிப்பேன்; இஸ்ரயேலரிடையே கடவுள் இருக்கிறார் என்பதை உலகிலுள்ள எல்லாரும் இதனால் அறிந்துகொள்வர்.
47 மேலும், ஆண்டவர் வாளினாலும் ஈட்டியினாலும் மீட்கின்றவர் அல்லர் என்று இந்த மக்கள் கூட்டம் அறிந்துகொள்ளட்டும்; எனெனில் இது ஆண்டவரின் போர்! அவரே உங்களை எங்கள் கையில் ஒப்புவிப்பார்" என்றார்.
48 பெலிஸ்தியன் எழுந்து தாவீதை நோக்கிப் புறப்படுகையில் தாவீதும் அவனுடன் போரிட பெலிஸ்தியப் படைத்திரளை நோக்கி விரைந்து ஓடினார்.
49 தாவீது தம் பையில் கை வைத்து ஒரு கல்லை எடுத்தார்; அதைக் கவணில் வைத்துச் சுழற்றிப் பெலிஸ்தியனுடைய நெற்றியைக் குறி பார்த்து எறிந்தார். அந்த கல்லும் அவனது நெற்றிக்குள் தாக்கிப் பதியவே, அவன் தரையில் முகம் குப்புற விழுந்தான்.
50 இவ்வாறு தாவீது, கையில் வாளேதும் இன்றிக் கவணும் கல்லும் கொண்டு பெலிஸ்தியன் மீது வெற்றிகொண்டு, அவனை வீழ்த்திக் கொன்றார். [1]
51 உடனே தாவீது ஓடி, அந்தப் பெலிஸ்தியனின்மேல் ஏறிநின்றார்; அவனது வாளை அதன் உறையிலிருந்து உருவி அவனைக் கொன்று, அவன் தலையை கொய்தார். [2]
52 யூதா மக்களுக்கு இஸ்ரயேல் மக்களும் எழுந்து ஆர்ப்பரித்து எக்ரோன் வாயில் மட்டுமுள்ள காத்து பள்ளத்தாக்கு வரை துரத்திச்சென்றனர். சாராயிமின் சாலையில், காத்து, எக்ரோன் எல்லை வரையிலும் பெலிஸ்தியர் வெட்டுண்டு கிடந்தனர்.
53 இஸ்ரயேலர் பெலிஸ்தியரைப் பின்தொடர்வதை நிறுத்திவிட்டு அவர்களது பாசறையைக் கொள்ளையடித்தனர்.
54 தாவீது அப்பெலிஸ்தியனின் தலையை எடுத்து எருசலேமுக்குக் கொண்டு சென்றார். ஆனால் தம் படைக்கலன்களைத் தம் கூடாரத்தில் வைத்தார்.

தாவீது சவுலின் முன் நிறுத்தப்படல்[தொகு]


55 பெலிஸ்தியனுக்கு எதிராகத் தாவீது சென்றதை சவுல் கண்டபோது அவர் படைத்தலைவன் அப்னேரிடம், "அப்னேர், இந்த இளைஞன் யாருடைய மகன்?" என்று கேட்டார். அப்னேர் அதற்கு, "அரசே உம் உயிர்மேல் ஆணை! அதை நான் அறியேன்" என்றான்.
56 மீண்டும் அரசர், "இவ்விளைஞன் யாருடைய மகன் என்று விசாரித்து வா" என்றார்.
57 தாவீது பெலிஸ்தியனைக் கொன்றுவிட்டு திரும்பிய போது அப்னேர் அவரை சவுலிடம் அழைத்துச் சென்றார்; அப்பொழுது அவர் கையில் பெலிஸ்தியனின் தலை இருந்தது.
58 சவுல் அவரிடம், "இளைஞனே, நீ யாருடைய மகன்?" என்று கேட்டார். அதற்குத் தாவீது "பெத்லகேம் ஊரைச் சார்ந்த உம் அடியான் ஈசாயின் மகன் நான்" என்று பதிலளித்தார்.

குறிப்புகள்

[1] 17:50 = 2 சாமு 21:19.
[2] 17:51 = 1 சாமு 21:29.

அதிகாரம் 18[தொகு]

யோனத்தானும் தாவீதும்[தொகு]


1 தாவீது சவுலிடம் பேசி முடித்தபோது யோனத்தானின் உள்ளம் தாவீதின் உள்ளத்தோடு ஒன்றுபட்டது. யோனத்தான் அவரைத் தம் உயிரெனக் கருதி, அவர் மீது அன்பு கொண்டிருந்தார்.
2 அன்று சவுல் தாவீதைத் தம்முடன் அழைத்துச் சென்றார்; அவருடைய தந்தை வீட்டுக்குத் திரும்பிப் போக இசைவு அளிக்கவில்லை.
3 பின்பு யோனத்தான் தாவீதுடன் உடன்படிக்கை செய்து கொண்டார்; ஏனெனில் அவரைத் தம் உயிரெனக் கருதி, அவர் மீது அன்பு கொண்டிருந்தார்.
4 யோனத்தான் தாம் அணிந்திருந்த மேலங்கியைக் கழற்றித் தாவீதுக்குக் கொடுத்தார். அத்துடன் தம் அங்கி, வாள், வில், கச்சை ஆகியவற்றையும் கொடுத்தார்.
5 தாவீது, சவுல் தம்மை அனுப்பிய இடமெல்லாம் சென்று வெற்றியைக் கொணர்ந்தார்; அதனால் சவுல் அவரைப் படைத்தலைவராக்கினார். மக்கள் எல்லாரும் மற்றும் சவுலின் அலுவலர்களும் இதைப் பெரிதும் விரும்பினர்.

சவுலின் பொறாமை[தொகு]


6 தாவீது பெலிஸ்தியனைக் கொன்ற பின், வீரர்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, இஸ்ரயேலின் எல்லா நகர்களிலிருந்தும் பெண்கள் ஆடல் பாடலுடன் அரசர் சவுலைச் சந்திக்க வந்தனர்; அவர்கள் கஞ்சிராக்களோடும் நரம்பிசைக் கருவிகளுடனும் மகிழ்ச்சிப் பாடல் எழுப்பினர்.
7 அப்பெண்கள் அப்படி ஆடிப்பாடுகையில் "சவுல் ஆயிரம் பேரைக் கொன்றார்; தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றார்" என்று பாடினர். [*]
8 இந்த வார்த்தைகள் சவுலுக்கு அறவே பிடிக்கவில்லை; அவர் மிகவும் சினமுற்று, "அவர்கள் 'தாவீதுக்குப் பதினாயிரம் பேர்' என்றனர். எனக்கோ, 'ஆயிரம் பேர் மட்டுமே' என்றனர். அவனுக்கு இன்னும் குறைவாக இருப்பது ஆட்சி ஒன்று தான்!" என்று கூறினார்.
9 அன்று முதல் சவுல் தாவீதைப் பொறாமைக் கண் கொண்டு பார்க்கலானார்.


10 மறுநாளே கடவுள் அனுப்பிய தீய ஆவி சவுலை ஆட்கொள்ள, அவர் தம் வீட்டில் பிதற்றினார். அப்பொழுது தாவீது ஒவ்வொரு நாளும் செய்வது போல் யாழ் எடுத்து மீட்டினார். சவுலின் கையில் ஈட்டி இருந்தது.
11 "நான் தாவீதைச் சுவரோடு சேர்த்துக் குத்துவேன்" என்று சவுல் நினைத்துத் தம் ஈட்டியை அவர்மேல் எறிந்தார்; ஆனால் தாவீது இருமுறை அதைத் தவிர்த்துவிட்டார்.


12 ஆண்டவர் தம்மிடமிருந்து விலகி, தாவீதுடன் இருந்ததனால் அவருக்குச் சவுல் அஞ்சினார்.
13 ஆதலால் சவுல் அவரைத் தம் முன்னின்று அகற்றி, ஆயிரவர் தலைவராக்கினார். தாவீது வீரர்களை முன்னின்று நடத்தினார்.
14 ஆண்டவர் தாவீதுடன் இருந்ததால், அவர் செய்த யாவற்றிலும் வெற்றி கண்டார்.
15 அவர் பெரும் வெற்றிகளைக் குவிப்பதைக் கண்ட போது, சவுல் அவருக்கு இன்னும் அஞ்சினார்.
16 ஆனால் இஸ்ரயேலரும் யூதா மக்கள் அனைவரும் தாவீதின் மீது அன்பு செலுத்தினர்; ஏனெனில் அவரே அவர்களை முன்னின்று நடத்திச் சென்றார்.

சவுலின் மகளைத் தாவீது மணத்தல்[தொகு]


17 பின்பு சவுல், 'என் கை அவன் மேல் படாமல் பெலிஸ்தியர் கை அவன் மேல் படட்டும்' என்று எண்ணி, தாவீதை நோக்கி, "இதோ என் மூத்த மகள் மேராபு! அவளை உனக்கு மணமுடித்துக் கொடுப்பேன். நீ மட்டும் வீரமுள்ளவனாகச் செயல்பட்டு ஆண்டவரின் படைகளை நடத்திச் செல்" என்றார்.
18 அப்பொழுது தாவீது சவுலிடம், "அரசரின் மருமகன் ஆவதற்கு நான் யார்? என் உறவினர் யார்? இஸ்ரயேலில் என் தந்தையின் குலம் என்ன?" என்று கேட்டார்.
19 சவுலின் மகள் மேராபைத் தாவீதுக்கு மணமுடிக்கவிருந்த நேரத்தில், அவள் மெகொலாயனாகிய அதிரியேலுக்கு மனைவியாக அளிக்கப்பட்டாள்.
20 அதன் பின், சவுலின் மகள் மீக்கால் தாவீதின்மீது காதல் கொண்டாள்; இது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது அவர் மகிழ்ச்சியுற்றார்.
21 'நான் அவளை அவனுக்குக் கொடுப்பேன். அவளும் அவனுக்கு மனைவியாய் இருப்பாள்; பெலிஸ்தியரும் அவனுக்கு எதிராக எழுவர்' என்று சவுல் நினைத்து, தாவீதை நோக்கி, "இப்பொழுது என் இரண்டாம் மகள்மூலம் நீ என் மருமகன் ஆவாய்" என்று கூறினார்.
22 சவுல் தம் பணியாளர்களிடம் "தாவீதோடு இரகசியமாய்ப் பேசி, 'இதோ! அரசர் உம்மீது விருப்பம் கொண்டுள்ளார்; அவருடைய அலுவலர்கள் எல்லாரும் உம்மீது அன்பு கொண்டுள்ளார்கள். ஆதலால், நீர் இப்பொழுது அரசருக்கு மருமகனாய் இரும்' என்று செல்லுங்கள்" என்றார்.
23 சவுலின் பணியாளர்கள் அந்த வார்த்தைகளைத் தாவீதின் காதுகளில் ஓதினர். அப்பொழுது தாவீது, "அரசருக்கு மருமகன் ஆவது உங்களுக்கு அவ்வளவு எளிதானதாய்த் தோன்றுகிறதா? நான் எளியவனும் தாழ்ந்தவனுமாய் உள்ளேன் அன்றோ?" என்றார்.
24 சவுலின் பணியாளர்கள் அவரிடம், "தாவீது இவ்வார்த்தைகளைச் சொன்னான்" என்றனர்.


25 பின்பு சவுல், "தாவீதிடம் இவ்வாறு நீங்கள் சொல்லுங்கள்; 'அரசர் திருமணப் பரிசம் ஏதும் விரும்பவில்லை; அரசருடைய எதிரிகளைப் பழிவாங்கி, பெலிஸ்தியரின் நூறு நுனித்தோல்களை நீ கொண்டுவந்தால் போதும்' என்று சொல்லுங்கள்" என்றார். தாவீது பெலிஸ்தியர் கையில் அகப்பட்டு மடியவேண்டுமென்பதே சவுலின் திட்டம்.
26 சவுலின் பணியாளர்கள் தாவீதுக்கு அந்த வார்த்தைகளைக் கூறிய போது, அரசருக்கு மருமகனாய் ஆவது குறித்து தாவீது மகிழ்ச்சியுற்றார்.
27 திருமணநாள் நெருங்குமுன் தாவீது தம் ஆள்களுடன் சென்று பெலிஸ்தியரில் இருநூறு பேரைக் கொன்றார். பின்னர் தாவீது அவர்களின் நுனித் தோல்களைக் கொண்டுவந்து, அரசரின் மருமகனாகும் பொருட்டு, அவற்றை அவரிடம் சரியாக எண்ணிவைத்தார். எனவே சவுல் தம் மகள் மீக்காலைத் தாவீதுக்கு மணமுடித்துக் கொடுத்தார்.
28 ஆனால், ஆண்டவர் தாவீதோடு இருப்பதையும், இஸ்ரயேல் முழுவதும் அவர்மீது அன்பு கொண்டுள்ளதையும், சவுல் தெளிவாகக் கண்டுணர்ந்தார்.
29 எனவே, சவுல் தாவீதுக்கு அதிகம் அஞ்சினார்; சவுல் தாவீதை என்றென்றும் தம் எதிரியாகக் கருதினார்.
30 பின்பு, பெலிஸ்தியப் படைத் தலைவர்கள் போரிடுமாறு புறப்பட்டு வந்தனர். அப்படி அவர்கள் வந்தபோதெல்லாம் சவுலின் மற்ற எல்லாத் தலைவர்களைவிடத் தாவீது மிகுதியான வெற்றி அடைந்தார். அதனால் தாவீதின் புகழ் மேலோங்கியது.

குறிப்பு

[*] 18:7 = 1 சாமு 21:11; 29:5.


(தொடர்ச்சி): சாமுவேல் - முதல் நூல்:அதிகாரங்கள் 19 முதல் 20 வரை