திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/சாமுவேல் - முதல் நூல்/அதிகாரங்கள் 19 முதல் 20 வரை

விக்கிமூலம் இலிருந்து
சவுல் மன்னரின் முன்னிலையில் இளைஞன் தாவீது யாழ் மீட்டுகிறார். ஓவியர்: ரெம்ப்ராண்ட் (1606-1669). காப்பிடம்: தெ ஹேக், ஓலாந்து.

1 சாமுவேல் (The First Book of Samuel)[தொகு]

அதிகாரங்கள் 19 முதல் 20 வரை

அதிகாரம் 19[தொகு]

சவுல் தாவீதைத் துன்புறுத்துதல்[தொகு]


1 தாவீதைக் கொல்ல வேண்டுமென்று தம் மகன் யோனத்தானிடமும் தம் அலுவலர் எல்லாரிடமும் சவுல் தெரிவித்தார். ஆனால் சவுலின் மகன் யோனத்தான் தாவீதின் மீது மிகுதியாக அன்பு கொண்டிருந்தார்.
2 ஆதலால் தாவீதைப் பார்த்து யோனத்தான், "என் தந்தை சவுல் உன்னைக் கொல்லத் தேடுகிறார்; ஆதலால் எச்சரிக்கையாய் இரு. காலையிலேயே புறப்பட்டு மறைவாக ஓர் இடத்திற்குச் சென்று ஒளிந்துகொள்.
3 நீ வெளியில் இருக்கும் சமயத்தில் நான் என் தந்தையின் அருகில் இருந்துகொண்டு, உன்னைப் பற்றி அவரிடம் பேச்சுக் கொடுப்பேன்; அப்படி நான் அறிகிறதையெல்லாம் உனக்குத் தெரிவிப்பேன்" என்றார்.


4 யோனத்தான் தாவீதைப் பற்றித் தம் தந்தை சவுலிடம் நல்லவிதமாகப் பேசி, "அரசர் தம் அடியான் தாவீதின் பொருட்டு பாவம் செய்ய வேண்டாம்; ஏனெனில் அவன் உமக்குத் தீங்கு ஏதும் செய்ததில்லை; மேலும் அவனுடைய செயல்கள் உம் அரசில் மிகவும் பயனுடையனவாய் இருந்தன.
5 அவன் தன் உயிரை ஒரு பொருட்டாய் எண்ணாது அப் பெலிஸ்தியனைக் கொன்றான். ஆதலால் ஆண்டவர் பெலிஸ்தியர் எல்லாருக்கும் பெரும் வெற்றியை அளித்தார். நீர் அதைக் கண்டு மகிழ்ச்சியுற்றீர்; அப்படியிருக்க எக்காரணமும் இல்லாமல் தாவீதைக் கொல்வதன் மூலம் குற்றமற்ற இரத்தத்திற்கு எதிராக நீர் ஏன் பாவம் செய்ய வேண்டும்?" என்று கூறினார்.


6 சவுல் யோனத்தானின் வார்த்தைகளைக் கேட்டார்; அதனால் சவுல் "வாழும் ஆண்டவர் மேல் ஆணை! அவன் கொலை செய்யப்படமாட்டான்" என்றார்.
7 பின்பு யோனத்தான் தாவீதை அழைத்து இவ்வார்த்தைகளை எல்லாம் அவருக்குக் கூறினார்; மேலும் யோனத்தான் தாவீதைச் சவுலிடம் அழைத்துச் செல்ல, முன்பு போலவே தாவீது அவரது பணியில் ஈடுபட்டார்.


8 மீண்டும் போர் மூண்டது; தாவீது புறப்பட்டுப் பெலிஸ்தியருடன் போரிட்டு அவர்களில் மிகுதியானோரை வெட்டி வீழ்த்தினார்; அதனால் அவர்கள் சிதறி ஓடினார்கள்.
9 பின்னர் ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி சவுலின் மேல் இறங்கியது; அப்பொழுது அவர் தம் வீட்டில் ஈட்டியுடன் வீற்றிருக்க, தாவீது யாழ் எடுத்து மீட்டிக் கொண்டிருந்தார்.
10 அப்பொழுது சவுல் தாவீதை ஈட்டியால் சுவரோடு சேர்த்துக் குத்த முயன்றார். ஆனால் சவுலின் குறியிலிருந்து விலகினதால் சவுலின் ஈட்டி சுவரில் பாய்ந்தது. அன்றிரவே தாவீது அங்கிருந்து தப்பியோடினார்.


11 உடனே சவுல் தாவீதை அவர் வீட்டில் கண்காணித்து மறுநாள் காலையில் கொன்றுவிடுமாறு காவலர்களை அனுப்பினர். ஆனால் தாவீதின் மனைவி மீக்கால் அவரிடம், "நீர் இன்றிரவே உம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளாவிட்டால், நாளை நீர் கொல்லப்படுவீர் என்றாள். [1]
12 ஆதலால் மீக்கால் தாவீதைப் பலகணி வழியே இறக்கிவிடவே அவரும் அங்கிருந்து ஓடித் தப்பித்துக்கொண்டார். 13 மீக்கால் குடும்பச் சிலையை எடுத்து அதைப் படுக்கையில் கிடத்தினாள். அதன் தலைப்பாகத்தில் ஒரு வெள்ளாட்டுத்தோலை வைத்து ஒரு போர்வையால் மூடினாள்.
14 தாவீதைப் பிடித்து வரச் சவுல் தூதர்களை அனுப்பிய போது, அவள் "அவர் நோயுற்றிருக்கிறார்" என்றாள்.
15 மறுபடியும் சவுல் தாவீதைப் பார்க்கும்படி தூதர்களை அனுப்பி, "நான் கொல்லுமாறு அவனைப் படுக்கையோடு என்னிடம் கொண்டு வாருங்கள்" என்றார்.
16 அவர்கள் வந்தபோது இதோ படுக்கையின் மேல் குடும்பச் சிலையும் அதன் தலைமாட்டில் வெள்ளாட்டுத் தோலும் இருக்கக் கண்டனர்.
17 சவுல் மீக்காலிடம், "என் பகைவனைத் தப்பிக்குமாறு அனுப்பி, ஏன் என்னை வஞ்சித்தாய்?" என்று கேட்டார். அதற்கு மீக்கால் சவுலிடம், "'என்னை போகவிடு; இல்லையெனில் உன்னைக் கொன்று விடுவேன்' என்று அவர் மிரட்டினார்" என்று மறுமொழி கூறினாள்.


18 அப்பொழுது தாவீது அங்கிருந்து தப்பியோடி இராமாவில் இருந்த சாமுவேலிடம் வந்து, சவுல் தமக்குச் செய்த யாவற்றையும் கூறினார். பின்னர் அவரும் சாமுவேலும் நாவோத்துக்குச் சென்று தங்கினர்.
19 "இதோ இராமாவில் உள்ள நாவோத்தில் தாவீது இருக்கிறார்" என்று சவுலுக்குத் தெரிவிக்கப்பட்டது.
20 உடனே சவுல், தாவீதைப் பிடித்துவர ஆள்களை அனுப்பினார். அவர்கள் சென்றபோது இறைவாக்கினர் இறைவாக்குரைப்பதையும், சாமுவேல் அவர்களுக்குத் தலைமை தாங்கி நிற்பதையும் கண்டனர்; அத்துடன், சவுலின் ஆள்கள் மேலும் கடவுளின் ஆவி இறங்கி வரவே அவர்களும் இறைவாக்குரைத்தனர்.
21 சவுலுக்கு இது தெரிவிக்கப்பட்டபோது அவர் மூன்றாம் முறையாக ஆள்களை அனுப்ப, அவர்களும் இறைவாக்குரைத்தனர்.
22 அடுத்து அவரே இராமாவுக்கு சென்று, சேக்குவிலிருக்கும் பெரிய கிணற்றருகே வந்து, "சாமுவேலும் தாவீதும் எங்கே?" என்று கேட்டார். அதற்கு ஒருவன், "இதோ இராமாவிலுள்ள நாவோத்தில் அவர்களைக் காணலாம்" என்றான்.
23 ஆதலால் அவர் அங்கிருந்து இராமாவிலிருந்த நாவோத்துக்குப் புறப்பட்டார்; கடவுளின் ஆவி அவர் மேலும் இறங்கி வரவே, இராமாவின் நாவோத்துக்குச் சென்றடையும் வரை அவரும் இறைவாக்குரைத்தார்.
24 அவரும் தம் மேலுடையைக் களைந்துவிட்டு சாமுவேலின்முன் அவரும் இறைவாக்குரைத்தார். அன்று பகல் இரவு முழுவதும் ஆடையணியாமல் விழுந்து கிடந்தார். அதனால்தான், "சவுலும் இறைவாக்கினருள் ஒருவனோ?" என்ற சொல் வழங்கலாயிற்று! [2]

குறிப்புகள்

[1] 19:11 = திபா 59 தலைப்பு.
[2] 19:24 = 1 சாமு 10:11-12.

அதிகாரம் 20[தொகு]

சவுலுக்கு யோனத்தானின் உதவி[தொகு]


1 பின்பு, தாவீது இராமாவிலிருந்த நாவோத்திலிருந்து புறப்பட்டுச் சென்று யோனத்தானிடம் வந்து, "நான் செய்தது என்ன? நான் செய்த குற்றம் என்ன? உன் தந்தைக்கு எதிராக நான் செய்த பாவம் என்ன? பின்பு, ஏன் என்னைக் கொல்லத் தேடுகிறார்?" என்று கேட்டார்.
2 அதற்கு அவர், "ஒருக்காலும் இல்லை. நீ சாக மாட்டாய். இதோ என்னோடு கலந்தாலோசிக்காமல் என் தந்தை பெரிதோ சிறிதோ எதுவும் செய்யமாட்டார். இச்செயலை மட்டும் என் தந்தை மறைப்பானேன்? அப்படி நடக்காது" என்றார்.
3 அதற்குத் தாவீது, "உன் கண்களில் எனக்கு இரக்கம் கிடைத்துள்ளது என்று உன் தந்தைக்கு நன்கு தெரியும். ஆகையால் 'யோனத்தான் இதை அறிய நேர்ந்தால் அவன் வேதனையடைவான்' என்று அவர் நினைக்கிறார். ஆனால் இது உண்மை; எனக்கும் சாவுக்கும் ஓர் அடி தூரந்தான் உள்ளது. வாழும் ஆண்டவர் மேல் ஆணை! என் மேலும் ஆணை!" என்றார்.
4 அப்பொழுது யோனத்தான் தாவீதிடம், "உன் விருப்பப்படி நான் உனக்கு எதுவும் செய்யத் தயார்" என்றார்.


5 தாவீது யோனத்தானை நோக்கி, "இதோ! நாளை அமாவாசை; அரசரோடு நான் பந்தியிலிருக்கும் நாள். ஆனால் மூன்றாம் நாள் மாலைவரை வெளியில் சென்று ஒளிந்திருக்க எனக்கு விடை கொடு. [1]
6 உன் தந்தை என்னைக் காணாதது பற்றி விசாரித்தால், 'தாவீது தன் சொந்த நகரான பெத்லகேமுக்குச் சென்றுள்ளான்; அவன் குடும்பத்தார் அனைவருக்கும் அங்கே ஆண்டுப் பலி இருக்கிறதாம்! அங்கே விரைந்து செல்ல என்னிடம் அனுமதி கேட்டான் "என்று சொல்.
7 அவர் 'நல்லது' என்று சொன்னால் உன் அடியான் அமைதியடைவான்; அவர் சினமுற்றால் எனக்குத் தீங்கு செய்ய முடிவு செய்துள்ளார் என நீ அறிந்துகொள்வாய்.
8 ஆண்டவர் திருமுன் நீ உன் அடியானுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின்பொருட்டு என் மேல் இரக்கம் வை. நான் குற்றவாளியாயின் நீயே என்னைக் கொன்று விடு. நீ ஏன் என்னை உன் தந்தையிடம் கொண்டுபோக வேண்டும்?" என்றார்.


9 அதற்கு யோனத்தான், "அப்படி உனக்கு நேராது. உனக்குத் தீங்கு செய்ய என் தந்தை முடிவுசெய்துள்ளார் என நான் அறிந்தால் அதை உனக்கு சொல்லாமல் இருப்பேனா?" என்றார்.
10 பின்பு தாவீது யோனத்தானை நோக்கி, "உன் தந்தை உன்னிடம் கடுமையான பதிலளித்தால் அதை யார் எனக்குத் தெரிவிப்பார்?" என்று கேட்டார்.
11 அதற்கு யோனத்தான் தாவீதிடம் "வெளியில் செல்வோம், வா!" என்றார். இருவரும் வயல்வெளிக்குச் சென்றனர்.


12 யோனாத்தான் தாவீதை நோக்கி, "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் சான்று பகர்வாராக! நாளை இதே நேரத்தில் அல்லது மூன்றாம் நாளில் என் தந்தையின் கருத்தை அறிவேன்; அது தாவீதுக்குச் சாதகமாய் இருந்ததால் உனக்கு அதைத் தெரிவிக்க ஆளனுப்பமாட்டேனா?
13 ஆனால் என் தந்தை உனக்குத் தீங்கு செய்ய விரும்பியுள்ளதை அறிந்தும், அதை நான் உனக்கு வெளிப்படுத்தி உன்னைப் பாதுகாப்புடன் அனுப்பி வைக்காவிடில் ஆண்டவர் என்னைத் தண்டிப்பாராக! ஆண்டவர் என் தந்தையுடன் இருந்தது போல் உன்னோடு இருப்பாராக!
14 நான் தொடர்ந்து உயிருடன் இருந்தால், நான் சாகாதவாறு ஆண்டவரின் பொருட்டு என்மேல் இரக்கம் வை.
15 ஆண்டவர் தாவீதின் எல்லா எதிரிகளையும் இம்மண்ணிலிருந்து அழித்தொழிக்கும்போது என் வீட்டாரை அழிக்காதிருக்கும்படி இரக்கம் வை. [2]
16 ஆண்டவர் தாவீதின் எதிரிகளுக்குத் தகுந்த பதிலளிப்பாராக!" என்று கூறி யோனத்தான் தாவீதின் வீட்டாருடன் உடன்படிக்கை செய்தார்.


17 தாவீதின் மீது கொண்டுள்ள அன்பின் பெயரால் யோனத்தான் மீண்டும் அவருக்கு ஆணையிட்டுக் கூறினார். ஏனெனில் அவர் தாவீதின் மேல் தம் உயிரென அன்புகொண்டிருந்தார்.
18 பின்பு யோனத்தான், "நாளை அமாவாசை; உனது இருக்கை காலியாக இருப்பதைக் கண்டு உன்னைப்பற்றி விசாரிப்பர்.
19 மூன்றாம் நாள் உன்னைக் கண்டிப்பாகத் தேடுவர். ஆதலால் நீ முன்பு ஒளிந்திருந்த இடத்திற்கே போ; அங்கே ஏசேல் கல் அருகில் ஒளிந்துகொண்டிரு.
20 நான் குறி வைத்து அம்பு எய்வதுபோல் அப்பக்கம் நோக்கி மூன்று அம்புகளை எய்வேன்.
21 பின்பு, 'போய் அம்புகளைத் தேடிவா' என்று ஒரு பையனை அனுப்புவேன். நான் அவனிடம், 'இதோ, அம்புகள் உனக்கு இப்பக்கம் கிடக்கின்றன, அவற்றைக் கொண்டு வா', என்பேனாகில் நீ என்னிடம் வா. ஏனெனில் வாழும் ஆண்டவர்மேல் ஆணை! உனக்குப் பாதுகாப்பு உண்டு. ஆபத்து நேராது.
22 மாறாக, 'இதோ அம்புகள் உனக்கு அப்பக்கம் கிடக்கின்றன' என்று அந்தப் பையனிடம் சொல்வேனாகில் நீ ஓடி விடு; ஏனெனில் ஆண்டவரே உன்னை அனுப்பி வைக்கிறார்.
23 நீயும் நானும் பேசியவற்றிற்கும் உனக்கும் எனக்கும் நடுவிலும் ஆண்டவரே என்றென்றும் சாட்சியாக இருப்பார்" என்றார்.


24 ஆதலால் அவ்வாறே தாவீது வயல் வெளியில் ஒளிந்து கொண்டார்; அமாவாசை நாள் வந்தபோது உணவருந்த அரசர் அமர்ந்தார்.
25 அரசர் சுவரோரம் இருக்கும் தமது இருக்கையில் வழக்கம்போல் அமர்ந்தார். சவுலுக்கு எதிரில் யோனத்தானும் பக்கவாட்டில் அப்னேரும் அமர்ந்தனர். ஆனால் தாவீதின் இருக்கை காலியாயிருந்தது.
26 இருப்பினும் 'அவனுக்கு ஏதோ நேர்ந்துள்ளது, அவன் தூய்மையின்றி இருக்கலாம், கண்டிப்பாக அவன் தீட்டாயிருக்க வேண்டும்' என்று நினைத்து சவுல் அன்று ஏதும் சொல்லவில்லை.
27 ஆனால் அமாவாசைக்கு அடுத்த நாளும் தாவீதின் இருக்கை காலியாக இருந்தது. அப்பொழுது சவுல் யோனத்தானை நோக்கி, "ஈசாயின் மகன் நேற்றும் இன்றும் உணவருந்த வராதது ஏன்?" என்று கேட்டார்.


28 யோனத்தான் சவுலிடம், "தான் பெத்லகேம் செல்ல வேண்டுமென்று அவன் வருந்திக் கேட்டுக்கொண்டான்:
29 'நான் செல்ல விடைகொடு; ஊரில் என் குடும்பத்தார் பலி செலுத்துகிறார்கள். மேலும் நான் அங்கிருக்க வேண்டுமென்று என் சகோதரரும் எனக்குக் கட்டளையிட்டுள்ளார். ஆதலால் உன் கண்களில் எனக்கு இரக்கம் கிடைத்தால் என் சகோதரர்களைக் காண என்னைப் போகவிடு' என்றான். இக்காரணத்தினால்தான் அவன் அரச பந்திக்கு வரவில்லை" என்று பதிலளித்தார்.


30 அப்பொழுது யோனத்தான் மீது சவுல் கடும் சினமுற்று அவரைப் பார்த்து, "பொய்யும் புரட்டும் நிறைந்த பெண்ணின் மகன் நீ! உனக்கும் உன் மானங்கெட்ட தாய்க்கும் அவமானமாய் இருக்கும்படி நீ ஈசாயின் மகன் மீது அன்பு கொண்டுள்ளாய் என்பதை நான் அறியேனோ?
31 ஈசாயின் மகன் உயிரோடு வாழும் நாள்வரை நீயும் நிலைத்திருக்கமாட்டாய்; உன் ஆட்சியும் நிலைபெறாது; அதலால் ஆளனுப்பி அவனை என்னிடம் கொண்டுவா; அவன் சாகவே வேண்டும்" என்றார்.
32 அப்பொழுது யோனத்தான் தம் தந்தை சவுலிடம், "அவன் ஏன் சாகவேண்டும்? அவன் என்ன செய்தான்?" என்று கேட்டார்.
33 ஆனால் சவுல் அவரைக் குத்தி வீழ்த்த எண்ணி அவரை நோக்கித் தம் ஈட்டியை எறிந்தார்; ஆதலால் தாவீதைக் கொன்றுவிட தம் தந்தை முடிவு செய்துவிட்டார் என்பதை யோனத்தான் அறிந்துகொண்டார்.
34 உடனே யோனத்தான் வெஞ்சினமுற்றுப் பந்தியைவிட்டு எழுந்துவிட்டார்; அமாவாசையின் மறுநாளாகிய அன்று அவர் உணவருந்தவில்லை. ஏனெனில் தாவீதைத் தம் தந்தை இழிவுபடுத்தியது குறித்து அவர் மிகவும் மனம் வருந்தினார்.


35 அடுத்த நாள் காலை யோனத்தான் தாவீதைச் சந்திக்குமாறு ஒரு பையனைத் தம்முடன் அழைத்துக் கொண்டு வயல்வெளிக்குச் சென்றார்.
36 அவர் அப்பையனிடம், "நீ ஓடி நான் எய்கிற அம்புகளை எடுத்து வா!" என்றார். அப்பபையன் ஓடும் போது அவனுக்கு அப்பால் ஓர் அம்பை எய்தார்.
37 யோனத்தான் எய்த அம்பு கிடந்த இடத்திற்கு அப்பையன் சென்ற போது, யோனத்தான் அவனைக் கூப்பிட்டு "உனக்கு அப்பால் அல்லவா அம்பு கிடக்கிறது?" என்றார்.
38 மீண்டும் பையனை உரத்த குரலில் கூப்பிட்டு, "நிற்காதே, "விரைந்து செல்" என்றார். அப்போது யோனத்தானின் பையன் அம்புகளை பொறுக்கிக்கொண்டு தன் தலைவனிடம் திரும்பினான்.
39 யோனத்தானுக்கும் தாவீதுக்கும் மட்டுமே அதன் பொருள் தெரியும்; ஆனால் அப்பையனுக்கோ ஒன்றும் தெரியாது.
40 பின்பு யோனத்தான் தம் படைக் கலன்களைப் பையனிடம் கொடுத்து, "இவற்றை நகருக்கு எடுத்துச் செல்" என்று பணித்தார்.


41 பையன் அங்கிருந்து சென்றவுடன், தாவீது தென்புறம் தாம் ஒளிந்திருந்த இடத்தினின்று வெளியே வந்து முகம் குப்புற விழுந்து மூன்று முறை வணங்கினார்; அதன்பின் அவர்கள் ஒருவரை ஒருவர் முத்தம் செய்து அழுதார்கள். தாவீது மிகவும் அழுதார்.
42 பின்பு யோனத்தான் தாவீதிடம், "நீ சமாதானமாய்ச் செல். ஆண்டவர் பெயரால் நாமிருவரும் செய்து கொண்ட உடன்படிக்கையின் பொருட்டு ஆண்டவர் உனக்கும் எனக்கும், உன் வழிமரபிற்கும் என் வழிமரபிற்கும் நடுவே என்றென்றும் சாட்சியாய் இருப்பாராக!" என்றார். பின்னர், தாவீது தன் வழியே சென்றார். யோனத்தான் நகருக்குத் திரும்பினார்.

குறிப்புகள்

[1] 20:5 = எண் 28:11.
[2] 20:15 = 2 சாமு 9:1.


(தொடர்ச்சி): சாமுவேல் - முதல் நூல்:அதிகாரங்கள் 21 முதல் 22 வரை