திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/சாமுவேல் - முதல் நூல்/அதிகாரங்கள் 21 முதல் 22 வரை

விக்கிமூலம் இலிருந்து
சவுல் மன்னர் தாவீதைக் கொல்ல எண்ணுகிறார் (1 சாமு 18:5-16). விவிலிய ஓவியம். ஆண்டு: 1902.

1 சாமுவேல் (The First Book of Samuel)[தொகு]

அதிகாரங்கள் 21 முதல் 22 வரை

அதிகாரம் 21[தொகு]

சவுலிடமிருந்து தாவீது தப்பித்தல்[தொகு]


1 பின்பு தாவீது நோபில் இருந்த குரு அகிமெலக்கிடம் சென்றார். அகிமெலக்கு தாவீதை நோக்கி நடுக்கத்துடன் வந்து அவரிடம், "நீ ஏன் தனியே இருக்கிறாய்? உன்னுடன் யாரும் வரவில்லையா? என்றார்.
2 அதற்குத் தாவீது குரு அகிமெலக்கிடம், "அரசர் எனக்கு ஒரு பணியைக் கட்டளையிட்டுள்ளார். 'நான் உன்னை அனுப்பிய நோக்கத்தையும் உனக்கு அளித்த கட்டளையையும் ஒருவரும் அறியக்கூடாது' என்று அரசர் கூறியுள்ளார். எனவே ஒரு குறிப்பிட்ட இடத்தில் என்னைச் சந்திக்குமாறு என் தோழர்களுக்குச் சொல்லியுள்ளேன்.
3 உண்பதற்கு இப்பொழுது உம்மிடம் என்ன இருக்கிறது? இரண்டு, மூன்று அப்பங்களோ வேறு என்ன உம்மிடம் உள்ளதோ எனக்குத் தாரும்" என்றார்.
4 குரு தாவீதை நோக்கி, "தூய அப்பமே என்னிடம் உள்ளது; சாதரணமாக அப்பங்கள் இல்லை. இளைஞர்களான நீங்கள் பெண்களோடு உறவு கொள்ளாமல் இருந்தால் நீங்கள் அதை உண்ணலாம்," என்றார்.
5 தாவீது குருவை நோக்கி, "சாதாரணப் பயணத்தின் போதே இவ்விளைஞர்கள் பெண்களுடன் உறவு கொள்வதில்லை; இன்றோ சிறப்புப் பணியை மேற்கொண்டுள்ளதால் நேற்றும் முந்தின நாளும் தூய்மை காத்துள்ளனர்" என்றார்.
6 ஆதலால் குரு தூய அப்பத்தை அவருக்கு அளித்தார்; ஏனெனில் ஆண்டவரின் திருமுன்னிலை அப்பத்தைத் தவிர வேறு அப்பம் அங்கு இல்லை.அது எடுக்கப்படும் நாளில் அதற்குப் பதிலாகச் சூடான அப்பம் அங்கு வைக்கப்படும். [1] [2]


7 சவுலின் பணியாளர்களில் ஒருவனும் ஆண்டவரால் தடைசெய்யப்பட்டவனுமான தோயேகு என்ற ஏதோமியன் அந்நாளில் அங்கே இருக்க நேர்ந்தது. அவன் சவுலின் இடையர்களுக்குத் தலைவன்.


8 அப்பொழுது தாவீது அகிமெலக்கிடம், "இங்கு ஈட்டியோ வாளோ உம்மிடம் உள்ளதா? அரசரின் கட்டளை அவசரமானதாய் இருந்ததால் என் வாளையோ என் படைக்கலன்களையோ கையோடு கொண்டுவரவில்லை," என்றார்.
9 குரு அவரிடம், "ஏலா பள்ளத்தாக்கில் நீ கொன்ற பெலிஸ்தியன் கோலியாத்தின் வாள், அதோ, ஏபோதுக்குப் பின்னால் துணிகளில் பொதிந்து வைக்கப்பட்டுள்ளது. நீ விரும்பினால் அதை எடுத்துக் கொள்ளலாம்; அதைத் தவிர வேறு வாள் இங்கு இல்லை" என்று கூறினார். அதற்கு தாவீது, "அதற்கு நிகரானது வேறில்லை, அதை எனக்குத் தாரும்" என்றார். [3]


10 பிறகு தாவீது எழுந்து அந்நாளில் தப்பியோடி காத்தின் மன்னன் ஆக்கிசிடம் சென்றார்.
11 ஆக்கிசின் அலுவலர்கள் அவரிடம், "இவன் இஸ்ரயேல் நாட்டு அரசன் தாவீது அன்றோ? 'சவுல் ஆயிரம் பேரைக் கொன்றான்; தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றான்' என்று பெண்கள் நடனமாடித் தங்களுக்குள் பாடிக் கொள்ளவில்லையா?" என்றனர். [4]
12 தாவீது இவ்வார்த்தைகளைத் தம் மனத்தில் வைத்துக்கொண்டு, காத்தின் அரசன் ஆக்கிசை முன்னிட்டு மிகவும் அஞ்சினார். [5]
13 அதனால் தம் முகத் தோற்றத்தை மாற்றிக் கொண்டு, வாயிற் கதவுகளில் கிறுக்கிக் கொண்டு, தாடி வழியே வாயிலிருந்து நுரை ஒழுகச் செய்து அவர்கள் முன்னிலையில் ஒரு பைத்தியக்காரன்போல் நடித்தார். [6]
14 அப்பொழுது ஆக்கிசு தன் அலுவலர்களிடம், "இதோ இம்மனிதனைப் பாருங்கள்; இவன் ஒரு பைத்தியக்காரன்! இவனை ஏன் என்னிடம் அழைத்து வந்தீர்கள்?
15 என் முன்னிலையில் பைத்தியக்காரத்தனத்தைக் காட்ட நம்மிடம் பைத்தியங்கள் குறைவா? இவன் என் வீட்டினுள் நுழையலாமா? என்று சினமுற்றான்.

குறிப்புகள்

[1] 21:1-6 = மத் 12:3-4; மாற் 2:25-26; லூக் 6:3.
[2] 21:1-6 = லேவி 24:5-9.
[3] 21:9 = 1 சாமு 17:51.
[4] 21:11 = 1 சாமு 18:7; 29:5.
[5] 21:12 = திபா 56 தலைப்பு.
[6] 21:13 = திபா 33 தலைப்பு.

அதிகாரம் 22[தொகு]

குருக்களைச் சவுல் கொலை செய்தல்[தொகு]


1 தாவீது அங்கிருந்து புறப்பட்டு அதுல்லாம் என்ற குகைக்குத் தப்பியோடினார்; அவருடைய சகோதரரும், அவர் தந்தை வீட்டாரும் இதைக் கேள்வியுற்று அங்கு அவரிடம் சென்றார். [1]
2 ஒடுக்கப்பட்டோர், கடன்பட்டோர், சோர்வுற்றோர், யாவரும் அவரிடம் ஒன்று திரண்டனர்; அவர்களுக்கு அவர் தலைவரானார். இவ்வாறு அவரோடு சுமார் நானூறு பேர் இருந்தனர்.


3 தாவீது அங்கிருந்து மோவாபிலுள்ள மிஸ்பேக்குச் சென்று, அங்கே மோவாபு மன்னனைப் பார்த்து, "கடவுள் எனக்கு என்ன செய்யவிருக்கிறார் என்பதை நான் அறியுமட்டும் என் தந்தையும் தாயும் உம்மிடம் தங்கியிருக்க எனக்கு அனுமதி தாரும்" என்று வேண்டினார்.
4 பின்பு அவர் அவர்களை மோவாபு மன்னன் பொறுப்பில் விட்டுச் சென்றார். தாவீது குகையில் [2] இருந்த நாளெல்லாம் அவர்கள் மன்னனிடம் தங்கியிருந்தனர்.
5 பின்பு இறைவாக்கினர் காது தாவீதைக் கண்டு "நீ குகையில் தங்காதே! யூதா நாட்டுக்குப் புறப்பட்டுப்போ!" என்றார். எனவே தாவீது புறப்பட்டு எரேத்து என்ற காட்டிற்குச் சென்றார்.


6 தாவீதும் அவருடன் இருந்த வீரர்களும் கண்டுபிடிக்கப்பட்டதைச் சவுல் கேள்விப்பட்டார். கிபயாவிலிருந்த மலைமீது தமாரிஸ்கு மரத்தின் கீழ் சவுல் கையில் தன் ஈட்டியை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார். அவருடைய எல்லா அலுவலர்களும் அவரைச் சூழ்ந்து நின்றனர்.
7 சவுல் தன்னைச் சூழ்ந்து நின்ற பணியாளர்களை நோக்கி, "பென்யமின் புதல்வர்களே! கேளுங்கள்; ஈசாயின் மகன் உங்கள் ஒவ்வொருவருக்கும் வயல்களையும் திராட்சைத் தோட்டங்களையும் கொடுப்பானோ? அவனால் உங்கள் அனைவரையும் ஆயிரவர் தலைவர்களாகவும் நூற்றுவர் தலைவர்களாகவும் ஏற்படுத்த முடியுமா?
8 பின், எப்படி எனக்கெதிராக நீங்கள் எல்லோரும் சூழ்ச்சி செய்தீர்கள்? ஈசாயின் மகனுடன் என் மகன் உடன்படிக்கை செய்தபோது அதை உங்களில் எவனும் எனக்கு வெளிப்படுத்தவில்லை; என்மேல் மனமிரங்கி அதை எனக்குத் தெரிவிக்க உங்களில் ஒருவனும் முன்வரவில்லையே! இந்நாளில் உள்ளதுபோல் எனக்கெதிராகச் சதிசெய்ய என் பணியாளனையே என் மகன் எனக்கெதிராகத் தூண்டிவிட்டான்" என்றார்.


9 அப்பொழுது சவுலின் பணியாளருடன் நின்ற ஏதோமியனாகிய தோயோகு, "நோபில் உள்ள அகித்தூபின் மகன் அகிமெலக்கிடம் ஈசாயின் மகன் தாவீது வருவதை நான் கண்டேன்.
10 அகிமெலக்கு அவனுக்காக ஆண்டவரிடம் திருவுளத்தைக் கேட்டறிந்தார். மேலும் அவர் அவனுக்கு வழியுணவும், பெலிஸ்தியன் கோலியாத்தின் வாளும் கொடுத்தார்" என்றான்.அதைக் கேட்ட அரசர், அகித்தூபின் மகனாகிய குரு அகிமெலக்கையும், நோபிலிருக்கிற அவர் தந்தையின் குடும்பத்துக் குருக்கள் அனைவரையும் வரவழைத்தார். எல்லாரும் அரசரிடம் வந்தனர். [3]
11 அப்பொழுது சவுல், "அகித்தூபின் மகனே, கேள்", என அவரும், "இதோ உள்ளேன் தலைவரே! என்றார்.
12 சவுல் அவரிடம், "நீயும் ஈசாயின் மகனும் எனக்கு எதிராக ஏன் சூழ்ச்சி செய்தீர்கள்? இந்நாள் வரை அவன் எனக்கெதிராக கிளர்ச்சி செய்யும்படி ஏன் அவனுக்கு நீ அப்பமும் வாளும் தந்து, அவனுக்காகக் கடவுளின் திருவுளத்தைக் கேட்டறிந்தாய்?" என்று கேட்டார்.
13 அதற்கு அகிமெலக்கு அரசரிடம், "உம் பணியாளர் அனைவரிலும் தாவீதைப் போல் உண்மையுள்ளவன் யார்? அரசராகிய உமக்கு மருமகனும் மெய்க்காப்பாளர் தலைவனுமாகிய அவன் உம் வீட்டாரிடையே மேன்மை பெற்றவன் அன்றோ?
14 அவனுக்காக நான் கடவுளின் திருவுளத்தைக் கேட்பது இன்றுதான் முதல் தடவையா? இல்லை.
15 அரசர் தம் பணியாளன் மேலும் என் தந்தை வீட்டார் எவர் மேலும் குற்றம் சுமத்த வேண்டாம்; ஏனெனில் உம் பணியாளனாகிய எனக்கு இக்காரியம் குறித்து எதுவும் தெரியாது" என்று பதிலளித்தார்.


16 அரசர் அவரிடம், "அகிமெலக்கு நீயும் உன் தந்தை வீட்டாரும் கண்டிப்பாகச் சாக வேண்டும்" என்றார்.
17 அரசர் தம்மைச் சூழந்து நின்ற காவலர்களிடம், "நீங்கள் சென்று ஆண்டவரின் குருக்களைக் கொன்று விடுங்கள்; ஏனெனில் அவர்கள் தாவீது ஓடிப்போனதை அறிந்தும் அதை எனக்குத் தெரிவிக்கவில்லை" என்றார். ஆனால் அரசனின் பணியாளர் ஆண்டவரின் குருக்களைக் கொல்ல முன்வரவில்லை.
18 அப்பொழுது அரசர் தோயோகிடம், "நீ சென்று தாவீதுக்கு உடன்பட்ட குருக்களை வீழ்த்து", என்று கட்டளையிட்டார். உடனே ஏதோமியன் தோயேகு சென்று குருக்களை வெட்டி வீழ்த்தினான்; அன்றுமட்டும் அவன் நார்ப்பட்டு ஏபோது அணிந்திருந்த எண்பத்தைந்து பேரைக் கொன்றான்.
19 மேலும் அவன் குருக்கள் நகராகிய நோபில் ஆண், பெண், சிறுவர், பாலகர், ஆடுமாடுகள், கழுதைகள் ஆகியவற்றையும் வாளுக்கு இரையாக்கினான்.


20 ஆனால் அகித்தூபின் மகனான அகிமெலக்கின் புதல்வர்களில் ஒருவரான அபியத்தார் தப்பியோடித் தாவீதை அடைந்தார்.
21 ஆண்டவரின் குருக்களை சவுல் கொன்றுவிட்டார் என்று அபியத்தார் தாவீதிடம் கூறினார்.
22 தாவீது அபியத்தாரிடம், "ஏதோமியன் தோயோகு அங்கு இருந்ததால், அவன் கண்டிப்பாகச் சவுலிடம் அறிவிப்பான் என்பதை அன்றே அறிந்திருந்தேன்; உன் தந்தை வீட்டார் அனைவரும் இறப்பதற்கு நானே காரணம்!
23 என்னோடு தங்கு! அஞ்சாதே! என் உயிரைப் பறிக்கத் தேடுகிறவன்தான் உன் உயிரையும் பறிக்கத் தேடுவான்; ஆனால் என்னோடு நீ இருந்தால் பாதுகாப்புடன் இருப்பாய்" என்றார்.

குறிப்புகள்

[1] 22:1 = திபா 57 தலைப்பு; திபா 42 தலைப்பு.
[2] 22:4 'அரண்' என்பது எபிரேய பாடம்.
[3] 22:9-10 = 1 சாமு 21:7-9; திபா 52 தலைப்பு.


(தொடர்ச்சி): சாமுவேல் - முதல் நூல்:அதிகாரங்கள் 23 முதல் 24 வரை