திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/சாமுவேல் - முதல் நூல்/அதிகாரங்கள் 23 முதல் 24 வரை

விக்கிமூலம் இலிருந்து
தாவீது குகையில் சவுல் மன்னரின் மேலங்கியின் தொங்கலை அறுத்து, அவரைக் கொல்லாது விடுகிறார் (1 சாமு 24:1-7). விவிலிய சிற்றோவியம். ஆண்டு: 1372. காப்பிடம்: தெ ஹேக், ஓலாந்து.

1 சாமுவேல் (The First Book of Samuel)[தொகு]

அதிகாரங்கள் 23 முதல் 24 வரை

அதிகாரம் 23[தொகு]

கெயிலா நகரைத் தாவீது பாதுகாத்தல்[தொகு]


1 பின்னர், "பெலிஸ்தியர் கெயிலாவுக்கு எதிராகப் போர் தொடுத்துக் களஞ்சியங்களைக் கொள்ளையடிக்கின்றனர்" என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது.
2 ஆதலால் தாவீது, "நான் சென்று இப்பெலிஸ்தியரை முறியடிக்கலாமா?" என்று ஆண்டவரிடம் ஆலோசனை கேட்டதற்கு, ஆண்டவர் தாவீதிடம், "நீ போய் பெலிஸ்தியரை முறியடித்துக் கெயிலாவைக் காப்பாற்று!" என்று பதிலளித்தார்.
3 ஆனால் தாவீதின் வீரர்கள் அவரை நோக்கி, "நாம் யூதாவில் இருக்கும் போதே இப்படி அஞ்சுகிறோம். பெலிஸ்தியர் படைகளுக்கு எதிராக நாம் கெயிலாவுக்குச் சென்றால் இன்னும் எவ்வளவு அஞ்சுவோம்?" என்றனர்.
4 தாவீது மீண்டும் ஆண்டவரிடம் ஆலோசனை கேட்டார்; ஆண்டவர் மீண்டும் மறுமொழியாக, "கெயிலாவுக்குப் புறப்பட்டுப் போ! ஏனெனில் பெலிஸ்தியரை உன்னிடம் ஒப்புவிப்பேன் என்றார்.
5 பின்பு தாவீதும் அவர்தம் வீரர்களும் கெயிலாவுக்குச் சென்று, பெலிஸ்தியரோடு போரிட்டனர். அவர் அவர்களுக்குப் பேரிழப்பை உண்டாக்கி அவர்களின் கால்நடைகளை ஓட்டிச்சென்றார். இவ்வாறு தாவீது கெயிலாவாழ் மக்களை விடுவித்தார்.


6 அகிமெலக்கின் மகன் அபியத்தார் தாவீதிடம் ஓடிவந்த போது ஓர் ஏபோதைத் தம்முடன் எடுத்து வந்திருந்தார்.
7 பின்னர் தாவீது கெயிலாவுக்கு வந்திருப்பது பற்றிச் சவுலுக்கு தெரிவிக்கப்பட்டபோது, சவுல் "கடவுள் அவனை என்னிடம் ஒப்புவித்துள்ளார்; ஏனெனில் கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள நகரில் நுழைந்து அவன் மாட்டிக் கொண்டான்" என்றார்.
8 அடுத்து, கெயிலாமீது படையெடுத்துத் தாவீதையும் அவர் வீரர்களையும் முற்றுகையிடுமாறு சவுல் தம் வீரர்கள் எல்லாரையும் போருக்கு அழைத்தார்.


9 சவுல் தமக்குத் தீங்கு செய்யத் திட்டமிடுகிறார் என்று தாவீது அறிந்து, குரு அபியத்தாரிடம், "ஏபோதை இங்குக் கொண்டுவா" என்றார்.
10 பிறகு தாவீது, "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே, என் பொருட்டு சவுல் கெயிலாவுக்கு வந்து, அந்நகரை அழிக்கத் திட்டமிட்டுள்ளதை உம் அடியான் நான் பன்முறை கேள்விப்பட்டேன்.
11 கெயிலாவின் குடிமக்கள் என்னை அவரிடம் ஒப்புவிப்பார்களா? உம் அடியான் கேள்விப்பட்டதுபோல் சவுல் வருவாரா?" என்று கேட்டார். அதற்கு ஆண்டவர், "அவன் வருவான்" என்று பதிலளித்தார்.


12 மீண்டும் தாவீது, "கெயிலா மக்கள் என்னையும் என் வீரர்களையும் சவுலிடம் ஒப்புவிப்பார்களா?" என்று கேட்டார். அதற்கு ஆண்டவர், "அவர்கள் உங்களை ஒப்புவிப்பார்கள்", என்றார்.
13 பின்பு தாவீதும் அவருடன் இருந்த சுமார் அறுநூறு பேரும் கெயிலாவைவிட்டுப் புறப்பட்டு இடம்மாறிச் சென்று கொண்டிருந்தார்கள். தாவீது தப்பிவிட்டதைக் கேள்விப்பட்ட சவுல், மேலும் தொடர்வதைக் கைவிட்டார்.

மலைநாட்டில் தாவீது[தொகு]


14 தாவீது பாலைநிலத்தில் பாதுகாப்பான இடத்தில் தங்கியிருந்தார். மலை நாடான சீபு பாலை நிலப் பகுதிகளில் தங்கியிருந்தவரைச் சவுல் ஒவ்வொரு நாளும் தேடியும், கடவுள் அவரை அவரிடம் ஒப்புவிக்கவில்லை.
15 சவுல் தம்மைக் கொலைச் செய்யத் தேடுகிறார் என்று அறிந்த தாவீது மிகுந்த அச்சம் கொண்டார்; ஆதலால் ஓர்சாவில் உள்ள சீபு பாலைநிலத்தில் தங்கியிருந்தார்.


16 சவுலின் மகன் யோனத்தான் புறப்பட்டு ஓர்சாவில் இருந்த தாவீதிடம் வந்து கடவுள் அவரைப் பாதுகாப்பார் என்று திடப்படுத்தினார்.
17 அவர் தாவீதிடம், "அஞ்சாதே! என் தந்தை சவுல் உன்னைக் கண்டுபிடிக்கமாட்டார், நீ இஸ்ரயேலுக்கு அரசனாவாய்; அப்பொழுது நான் உனக்கு அடுத்த இடத்தை வகிப்பேன்; என் தந்தை சவுல் கூட இதை அறிவார்" என்றார்.
18 ஆண்டவர் திருமுன் இருவரும் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டனர்; தாவீது ஓர்சாவிலேயே இருக்க, யோனத்தான் வீடுதிரும்பினார். [1]


19 பின்பு சீபியர் கிபயாவிலிருந்த சவுலிடம் சென்று, "தாவீது எங்கள் பகுதியில் எசிமோனுக்குத் தெற்கே உள்ள அக்கிலா என்ற மலைநாட்டில் ஓர்சாவின் பாதுகாப்பான இடத்தில் ஒளிந்துகொண்டிருக்கிறான் அல்லவா? [2]
20 அரசே, உம் விருப்பத்தின்படி இப்பொழுதே வாரும்; அவனை நாங்களே அரசரிடம் ஒப்புவிக்கிறோம்" என்று கூறினர்.


21 சவுல் அவர்களைப் பார்த்து, "நீங்கள் என் மீது இரக்கம் காட்டியதால் ஆண்டவரின் ஆசியைப் பெறுவீர்களாக!
22 நீங்கள் போய் அவன் நடமாடுகிற இடம் எதுவென்றும், யார் அவனை அங்குப் பார்த்தவன் என்றும் இன்னும் நன்றாக ஆய்ந்து அறியுங்கள்; ஏனெனில் அவன் மிகவும் சூழ்ச்சிமிக்கவன் என்று எனக்குத் தெரிய வந்தது.
23 ஆதலால் அவன் ஒளிந்துக் கொண்டிருக்கும் எல்லா மறைவிடங்களையும் குறித்துக் கொண்டு, உறுதியான தகவல்களுடன் என்னிடம் திரும்பி வாருங்கள். அப்பொழுது நான் உங்களோடு செல்வேன். அவன் நாட்டில் இருந்தால், பல்லாயிர யூதா மக்கள் வாழும் பகுதியிலும் அவனைத் தேடிக் கண்டுபிடித்துவிடுவேன்" என்றார்.


24 அவர்கள் சவுலுக்கு முன்னரே சீபுக்குப் புறப்பட்டுச் சென்றனர். பின்பு தாவீதும் அவர்தம் ஆள்களும் எசிமோனுக்குத் தெற்கே, அராபாவிலுள்ள மாவோன் பாலைநிலத்தில் இருந்தனர்.
25 சவுலும் அவர் ஆள்களும் அவரைத் தேடிச் சென்றனர். தாவீது இதை அறிந்து மாவோன் பாலைநிலத்தில் உள்ள பாறைக்குச் சென்றார். சவுல் இதை கேள்வியுற்று, அவரும் மாவோன் பாலைநிலத்தில் தாவீதைச் தேடினார்.
26 சவுல் மலையின் ஒரு பக்கத்தில் செல்ல, தாவீதும் அவர் ஆள்களும் அதே மலையின் மறுபக்கத்தில் நடந்தனர். சவுலிடமிருந்து தப்பித்துக்கொள்ள தாவீது விரைந்து சென்ற போது, சவுலும் அவர்தம் ஆள்களும் தாவீதையும் அவர்தம் ஆள்களையும் பிடிப்பதற்கு வளைத்துக் கொண்டனர்.
27 அவ்வேளையில் ஒரு தூதன் சவுலிடம் வந்து, "விரைந்து வாரும்! பெலிஸ்தியர் நாட்டின்மேல் படையெடுத்து வந்திருக்கிறார்கள்" என்றான்.
28 அதனால் சவுல் தாவீதைத் தொடர்வதைக் கைவிட்டு, பெலிஸ்தியரை எதிர்க்கச் திரும்பிச் சென்றார். ஆதலின் அவ்விடம், 'பிரிக்கும் பாறை' என்று அழைக்கப்பட்டது.
29 தாவீது அங்கிருந்து புறப்பட்டு ஏன்கேதிலுள்ள பாதுகாப்பான இடத்தில் தங்கினார்.

குறிப்புகள்

[1] 23:18 = 1 சாமு 18:3.
[2] 23:19 = திபா 54 தலைப்பு.

அதிகாரம் 24[தொகு]

தாவீது சவுலைக் கொல்லாது விடல்[தொகு]


1 சவுல் பெலிஸ்திரைத் தொடர்வதைக் கைவிட்டுத் திரும்பிய போது, "இதோ ஏன்கேதிப் பாலைநிலத்தில் தாவீது இருக்கிறான்" என்று தெரிவிக்கப்பட்டது.
2 சவுல் இஸ்ரயேல் முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் பேருடன் தாவீதையும் அவர்தம் ஆள்களையும் தேடி வரையாடுகளின் பாறைகளுக்கு எதிர்ப்புறம் சென்றார்.
3 அவர் சென்ற போது வழியோரத்தில் ஆட்டுப் பட்டிகளைக் கண்டார்; அதனருகில் ஒரு குகை இருந்தது. இயற்கைக்கடன் கழிப்பதற்கு சவுல் அதனுள் சென்றார். அப்பொழுது தாவீதும் அவர்தம் ஆள்களும் அக்குகையின் உட்பகுதியில் இருந்தனர். [1]
4 தாவீதின் ஆள்கள் அவரிடம், "'இதோ! உன் எதிரியை உன்னிடம் ஒப்புவிப்பேன்; உன் விருப்பத்திற்கேற்ப அவனுக்குச் செய்', என்று ஆண்டவர் சொன்ன நாள் இதுவே!" என்றனர். உடனே தாவீது தவழ்ந்து சென்று சவுலின் மேலங்கியின் தொங்கலை அவருக்குத் தெரியாமல் அறுத்தார்.
5 தாவீது சவுலின் தொங்கலை அறுத்தபின் அதற்காக மனம் வருந்தினார்.
6 அவர் தம் ஆள்களைப் பார்த்து, "ஆண்டவர் திருப்பொழிவு செய்த என் தலைவருக்கு எத்தீங்கும் செய்யாதவாறு ஆண்டவர் என்னைக் காப்பாராக! அவர் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரானதால் நான் அவர்மேல் கைவைக்கக்கூடாது" என்றார். [2]
7 ஆதலின் தம் ஆள்கள் சவுலைத் தாக்காதவாறு தாவீது இவ்வார்த்தைகளால் அவர்களைத் தடைசெய்தார். பின்பு சவுல் எழுந்து குகையை விட்டுத் தம் வழியே சென்றார்.


8 அதன்பின் தாவீதும் எழுந்து குகையிலிருந்து வெளியேறிச் சவுலைப் பின் தொடர்ந்து, "அரசே, என் தலைவரே!" என்று அழைத்தார். சவுல் பின்புறம் திரும்பிய போது தாவீது தரையில் முகம் குப்புற வீழ்ந்து வணங்கினார்.
9 பின்பு தாவீது சவுலை நோக்கி, "'தாவீது உமக்குத் தீங்கு செய்யத் தேடுகிறான்'" என்று சொல்லும் மனிதனின் வார்த்தைகளை நீர் கேட்கலாமா?
10 இதோ! குகையில் ஆண்டவர் உம்மை என்னிடம் ஒப்புவித்தார் என்பதை இன்று உம் கண்களே கண்டன; உம்மைக் கொல்ல வேண்டுமெனச் சிலர் என்னை வற்புறுத்தினார்கள்; ஆனால் 'அவர் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பெற்றவர்; என் தலைவருக்கு எதிராக நான் கை ஓங்கக் கூடாது' என்று சொல்லி நான்தான் உம்மைக் காப்பாற்றினேன்.
11 என் தந்தையே, பாரும்! என் கையிலிருக்கும் உம் மேலங்கியின் தொங்கலைப் பாரும். உம்மைக் கொல்லாமல் உம் மேலங்கியின் தொங்கலைமட்டும் அறுத்து எடுத்துள்ள என் செயலைப் பார்த்தாலே என்னிடம் யாதொரு குற்றமோ துரோகமோ இல்லையென்பதை நீர் அறிவீர்! நீர் என் உயிரைப் பறிக்கத் தேடினாலும், உமக்கெதிராக நான் ஒரு குற்றமும் செய்யவில்லை.
12 உமக்கு எனக்கும் ஆண்டவர் நடுவராய் இருப்பாராக! என்பொருட்டு ஆண்டவரே உமக்கு நீதி வழங்கட்டும்; ஆனால் உமக்கெதிராக என் கை எழாது.
13 முன்னோரின் வாய்மொழிக்கேற்ப, 'தீயோரிடமிருந்தே தீமை பிறக்கும்'. ஆதலால் உம்மேல் நான் கைவைக்க மாட்டேன்.
14 இஸ்ரயேலின் அரசர் யாரைத் தேடிப் புறப்பட்டார்? யாரைப் பின் தொடர்கிறார்? ஒரு செத்த நாயை அன்றோ? ஒரு தௌளுப் பூச்சியை அன்றோ? [3]
15 ஆண்டவர் நடுவராயிருந்து உமக்கும் எனக்கும் நீதி வழங்குவாராக! அவரே எனக்காக வழக்காடி உம் கையினின்று என்னை விடுவிப்பாராக! என்றார்.


16 தாவீது இவ்வாறு சவுலிடம் பேசி முடித்தபின் சவுல், "என் மகன் தாவீதே! இது உன் குரல்தானா?" என்று சொல்லி உரத்த குரலில் அழுதார்.
17 அவர் தாவீதிடம், "நீ என்னிலும் நீதிமான்; நீ எனக்கு நன்மை செய்தாய்; ஆனால் நானோ உனக்குத் தீங்கு செய்தேன்.
18 ஆண்டவர் என்னை உன்னிடம் ஒப்புவித்திருந்தும் நீ என்னைக் கொல்லவில்லை. இதனால் நீ எனக்கு நன்மையே செய்து வந்திருப்பதை இன்று நீ வெளிப்படுத்தியிருக்கிறாய்.
19 ஏனெனில் ஒருவன் தன் எதிரியைக் கண்டபின் அவன் நலமுடன் செல்ல அனுமதிப்பானா? இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்கு ஈடாக ஆண்டவரும் உனக்கு நன்மை செய்வாராக!
20 இதோ, நீ திண்ணமாய் அரசனாவாய் என்றும் இஸ்ரயேலின் அரசை நீ உறுதிப்படுத்துவாய் என்றும் இப்பொழுது நான் அறிகிறேன்.
21 ஆதலால் எனக்குப் பின்வரும் என் வழிமரபை நீ வேரறுப்பதில்லை என்றும் என் தந்தை வீட்டாரிலிருந்து என் பெயரை அழிக்கமாட்டாய் என்றும் ஆண்டவர் மேல் எனக்கு ஆணையிட்டுக் கூறு" என்றார்.


22 அவ்வாறே தாவீது சவுலுக்கு ஆணையிட்டுக் கூறினார். பின்னர் சவுல் வீடு திரும்ப, தாவீதும் அவர் தம் ஆள்களும் பாதுகாப்பான இடம் நோக்கிச் சென்றனர்.

குறிப்புகள்

[1] 24:3 = திபா 57 தலைப்பு; திபா 142 தலைப்பு.
[2] 24:6 = 1 சாமு 26:11.
[3] 24:14 = 1 சாமு 26:20.


(தொடர்ச்சி): சாமுவேல் - முதல் நூல்:அதிகாரங்கள் 25 முதல் 26 வரை