திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/சாமுவேல் - முதல் நூல்/அதிகாரங்கள் 25 முதல் 26 வரை

விக்கிமூலம் இலிருந்து
இறைவாக்கினர் சாமுவேலின் கல்லறை. இருப்பிடம்: எருசலேம்.

1 சாமுவேல் (The First Book of Samuel)[தொகு]

அதிகாரங்கள் 25 முதல் 26 வரை

அதிகாரம் 25[தொகு]

சாமுவேலின் இறப்பு[தொகு]


1 சாமுவேல் இறந்தார்; இஸ்ரயேலர் எல்லாரும் ஒன்றுகூடி அவருக்காகத் துக்கம் கொண்டாடினர். பின்பு அவர்கள் அவரை இராமாவிலுள்ள அவரது இல்லத்தில் அடக்கம் செய்தனர். தாவீது புறப்பட்டுப் பாரான் பாலைநிலத்திற்குச் சென்றார்.

தாவீதும் அபிகாயிலும்[தொகு]


2 கர்மேலில் சொத்துக்களை உடைய ஒருவன் மாவோனில் இருந்தான். அம் மனிதன் செல்வம் மிக்கவன்; அவனுக்கு மூவாயிரம் ஆடுகளும் ஆயிரம் வெள்ளாடுகளும் இருந்தன. அவன் கர்மேலில் தன் ஆடுகளுக்கு உரோமம் கத்தரித்துக் கொண்டிருந்தான்.
3 அம் மனிதன் பெயர் நாபால், அவன் மனைவியின் பெயர் அபிகாயில். அப்பெண் மிகுந்த அறிவும் அழகும் வாய்ந்தவள்; அவள் கணவனோ முரடனும் இழிந்தவனுமாய் இருந்தான். அவன் ஒரு காலேபியன்.


4 நாபால் தன் ஆடுகளுக்கு உரோமம் கத்தரிப்பதாகத் தாவீது பாலைநிலத்தில் கேள்வியுற்றார்.
5 தாவீது அங்கே பத்து இளைஞர்களை அனுப்ப எண்ணி, அப் பத்துப் பேரை அழைத்து. "நீங்கள் கர்மேலுக்குச் சென்று அங்கே நாபாலைக் கண்டு என் பெயரால் அவனுக்குச் சமாதான வாழ்த்துக் கூறுங்கள்.
6 அவனை நோக்கி, 'உமக்கும், உம் குடும்பத்துக்கும், உமக்கு உள்ள அனைத்துக்கும் நலம் உண்டவதாக!
7 ஆடுகளுக்கு உரோமம் கத்தரிப்பவர்கள் உம்மிடம் இருக்கிறார்கள் எனக் கேள்வியுற்றேன்; உம் இடையர்கள எங்களோடு இருந்தார்கள்; நாங்கள் அவர்களைத் துன்புறுத்தியதில்லை; கர்மேலில் அவர்கள் இருந்த காலமெல்லாம் எதையும் இழக்கவுமில்லை.
8 உம் பணியாளர்களைக் கேளும்; அவர்கள் உமக்குச் சொல்வார்கள். ஆதலால் இந்த இளைஞர்களுக்கு உம் கண்களில் தயவு கிடைக்கட்டும். ஏனெனில் நாங்கள் ஒரு திருவிழா நாளில் வந்துள்ளோம். உம்மால் கொடுக்க முடிந்ததை உம் அடியார்களுக்கும் உம் புதல்வன் தாவீதுக்கும் தந்தருள்க!' எனக் கூறுங்கள்" என்று சொல்லியனுப்பினார்.


9 தாவீதின் இளைஞர்கள் சென்று நாபாலிடம் தாவீதின் பெயரால் அவை யாவற்றையும் கூறிக் காத்திருந்தனர்.
10 நாபால் தாவீதின் இளைஞர்களிடம், "தாவீது என்பவன் யார்? ஈசாயின் மகன் யார்? தங்கள் தலைவர்களைவிட்டுப் பிரிந்து செல்லும் பணியாளர் இந்நாளில் பலர் உள்ளனர்.
11 என் அப்பங்களையும் தண்ணீரையும் உரோமம் கத்திரிப்பவர்களுக்காக நான் அடித்துச் சமையல் செய்த இறைச்சியையும் எடுத்து எங்கிருந்தோ வந்த மனிதர்களுக்கு நான் கொடுப்பதா?" என்று பதிலளித்தான்.


12 ஆதலால் தாவீதின் இளைஞர்கள் திரும்பிவந்து அவரிடம் எல்லாவற்றையும் அப்படியே கூறினர்.
13 தாவீது தம் ஆள்களை நோக்கி, "நீங்கள் அவரவர் வாளை எடுத்துக் கட்டிக்கொள்ளுங்கள்" என்றார். அதன்படி அவர்கள் ஒவ்வொருவனும் தன் வாளைக் கட்டிக்கொண்டான்; தாவீதும் தம் வாளைக் கட்டிகொண்டார்; அவருடன் நானூறு பேர் செல்ல, இருநூறு பேர் பயணமூட்டைகளின் அருகில் இருந்துகொண்டனர்.


14 நாபாலுடைய பணியாளர்களில் ஒருவன் அவன் மனைவி அபிகாயிலிடம், "இதோ நம் தலைவருக்கு வாழ்த்துச் சொல்ல பாலைநிலத்திலிருந்து தாவீது தூதர்களை அனுப்பினார்; அவர்களை இவர் அவமானப்படுத்திவிட்டார்.
15 இருப்பினும் இந்த ஆள்கள் எங்களுக்கு நன்மையே செய்தனர்; எங்களைத் துன்புறுத்தியதில்லை, நாங்கள் வயல் வெளிகளில் அவர்களோடு நடமாடிய காலமெல்லாம் எதையும் இழக்கவில்லை.
16 நாங்கள் ஆடுகளை மேய்த்துக்கொண்டு அவர்களோடு வாழ்ந்த நாள் முழுவதும் அவர்கள் இரவும் பகலும் எங்களைச் சுற்றி சுவராக இருந்தனர்.
17 எனவே இதையறிந்து, நீர் யோசித்து, என்ன செய்ய முடியுமென்று பாரும்; ஏனெனில் நம் தலைவர்மேலும் அவர் வீட்டார்மேலும் கண்டிப்பாக தீமை வரவிருக்கிறது; இவரோ யாருமே அவரோடு பேசத்துணியாத அளவுக்குத் தீய குணமுடையவராய் இருக்கிறார்" என்றனர்.


18 இதைக் கேட்ட அபிகாயில், இருநூறு அப்பங்கள், இரண்டு துருத்தி திராட்சைப்பழ இரசம், தோலுரித்த ஐந்து ஆடுகள், ஐந்து படி வறுத்த பயறு, திராட்சைப் பழ அடைகள் நூறு, அத்திப்பழ அடைகள் இருநூறு ஆகியவற்றை விரைந்தே எடுத்து ஒரு கழுதை மேல் ஏற்றினார்.
19 அவர் தம் பணியாளர்களை நோக்கி, "நீங்கள் எனக்கு முன்னே செல்லுங்கள்; நான் உங்களுக்குப் பின் வருகிறேன்," என்றார். ஆனால் இதைப்பற்றித் தம் கணவன் நாபாலிடம் தெரிவிக்கவில்லை.


20 அவர் கழுதை மேல் ஏறிப் பயணமாகி, மலைச் சரிவுப் பாதையில் இறங்கி வருகையில் தாவீதும் அவருடைய ஆள்களும் அவரை நோக்கி இறங்கி வந்தனர்; அவர் அவர்களைச் சந்தித்தார்.
21 அப்பொழுது தாவீது, "இந்த மனிதனுக்குப் பாலைநிலத்தில் இருந்ததையெல்லாம் நான் காப்பாற்றியது வீண்தான்! அவனுடைய பொருள் எதையும் அவன் இழக்கவில்லை; இருப்பினும், நன்மைக்குப் பதிலாக அவன் எனக்குத் தீமையே செய்தான்.
22 அவனுக்குச் சொந்தமானவர்களில் ஒர் ஆண்மகன் கூடப் பொழுது விடியுமட்டும் உயிரோடு விட்டு வைத்தால், கடவுள் அதற்கும் அதற்கு மேலும் தாவீதைத் தண்டிப்பாராக" என்று சொல்லிக் கொண்டிருந்தார்.


23 அபிகாயில் தாவீதைப் பார்த்த போது கழுதையினின்று வேகமாக இறங்கி அவர்முன் தரையில் முகம் குப்புற விழுந்து வணங்கினார்.
24 அவர் தாவீதின் காலில் விழுந்து, "என் தலைவரே, பழி என்மேல் மட்டும் இருக்கட்டும்! உம் அடியவள் சொல்லப் போவதை நீர் செவிகொடுத்துக் கேட்க வேண்டுகிறேன்.
25 என் தலைவரே, அந்தத் தீய குணமுடைய மனிதராகிய நாபாலைப் பொருட்படுத்த வேண்டாம் ஏனெனில் அவர் தம் பெயருக்கேற்ப ஒரு மூடர்; நாபால் என்பது அவரது பெயர்; அதன்படி மூடத்தனமும் அவருக்குண்டு. என் தலைவராகிய நீர் அனுப்பிய இளைஞர்களை உம் அடியவள் பார்க்கவில்லை.
26 இப்பொழுது, என் தலைவரே, நீர் இரத்தத்தைச் சிந்தாதவாறும், நீர் உம் கைகளினால் பழிக்குப் பழி வாங்காதவாறும் உம்மைத் தடுத்தவர் ஆண்டவரே! வாழும் ஆண்டவர் மேலும் உம் இருக்கையின் மேலும் ஆணை! உம் பகைவர்களும் என் தலைவராகிய உமக்குத் தீங்கு செய்ய முயல்பவர்களும் நாபாலைப்போல் ஆவார்களாக!
27 இப்பொழுது உம் அடியவள் என் தலைவருக்குக் கொண்டு வந்துள்ள காணிக்கைகளை ஏற்றுக்கொண்டு என் தலைவரின் அடிச்சுவட்டைப் பின்தொடரும் இவ்விளைஞர்களிடம் அளிப்பீராக!
28 உம் அடியவளின் குற்றத்தை மன்னிக்க வேண்டுகிறேன்; என் தலைவரே, நீர் ஆண்டவரின் போர்களை நடத்துவதால், என் தலைவராகிய உமக்கு ஆண்டவர் ஒரு நிலையான வீட்டை உறுதியாகக் கட்டியெழுப்புவார். உம் வாழ்நாள் முழுவதும் எத்தீங்கும் உம்மை அணுகாது!
29 உம்மைத் தாக்கவும், உம்மைக் கொல்லவும் யாராவது எப்பொழுதாவது எழுந்தால், என் தலைவரின் உயிர், உம் கடவுளாகிய ஆண்டவரின் பாதுகாப்பில் வாழ்வோரின் கட்டுகளில் இருக்கும். உம் எதிரிகளின் உயிர்களோ கவணில் வைத்து எறிந்தாற்போல் எறியப்படும்.
30 ஆண்டவர் என் தலைவராகிய உம்மைக் குறித்துத் தாம் வாக்களித்த நன்மைகளை எல்லாம் செய்து இஸ்ரயேலின் அரசராக ஏற்படுத்துவார்.
31 அப்பொழுது, காரணமின்றி இரத்தம் சிந்தினது குறித்தோ, என் தலைவர் பழிக்குப் பழி வாங்கியது குறித்தோ, என் தலைவருக்குத் துயரோ மனவருத்தமோ உண்டாகாது. என் தலைவராகிய உமக்கு ஆண்டவர் வெற்றியளிக்கின்றபோது உம் அடியவளை நினைவு கூர்ந்தருளும்" என்றார்.
32 தாவீது அபிகாயிலை நோக்கி, "இன்று உன்னை என்னிடம் அனுப்பிய இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக!
33 இரத்தப் பழிக் குற்றத்திலிருந்தும் பழிதீர்ப்பதிலிருந்தும் என்னை இன்று தடை செய்த நீ ஆசி பெறுவாய்! உன் நுண்ணறிவும் ஆசி பெறுவதாக!
34 நீ விரைவாக என்னைச் சந்திக்க வராதிருந்தால், பொழுது விடிவதற்குள் நாபாலுக்குச் சொந்தமான வயல்களில் ஓர் ஆண்மகனைக் கூட உயிரோடு விட்டுவைத்திருக்க மாட்டேன். இதை உனக்குத் தீங்கு செய்வதிலிருந்து என்னைத் தடுத்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் பெயரால் உறுதியாகச் சொல்கிறேன்!" என்றார்.
35 பின்பு அபிகாயில் தமக்குக் கொண்டு வந்ததை தாவீது அவரிடம் இருந்து பெற்றுக் கொண்டு, அவரை நோக்கி, "சமாதானத்துடன் நீ உன் வீட்டுக்குப் போ! உனக்குச் செவிகொடுத்து உன் வேண்டுதலை நிறைவேற்றியுள்ளேன்" என்றார்.


36 அபிகாயில் நாபாலிடம் வந்த பொழுது அவன் அரசவிருந்துக்கு ஒப்பான விருந்தொன்றைத் தன் வீட்டில் அனுபவித்துக் கொண்டிருந்தான். அவன் உள்ளம் களிப்புற்றிருந்தது. அவன் மிகுந்த குடிபோதையில் இருந்ததால் பொழுது விடியும் வரை அவர் எதுவும் பேசாதிருந்தார்.
37 காலையில் நாபால் திராட்சை மதுவின் போதை தெளிந்தபின் அவன் மனைவி இவையனைத்தையும் அவனிடம் கூறினார். அப்பொழுது அவன் அதிர்ச்சிக்குள்ளாகிக் கல்லைப்போல் செயலற்றவன் ஆனான்.
38 ஆண்டவர் நாபாலை வதைத்ததால் சுமார் பத்துநாள்களுக்குபின் அவன் இறந்தான்.
39 நாபால் இறந்து விட்டதைத் தாவீது கேள்வியுற்றபோது, "நாபால் கையினால் எனக்கு வந்த இழிவுக்கு நிகராக நீதி வழங்கி, தம் அடியானைத் தீமை செய்யாதவாறு காப்பாற்றிய ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக! நாபாலின் தீமைகள் அவன் தலைமேல் விழுமாறு ஆண்டவர் அவற்றைத் திருப்பிவிட்டார்" என்றார். பின்பு அபிகாயிலை மணந்துகொள்வதற்காகத் தாவீது அவரிடம் தூதனுப்பினார்.
40 தாவீதின் பணியாளர்கள் கர்மேலில் இருக்கிற அபிகாயிலிடம் வந்து அவரை நோக்கி, "தாவீது உம்மை மணந்து கொள்ள விரும்புகிறார். அதற்காக எங்களை உம்மிடம் அனுப்பினார்" என்றனர்.


41 அவர் எழுந்து தரையில் முகம் குப்புற வீழ்ந்து வணங்கி, "இதோ! உம் அடிமையாகிய நான் என் தலைவரின் பணியாளர்களுடைய கால்களைக் கழுவும் பணிப்பெண்ணாக இருப்பேனாக!" என்றார்.
42 உடனே அபிகாயில் ஒரு கழுதை மேல் ஏறி விரைந்து சென்றார்; பணிப்பெண்கள் ஐவர் அவருடன் சென்றார்கள்; அவர் தாவீதின் தூதர்களைப் பின்தொடர்ந்து சென்று, அவருக்கு மனைவியானார்.
43 இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமையும் தாவீது மணந்து கொண்டார்; அவர்கள் இருவரும் அவருக்கு மனைவியானார்கள்.
44 சவுல் தம் புதல்வியும் தாவீதின் மனைவியுமான மீக்காலைக் கல்லிம் ஊரானாகிய இலாயிசின் மகன் பல்திக்கு மணமுடித்துக் கொடுத்திருந்தார். [*]

குறிப்பு

[*] 25:44 = 2 சாமு 3:14-16.

அதிகாரம் 26[தொகு]

தாவீது சவுலை மீண்டும் கொல்லாது விடல்[தொகு]


1 பின்னர் சீபியர் கிபாயாவிலிருந்த சவுலிடம் சென்று, "தாவீது எசிமோனுக்கு எதிரே உள்ள அக்கிலா குன்றில் ஒளிந்திருக்கிறான்" என்று கூறினர். [1]
2 ஆதலால் சவுல் சீபு பாலைநிலத்தில் தாவீதைத் தேடுவதற்காக, இஸ்ரயேலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் பேருடன், அதை நோக்கி புறப்பட்டுச் சென்றார்.
3 சவுல் எசிமோனுக்கு எதிரே சாலையோரம் அக்கிலா குன்றின்மேல் பாசறை அமைத்தார்; ஆனால் தாவீது பாலைநிலத்திலேயே இருந்தார். சவுல் பாலை நிலத்தில் தன்னைப் பின் தொடர்வதை அறிந்து,
4 தாவீது ஒற்றர்களை அனுப்பி சவுல் வந்தது உண்மைதான் என்று உறுதிப்படுத்திக் கொண்டார்.
5 உடனே தாவீது எழுந்து சவுல் பாளையம் இறங்கியிருந்த இடத்திற்கே சென்றார்; சவுலும் அவர் படைத்தலைவனும் நேரின் மகனுமான அப்னேரும் படுத்திருந்த இடத்தைப் பார்த்தார்; சவுல் பாசறையினுள் படுத்திருக்க, அவர்தம் வீரர்கள் அவரைச் சுற்றிலும் படுத்திருந்தனர்.


6 அப்பொழுது தாவீது இத்தியன் அகிமெலக்கையும் செரூயாவின் மகனும் யோவாபின் சகோதரனுமாகிய அபிசாயையும் நோக்கி, "சவுல் இருக்கும் பாளையத்திற்கு என்னோடு வருவது யார்?" என்று கேட்க, "உம்முடன் நான் வருகிறேன்" என்று அபிசாய் பதிலளித்தான்.


7 ஆதலால் தாவீதும் அபிசாயும் இரவில் அப்பாளையத்திற்குச் சென்றனர்; சவுல் கூடாரத்தினுள் தூங்குவதையும் அவர் தலைமாட்டில் அவருடைய ஈட்டி தலையில் குத்தியிருப்பதையும் கண்டனர்; அப்னேரும் படைவீரர்களும் அவரைச் சுற்றிலும் படுத்து உறங்கினர்.
8 அபிசாய் தாவீதிடம், "இந்நாளில் கடவுள் உம் எதிரியை உம்மிடம் ஒப்புவித்துள்ளார்; ஆதலால் இப்பொழுது நான் அவரை ஈட்டியால் இரண்டு முறை குத்தாமல், ஒரே குத்தாய் நிலத்தில் பதியக் குத்தப்போகிறேன்" என்றான்.


9 ஆனால் தாவீது அபிசாயியை நோக்கி, "அவரைக் கொல்லாதே! ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மேல் கைவைத்துவிட்டுக் குற்றமற்று இருப்பவன் யார்?" என்று சொல்லித் தடுத்தார்.


10 மேலும் தாவீது, "வாழும் ஆண்டவர் மேல் ஆணை! ஆண்டவரே அவரைக் கொல்லட்டும்; அவர் காலம் நிறைவுற்று தாமாக இறக்கட்டும் அல்லது போரில் சென்று அவர் மடியட்டும்!
11 ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்மேல் நான் கைவைக்காதபடி ஆண்டவர் என்னைக் காப்பாராக! எனவே அவர் தலைமாட்டில் இருக்கும் ஈட்டியையும் தண்ணீர்க் குவளையையும் எடுத்துக்கொண்டு நாம் புறப்படுவோம்" என்றார். [2]
12 அவ்வாறே தாவீது சவுலின் தலைமாட்டில் இருந்த ஈட்டியையும் தண்ணிர்க் குவளையையும் எடுத்துக்கொண்டபின், அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். அவர்களில் ஒருவரும் விழிக்கவில்லை; அதைக் காணவுமில்லை; அறியவுமில்லை. ஆண்டவர் அவர்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தை அளித்திருந்தபடியால் அவர்கள் எல்லாரும் தூங்கிக்கொண்டிருந்தனர்.
13 பின்பு தாவீது கடந்துசென்று தொலைவிலிருந்த ஒரு குன்றின் மீது நின்றார். அவர்களுக்கிடையே மிகுந்த இடைவெளி இருந்தது.
14 அங்கிருந்து படைவீரர்களையும் நேரின் மகன் அப்னேரையும் தாவீது கூப்பிட்டு, "அப்னேர், நீ மறுமொழி சொல்ல மாட்டாயா?" என்று கேட்டார்? அப்னேர் அதற்கு, "அரசரை நேராக அழைக்கும் நீ யார்?" என்று கேட்டான்.


15 அப்பொழுது தாவீது அப்னேரிடம், "நீ வீரன் அல்லவா? இஸ்ரயேலில் உனக்கு நிகரானவன் யார்? பின் ஏன் நீ உன் தலைவராகிய அரசரை விழித்திருந்து காக்கவில்லை? மக்களில் ஒருவன் உன் தலைவராகிய அரசரைக் கொல்ல அங்கு வந்தானே!
16 நீ செய்த இச்செயல் சரியல்ல; ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்ட உங்கள் தலைவரை நீங்கள் விழித்திருந்து காக்கத் தவறியதால், நீ சாவுக்கு உள்ளாவாய் என்று வாழும் ஆண்டவர் மேல் ஆணையிட்டுக் கூறுகிறேன். அரசரின் ஈட்டியும் அவர் தலைமாட்டிலிருந்த தண்ணீர்க் குவளையும் இப்பொழுது எங்கே உள்ளன என்று பார்" என்றார்.


17 சவுல் தாவீதின் குரலை அறிந்துகொண்டு, "என் மகன் தாவீதே, இது உன் குரல்தானா?" என்று கேட்க, அதற்குத் தாவீது, "என் தலைவராகிய அரசே! இது என் குரல் தான்" என்றார்.
18 மீண்டும் அவர், "என் தலைவராகிய நீர் உம் அடியானை இப்படிப் பின்தொடர்ந்து வருவது ஏன்? நான் என்ன செய்தேன்? என்னிடமுள்ள குற்றம்தான் என்ன?
19 ஆதலால் இப்பொழுது அரசராகிய என் தலைவர் தம் அடியானின் வார்த்தைகளைக் கேட்பாராக! ஆண்டவர் உம்மை எனக்கு எதிராக ஏவி விட்டிருப்பின், அவர் என் பலியை ஏற்றுக் கொள்ளட்டும்; மனிதர்கள் அப்படிச் செய்திருந்தால், அவர்கள் ஆண்டவர் திருமுன் சபிக்கப்படுக! ஏனெனில், 'நீ சென்று வேற்றுத் தெய்வங்களை வழிபடு' என்று அவர்கள் கூறி நான் ஆண்டவருடைய உரிமையில் பங்கு பெறுவதிலிருந்து என்னை இந்நாளில் துரத்திவிட்டனர்.
20 ஆதலால் ஆண்டவர் திருமுன்னிலைக்கு வெகு தொலையில் உள்ள நிலத்தில் என் இரத்தம் சிந்தப்படாதிருக்கட்டும்! ஏனெனில் மலைகளில் ஒரு கவுதாரியை வேட்டையாடுவதுபோல், இஸ்ரயேலின் அரசர் ஒரு தௌளுப்பூச்சியைத் தேடி வந்துள்ளார்" என்றார்.


21 அப்பொழுது சவுல், "நான் பாவம் செய்துள்ளேன். என் மகன் தாவீதே! திரும்பி வா. என் உயிரை இன்று நீ இவ்வளவு மதித்தபடியால் இனி உனக்கு நான் எத்தீங்கும் செய்யமாட்டேன். இதோ, நான் மூடத்தனமாய் நடந்து பெரும் தவறு இழைக்கிறேன்" என்றார்.


22 தாவீது மறுமொழியாக, "அரசே உம் ஈட்டி இதோ உள்ளது; இளைஞரில் ஒருவன் இப்புறம் வந்து அதைக் கொண்டு போகட்டும்.
23 அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் ஏற்ப ஆண்டவர் உம்மை என்னிடம் ஒப்புவித்தும், ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்மேல் நான் கை வைக்கவில்லை.
24 இன்று உம் உயிர் என் கண்களில் மிகவும் மதிப்பு மிகுந்ததாக இருந்தது போல், என் உயிரும் ஆண்டவர் கண்களுக்கு அருமையாய் இருப்பதாக! அவரே என்னை எல்லா இக்கட்டிலிருந்தும் விடுவிப்பாராக!" என்றார்.


25 அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி, எ"ன் மகன் தாவீதே! நீ ஆசி பெறுவாயாக! நீ பல காரியங்களைச் செய்வாய்; அவையனைத்திலும் வெற்றி பெறுவாய்!" என்று வாழ்த்தினார். பின்னர் தாவீது தம் வழியே செல்ல, சவுல் தம் இருப்பிடம் திரும்பினார்.

குறிப்புகள்

[1] 26:1 = திப 54 தலைப்பு.
[2] 26:11 = 1 சாமு 24:6.


(தொடர்ச்சி): சாமுவேல் - முதல் நூல்:அதிகாரங்கள் 27 முதல் 28 வரை