திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/சாமுவேல் - முதல் நூல்/அதிகாரங்கள் 27 முதல் 28 வரை

விக்கிமூலம் இலிருந்து
குறிசொல்லும் பெண் எழுப்பிய சாமுவேலின் ஆவி சவுலுக்குத் தோன்றுதல் (1 சாமு 28). ஓவியர்: சால்வத்தோர் ரோசா. ஆண்டு: 1668. காப்பகம்: பாரிசு.

1 சாமுவேல் (The First Book of Samuel)[தொகு]

அதிகாரங்கள் 27 முதல் 28 வரை

அதிகாரம் 27[தொகு]

பெலிஸ்தியரிடையே தாவீது[தொகு]


1 பின்னர் தாவீது, "நான் இங்கே சவுலின் கையில் ஒருநாள் மடிவது திண்ணம். ஆதலால் பெலிஸ்தியர் நாட்டுக்குச் சென்று தப்பித்துக் கொள்வதைவிட எனக்கு வேறு வழி இல்லை; அப்பொழுதுதான் இஸ்ரயேலின் எல்லைக்குள் என்னைக் கண்டுபிடிக்கலாமென்ற நம்பிக்கை சவுலுக்கு அற்றுப் போகும்; நானும் அவர் கையிலிருந்து தப்பி விடுவேன்" என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.
2 பின் தாவீதும் அவருடன் இருந்த அறுநூறு ஆள்களும் புறப்பட்டுச் சென்று மாவோகின் மகனும் காத்து மன்னருமான ஆக்கிசு என்பவரிடம் சேர்ந்தனர்.
3 அங்கே தாவீதும் அவர்தம் ஆள்களும் அவரவர் குடும்பத்தாரும், தாவீதோடு அவருடைய இருமனைவியரான இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமும், நாபாலின் மனைவியும் கர்மேலைச் சார்ந்தவருமான அபிகாயிலும் காத்து நகரில் ஆக்கிசிடம் தங்கினர்.
4 தாவீது காத்து நகருக்கு ஓடிவிட்டார் என்று சவுலுக்கு அறிவித்தனர்; அதன் பின் அவர் அவரைத் தேடிச்செல்லவில்லை.
5 தாவீது ஆக்கிசை நோக்கி, "என் மேல் உமக்கு இரக்கம் இருந்தால், நான் குடியிருக்க நாட்டுப் புற ஊர்கள் ஒன்றில் எனக்கு இடம் தாரும்; உம் அடியான் உம்மோடு தலைநகரில் ஏன் வாழ வேண்டும்?" என்றார்.
6 ஆதலால் அன்று ஆக்கிசு அவருக்குச் சிக்லாகைக் கொடுத்தார்; அதனால் இந்நாள் வரை சிக்லாகு யூதா அரசருக்கு உரியதாய் இருக்கிறது.
7 தாவீது பெலிஸ்திய எல்லைக்குள் ஓர் ஆண்டும் நான்கு மாதங்களும் குடியிருந்தார்.
8 பின்னர் தாவீதும் அவர் தம் ஆள்களும் புறப்பட்டுக் கெசூரியர், கிர்சியர், அமலேக்கியர் ஆகியோரைக் கொள்ளையடித்துச் சென்றனர். ஏனெனில் சூர் தொடங்கி எகிப்து நாடுவரை உள்ள நிலப்பகுதியில் பண்டைக்காலந்தொட்டு இவர்கள் குடியிருந்தனர்.
9 தாவீது அந்நாட்டைத் தாக்கியபோது ஆண் பெண் எவரையும் உயிரோடு விட்டுவைக்கவில்லை; ஆனால் ஆடுமாடுகள், எருதுகள், கழுதைகள், ஒட்டகங்கள், ஆடைகள் ஆகியவற்றைக் கைப்பற்றிக கொண்டு ஆக்கிசிடம் திரும்பி வந்தார்.
10 ஆக்கிசு அவரிடம், "இன்று யாரை நீர் கொள்ளையடித்தீர்?" என்று கேட்க, தாவீது மறுமொழியாக, "யூதாவின் தென் பகுதியில்", அல்லது "எரகு மவேலரின் தென்பகுதியில்", அல்லது "கேனியரின் தென்பகுதியில், கொள்ளையடித்தேன்" என்பார்.
11 தாவீது ஆண் பெண் எவரையும் உயிரோடு விட்டுவைப்பதில்லை; ஏனெனில் அவர்கள் யாராவது காத்துக்குச் செய்தி கொண்டுவந்தால், "இவ்வாறெல்லாம் தாவீது எங்களுக்குச் செய்தான்" என்று மன்னரிடம் தம்மைப் பற்றித் தெரிவித்துவிடுவார்கள்" என்று தாவீது நினைத்தார். அவர் பெலிஸ்தியர் நாட்டில் குடியிருந்த காலமெல்லாம் இதுவே அவரது வழக்கமாய் இருந்தது.
12 ஆக்கிசு தாவீதின்மேல் நம்பிக்கை வைத்தார்; ஏனெனில்,' அவர் இஸ்ரயேலராகிய தம் மக்களின் முழு வெறுப்புக்கு ஆளாகியுள்ளதால், அவர் என்றும் என் பணியாளராய் இருப்பார்' என்று நினைத்தார்.

அதிகாரம் 28[தொகு]


1 அக்காலத்தில் பெலிஸ்தியர் இஸ்ரயேலுக்கு எதிராகப் போர்தொடுக்க தங்கள் படைகளை ஒன்று திரட்டினர். அப்பொழுது ஆக்கிசு தாவீதிடம், "நீரும் உம் ஆள்களும் என்னோடு போர்க்களம் வரவேண்டும் என்பதை அறிந்து கொள்ளும்" என்றார்.
2 அதற்குத் தாவீது ஆக்கிசை நோக்கி, "மிக நல்லது உம் பணியாளன் செய்யப்போவதை நீர் அறிந்துகொள்வீர்" என்றார். ஆக்கிசு தாவீதிடம், "எனக்கு என்றும் மெய்க்காப்பாளராய் இருக்கும்படி உம்மை நான் நியமிக்கிறேன்" என்று சொன்னார்.

சவுல் குறிகேட்டல்[தொகு]


3 சாமுவேல் இறந்தார். இஸ்ரயேலர் அனைவரும் அவருக்காகத் துக்கம் கொண்டாடியபின் அவரது நகரான இராமாவில் அவரை அடக்கம் செய்தனர். சவுல் சூனியக்காரரையும் குறிச்சொல்பவர்களையும் நாட்டிலிருந்து துரத்தியிருந்தார்.[1]


4 பெலிஸ்தியர் ஒன்று திரண்டு வந்து சூனேமில் பாளையம் இறங்கினர்; சவுல் இஸ்ரயேலர் அனைவரையும் ஒன்று திரட்ட, அவர்கள் கில்போவாவில் பாளைமிறங்கினர்.
5 பெலிஸ்தியரின் படையைக் கண்ட போது சவுல் அச்சம் கொண்டார்; அவருடைய உள்ளம் பெரிதும் திகிலுற்றது.
6 சவுல் ஆண்டவரிடம் ஆலோசனை கேட்க, ஆண்டவர் கனவு மூலமோ, ஊரிம் மூலமோ அவருக்குப் பதிலளிக்கவில்லை. [2]
7 பின்பு சவுல் தம் பணியாளரிடம் "குறி சொல்லும் ஒரு பெண்ணைத் தேடி என்னிடம் அழைத்து வாருங்கள்; நான் அவளிடம் ஆலோசனை கேட்க வேண்டும்" என்றார். அதற்கு அவர்தம் பணியாளர்கள் அவரை நோக்கி, "இதோ ஏன்தோரில் குறி சொல்பவள் ஒருத்தி இருக்கிறாள்" என்றார்.


8 சவுல் மாறுவேடமிட்டு வேற்றுடை அணிந்துகொண்டார். அவரும் அவருடன் இரு ஆள்களும் இரவில் புறப்பட்டு அப்பெண்ணிடம் சென்றனர். அவர் அவளை நோக்கி, "ஏதாவதொரு ஆவியின் துணைகொண்டு நீ குறிகேட்டுச் சொல். நான் பெயரிட்டுச் சொல்பவனை எனக்காக எழுப்பு", என்றார்.
9 அப்பெண் அவரை நோக்கி, "சவுல் சூனியக்காரர்களையும் குறிச்சொல்பவர்களையும் நாட்டிலிருந்து துரத்தி விட்ட செய்தியை நீர் அறிவீர்; என்னைக் கொல்லத்தானே இப்பொழுது என் உயிருக்குக் கண்ணிவைக்கிறீர்?" என்றாள்.
10 அதற்குச் சவுல், "வாழும் ஆண்டவர்மேல் ஆணை! இது குறித்து எத்தண்டனையும் உனக்கு வராது" என்று ஆண்டவர்மேல் ஆணையிட்டுக் கூறினார்.


11 பின்பு அப்பெண், "நான் உமக்காக யாரை எழுப்ப வேண்டும்?" என்று கேட்க, அவர் "சாமுவேலை எழுப்பு" என்று பதிலளித்தார்.
12 அப்பெண்ணின் பார்வையில் சாமுவேல் பட்டவுடன் அவள் உரத்த குரலில் கதறி, "நீர் தாமே சவுல், ஏன் என்னை ஏமாற்றினீர்?" என்று சவுலை நோக்கிக் கூறினாள்.
13 அதற்கு அரசர் அவளை நோக்கி, "அஞ்சாதே; நீர் பார்ப்பது என்ன?" என்று கேட்க, அதற்கு அவள் சவுலிடம், "நிலத்திலிருந்து தெய்வ உருவம் ஒன்று வெளிவருவதைக் காண்கிறேன்" என்றாள்.
14 அவர் அவளிடம், "அதன் தோற்றம் என்ன?" என்று கேட்க, அதற்கு அவள், "முதியவர் ஒருவர் எழுந்து வருகிறார்; அவர் ஒரு போர்வை அணிந்திருக்கிறார்", என்றாள். அவர் சாமுவேல்தான் என்று சவுல் அறிந்து முகம் குப்புறத் தரையில் வீழ்ந்து வணங்கினார்.
15 அப்பொழுது சாமுவேல் சவுலை நோக்கி, "என்னை எழுப்பி நீ ஏன் தொந்தரவு செய்கிறாய்?" என்று கேட்க அதற்குச் சவுல், "நான் பெரும் இக்கட்டில் இருக்கிறேன்; ஏனெனில் பெலிஸ்தியர் எனக்கெதிராகப் போர்தொடுத்து வந்துள்ளனர்; கடவுள் என்னை விட்டு அகன்று சென்று விட்டார்; இறைவாக்கினர் மூலமாகவோ அவர் எனக்குப் பதில் சொல்வதில்லை; ஆதலால் நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு அறிவிக்கும்படி உம்மை நான் அழைத்தேன்" என்றார்.


16 அதற்குச் சாமுவேல், "ஆண்டவர், உன்னை விட்டு விலகி என் பகைவராய் மாறியபின் என்னிடம் ஏன் ஆலோசனைக் கேட்கிறாய்?
17 ஆண்டவர் என் மூலம் உரைத்தது போல் உனக்குச் செய்தார்; அரசை உன் கையினின்று பறித்து உனக்கு அடுத்திருப்பவனாகிய தாவீதிடம் கொடுப்பார். [3]
18 நீ ஆண்டவரின் வார்த்தையைக் கேளாமலும், அமலேக்கின்மேல் அவருக்கு இருந்த வெஞ்சினத்திற்கு ஏற்ப நீ நடந்துகொள்ளாமலும் இருந்ததால், ஆண்டவர் இன்று இதைச் செய்துள்ளார். [4]
19 மேலும் ஆண்டவர் உன்னையும் உன்னோடு இருக்கும் இஸ்ரயேல் மக்களையும் பெலிஸ்தியரிடம் ஒப்புவிப்பார்; நாளை நீயும் உன் புதல்வர்களும் என்னுடன் இருப்பீர்கள்; ஆண்டவர் இஸ்ரயேல் படையையும் பெலிஸ்தியர் கையில் ஒப்புவிப்பார்" என்றார்.


20 சாமுவேலின் வார்த்தைகளினால் அச்சமுற்ற சவுல், உடனே தரையில் நெடுங்கிடையாய் விழுந்தார். மேலும் அவர் இரவு பகலாய் ஒன்றும் உண்ணாது இருந்தமையால், வலிமையற்றிருந்தார்.
21 அப்பெண் சவுலிடம் நெருங்கி வந்து, அவர் மிகவும் கலக்கமுற்றிருப்பதைக் கண்டு அவரை நோக்கி, "இதோ உம் அடியாள் உம் சொல்லைக் கேட்டு, என் உயிரைப் பொருட்படுத்தாது நீர் சொன்ன உம் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தேன்.
22 ஆதலால் இப்பொழுது நீரும் உம் அடியாளின் வார்த்தைகளைக் கேளும். நான் உமக்குமுன் கொஞ்சம் அப்பம் வைக்கிறேன். வழிப் பயணத்திற்கான வலிமையை நீர் பெறுவதற்கு அதை நீர் உண்ணும்" என்றாள்.
23 அதற்கு அவர், "நான் உண்ண மாட்டேன்" என்று மறுத்தார். ஆனால் அப்பெண்ணுடன் சேர்ந்து அவருடைய பணியாளர்கள் வற்புறுத்தவே, அவர் அவர்களது சொல்லுக்கு இசைந்தார்; அதனால் அவர் தரையிலிருந்து எழுந்து படுக்கையின்மேல் உட்கார்ந்தார்.
24 அப்பெண் தன் வீட்டில் ஒரு கொழுத்த கன்றுக்குட்டி வைத்திருந்தாள்; அதை விரைவில் அடித்து, மாவை எடுத்துப் பிசைந்து, புளிப்பற்ற அப்பங்கள் சுட்டாள்.
25 அவள் அவற்றைச் சவுலுக்கும் அவர்தம் பணியாளர்களுக்கும் முன்னே வைத்தாள்; அவர்களும் உண்டனர். பின்னர் அவர்கள் எழுந்து அன்றிரவே புறப்பட்டுச் சென்றனர்.

குறிப்புகள்

[1] 28:3 = லேவி 20:27; இச 18:10-11; 1 சாமு 25:1.
[2] 28:6 = எண் 27:21.
[3] 28:17 = 1 சாமு 15:28.
[4] 28:18 = 1 சாமு 15:3-9.


(தொடர்ச்சி): சாமுவேல் - முதல் நூல்:அதிகாரங்கள் 29 முதல் 31 வரை