திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/சாமுவேல் - முதல் நூல்/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

விக்கிமூலம் இலிருந்து
குழந்தைப் பருவத்தில் சாமுவேல். ஓவியர்: சர் ஜாஷுவா ரெய்னோல்ட்ஸ் (1723-1792).


1 சாமுவேல்[தொகு]

அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

அதிகாரம் 3[தொகு]

கடவுள் சாமுவேலுக்குத் தோன்றுதல்[தொகு]


1 சிறுவன் சாமுவேல் ஏலியின் மேற்பார்வையில் ஆண்டவருக்கு ஊழியம் செய்துவந்தான். அந்நாள்களில் ஆண்டவரின் வார்த்தை அரிதாக இருந்தது. காட்சியும் அவ்வளவாக இல்லை.
2 அப்போது ஒரு நாள் ஏலி தம் உறைவிடத்தில் படுத்திருந்தார். கண் பார்வை மங்கிவிட்டதால் அவரால் பார்க்க முடியவில்லை.
3 கடவுளின் விளக்கு இன்னும் அணையவில்லை. கடவுளின் பேழை வைக்கப்பட்டிருந்த ஆண்டவரின் இல்லத்தில் சாமுவேல் படுத்திருந்தார்.
4 அப்போது ஆண்டவர், 'சாமுவேல்' என்று அழைத்தார். அதற்கு அவன், "இதோ! அடியேன்" என்று சொல்லி,
5 ஏலியிடம் ஓடி, "இதோ! அடியேன். என்னை அழைத்தீர்களா?" என்று கேட்டான். அதற்கு அவர், "நான் அழைக்கவில்லை. திரும்பிச் சென்று படுத்துக்கொள்" என்றார். அவனும் சென்று படுத்துக்கொண்டான்.
6 ஆண்டவர் மீண்டும் 'சாமுவேல்' என்று அழைக்க, அவன் ஏலியிடம் சென்று, "இதோ! அடியேன். என்னை அழைத்தீர்களா?" என்று கேட்டான். அவரோ, "நான் அழைக்கவில்லை மகனே! சென்று படுத்துக்கொள்" என்றார்.
7 சாமுவேல் ஆண்டவரை இன்னும் அறியவில்லை. அவனுக்கு ஆண்டவரின் வார்த்தை இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.
8 மூன்றாம் முறையாக ஆண்டவர் 'சாமுவேல்' என்று அழைத்தார். அவன் எழுந்து ஏலியிடம் சென்று, "இதோ! அடியேன். என்னை அழைத்தீர்களா?" என்று கேட்டான். அப்பொழுது சிறுவனை ஆண்டவர்தாம் அழைத்தார் என்று ஏலி தெரிந்துகொண்டார்.
9 பின்பு ஏலி சாமுவேலை நோக்கி, "சென்று படுத்துக்கொள். உன்னை அவர் மீண்டும் அழைத்தால் அதற்கு நீ, 'ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன்' என்று பதில் சொல்" என்றார். சாமுவேலும் தம் இடத்திற்குச் சென்று படுத்துக் கொண்டான்.


10 அப்போது ஆண்டவர் வந்து நின்று, 'சாமுவேல், சாமுவேல்' என்று முன்பு போல் அழைத்தார். அதற்குச் சாமுவேல், 'பேசும், உம் அடியான் கேட்கிறேன்' என்று மறு மொழி கூறினான்.


11 ஆண்டவர் சாமுவேலிடம் கூறியது: "இதோ, கேட்போர் அனைவரின் இரு காதுகளும் அதிர்ச்சியடையக்கூடிய ஒரு செயலை நான் இஸ்ரயேலில் செய்யப்போகிறேன்.
12 அந்நாளில் ஏலியிடம் நான் அவன் வீட்டுக்கு எதிராகப் பேசியது அனைத்தையும் தொடக்கத்திலிருந்து முடிவுவரை நிறைவேற்றுவேன்.
13 ஏனெனில் அவன் தன் புதல்வர்கள் கீழ்த்தரமாக நடந்து கொண்டதை அறிந்திருந்தும் தடுக்காத குற்றத்திற்காக அவனது வீட்டிற்கு நீங்காத தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன் என்று அறிவித்தேன்.
14 ஆகவே ஏலி வீட்டின் குற்றத்துக்கு பலியினாலோ படையல்களினாலோ என்றென்றும் கழுவாய் செய்யப்பட முடியாது என்று நான் ஏலி வீட்டுக்கு ஆணையிட்டுக் கூறியுள்ளேன்.
15 சாமுவேல் காலைவரை படுத்திருந்தான். பிறகு ஆண்டவரது இல்லத்தின் கதவுகளைத் திறந்து வைத்தான். தான் கண்ட காட்சியை ஏலியிடம் சொல்ல அஞ்சினான்.


16 பிறகு ஏலி, 'சாமுவேல், என் மகனே!' என்று கூப்பிட, சாமுவேல், "இதோ! அடியேன்" என்று பதில் சொன்னான்.
17 அவர் அவனை நோக்கி, "உனக்கு அவர் சொன்ன வார்த்தை என்ன? தயவு செய்து என்னிடம் மறைக்காதே. அவர் உன்னிடம் பேசியதிலிருந்து நீ என்னிடம் ஏதாவது மறைத்தால், கடவுள் உனக்குத் தகுந்தவாறும் அதற்கு மேலும் செய்வார்" என்றார்.
18 சாமுவேல் அவருக்கு எல்லாவற்றையும் எடுத்துச் சொன்னான். அவரிடமிருந்து எதையும் மறைக்கவில்லை. அதற்கு அவர், "அவர் ஆண்டவர்தான்! அவரது பார்வையில் எது நல்லதோ அதை அவர் செய்யட்டும்" என்றார்.


19 சாமுவேல் வளர்ந்தான்; ஆண்டவர் அவனோடு இருந்தார்; சாமுவேலது வார்த்தை எதையும் அவர் தரையில் விழவிடவில்லை.
20 சாமுவேல் ஆண்டவரின் இறைவாக்கினராக நியமிக்கப்பட்டு விட்டார் என்று, தாண் முதல் பெயேர்செபா வரையிலும் அனைத்து இஸ்ரயேலரும் அறிந்து கொண்டனர்.
21 ஆண்டவர் மீண்டும் சீலோவில் தோன்றினார். அங்கேதான் சாமுவேலுக்கு ஆண்டவர் தம் வார்த்தையை வெளிப்படுத்தினார்.

அதிகாரம் 4[தொகு]

உடன்படிக்கைப் பேழை மீட்கப்படல்[தொகு]


1 அதைச் சாமுவேல் இஸ்ரயேலர் அனைவருக்கும் எடுத்துரைத்தார். இஸ்ரயேலர் பெலிஸ்தியருக்கு எதிராகப் போர்தொடுத்து, எபனேசரில் பாளையம் இறங்கினார், பெலிஸ்தியரும் அபேக்கில் பாளையம் இறங்கினர்.
2 பெலிஸ்தியர் இஸ்ரேயலருக்கு எதிராக அணிவகுத்துச் செல்ல, போர் மூண்டது. பெலிஸ்தியர் இஸ்ரயேலரை முறியடித்து அவர்களுள் நாலாயிரம் பேரைப் போர்க்களத்தில் வெட்டி வீழ்த்தினர்.
3 வீரர்கள் பாளையத்திற்குத் திரும்பியபோது, இஸ்ரயேலின் பெரியோர் கூறியது: "இன்று பெலிஸ்தியரிடம் நம்மை ஆண்டவர் தோல்வியுறச் செய்தது ஏன்? ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை சீலோவினின்று நம்மிடையே கொண்டு வருவோம். அது நம்மிடையே வந்தால், நம் எதிரிகள் கையினின்று நம்மைக் காக்கும்."
4 ஆகவே வீரர்கள் சீலோவுக்கு ஆள்களை அனுப்பி கெருபுகளின் மீது வீற்றிருக்கும் படைகளின் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையை அங்கிருந்து கொண்டு வரச் செய்தனர். ஏலியின் இரு புதல்வர்களான ஒப்னியும் பினகாசும் கடவுளின் உடன்படிக்கைப் பேழையோடு இருந்தனர். [1]


5 ஆண்டவரது உடன்படிக்கைப் பேழை பாளையத்திற்குள் வந்ததும், இஸ்ரயேல் அனைவரும் நிலமே அதிரும் அளவிற்குப் பெரும் ஆரவாரம் செய்தனர்.
6 இந்த ஆரவாரத்தைக் கேட்டதும் பெலிஸ்தியர், "எபிரேயரின் பாளையத்தில் இப்பெரும் ஆரவாரமும் கூச்சலும் ஏன்?" என்று வினவினர். ஆண்டவரது உடன்படிக்கை பேழை பாளையத்தினுள் வந்துவிட்டது என்று அறிந்து கொண்டனர்.
7 அப்போது பெலிஸ்தியர் பேரச்சம் கொண்டு: "கடவுள் பாளையத்திற்குள் வந்துவிட்டார். நமக்கு ஐயோ கேடு! இதற்கு முன்பு இப்படி நேர்ந்ததே இல்லை!
8 நமக்கு ஐயோ கேடு! இத்துணை வலிமைமிகு கடவுளிடமிருந்து நம்மைக் காப்பவர் யார்? இக்கடவுள்தான் எகிப்தியரைப் பாலை நிலத்தில் பல்வேறு வதைகளால் துன்புறுத்தியவர்!
9 பெலிஸ்தியரே! துணிவு கொள்ளுங்கள்! ஆண்மையோடு இருங்கள்! எபிரேயர் உங்களுக்கு அடிமைகளாக இருந்தது போல, நீங்களும் எபிரேயேருக்கு அடிமைகளாக ஆகாதபடிக்கு ஆண்மையோடு போரிடுங்கள்!" என்றனர்.


10 பெலிஸ்தியர் மீண்டும் போர் தொடுத்தனர். இஸ்ரயேலர் தோல்வியுற, அவர்களுள் ஒவ்வொருவனும் தன் கூடாரத்திற்குத் தப்பியோடினான். அன்று மாபெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. இஸ்ரயேலருள் முப்பதாயிரம் காலாட்படையினர் மாண்டனர்.
11 கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டது. ஏலியின் இரு புதல்வர்கள் ஒப்னியும் பினகாசும் மாண்டனர்.

ஏலியின் இறப்பு[தொகு]


12 போர்க்களத்தினின்று பென்யமின் குலத்தினன் ஒருவன் ஓடிச் சென்று அன்றே சீலோவை அடைந்தான். அவன் ஆடைகள் கிழிந்திருந்தன; தலையோ புழுதிபடிந்திருந்தது.
13 அவன் வந்தபோது, ஏலி வழியோரம் ஓர் இருக்கையில் அமர்ந்து காத்துக் கொண்டிருந்தார். ஏனெனில் கடவுளின் பேழையைப் பற்றி அவர் உள்ளம் கலக்கமுற்றிருந்தது. அம்மனிதன் நகரினுள் வந்து செய்தியை அறிவித்தபோது, நகர் முழுவதும் அழுதது.
14 அழுகையின் குரல் கேட்ட ஏலி, "ஏன் இந்தக் கூக்குரல்?" என்று வினவ, அம்மனிதன் விரைந்து சென்று ஏலிக்கு செய்தியைத் தெரிவித்தான்.
15 அப்போது ஏலியின் வயது தொண்ணூற்று எட்டு. கண் பார்வை மங்கி இருந்ததினால் அவரால் பார்க்க முடியவில்லை.


16 அம்மனிதன் ஏலியை நோக்கி, "நான் போர்க்களத்திலிருந்து வருகிறேன், இன்றுதான் அங்கிருந்து ஓடி வருகிறேன்" என்று சொல்ல, அதற்கு ஏலி, "மகனே! செய்தி என்ன?" என்று வினவினார்.
17 அதற்கு அத்தூதன், "இஸ்ரயேலர் பெலிஸ்தியர்முன் புற முதுகிட்டு ஓடினர். மேலும் மக்களிடையே பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டுவிட்டது. உம் இருபுதல்வர்கள் ஒப்னியும் பினகாசும் மாண்டனர். கடவுளின் பேழையும் கைப்பற்றப் பட்டுவிட்டது" என்று சொன்னான்.
18 கடவுளின் பேழை பற்றி அவன் சொன்னதும் அவர் தம் இருக்கையின்று பின்புறம் கதவருகே விழுந்து, கழுத்து முறிந்து இறந்தார். ஏனெனில், அவர் வயது முதிர்ந்து உடல் பெருத்தவராய் இருந்தார். அவர் இஸ்ரயேலுக்கு நாற்பது ஆண்டுகள் நீதித் தலைவராய் இருந்தார்.

பினகாசு மனைவியின் இறப்பு[தொகு]


19 அப்பொழுது பினகாசின் மனைவியான அவருடைய மருமகள் நிறைகர்ப்பிணியாய் இருந்தாள். கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டதையும் தன் மாமனாரும் கணவரும் இறந்து விட்டதையும் கேட்டு அவள் பேறுகால வேதனைக்குள்ளாகி, குனிந்து மகவைப் பெற்றெடுத்தாள்.
20 அவள் சாகும் தருவாயில் இருந்தபோது அவள் அருகில் இருந்த தாதியர் அவளை நோக்கி, "அஞ்சாதே, நீ ஒரு மகனைப் பெற்றெடுத்துள்ளாய்" என்று கூறினர். அவளோ அதற்கு மறுமொழி கூறவில்லை; அதைப் பொருட்படுத்தவுமில்லை.
21 கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டதையும் தன் மாமனாரும் கணவரும் இறந்ததையும் முன்னிட்டு 'இஸ்ரயேலினின்று மாட்சி அகன்று விட்டது' என்னும் பொருள்பட அவள் தன் குழந்தைக்கு 'இக்க போது' [2] என்று பெயரிட்டாள்.
22 அவள் கூறியது: "இஸ்ரயேலினின்று மாட்சி அகன்றுவிட்டது, ஏனெனில் கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டது" என்றாள்.

குறிப்புகள்

[1] 4:4 = விப 25:22.
[2] 4:21 எபிரேயத்தில், 'மாட்சியின்மை' என்பது பொருள்.

(தொடர்ச்சி): சாமுவேல் - முதல் நூல்:அதிகாரங்கள் 5 முதல் 6 வரை