திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/செக்கரியா/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

விக்கிமூலம் இலிருந்து
"இதோ முழுவதும் பொன்னாலான விளக்குத் தண்டு ஒன்றைக் காண்கிறேன்; அதன் உச்சியில் கிண்ணம் ஒன்று உள்ளது; அக்கிண்ணத்தின்மேல் ஏழு அகல்கள் இருக்கின்றன..." - செக்கரியா 4:2.

செக்கரியா (The Book of Zechariah)[தொகு]

அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

அதிகாரம் 3[தொகு]

தலைமைக் குருக்களைக் குறித்துக் கண்ட காட்சி[தொகு]


1 பின்பு அவர் தலைமைக் குருவாகிய யோசுவாவை எனக்குக் காட்டினார்.
அவர் ஆண்டவரின் தூதர் முன்னிலையில் நின்றுகொண்டிருந்தார்.
அவர்மேல் குற்றம் சாட்டுவதற்கு அவரது வலப்பக்கத்தில்
சாத்தானும் நின்று கொண்டிருந்தான். [1]
2 அப்பொழுது ஆண்டவரின் தூதர் சாத்தானை நோக்கி,
"சாத்தானே, ஆண்டவர் உன்னைக் கடிந்து கொள்வாராக!
எருசலேமைத் தெரிந்தெடுத்த ஆண்டவர் உன்னை அதட்டுவாராக!
அடுப்பிலிருந்து எடுத்த கொள்ளியல்லவா இவர்?" என்றார். [2]
3 யோசுவாவோ அழுக்கு உடைகளை உடுத்தியவராய்
தூதர்முன் நின்று கொண்டிருந்தார்.
தூதர் தம்முன் நின்று கொண்டிருந்தவர்களை நோக்கி,
4 "அழுக்கு உடைகளை இவரிடமிருந்து களைந்துவிடுங்கள்" என்றார்.
பின்பு அவரிடம், "உன்னிடமிருந்து உன் தீச்செயல்களை அகற்றி விட்டேன்;
நீ உடுத்திக் கொள்வதற்குப் பட்டாடைகளை அளிப்பேன்" என்றார்.


5 மேலும், "தூய்மையான தலைப்பாகை ஒன்றை அவருக்கு அணிவியுங்கள்" என்றார்.
அவ்வாறே அவர்கள் தூய்மையான தலைப்பாகையை அணிவித்துப்
பட்டாடைகளை உடுத்தினர்.
ஆண்டவரின் தூதர் அங்கேயே நின்றுகொண்டிருந்தார்.


6 ஆண்டவரின் தூதர் யோசுவாவுக்கு விடுத்த உறுதிமொழி இதுவே:
7 "நீ என் வழிகளில் நடந்து, என் திருமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுகினால்,
நீ என் இல்லத்தை ஆள்வாய்; என் திருமுற்றங்களுக்கும் பொறுப்பாளி ஆவாய்;
இங்கே நிற்கும் தூதர்கள் இடையே சென்று வரும் உரிமையை உனக்குத் தருவேன்"
என்று படைகளின் ஆண்டவர் கூறுகிறார்.
8 தலைமைக் குரு யோ:சுவாவே!
நீயும் உன் முன்னே அமர்ந்திருக்கும் உன் தோழரும் கேளுங்கள்.
அவர்கள் நல்லடையாளமான மனிதர்கள்;
இதோ நான் தளிர் எனப்படும் என் ஊழியன் தோன்றுமாறு செய்வேன்; [3]
9 யோசுவாவின் முன்னிலையில் நான் வைத்த கல்லைப் பார்;
இந்த ஒரே கல்லில் ஏழு பட்டைகள்;
அதில் நான் எழுத்துகளைப் பொறித்திடுவேன், என்கிறார் படைகளின் ஆண்டவர்.
10 ஒரே நாளில் இந்த நாட்டின் தீச்செயலை அகற்றுவேன்.
படைகளின் ஆண்டவர் கூறுகிறார்:
அந்நாளில் ஒவ்வொருவரும் தம் அடுத்திருப்பவரைத்
தம் திராட்சைக் கொடியின் கீழும் அத்தி மரத்தின் கீழும்
தங்கி இளைப்பாற அழைப்பார். [4]


குறிப்புகள்

[1] 3:1 = எஸ்ரா 5:2; திவெ 12:10.
[2] 3:2 = யூதா 9.
[3] 3:8 = எரே 23:5; 33:25; செக் 6:12.
[4] 3:10 = மீக் 4:4.

அதிகாரம் 4[தொகு]

விளக்குத்தண்டைக் குறித்த காட்சி[தொகு]


1 என்னோடு பேசிய தூதர் மீண்டும் வந்து,
உறக்கத்தில் ஆழ்ந்திருப்பவனை எழுப்புவதுபோல் என்னை எழுப்பி,
2 "நீ என்ன காண்கிறாய்?" என்று என்னைக் கேட்க,
நான், "இதோ முழுவதும் பொன்னாலான விளக்குத் தண்டு ஒன்றைக் காண்கிறேன்;
அதன் உச்சியில் கிண்ணம் ஒன்று உள்ளது;
அக்கிண்ணத்தின்மேல் ஏழு அகல்கள் இருக்கின்றன;
மேலே உள்ள ஒவ்வோர் அகலுக்கும் ஏழு மூக்குகள் உள்ளன;
3 விளக்குத் தண்டின் அருகில் வலப்புறம் ஒன்றும் இடப்புறம் ஒன்றுமாக
இரு ஒலிவ மரங்கள் இருக்கின்றன" என்றேன். [1]
4 அப்போது என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதரை நோக்கி, நான்,
"என் தலைவரே! இவை எதைக் குறிக்கின்றன?" என்று வினவினேன்.
என்னோடு பேசிக் கொண்டிருந்த தூதர்,
5 "இவை எதைக் குறிக்கின்றன என்பது உனக்குத் தெரியாதா?" எனக் கேட்டார்.
நான் "என் தலைவரே! எனக்குத் தெரியாது" என்றேன்.

செருபாபேலுக்கு ஆண்டவரின் வாக்குறுதி[தொகு]


6 மீண்டும் அவர் என்னிடம், "செருபாபேலுக்கு ஆண்டவர் அருளியவாக்கு இதுவே:
உனது ஆற்றலாலும் அல்ல, வலிமையாலும் அல்ல;
ஆனால் எனது ஆவியாலே ஆகும்," என்கிறார் படைகளின் ஆண்டவர். [2]
7 மாபெரும் மலையே! செருபாபேலுக்குமுன் உன் நிலை என்ன?
ஒரு சமவெளிக்கு ஒப்பாவாய்;
அவரே தலையாய கல்லைக் கொண்டு வருவார்;
அப்போது அதன்மேல் 'அருள்பொழிக! அருள்பொழிக!'
என்ற ஆரவாரம் ஒலிக்கும்" என்றார்.


8 ஆண்டவரின் வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது.
9 "செருபாபேலின் கைகளே இக்கோவிலுக்கு அடித்தளம் இட்டன.
அவர் கைகளே இவ்வேலையை முடித்துவைக்கும்.
என்னை உங்களிடம் அனுப்பியவர் படைகளின் ஆண்டவரே
என்பதை அப்போது அறிந்துகொள்வீர்கள்."
10 வேலை தொடங்கிய நாளை அவமதித்தவர்கள் யாரோ
அவர்கள் செருபாபேலின் கையில் இரு தூக்கு நூற்குண்டு
இருப்பதைக் கண்டு அகமகிழ்வார்கள். [3]


11 "அந்த அகல்கள் ஏழும்
நிலவுலகெங்கும் சுற்றிப் பார்க்கும் ஆண்டவரின் கண்கள்" என்றார்.
அப்போது நான், "விளக்குத் தண்டின் அருகில் வலப்புறமும்
இடப்புறமும் உள்ள இந்த இரு ஒலிவ மரங்களும் எதைக் குறிக்கின்றன?"
என வினவினேன். [4]
12 மீண்டும் நானே அவரிடம்,
"எண்ணெய் ஊற்றுவதற்கென வைத்திருக்கும் இரண்டு பொற்குழாய்களின் அருகில்
ஒலிவ மரக்கிளைகள் இரண்டு இருப்பதன் பொருள் என்ன?" எனக் கேட்டேன்.
13 அதற்கு அவர், "இவை எதைக் குறிக்கின்றன
என்பது உனக்குத் தெரியாதா?" என்றார்.
நான், "தெரியாது என் தலைவரே" என்றேன்.
14 அதற்கு அவர், "இவை அனைத்துலகின் ஆண்டவர் திருமுன் நிற்கின்ற
திருநிலைப்படுத்தப்பட்ட இருவரைக் குறிக்கின்றன" என மறுமொழி பகர்ந்தார்.


குறிப்புகள்

[1] 4:3 = திவெ 11:4.
[2] 4:6 = எஸ்ரா 5:2.
[3] 4:10 = திவெ 5:6.
[4] 4:11 = திவெ 11:4.


(தொடர்ச்சி): செக்கரியா:அதிகாரங்கள் 5 முதல் 6 வரை