திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/செக்கரியா/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

விக்கிமூலம் இலிருந்து
"மீண்டும் நான் என் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, இரு மலைகளுக்கு இடையிலிருந்து நான்கு தேர்கள் புறப்பட்டு வருவதைக் கண்டேன்; அம்மலைகள் வெண்கல மலைகள்...." - செக்கரியா 6:1.

செக்கரியா (The Book of Zechariah)[தொகு]

அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

அதிகாரம் 5[தொகு]

பறக்கும் சுருள் பற்றிய காட்சி[தொகு]


1 மீண்டும் நான் கண்களை உயர்த்திப் பார்த்தபோது இதோ,
2 பறக்கும் ஏட்டுச்சுருள் ஒன்றைக் கண்டேன்.
"நீ காண்பது என்ன?" என்று அத்தூதர் என்னைக் கேட்க,
நான், "பறக்கும் ஏட்டுச்சுருள் ஒன்றைக் காண்கிறேன்;
அதன் நீளம் இருபது முழம், அகலம் பத்து முழம்" என்று பதிலளித்தேன்.
3 அப்போது அவர் என்னிடம்,
"அனைத்துலகின்மீதும் விழுகின்ற சாபமே இது;
ஒருபுறம் எழுதியுள்ளபடி, திருடன் எவனும் இங்கிருந்து ஒழிக்கப்படுவான்;
மறுபுறம் எழுதியுள்ளபடி, பொய்யாணை இடுகிறவன் எவனும்
தண்டனைக்குத் தப்பவே மாட்டான்.
4 நான் அந்தச் சாபத்தை அனுப்புவேன்"
என்கிறார் படைகளின் ஆண்டவர்.
"அது திருடரின் வீட்டிற்குள்ளும்
என் பெயரால் பொய்யாணை இடுவோரின் இல்லத்திற்குள்ளும் நுழைந்து,
அவரவர் வீட்டில் தங்கி, மரங்கள் கற்கள் உட்பட
அவ்வீட்டையே அழித்து விடும்.

மரக்காலுக்குள் பெண்[தொகு]


5 பின்பு என்னோடு பேசிக் கொண்டிருந்த தூதர் வெளியே வந்து என்னிடம்,
"உன் கண்களை உயர்த்தி, அங்கிருந்து வருவது யாது எனப்பார்" என்றார்.
6 "அது என்ன?" என்று நான் திருப்பிக் கேட்க,
"வெளிவரும் ஒரு மரக்கால்!" என்றார்.
தொடர்ந்து அவர், "இதுதான் நில உலகெங்கும் பரவியிருக்கும்
அவர்களின் தீச்செயல்" என மொழிந்தார்.
7 அதன் ஈய மூடி தூக்கி உயர்த்தப்பட்டது.
இதோ, மரக்காலின் உள்ளே ஒரு பெண் அமர்ந்திருந்தாள்.
8 அப்போது அத்தூதர், "இவளே அக்கொடுமை" எனக் கூறி,
அவளை அந்த மரக்காலுக்குள் திணித்துப்
பளுவான ஈய மூடியால் அதை அடைத்தார்.
9 மீண்டும் நான் என் கண்களை உயர்த்திப் பார்த்த போது
இதோ, வெளிவருகின்ற இரண்டு பெண்களைக் கண்டேன்;
அவர்களுக்கு நாரையின் இறக்கைகள் போல் இறக்கைகள் இருந்தன.
அவர்களுடைய இறக்கைகளில் காற்று நிரம்பியிருந்தது;
அவர்கள் மரக்காலை மண்ணுக்கும் விண்ணுக்கும் இடையில்
தூக்கிக் கொண்டு போனார்கள்.
என்னோடு பேசிக் கொண்டிருந்த தூதரிடம்,
10 "இவர்கள் மரக்காலை எங்கே கொண்டு போகிறார்கள்?" என்று நான் கேட்டேன்.
11 அதற்கு அவர், "சீனார் நாட்டிலே
அதற்கொரு கோவில் கட்டுவதற்கு அதைக் கொண்டு போகிறார்கள்.
அங்கே கோவில் எழுப்பி மரக்காலை அதற்குரிய மேடையில்
நிலைநிறுத்துவார்கள்" என்றார்.


அதிகாரம் 6[தொகு]

நான்கு தேர்கள் பற்றிய காட்சி[தொகு]


1 மீண்டும் நான் என் கண்களை உயர்த்திப் பார்த்தபோது,
இரு மலைகளுக்கு இடையிலிருந்து நான்கு தேர்கள்
புறப்பட்டு வருவதைக் கண்டேன்;
அம்மலைகள் வெண்கல மலைகள்.
2 முதல் தேரில் சிவப்புக் குதிரைகளும்,
இரண்டாவது தேரில் கறுப்புக் குதிரைகளும், [1]
3 மூன்றாவதில் வெள்ளைக் குதிரைகளும்,
நான்காவதில் புள்ளிகளை உடைய கறுப்புநிற
வலிமையான குதிரைகளும் பூட்டப்பட்டிருந்தன. [2]
4 என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதரிடம் நான்
"என் தலைவரே! இவை என்ன?" என்று கேட்டேன்.
5 அத்தூதர், "இவை அனைத்துலக ஆண்டவரின் திருமுன்னிருந்து
புறப்பட்டுச் செல்கின்ற வாகனத்தின் நாற்றிசைக் காற்றுகள். [3]
6 கறுப்புக் குதிரைகள் பூட்டிய தேர் வடநாட்டை நோக்கிச் செல்கிறது;
வெண்ணிறக் குதிரைகள் அவற்றைப் பின்தொடர்ந்து போகின்றன;
கறுப்புநிறக் குதிரைகளோ தென்னாட்டை நோக்கிச் செல்கின்றன" என்று கூறினார்.
7 வலிமையான குதிரைகள் புறப்பட்டுச் சென்று
உலகெங்கும் சுற்றிவருவதற்குத் துடித்தன.
அப்போது அவர், "போய் உலகைச் சுற்றி வாருங்கள்" என்றார்.
அவ்வாறே அவை உலகெங்கும் சுற்றித் திரிந்தன.
8 பின்பு அவர் என்னை நோக்கிக் கூக்குரலிட்டு,
"இதோ பார்! வடநாட்டை நோக்கிச் சென்றவை
அந்நாட்டில் எனது உள்ளம் அமைதி கொள்ளும்படி செய்திருக்கின்றன" என்றார்.

யோசுவாவை முடிசூட்டுவிக்க ஆண்டவரது கட்டளை[தொகு]


9 மீண்டும் ஆண்டவரது வாக்கு எனக்கு அருளப்பட்டது:
10 நாடுகடத்தப்பட்டுப் பாபிலோனிலிருந்து
திரும்பி வந்திருக்கின்ற எல்தாய், தோபியா,
எதாயா என்பவர்களிடமிருந்து நன்கொடைகளைப் பெற்றுக்கொள்;
அன்றைக்கே செப்பனியாவின் மகனான யோசியாவின் இல்லத்திற்குப் போ.
11 அங்கே அவர்களிடம் பெற்றுக்கொண்ட
பொன் வெள்ளியைக் கொண்டு முடி செய்து,
தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமான யோசுவாவின் தலையில் அதைச் சூட்டு;
12 சூட்டியபின் இவ்வாறு சொல்:
"படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
இதோ, 'தளிர்' என்னும் பெயர் கொண்ட மனிதர்
தம் இடத்திலிருந்து துளிர்ப்பார்;
ஆண்டவரின் கோவிலைக் கட்டியெழுப்புவார்; [4]
13 ஆண்டவரின் கோவிலைக் கட்டியெழுப்புவதுமன்றி,
அரச மாண்பைக் கொண்டவராய்,
அரியணையில் வீற்றிருந்து அவர் ஆட்சி செலுத்துவார்;
ஓர் குருவும் தமது அரியணையில் அமர்ந்திருப்பார்.
14 அவர்கள் இருவர்க்கிடையேயும் நல்லிணக்கம் நிலைபெறும்.
அந்த மணிமுடி ஆண்டவரின் கோவிலில் எல்தாய், தோபியா,
எதாயா என்பவர்களுக்கும் செப்பனியாவின் மகன் யோசியாவிற்கும்
நினைவுச் சின்னமாய் இருக்கும்.


15 தொலைவில் இருப்போரும் வந்து
ஆண்டவரின் கோவிலைக் கட்டியெழுப்பத் துணைபுரிவர்;
அப்போது படைகளின் ஆண்டவரே என்னை உங்களிடம் அனுப்பினார்
என்பதை நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள்.
உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு ஆர்வத்துடன் செவிசாய்த்து
நடந்தீர்களானால் இவையெல்லாம் நிறைவேறும்."


குறிப்புகள்

[1] 6:2 = திவெ 6:45.
[2] 6:3 = திவெ 6:2.
[3] 6:5 = திவெ 7:1.
[4] 6:12 = எரே 23:5; 33:15; செக் 3:8.


(தொடர்ச்சி): செக்கரியா:அதிகாரங்கள் 7 முதல் 8 வரை