திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 105 முதல் 106 வரை

விக்கிமூலம் இலிருந்து
"ஆண்டவர் தம்.அரியணையை விண்ணகத்தில் நிலைநிறுத்தியுள்ளார்" (திருப்பாடல்கள் 103:19). மூலம்: "தெ பெர்ரி திருப்பாடல்கள் ஓவிய நூல்". 15ஆம் நூற்றாண்டு. பிரான்சு.

திருப்பாடல்கள்[தொகு]

நான்காம் பகுதி (90-106)
திருப்பாடல்கள் 105 முதல் 106 வரை

திருப்பாடல் 105[தொகு]

கடவுளும் அவர்தம் மக்களும்[தொகு]

(1 குறி 16:8-22)


1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்!
அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்!
அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள்.


2 அவருக்குப் பாடல் பாடுங்கள்;
அவரைப் புகழ்ந்தேத்துங்கள்!
அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்!


3 அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்;
ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக!


4 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்!
அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்!


5 அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவு கூருங்கள்!
அவர்தம் அருஞ்செயல்களையும்,
அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும்
நினைவில் கொள்ளுங்கள்.


6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே!
அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே!


7 அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்!
அவரின் நீதித்தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன.


8 அவர் தமது உடன்படிக்கையை
என்றென்றும் நினைவில் கொள்கின்றார்;
ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த
வாக்குறுதியை நினைவுகூர்கின்றார்.


9 ஆபிரகாமுடன் தாம் செய்து கொண்ட உடன்படிக்கையையும்
ஈசாக்குக்கு தாம் ஆணையிட்டுக் கூறியதையும்
அவர் நினைவில் கொண்டுள்ளார். [1]


10 யாக்கோபுக்கு நியமமாகவும்
இஸ்ரயேலுக்கு என்றுமுள உடன்படிக்கையாகவும்
அதை அவர் உறுதிப்படுத்தினார்.


11 'கானான் நாட்டை உங்களுக்கு அளிப்பேன்;
அப் பங்கே உங்களுக்கு உரிமைச் சொத்தாய் இருக்கும்' என்றார் அவர். [2]


12 அப்போது, அவர்கள் மதிப்பிலும் எண்ணிக்கையிலும்
குறைந்தவராய் இருந்தார்கள்;
அங்கே அவர்கள் அன்னியராய் இருந்தார்கள்.


13 அவர்கள் ஒரு நாட்டினின்று மற்றொரு நாட்டிற்கும்
ஓர் அரசினின்று மற்றொரு மக்களிடமும் அலைந்து திரிந்தார்கள்.


14 யாரும் அவர்களை ஒடுக்குமாறு அவர் விட்டு விடவில்லை;
அவர்களின் பொருட்டு மன்னர்களை அவர் கண்டித்தார்.


15 'நான் அருள்பொழிவு செய்தாரைத் தொடாதீர்!
என் இறைவாக்கினர்க்குத் தீங்கிழைக்காதீர்' என்றார் அவர். [3]


16 நாட்டில் அவர் பஞ்சம் வரும்படி செய்தார்;
உணவெனும் ஊன்றுகோலை முறித்துவிட்டார். [4]


17 அவர்களுக்கு முன் ஒருவரை அனுப்பிவைத்தார்;
யோசேப்பு என்பவர் அடிமையாக விற்கப்பட்டார். [5]


18 அவர்தம் கால்களுக்கு விலங்கிட்டு அவரைத் துன்புறுத்தினர்.
அவர்தம் கழுத்தில் இரும்புப் பட்டையை மாட்டினர்.


19 காலம் வந்தது; அவர் உரைத்தது நிறைவேறிற்று;
ஆண்டவரின் வார்த்தை அவர் உண்மையானவரென மெய்ப்பித்தது. [6]


20 மன்னர் ஆளனுப்பி அவரை விடுதலை செய்தார்;
மக்களினங்களின் தலைவர் அவருக்கு விடுதலை அளித்தார்; [7]


21 அவர் அவரைத் தம் அரண்மனைக்குத் தலைவர் ஆக்கினார்;
தம் உடைமைகளுக்கெல்லாம் பொறுப்பாளராக ஏற்படுத்தினார். [8]


22 அவர் அரச அலுவலரைப் பயிற்றுவித்தார்;
அவருடைய அவைப்பெரியோருக்கு நல்லறிவு புகட்டினார்.


23 பின்னர், இஸ்ரயேல் எகிப்துக்கு வந்தார்;
யாக்கோபு காம் நாட்டில் அன்னியராய் வாழ்ந்தார். [9]


24 ஆண்டவர் தம் மக்களைப் பல்கிப் பெருகச் செய்தார்;
அவர்களின் எதிரிகளைவிட அவர்களை
வலிமைமிக்கவர்கள் ஆக்கினார்.


25 தம் மக்களை வெறுக்கும்படியும்,
தம் அடியார்களுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யும்படியும்
அவர் எகிப்தியரின் மனத்தை மாற்றினார். [10]


26 அவர் தம் ஊழியராகிய மோசேயையும்,
தாம் தேர்ந்தெடுத்த ஆரோனையும் அனுப்பினார். [11]


27 அவர்கள் எகிப்தியரிடையே அவர்தம்
அருஞ்செயல்களைச் செய்தனர்;
காம் நாட்டில் வியத்தகு செயல்களைச் செய்து காட்டினர்.


28 அவர் இருளை அனுப்பி நாட்டை இருட்டாக்கினார்;
அவருடைய சொற்களை எதிர்ப்பார் இல்லை. [12]


29 அவர்களுடைய நீர்நிலைகளை அவர் இரத்தமாக மாற்றினார்;
அவற்றிலிருந்த மீன்களைச் சாகடித்தார். [13]


30 அவர்களது நாட்டிற்குள் தவளைகள் ஏறிவந்தன;
மன்னர்களின் பள்ளியறைகளுக்குள்ளும் அவை நுழைந்தன. [14]


31 அவர் கட்டளையிட, அவர்களுடைய நாடு முழுவதிலும்
ஈக்களும் கொசுக்களும் திரண்டு வந்தன. [15]


32 அவர் நீருக்குப் பதிலாகக்
கல்லை மழையாகப் பொழிந்தார்;
அவர்களது நாடெங்கும் மின்னல் தெறிக்கச் செய்தார்.


33 அவர் அவர்களின் திராட்சைச் செடிகளையும்
அத்திமரங்களையும் அழித்தார்;
அவர்களது நாடெங்குமுள்ள மரங்களை முறித்தார். [16]


34 அவரது சொல்லால் வெட்டுக் கிளிகளும்
எண்ணற்ற வெட்டுப்புழுக்களும் அங்கே தோன்றின.


35 அவை அவர்களது நாட்டின் பயிர் பச்சைகளைத் தின்றுதீர்த்தன;
அவர்களது நிலத்தின் விளைச்சல்களை விழுங்கிவிட்டன. [17]


36 அவர் அவர்களது நாட்டின்
தலைப்பேறுகள் அனைத்தையும் தாக்கினார்;
அவர்களது ஆண்மையின் முதற்பேறுகள்
அனைத்தையும் வீழ்த்தினார். [18]


37 அவர் இஸ்ரயேலரை வெள்ளியோடும்
பொன்னோடும் புறப்படச் செய்தார்;
அவர்கள் குலங்களில் எவரும் தளர்ந்து போகவில்லை.


38 அவர்கள் வெளியேறுகையில் எகிப்தியர் அகமகிழ்ந்தனர்;
ஏனெனில், இஸ்ரயேலர் பற்றிய பேரச்சம்
அவர்களை ஆட்கொண்டிருந்தது. [19]


39 அவர் அவர்களைப் பாதுகாக்க மேகத்தைப் பரப்பினார்;
இரவில் ஒளிதர நெருப்பைத் தந்தார். [20]


40 அவர்கள் கேட்டதால் அவர் காடைகளை வரச்செய்தார்;
வானினின்று வந்த உணவால்
அவர்களை நிறைவுறச் செய்தார். [21


41 அவர் கற்பாறையைப் பிளந்தார்;
தண்ணீர் பொங்கி வழிந்தது;
அது பாலைநிலங்களில் ஆறாய் ஓடிற்று. [22]


42 ஏனெனில், தம் அடியார் ஆபிரகாமுக்கு அளித்த
தமது தூய வாக்குறுதியை அவர் நினைவுகூர்ந்தார்.


43 அவர் தம் மக்களை மகிழ்ச்சியோடு வெளிக்கொணர்ந்தார்;
அவர் தாம் தெரிந்தெடுத்தவர்களை
ஆரவாரத்தோடு கூட்டிச் சென்றார்.


44 அவர் வேற்றினத்தாரின் நாடுகளை
அவர்களுக்கு அளித்தார்;
மக்களினங்களது உழைப்பின் பயனை
அவர்கள் உரிமையாக்கிக் கொள்ளுமாறு செய்தார். [23]


45 அவர்கள் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும்,
அவருடைய சட்டங்களின்படி ஒழுகவுமே
அவர் இவ்வாறு செய்தார்.
அல்லேலூயா!


குறிப்புகள்

[1] 105:9 = தொநூ 12:7; 17:8; 26:3.
[2] 105:10-11 = தொநூ 28:13.
[3] 105:14-15 = தொநூ 20:3-7.
[4] 105:16 = தொநூ 41:53-57.
[5] 105:17 = தொநூ 37:28; 45:5.
[6] 105:18-19 = தொநூ 39:20-40:23.
[7] 105:20 = தொநூ 41:14.
[8] 105:21 = தொநூ 41:39-41.
[9] 105:23 = தொநூ 46:6; 47:11.
[10] 105:24-25 = விப 1:7-14.
[11] 105:26 = விப 3:1-4:17.
[12] 105:28 = விப 10:21-23.
[13] 105:29 = விப 7:17-21.
[14] 105:30 = விப 8:1-6.
[15] 105:31 = விப 8:16-17, 20-24.
[16] 105:32-33 = விப 9:22-25.
[17] 105:34-35 = விப 10:12-15.
[18] 105:36 = விப 12:29.
[19] 105:37-38 = விப 12:33-36.
[20] 105:39 = விப 13:21-22.
[21] 105:40 = விப 16:2-15.
[22] 105:41 = விப 17:1-7; எண் 20:2-13.
[23] 105:44 = யோசு 11:16-23; 16:1; 1 குறி 16:34;
2 குறி 5:13; 7:3; எஸ்ரா 3:11; திபா 11:5; 107:1;
119:1; 136:1; எரே 33:11.


திருப்பாடல் 106[தொகு]

கடவுள் தம் மக்களுக்குக் காட்டிய கருணை[தொகு]


1 அல்லேலூயா!
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்;
ஏனெனில் அவர் நல்லவர்!
என்றென்றுமுள்ளது அவரது பேரன்பு!


2 ஆண்டவரின் வலிமைமிகு செயல்களை
யாரால் இயம்ப இயலும்?
அவர்தம் புகழை யாரால் விளம்பக் கூடும்?


3 நீதிநெறி காப்போர் பேறு பெற்றோர்!
எப்போதும் நேரியதே செய்வோர் பேறுபேற்றோர்!


4 ஆண்டவரே! நீர் உம்மக்கள்மீது இரக்கம் காட்டும்போது
என்னை நினைவு கூரும்!
அவர்களை நீர் விடுவிக்கும்போது
எனக்கும் துணைசெய்யும்!


5 நீர் தேர்ந்தெடுத்த மக்களின் நல்வாழ்வை
நான் காணும்படி செய்யும்;
உம்முடைய மக்களின் மகிழ்ச்சியில்
நானும் பங்கு கொள்ளும்படிச் செய்யும்!
அப்போது, உமது உரிமைச் சொத்தான மக்களோடு
உம்மைப் போற்றிட இயலும்.


6 எங்கள் மூதாதையரின் வழிநடந்து,
நாங்களும் பாவம் செய்தோம்;
குற்றம் புரிந்தோம்; தீமை செய்தோம்.


7 எங்கள் மூதாதையர் எகிப்தில் நீர்செய்த
வியத்தகு செயல்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை;
உமது மாபெரும் பேரன்பை
அவர்கள் நினைவில் கொள்ளவில்லை;
மாறாக உன்னதமானவரை எதிர்த்துச்
செங்கடல் ஓரத்தில் [1] கலகம் செய்தனர். [2]


8 அவரோ தமது பெயரின் பொருட்டு அவர்களை விடுவித்தார்;
இவ்வாறு அவர் தமது வலிமையை வெளிப்படுத்தினார்.


9 அவர் செங்கடலை அதட்டினார்;
அது உலர்ந்து போயிற்று;
பாலை நிலத்தில் நடத்திச் செல்வது போல்
அவர்களை ஆழ்கடல் வழியே நடத்திச்சென்றார்.


10 எதிரியின் கையினின்று அவர்களை விடுவித்தார்;
பகைவரின் பிடியினின்று அவர்களை மீட்டார்.


11 அவர்களுடைய எதிரிகளைக் கடல்நீர் மூழ்கடித்தது;
அவர்களுள் ஒருவர்கூட எஞ்சியிருக்கவில்லை.


12 அப்பொழுது, அவர்கள் அவருடைய
வாக்குறுதிகளில் நம்பிக்கை வைத்தார்கள்; [3] [4]
அவரைப் புகழ்ந்து பாடினார்கள்.


13 ஆயினும், அவர் செய்தவற்றை
அவர்கள் விரைவிலேயே மறந்துவிட்டார்கள்;
அவரது அறிவுரைக்காக அவர்கள் காத்திருக்கவில்லை.


14 பாலைநிலத்தில் அவர்கள்
பெருவிருப்புக்கு இடங்கொடுத்தார்கள்.
பாழ்வெளியில் அவர்கள்
இறைவனைச் சோதித்தார்கள்.


15 அவர்கள் கேட்டதை அவர் அவர்களுக்குச் கொடுத்தார்;
அவர்களின் உயிரை அழிக்குமாறு
அவர்கள்மீது நோயை அனுப்பினார். [5]


16 பாளையத்தில் இருக்கும்போது மோசேயின்மீதும்,
ஆண்டவருக்காகத் திருநிலைபெற்ற ஆரோன்மீதும்,
அவர்கள் பொறாமை கொண்டார்கள்.


17 நிலம் பிளந்து தாத்தானை விழுங்கியது;
அபிராமின் கும்பலை அப்படியே புதைத்து விட்டது.


18 அக்கும்பலிடையே நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது;
தீயோரைத் தீப்பிழம்பு எரித்தது. [6]


19 அவர்கள் ஓரேபில் ஒரு கன்றுக் குட்டியைச் செய்துகொண்டனர்;
வார்ப்புச் சிலையை விழுந்து வணங்கினர்;


20 தங்கள் 'மாட்சி'க்குப் பதிலாக,
புல்தின்னும் காளையின் உருவத்தைச் செய்து கொண்டனர்;


21 தங்களை விடுவித்த இறைவனை மறந்தனர்;
எகிப்தில் பெரியன புரிந்தவரை மறந்தனர்;


22 காம் நாட்டில் அவர் செய்த வியத்தகு செயல்களை மறந்தனர்;
செங்கடலில் அவர் செய்த அச்சுறுத்தும் செயல்களையும் மறந்தனர்.


23 ஆகையால், அவர்களை அவர் அழித்துவிடுவதாகக் கூறினார்;
ஆனால், அவரால் தேர்ந்து கொள்ளப்பட்ட மோசே,
அவர்முன் உடைமதில் காவலர் போல் நின்று
அவரது கடுஞ்சினம் அவர்களை அழிக்காதவாறு தடுத்தார். [7]


24 அருமையான நாட்டை அவர்கள் இகழ்ந்தார்கள்;
அவரது வாக்குறுதியில் நம்பிக்கை கொள்ளவில்லை.


25 அவர்கள் தங்களின் கூடாரங்களில் முறுமுறுத்தார்கள்;
ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுக்கவில்லை.


26 ஆகவே அவர் அவர்களுக்கு எதிராகத் தம் கையை ஓங்கி,
'நான் உங்களைப் பாலைநிலத்தில் வீழ்ச்சியுறச் செய்வேன்; [8]


27 உங்கள் வழிமரபினரை வேற்றினங்களிடையிலும்
அன்னிய நாடுகளிலும் சிதறடிப்பேன்' என்றார். [9]


28 பின்னர் அவர்கள் பாகால்பெயோரைப் பற்றிக் கொண்டார்கள்.
உயிரற்ற தெய்வங்களுக்குப் பலியிட்டவற்றை உண்டார்கள்;


29 இவ்வாறு தங்கள் செய்கைகளினால் அவருக்குச் சினமூட்டினார்கள்;
ஆகவே, கொள்ளைநோய் அவர்களிடையே பரவிற்று.


30 பினகாசு கொதித்தெழுந்து தலையிட்டதால்
கொள்ளைநோய் நீங்கிற்று.


31 இதனால், தலைமுறை தலைமுறையாக,
என்றென்றும், அவரது செயல் நீதியாகக் கருதப்பட்டது. [10]


32 மெரிபாவின் ஊற்றினருகில் அவருக்குச் சினமூட்டினார்கள்.
அவர்களின் பொருட்டு மோசேக்கும் தீங்கு நேரிட்டது.


33 மோசேக்கு அவர்கள் மனக்கசப்பை ஏற்படுத்தியதால்
அவர் முன்பின் பாராது பேசினார். [11]


34 ஆண்டவர் இட்ட கட்டளைக்கு மாறாக,
மக்களினங்களை அவர்கள் அழிக்கவில்லை.


35 வேற்றினத்தாரோடு கலந்துறவாடி,
அவர்களின் வழக்கங்களைக் கற்றுக்கொண்டனர்;


36 அவர்களின் தெய்வச் சிலைகளைத் தொழுதனர்;
அவையே அவர்களுக்குக் கண்ணிகளாயின. [12]


37 அவர்கள் தங்கள் புதல்வர், புதல்வியரைப்
பேய்களுக்குப் பலியிட்டனர்; [13]


38 மாசற்ற இரத்தத்தை,
தங்கள் புதல்வர் புதல்வியரின் இரத்தத்தைச் சிந்தினர்;
கானான் நாட்டுத் தெய்வங்களின் சிலைகளுக்கு
அவர்களைப் பலியிட்டார்கள்;
அவர்களின் இரத்தத்தால் நாடு தீட்டுப்பட்டது. [14]


39 அவர்கள் தங்கள் செயல்களால்
தங்களைக் கறைப்படுத்திக் கொண்டனர்;
தங்கள் செயல்கள் மூலம் வேசித்தனம் செய்தனர்.


40 எனவே, ஆண்டவரின் சினம்
அவர்தம் மக்களுக்கெதிராகப் பற்றியெரிந்தது;
தமது உரிமைச் சொத்தை அவர் அருவருத்தார்.


41 வேற்றினத்தாரின் கையில் அவர்
அவர்களை ஒப்படைத்தார்;
அவர்களை வெறுத்தோரே அவர்களை ஆட்சி செய்தனர்.


42 அவர்கள் எதிரிகள் அவர்களை ஒடுக்கினர்;
தங்கள் கையின்கீழ் அவர்களைத் தாழ்த்தினர்.


43 பன்முறை அவர் அவர்களை விடுவித்தார்;
அவர்களோ திட்டமிட்டே அவருக்கு
எதிராகக் கலகம் செய்தனர்;
தங்கள் தீச்செயல்களினால் அவர்கள் தாழ்நிலை அடைந்தனர்.


44 எனினும் அவர் அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து,
அவர்களது துன்பத்தைக் கண்டு மனமிரங்கினார்.


45 அவர்களுக்கு உதவுமாறு,
அவர் தமது உடன்படிக்கையை நினைவு கூர்ந்தார்;
தமது பேரன்பிற்கேற்பக்
கழிவிரக்கம் கொண்டார்;


46 அவர்களைச் சிறைசெய்த அனைவர் முன்னிலையிலும்
அவர்கள் இரக்கம் பெறும்படி செய்தார். [15]


47 எங்கள் கடவுளாகிய ஆண்டவரே!
எங்களை விடுவித்தருளும்;
வேற்று நாடுகளினின்று எங்களை ஒன்று சேர்த்தருளும்;
அப்பொழுது நாங்கள் உமது திருப்பெயருக்கு நன்றி செலுத்துவோம்;
உம்மைப் புகழ்வதில் பெருமை கொள்வோம்.


48 இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர்
ஊழி ஊழியாய்ப் புகழப் பெறுவாராக!
மக்கள் அனைவரும் 'ஆமென்' எனச் சொல்வார்களாக!
அல்லேலூயா! [16]


குறிப்புகள்

[1] 106:7 "செங்கடல் ஓரத்தில்" என்பதற்குப் பதில்
"கடல் ஓரத்தில்" என்பது எபிரேய பாடம்.
[2] 106:7 = விப 14:10-12.
[3] 106:9-12 = விப 14:21-31.
[4] 106:12 = விப 15:1-12.
[5] 106:14-15 = எண் 11:4-34.
[6] 106:16-18 = எண் 16:1-35.
[7] 106:19-23 = விப 32:1-14.
[8] 106:24-26 = எண் 14:1-35.
[9] 106:27 = லேவி 26:33.
[10] 106:28-31 = எண் 25:1-13.
[11] 106:32-33 = எண் 20:2-13.
[12] 106:34-36 = நீத 2:1; 3:5-6.
[13] 106:37 = 2 அர 17:7.
[14] 106:38 = எண் 35:33.
[15] 106:40-46 = நீத 2:14-18.
[16] 106:47-48 = 1 குறி 16:35-36.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 107 முதல் 108 வரை