திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 109 முதல் 110 வரை

விக்கிமூலம் இலிருந்து
தாவீது யாழிசைத்து கடவுளைப் புகழ்கிறார். மூலம்: "தெ பெர்ரி திருப்பாடல்கள் ஓவிய நூல்". 15ஆம் நூற்றாண்டு. பிரான்சு.

திருப்பாடல்கள்[தொகு]

ஐந்தாம் பகுதி (107-150)
திருப்பாடல்கள் 109 முதல் 110 வரை

திருப்பாடல் 109[தொகு]

துன்புற்றவரின் முறையீடு[தொகு]

(பாடகர் தலைவர்க்கு; தாவீதின் புகழ்ப்பா)


1 என் புகழ்ச்சிக்குரிய இறைவா,
மௌனமாய் இராதேயும்.


2 தீயோரும் வஞ்சனை செய்வோரும்
எனக்கெதிராய்த் தம் வாயைத் திறந்துள்ளனர்;
எனக்கெதிராய் அவர்கள் பொய்களைப் பேசியுள்ளனர்.


3 பகைவரின் சொற்கள் என்னைச் சூழ்ந்துள்ளன;
அவர்கள் காரணமின்றி என்னைத் தாக்குகின்றனர்.


4 நான் காட்டிய அன்புக்குக் கைம்மாறாக
என்மேல் குற்றம் சாட்டினர்;
நானோ அவர்களுக்காக மன்றாடினேன்.


5 நன்மைக்குப் பதிலாக அவர்கள்
எனக்குத் தீமையே செய்தனர்;
அன்புக்குப் பதிலாக அவர்கள்
வெறுப்பையே காட்டினர்;


6 அவர்கள் கூறியது:
அவனுக்கு எதிராகத் தீயவனை எழும்பச் செய்யும்!
'குற்றம் சாட்டுவோன்' அவனது வலப்பக்கம் நிற்பானாக!


7 நீதி விசாரணையின்போது அவன் தண்டனை பெறட்டும்!
அவன் செய்யும் வேண்டுகோள் குற்றமாகக் கருதப்படுவதாக!


8 அவனது வாழ்நாள் சொற்பமாகட்டும்;
அவனது பதவியை வேறோருவன் எடுத்துக் கொள்ளட்டும்! [1]


9 அவனுடைய பிள்ளைகள் தந்தை இழந்தோர் ஆகட்டும்!
அவனுடைய மனைவி கைம்பெண் ஆகட்டும்!


10 அவனுடைய பிள்ளைகள்
அலைந்து திரிந்து பிச்சை எடுக்கட்டும்!
பாழான தங்கள் வீடுகளிலிருந்து அவர்கள் விரட்டப்படட்டும்!


11 அவனுக்கு உரியவற்றை எல்லாம்
கடன் கொடுத்தவன் பறித்துக் கொள்ளட்டும்!
அவனது உழைப்பின் பயனை
அன்னியர் கொள்ளையடிக்கட்டும்!


12 அவனுக்கு இரக்கங்காட்ட
ஒருவனும் இல்லாதிருக்கட்டும்!
தந்தையை இழந்த, அவனுடைய பிள்ளைகள்மேல்
யாரும் இரங்காதிருக்கட்டும்!


13 அவன் வழி மரபு அடியோடு அழியட்டும்!
அடுத்த தலைமுறைக்கு அவர்களுடைய பெயர்
இல்லாது போகட்டும்!


14 அவனுடைய மூதாதையரின் குற்றத்தை
ஆண்டவர் நினைவில் கொள்ளட்டும்!
அவனுடைய தாய் செய்த பாவத்தை
அவர் மன்னியாது இருக்கட்டும்!


15 அவை என்றும் ஆண்டவர் திருமுன்னே இருக்கட்டும்!
அவனது நினைவை பூவுலகினின்று
அடியோடு அவர் அகற்றட்டும்!


16 ஏனெனில், அவன் இரக்கம் காட்ட நினைக்கவில்லை;
எளியோரையும் வறியோரையும்
கொடுமைப்படுத்தினான்;
நெஞ்சம் நொறுங்குண்டோரைக்
கொலைசெய்யத் தேடினான்.


17 சபிப்பதையே அவன் விரும்பினான்;
விரும்பிய அதுவே அவன்மீது விழட்டும்!
ஆசி வழங்குவதை அவன் விரும்பவில்லை;
ஆகவே அது அவனைவிட்டுத் தொலைவில் செல்லட்டும்!


18 சாபமே அவன் அணிந்த ஆடை;
தண்ணீரென அவன் உடலையும்
எண்ணெயென அவன் எலும்புகளையும் அது நனைக்கட்டும்!


19 அது அவனைப் போர்த்தும் ஆடைபோல் இருக்கட்டும்!
நாள்தோறும் அவன் கட்டும் கச்சைபோல் இருக்கட்டும்!


20 என்னைக் குற்றம் சாட்டுவோருக்கும்,
எனக்கு எதிராகத் தீயன பேசுவோருக்கும்
ஆண்டவர் அளிக்கும் கைம்மாறாக அது இருப்பதாக!


21 ஆனால், என் தலைவராகிய கடவுளே!
உமது பெயரை முன்னிட்டு
என் சார்பாகச் செயல்படும்!
உமது பேரன்பின் இனிமைபொருட்டு
என்னை மீட்டருளும்!


22 நானோ எளியவன்; வறியவன்;
என் இதயம் என்னுள் புண்பட்டுள்ளது.


23 மாலைநேர நிழலைப்போல்
நான் மறைந்து போகின்றேன்;
வெட்டுக் கிளியைப் போல
நான் காற்றில் அடித்துச் செல்லப்படுகின்றேன்.


24 நோன்பினால் என் முழங்கால்கள் தளர்வுறுகின்றன;
என் உடல் வலிமை இழந்து மெலிந்து போகின்றது.


25 நானோ அவர்களது பழிச்சொல்லுக்கு உள்ளானேன்;
என்னைப் பார்க்கின்றோர் தலையை ஆட்டுகின்றனர். [2]


26 ஆண்டவரே! என் கடவுளே!
எனக்கு உதவியருளும்!
உமது பேரன்பிற்கேற்ப
என்னை மீட்டருளும்!


27 இது உம் ஆற்றலால் நிகழ்ந்தது என
அவர்கள் அறியட்டும்! ஆண்டவரே!
இதைச் செய்தவர் நீரே என அவர்கள் உணரட்டும்.


28 அவர்கள் என்னைச் சபித்தாலும்,
நீர் எனக்கு ஆசி வழங்கும்!
எனக்கு எதிராக எழுவோர் இழிவுறட்டும்!
உம் ஊழியனாகிய நான் அகமகிழ்வேன்.


29 என்னைக் குற்றஞ்சாட்டுவோர்க்கு
மானக்கேடு மேலாடை ஆகட்டும்!
அவர்களின் வெட்கம் அவர்களுக்கு மேலங்கி ஆகட்டும்!


30 என் நாவினால் ஆண்டவரைப் பெரிதும் போற்றிடுவேன்;
பெரும் கூட்டத்திடையே அவரைப் புகழ்ந்திடுவேன்.


31 ஏனெனில், வறியோரின் வலப்பக்கம் அவர் நிற்கின்றார்;
தண்டனைத் தீர்ப்பிடுவோரிடமிருந்து
அவர்களது உயிரைக் காக்க நிற்கின்றார்.


குறிப்புகள்

[1] 109:8 = திப 1:20.
[2] 109:25 = மத் 27:39; மாற் 15:29.

திருப்பாடல் 110[தொகு]

ஆண்டவரும் அவர் தேர்ந்துகொண்ட அரசரும்[தொகு]

(தாவீதின் புகழ்ப்பா)


1 ஆண்டவர் என் தலைவரிடம்
'நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை
நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்' என்று உரைத்தார். [1]


2 வலிமைமிகு உமது செங்கோலை
ஆண்டவர் சீயோனிலிருந்து ஒங்கச்செய்வார்;
உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்!


3 நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில்
தூய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர்;
வைகறை கருவுயிர்த்த பனியைப்போல
உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர்.


4 'மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே'
என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார்;
அவர் தம் மனத்தை மாற்றிக் கொள்ளார். [2]


5 என் தலைவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்;
தம் சினத்தின் நாளில் மன்னர்களை நொறுக்குவார்.


6 வேற்று நாடுகளுக்கு அவர் தீர்ப்பளித்து
அவற்றைப் பிணத்தால் நிரப்புவார்;
பாருலகெங்கும் தலைவர்களை அவர் நொறுக்குவார்.


7 வழியில் உள்ள நீரோடையிலிருந்து அவர் பருகுவார்;
ஆகவே அவர் தலைநிமிர்ந்து நிற்பார்.


குறிப்புகள்

[1] 110:1 = மத் 22:44; மாற் 12:36; லூக் 20:42-43;
திப 2:34-35; 1 கொரி 15:25; எபே 1:20-22;
கொலோ 3:1; எபி 1:13; 8:1; 10:12-13.
[2] 110:4 = எபி 5:6; 6:20; 7:17,21.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 111 முதல் 112 வரை