திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 111 முதல் 112 வரை

விக்கிமூலம் இலிருந்து
"நான் அகமகிழ்ந்தேன்" (திருப்பாடல்கள் 122:1). எருசலேம் கட்டப்படுதல். மூலம்: "தெ பெர்ரி திருப்பாடல்கள் ஓவிய நூல்". 15ஆம் நூற்றாண்டு. பிரான்சு.

திருப்பாடல்கள்[தொகு]

ஐந்தாம் பகுதி (107-150)
திருப்பாடல்கள் 111 முதல் 112 வரை

திருப்பாடல் 111[தொகு]

ஆண்டவரைப் போற்றுதல்[தொகு]


1 அல்லேலூயா!
நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்;
நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும்
அவருக்கு நன்றி செலுத்துவேன்.


2 ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை;
அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும்
அவற்றை ஆய்ந்துணர்வர்.


3 அவரது செயல் மேன்மையும் மாண்பும் மிக்கது;
அவரது நீதி என்றென்றும் நிலைத்துள்ளது.


4 அவர் தம் வியத்தகு செயல்களை
என்றும் நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்;
அருளும் இரக்கமும் உடையவர் ஆண்டவர்.


5 அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு
உணவு அளிக்கின்றார்;
தமது உடன்படிக்கையை
என்றும் நினைவில் கொள்கின்றார்;


6 வேற்றினத்தாரின் உரிமைச் சொத்தைத்
தம் மக்களுக்கு அளித்தார்;
இவ்வாறு ஆற்றல்மிக்க தம் செயல்களை
அவர்களுக்கு வெளிப்படுத்தினார்.


7 அவர்தம் ஆற்றல்மிகு செயல்கள் நம்பிக்கைக்குரியவை;
நீதியானவை;
அவர்தம் கட்டளைகள் அனைத்தும் நிலையானவை.


8 என்றென்றும் எக்காலமும் அவை நிலைமாறாதவை;
உண்மையாலும் நீதியாலும் அவை உருவானவை.


9 தம் மக்களுக்கு அவர் மீட்பை அளித்தார்;
தம் உடன்படிக்கை என்றென்றும் நிலைக்குமாறு செய்தார்;
அவரது திருப்பெயர் தூயது;
அஞ்சுதற்கு உரியது.


10 ஆண்டவர்பற்றிய அச்சமே ஞானத்தின் தொடக்கம்;
அவர்தம் கட்டளைகளைக் கடைப்பிடிப்போர்
நல்லறிவுடையோர்;
அவரது புகழ் என்றென்றும் நிலைத்துள்ளது. [*]


குறிப்பு

[*] 111:10 = யோபு 28:8; நீமொ 1:7;9:10.


திருப்பாடல் 112[தொகு]

கடவுளுக்கு அஞ்சி நடப்போர்[தொகு]


1 அல்லேலூயா!
ஆண்டவருக்கு அஞ்சிநடப்போர் பேறுபெற்றோர்;
அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர்.


2 அவர்களது வழிமரபு பூவுலகில்
வலிமைமிக்கதாய் இருக்கும்;
நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும்.


3 சொத்தும் செல்வமும் அவர்களது இல்லத்தில் தங்கும்;
அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்.


4 இருளில் ஒளியென அவர்கள்
நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்;
அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர்.


5 மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்;
அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர்.


6 எந்நாளும் அவர்கள் அசைவுறார்;
நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர்.


7 தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது;
ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால்
அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும்.


8 அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்;
அவர்களை அச்சம் மேற்கொள்ளாது;
இறுதியில் தம் எதிரிகள் அழிவதை அவர்கள் காண்பது உறுதி.


9 அவர்கள் வாரி வழங்கினர்;
ஏழைகளுக்கு ஈந்தனர்;
அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்;
அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும். [*]


10 தீயோர் அதைப் பார்த்து எரிச்சல் அடைவர்;
பல்லை நெரிப்பர்;
சோர்ந்து போவர்;
தீயோரின் விருப்பமெல்லாம் வீணாய்ப்போம்.


குறிப்பு

[*] 112:9 = 2 கொரி 9:9.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 113 முதல் 114 வரை