திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 11 முதல் 12 வரை

விக்கிமூலம் இலிருந்து
தாவீது அரசர் வயலின் வாசிப்பது போல் காட்டப்படுகிறார். ஓவியர்: குவார்ச்சீனோ. காலம்: 17ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: ரூவென், பிரான்சு.

திருப்பாடல்கள்[தொகு]

முதல் பகுதி (1-41)
திருப்பாடல்கள் 11 முதல் 12 வரை

திருப்பாடல் 11[தொகு]

ஆண்டவரிடம் நம்பிக்கை[தொகு]

(பாடகர் தலைவர்க்கு: தாவீதுக்கு உரியது)


1 நான் ஆண்டவரிடம் அடைக்கலம் புகுந்துள்ளேன்;
நீங்கள் என்னிடம்,
'பறவையைப் போல மலைக்குப் பறந்தோடிப் போ;


2 ஏனெனில், இதோ! பொல்லார் வில்லை வளைக்கின்றனர்;
நாணில் அம்பு தொடுக்கின்றனர்;
நேரிய உள்ளத்தார்மீது இருளில் அம்பு எய்யப் பார்க்கின்றனர்;


3 அடித்தளங்களே தகர்க்கப்படும் பொழுது,
நேர்மையாளரால் என்ன செய்ய முடியும்?' என்று சொல்வது எப்படி?


4 ஆண்டவர் தம் தூய கோவிலில் இருக்கின்றார்;
அவரது அரியணை விண்ணுலகில் இருக்கின்றது;
அவர் கண்கள் உற்று நோக்குகின்றன;
அவர் விழிகள் மானிடரைச் சோதித்தறிகின்றன.


5 ஆண்டவர் நேர்மையாளரையும் பொல்லாரையும் சோதித்தறிகின்றார்;
வன்முறையில் நாட்டங்கொள்வோரை அவர் வெறுக்கின்றார்.


6 அவர் பொல்லார்மீது கரிநெருப்பும் கந்தகமும் சொரியும்படி செய்கின்றார்;
பொசுக்கும் தீக்காற்றே அவர்கள் குடிக்கும் பானமாகும்.


7 ஏனெனில், நீதியுள்ள ஆண்டவர் நேரிய செயல்களை விரும்புகின்றார்;
அவர்தம் திருமுகத்தை நேர்மையாளர் காண்பர்.


திருப்பாடல் 12[தொகு]

உதவிக்காக மன்றாடல்[தொகு]

(பாடகர் தலைவர்க்கு: எட்டாம் கட்டையில்; தாவீதின் புகழ்ப்பா)


1 ஆண்டவரே, காத்தருளும்;
ஏனெனில் உலகில் இறையன்பர்கள் அற்றுப் போயினர்;
மானிடருள் மெய்யடியார் மறைந்து போயினர்.


2 ஒருவர் அடுத்திருப்பாரிடம் பொய் பேசுகின்றனர்;
தேனொழுகும் இதழால் இருமனத்தோடு பேசுகின்றனர்.


3 தேனொழுகப் பேசும் எல்லா உதடுகளையும் ஆண்டவரே, துண்டித்துவிடுவீராக!
பெருமையடித்துக் கொள்ளும் நாவை அறுத்துவிடுவீராக!


4 'எங்கள் நாவன்மை எங்கள் வலிமை;
எங்கள் பேச்சுத்திறனே எங்கள் பக்கத் துணை;
எங்களுக்குத் தலைவர் வேறு யார்?'
என்று சொல்பவரை ஒழித்துவிடுவீராக!


5 'எளியோரின் புலம்பலையும் வறியோரின் பெருமூச்சையும் கேட்டு
இப்பொழுதே எழுந்து வருகின்றேன்;
அவர்கள் ஏங்குகின்றபடி அவர்களைப் பாதுகாப்பில் வைப்பேன்' [*]
என்கின்றார் ஆண்டவர்.


6 ஆண்டவரின் வாக்குறுதிகள் கலப்பற்ற வாக்குறுதிகள்;
மண் உலையில் தூய்மையாக்கப்பட்ட வெள்ளி போன்றவை;
ஏழுமுறை புடமிடப்பட்டவை.


7 ஆண்டவரே, நீர் எம்மைக் காத்தருளும்;
இத்தகைய தலைமுறையிடமிருந்து எம்மை என்றும் காப்பாற்றும்.


8 பொல்லார் எம்மருங்கும் உலாவருகின்றனர்;
மானிடரிடையே பொல்லாப்பே ஓங்கி நிற்கின்றது.


குறிப்பு

[*] 12:5 "அவர்களைப் பாதுகாப்பில் வைப்பேன்" என்பதற்குப் பதில் "அவன் அவர்கள்மீது சீறுகின்றான்" என்று எபிரேய பாடத்தில் உள்ளது.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 13 முதல் 14 வரை