திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 9 முதல் 10 வரை

விக்கிமூலம் இலிருந்து
"யாழிசைத்து ஆண்டவரைப் போற்றுங்கள்!" (திருப்பாடல்கள்). யாழ் இசைக் கருவி.

திருப்பாடல்கள்[தொகு]

முதல் பகுதி (1-41)
திருப்பாடல்கள் 9 முதல் 10 வரை

திருப்பாடல் 9[தொகு]

நீதியின் கடவுளுக்கு நன்றி செலுத்துதல்[தொகு]

(பாடகர் தலைவர்க்கு; 'மகனுக்காக உயிரைக் கொடு' என்ற மெட்டு; தாவீதின் புகழ்ப்பா)


1 ஆண்டவரே, என் முழு இதயத்தாலும் உம்மைப் புகழ்வேன்;
வியத்தகு உம் செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன்.


2 உம்மை முன்னிட்டு மகிழ்ந்து களிகூர்வேன்;
உன்னதரே, உமது பெயரைப் போற்றிப் பாடுவேன்.


3 என் எதிரிகள் பின்னிட்டுத் திரும்புவார்கள்;
உமது முன்னிலையில் இடறிவிழுந்து அழிவார்கள்.


4 நீர் நீதியுள்ள நடுவராய் அரியணையில் வீற்றிருக்கின்றீர்;
என் வழக்கில் எனக்கு நீதி வழங்கினீர்.


5 வேற்றினத்தாரைக் கண்டித்தீர்;
பொல்லாரை அழித்தீர்;
அவர்களது பெயர் இனி இராதபடி அடியோடு ஒழித்துவிட்டீர்.


6 எதிரிகள் ஒழிந்தார்கள்;
என்றும் தலையெடுக்கமுடியாமல் அழிந்தார்கள்.


7 அவர்களின் நகர்களை நீர் தரைமட்டம் ஆக்கினீர்;
அவர்களைப் பற்றிய நினைவு அற்றுப் போயிற்று.
ஆண்டவர் அரியணையில் என்றென்றும் வீற்றிருக்கின்றார்;
நீதி வழங்குவதற்கென்று அவர்
தம் அரியணையை அமைத்திருக்கின்றார்.


8 உலகிற்கு அவர் நீதியான தீர்ப்பு வழங்குவார்;
மக்களினத்தார்க்கு நேர்மையான தீர்ப்புக் கூறுவார்.


9 ஒடுக்கப்படுவோருக்கு ஆண்டவரே அடைக்கலம்;
நெருக்கடியான வேளைகளில் புகலிடம் அவரே.


10 உமது பெயரை அறிந்தோர் உம்மில் நம்பிக்கைகொள்வர்;
ஆண்டவரே, உம்மை நாடி வருவோரை நீர் கைவிடுவதில்லை.


11 சீயோனில் தங்கியிருக்கும் ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்;
அவருடைய செயல்களை மக்களினத்தாரிடையே அறிவியுங்கள்;


12 ஏனெனில், இரத்தப்பழி வாங்கும் அவர்
எளியோரை நினைவில் கொள்கின்றார்;
அவர்களின் கதறலை அவர் கேட்க மறவார்.


13 ஆண்டவரே, என்மீது இரக்கமாயிரும்;
என்னைப் பகைப்போரால் எனக்கு வரும் துன்பத்தைப் பாரும்;
சாவின் வாயினின்று என்னை விடுவியும்.


14 அப்பொழுது, மகள் சீயோனின் வாயில்களில்
உம் புகழ் அனைத்தையும் பாடுவேன்;
நீர் அளிக்கும் விடுதலை குறித்து அகமகிழ்வேன்.


15 வேற்றினத்தார் வெட்டின குழியில் அவர்களே விழுந்தனர்;
அவர்கள் மறைத்து வைத்திருந்த வலையில்
அவர்கள் கால்களே சிக்கிக்கொண்டன.


16 ஆண்டவர் நீதியை நிலைநாட்டுவதன் மூலம்
தம்மை வெளிப்படுத்தியுள்ளார்;
பொல்லார் செய்த செயலில்
அவர்களே சிக்கிக்கொண்டனர். (இடை இசை; சேலா)


17 பொல்லார் பாதாளத்திற்கே செல்வர்;
கடவுளை மறந்திருக்கும் வேற்றினத்தார் யாவரும் அங்கே செல்வர்.


18 மாறாக, வறியவர் என்றுமே மறக்கப்படுவதில்லை;
எளியோரின் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது.


19 ஆண்டவரே, எழுந்தருளும்;
மனிதரின் கை ஓங்க விடாதேயும்;
வேற்றினத்தார் உமது முன்னிலையில் தீர்ப்புப் பெறுவார்களாக!


20 ஆண்டவரே, அவர்களைத் திகிலடையச் செய்யும்;
தாம் வெறும் மனிதரே என்பதை வேற்றினத்தார் உணர்வார்களாக!


திருப்பாடல் 10[தொகு]

நீதிக்காக வேண்டல்[தொகு]


1 ஆண்டவரே, ஏன் தொலைவில் நிற்கின்றீர்?
தொல்லைமிகு நேரங்களில் ஏன் மறைந்துகொள்கின்றீர்?


2 பொல்லார் தம் இறுமாப்பினால்
எளியோரைக் கொடுமைப்படுத்துகின்றனர்;
அவர்கள் வகுத்த சதித்திட்டங்களில்
அவர்களே அகப்பட்டுக்கொள்வார்களாக.


3 பொல்லார் தம் தீய நாட்டங்களில் தற்பெருமை கொள்கின்றனர்;
பேராசையுடையோர் ஆண்டவரைப் பழித்துப் புறக்கணிக்கின்றனர்.


4 பொல்லார் செருக்கு உள்ளவராதலால் அவரைத் தேடார்;
அவர்கள் எண்ணமெல்லாம் 'கடவுள் இல்லை!


5 எம் வழிகள் என்றும் நிலைக்கும்' என்பதே.
உம் தீர்ப்புகளோ மிக மேலானவை;
அவர்களின் அறிவுக்கு எட்டாதவை.
தம் பகைவர் அனைவரையும் பார்த்து அவர்கள் நகைக்கின்றனர்.


6 'எவராலும் என்னை அசைக்க முடியாது;
எந்தத் தலைமுறையிலும் எனக்குக் கேடுவராது'
என்று அவர்கள் தமக்குள் சொல்லிக்கொள்வர்.


7 அவர்களது வாய் சாபமும் கபடும் கொடுமையும் நிறைந்தது;
அவர்களது நாவினடியில் கேடும் தீங்கும் இருக்கின்றன. [*]


8 ஊர்களில் அவர்கள் ஒளிந்து காத்திருக்கின்றனர்;
சூதறியாதவர்களை மறைவான இடங்களில் கொலை செய்கின்றனர்;
திக்கற்றவர்களைப் பிடிப்பதிலேயே அவர்கள் கண்ணாயிருக்கின்றனர்.


9 குகையிலிருக்கும் சிங்கம்போல் அவர்கள் மறைவில் பதுங்கியிருக்கின்றனர்;
எளியோரைப் பிடிப்பதற்காகவே அவர்கள் பதுங்கியிருக்கின்றனர்;
தம் வலையில் சிக்கவைத்து இழுத்துச் செல்கின்றனர்.


10 அவர்கள் எளியோரை நலிவுறச் செய்து நசுக்குகின்றனர்;
அவர்களது கொடிய வலிமையால் ஏழைகள் வீழ்த்தப்படுகின்றனர்.


11 'இறைவன் மறந்துவிட்டார்; தம் முகத்தை மூடிக்கொண்டார்;
என்றுமே எம்மைப் பார்க்க மாட்டார்' என்று
பொல்லார் தமக்குள் சொல்லிக் கொள்கின்றனர்.


12 ஆண்டவரே, எழுந்தருளும்!
இறைவா, உமது ஆற்றலை வெளிப்படுத்தும்!
எளியோரை மறந்துவிடாதேயும்.


13 பொல்லார் கடவுளைப் புறக்கணிப்பது ஏன்?
அவர் தம்மை விசாரணை செய்யமாட்டாரென்று
அவர்கள் தமக்குள் சொல்லிக்கொள்வது ஏன்?


14 ஆனால், உண்மையில் நீர் கவனிக்கின்றீர்;
கேட்டையும் துயரத்தையும் பார்த்து,
உதவி செய்யக் காத்திருக்கின்றீர்;
திக்கற்றவர் தம்மை உம்மிடம் ஒப்படைக்கின்றனர்;
அனாதைக்கு நீரே துணை.


15 பொல்லார் மற்றும் தீயோர் கைகளை முறித்துவிடும்;
அவர்களது பொல்லாங்கைத் தேடிக் கண்டுபிடித்து,
அது அற்றுப்போகச் செய்யும்.


16 ஆண்டவர் என்றுமுள அரசர்;
அவரது நிலத்தினின்று வேற்றினத்தார் அகன்று விடுவர்.


17 ஆண்டவரே, எளியோரின் விருப்பத்தை நீர் நிறைவேற்றுகின்றீர்;
அவர்கள் உள்ளத்திற்கு ஊக்கம் அளித்து அவர்களுக்குச் செவிசாய்க்கின்றீர்.


18 நீர் அனாதைகளுக்கும் ஒடுக்கப்படுகிறவர்களுக்கும் நீதி வழங்குகின்றீர்;
மண்ணினின்று தோன்றிய மனிதர் இனியும் அவர்களைத் துன்புறுத்த மாட்டார்.


குறிப்பு

[*] 10:7 = உரோ 3:14.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 11 முதல் 12 வரை