திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 17 முதல் 18 வரை

விக்கிமூலம் இலிருந்து
தாவீது அரசர் யாழ் இசைப்பது போன்ற கீழ்மட்ட சிற்பம். காலம்: 16ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: சீமாட்டிகள் மடம், சலமான்கா, எசுப்பானியா.

திருப்பாடல்கள்[தொகு]

முதல் பகுதி (1-41)
திருப்பாடல்கள் 17 முதல் 18 வரை

திருப்பாடல் 17[தொகு]

மாசற்றவனின் மன்றாட்டு[தொகு]

(தாவீதின் மன்றாட்டு)


1 ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்;
என் வேண்டுதலை உற்றுக் கேளும்;
வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக்குச்
செவிசாய்த்தருளும்.


2 உம் முன்னிலையினின்று எனக்கு நீதி கிடைக்கட்டும்;
உம் கண்கள் நேரியன காணட்டும்.


3 என் உள்ளத்தை ஆய்ந்தறியும்;
இரவு நேரத்தில் எனைச் சந்தித்திடும்;
என்னைப் புடமிட்டுப் பார்த்திடும்;
தீமை எதையும் என்னிடம் காணமாட்டீர்;
என் வாய் பிழை செய்யக்கூடாதென உறுதி கொண்டேன்.


4 பிற மானிடர் செய்வது போல் அல்லாமல்,
நீர் உரைத்த வாக்கிற்கிணங்க,
வன்முறையாளரின் வழிகளை விட்டு விலகியுள்ளேன்.


5 என் நடத்தை உம் பாதைகளில் அமைந்துள்ளது;
என் காலடிகள் உம் வழியினின்று பிறழவில்லை.


6 இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்;
ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர்.
என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்;
என் விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்தருளும்.


7 உமது வியத்தகு பேரன்பைக் காண்பித்தருளும்;
உம்மிடம் அடைக்கலம் புகுவோரை
அவர்களுடைய எதிரிகளிடமிருந்து
உமது வலக்கரத்தால் விடுவிப்பவர் நீரே!


8 உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்;
உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும்.


9 என்னை ஒழிக்கத் தேடும் பொல்லாரிடமிருந்தும்
என்னைச் சூழ்ந்து கொண்ட எதிரிகளிடமிருந்தும்
என்னை மறைத்துக் கொள்ளும்.


10 அவர்கள் ஈவு இரக்கமற்ற கல்நெஞ்சர்கள்.
தங்கள் வாயினால் இறுமாப்புடன் பேசுபவர்கள்.


11 அவர்கள் என்னைப் பின்தொடர்கின்றனர்;
இதோ! என்னை வளைத்துக் கொண்டனர்;
அவர்கள் என்னைத் தரையில் வீழ்த்துவதற்கு,
வைத்த கண் வாங்காது காத்திருக்கின்றனர்.


12 பீறிப்போடத் துடிக்கும் சிங்கத்திற்கு அவர்கள் ஒப்பாவர்;
மறைவிடத்தில் பதுங்கியிருக்கும் இளஞ்சிங்கத்திற்கு நிகராவர்.


13 ஆண்டவரே, எழுந்து வாரும்;
அவர்களை நேருக்குநேர் எதிர்த்து முறியடையும்;
பொல்லாரிடமிருந்து உமது வாளால் என்னைக் காத்தருளும்.


14 ஆண்டவரே, மாயும் மனிதரிடமிருந்து -
இவ்வுலகமே தங்கள் கதியென வாழ்ந்து மாயும் மனிதரிடமிருந்து -
உமது கைவலிமையினால் என்னைக் காப்பாற்றும்.
அவர்களுக்கென நீர் ஒதுக்கி வைத்துள்ளவற்றால்
அவர்கள் வயிற்றை நிரப்பும்;
அவர்களின் மைந்தர் வேண்டிய மட்டும் நிறைவு பெறட்டும்;
எஞ்சியிருப்பதைத் தங்கள் பிள்ளைகளுக்கு விட்டுச்செல்லட்டும்;


15 நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்;
விழித்தெழும்போது, உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன்.


திருப்பாடல் 18[தொகு]

அரசரின் வெற்றிப் பாடல்[தொகு]

(பாடகர் தலைவர்க்கு: ஆண்டவரின் அடியாராகிய தாவீது,
தம் எதிரிகள் கையினின்றும் சவுலின் கையினின்றும்
அவர் தம்மை விடுவித்த நாளில் அவரை நோக்கிப் பாடியது)

(2 சாமு 22:1-51)



1 அவர் உரைத்தது: என் ஆற்றலாகிய ஆண்டவரே!
உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்.


2 ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை;
என் மீட்பர்; என் இறைவன்;
நான் புகலிடம் தேடும் மலை அவரே;
என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண்.


3 போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்;
என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன்.


4 சாவின் கயிறுகள் என்னை இறுக்கின;
அழிவின் சுழல்கள் என்னை மூழ்கடித்தன.


5 பாதாளக் கயிறுகள் என்னைச் சுற்றி இறுக்கின;
சாவின் கண்ணிகள் என்னைச் சிக்க வைத்தன.


6 என் நெருக்கடிவேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்;
என் கடவுளை நோக்கிக் கதறினேன்;
தமது கோவிலினின்று அவர் என் குரலைக் கேட்டார்;
என் கதறல் அவர் செவிகளுக்கு எட்டியது.


7 அப்பொழுது, மண்ணுலகம் அசைந்து அதிர்ந்தது;
மலைகளின் அடித்தளங்கள் கிடுகிடுத்தன;
அவர்தம் கடுஞ்சினத்தால் அவை நடுநடுங்கின.


8 அவரது நாசியினின்று புகை கிளம்பிற்று;
அவரது வாயினின்று எரித்தழிக்கும் தீ மூண்டது;
அவரிடமிருந்து நெருப்புக்கனல் வெளிப்பட்டது.


9 வானைத் தாழ்த்தி அவர் கீழிறங்கினார்;
கார் முகில் அவரது காலடியில் இருந்தது.


10 கெருபுமீது அவர் ஏறிப் பறந்து வந்தார்;
காற்றை இறக்கைகளாகக் கொண்டு விரைந்து வந்தார்.


11 காரிருளைத் தமக்கு அவர் மூடுதிரை ஆக்கிக்கொண்டார்;
நீர்கொண்ட முகிலைத் தமக்குக்கூடாரம் ஆக்கிக்கொண்டார்.


12 அவர்தம் திருமுன்னின் பேரொளியில்,
மேகங்கள் கல் மழையையும் நெருப்புக் கனலையும் பொழிந்தன.


13 ஆண்டவர் வானங்களில் இடியென முழங்கினார்;
உன்னதர் தம் குரலை அதிரச்செய்தார்.
கல் மழையையும் நெருப்புக் கனலையும் பொழிந்தார்.


14 தம் அம்புகளை எய்து அவர் அவர்களைச் சிதறடித்தார்;
பெரும் மின்னல்களைத் தெறித்து அவர்களைக் கலங்கடித்தார்.


15 ஆண்டவரே, உமது கடிந்துரையாலும்
உமது மூச்சுக் காற்றின் வலிமையாலும்
நீர்த்திரளின் அடிப்பரப்பு தென்பட்டது;
நிலவுலகின் அடித்தளம் காணப்பட்டது.


16 உயரத்தினின்று அவர் என்னை எட்டிப் பிடித்துக் கொண்டார்;
வெள்ளப்பெருக்கினின்று என்னைக் காப்பாற்றினார்.


17 என் வலிமைமிகு எதிரியிடமிருந்து அவர் என்னை விடுவிடுத்தார்;
என்னைவிட வலிமைமிகு பகைவரிடமிருந்து என்னைப் பாதுகாத்தார்;


18 எனக்கு இடுக்கண் வந்த நாளில் அவர்கள் என்னை எதிர்த்தார்கள்;
ஆண்டவரோ எனக்கு ஊன்றுகோலாய் இருந்தார்.


19 நெருக்கடியற்ற இடத்திற்கு அவர் என்னைக் கொணர்ந்தார்;
நான் அவர் மனத்திற்கு உகந்தவனாய் இருந்ததால்,
அவர் என்னை விடுவித்தார்.


20 ஆண்டவர் எனது நேர்மைக்கு உரிய பயனை எனக்களித்தார்;
என் மாசற்ற செயலுக்கு ஏற்ப கைம்மாறு செய்தார்.


21 ஏனெனில், நான் ஆண்டவர் காட்டிய நெறியைக் கடைப்பிடித்தேன்;
பொல்லாங்கு செய்து என் கடவுளை விட்டு அகலவில்லை.


22 அவர்தம் நீதிநெறிகளை எல்லாம் என் கண்முன் வைத்திருந்தேன்;
அவர்தம் விதிமுறைகளை நான் ஒதுக்கித் தள்ளவில்லை.


23 அவர் முன்னிலையில் நான் மாசற்றவனாய் இருந்தேன்;
தீங்கு செய்யாவண்ணம் என்னைக் காத்துக் கொண்டேன்.


24 ஆண்டவர், என் நேர்மைக்கு உரிய பயனை அளித்தார்;
அவர்தம் பார்வையில் நான் குற்றம் அற்றவனாய் இருந்தேன்.


25 ஆண்டவரே, மாறா அன்பர்க்கு மாறா அன்பராகவும்
மாசற்றோர்க்கு மாசற்றவராகவும் நீர் விளங்குவீர்.


26 தூயோருக்குத் தூயவராகவும்
வஞ்சகர்க்கு விவேகியாகவும் உம்மை நீர் காட்டுகின்றீர்.


27 எளியோருக்கு நீர் மீட்பளிக்கின்றீர்;
செருக்குற்றோரை ஏளனத்துடன் நீர் பார்க்கின்றீர்.


28 ஆண்டவரே, நீர் என் விளக்குக்கு ஒளியேற்றுகின்றீர்.
என் கடவுளே, நீர் என் இருளை ஒளிமயமாக்குகின்றீர்.


29 உம் துணையுடன் நான் எப்படையையும் நசுக்குவேன்;
என் கடவுளின் துணையால் எம்மதிலையும் தாண்டுவேன்.


30 இந்த இறைவனின் வழி நிறைவானது;
ஆண்டவரின் வாக்கு நம்பத்தக்கது;
அவரிடம் அடைக்கலம் புகும் அனைவர்க்கும்
அவரே கேடயமாய் இருக்கின்றார்.


31 ஏனெனில், ஆண்டவரைத் தவிர வேறு கடவுள் யார்?
நம் கடவுளைத் தவிர நமக்கு வேறு கற்பாறை ஏது?


32 வலிமையை அரைக்கச்சையாக அளித்த இறைவன் அவரே;
என் வழியைப் பாதுகாப்பானதாய்ச் செய்தவரும் அவரே.


33 அவர் என் கால்களை மான்களின் கால்களைப் போல் ஆக்குகின்றார்;
உயர்ந்த இடத்தில் என்னை நிலை நிறுத்துகின்றார். [1]


34 போருக்கு என்னை அவர் பழக்குகின்றார்;
எனவே, வெண்கல வில்லையும் என் புயங்கள் வளைக்கும்.


35 ஆண்டவரே, பாதுகாக்கும் உம் கேடயத்தை நீர் எனக்கு வழங்கினீர்;
உமது வலக்கரத்தால் என்னைத் தாங்கிக் கொண்டீர்;
உமது துணையால் என்னைப் பெருமைப்படுத்தினீர்.


36 நான் நடக்கும் வழியை அகலமாக்கினீர்;
என்கால்கள் தடுமாறவில்லை.


37 என் எதிரிகளைத் துரத்திச்சென்று நான் அவர்களைப் பிடித்தேன்;
அவர்களை அழித்தொழிக்கும் வரையில் திரும்பவில்லை.


38 அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி
அவர்களை நான் வெட்டித்தள்ளினேன்;
அவர்கள் என் காலடியில் வீழ்ந்தார்கள்.


39 போரிடும் ஆற்றலை நீர் எனக்கு அரைக்கச்சையாக அளித்தீர்;
என்னை எதிர்த்தவர்களை எனக்கு அடிபணியச் செய்தீர்.


40 என் எதிரிகளைப் புறமுதுகிடச் செய்தீர்;
என்னை வெறுத்தோரை நான் அழித்துவிட்டேன்.


41 உதவி வேண்டி அவர்கள் கதறினார்கள்;
ஆனால், அவர்களுக்கு உதவுவார் யாருமில்லை.
அவர்கள் ஆண்டவரை நோக்கி மன்றாடினார்கள்;
ஆனால், அவர்களுக்கு அவர் பதிலளிக்கவில்லை.


42 எனவே, நான் அவர்களை நொறுக்கிக்
காற்றடித்துச் செல்லும் புழுதிபோல் ஆக்கினேன்;
தெருச் சேறென அவர்களைத் தூர எறிந்து விட்டேன்.


43 என் மக்களின் கலகத்தினின்று என்னை விடுவித்தீர்;
பிற இனங்களுக்கு என்னைத் தலைவன் ஆக்கினீர்;
நான் முன்பின் அறியாத மக்கள் எனக்குப் பணிவிடை செய்தனர்.


44 அவர்கள் என்னைப்பற்றிக் கேள்விப்பட்டவுடன் எனக்குப் பணிந்தனர்;
வேற்று நாட்டவர் என்னிடம் கூனிக் குறுகி வந்தனர்.


45 வேற்று நாட்டவர் உள்ளம் தளர்ந்தனர்;
தம் அரண்களிலிருந்து நடுங்கிக் கொண்டு வெளியே வந்தனர்.


46 ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்!
என் கற்பாறையாம் அவர் போற்றப் பெறுவராக!
என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவராக!


47 எனக்காகப் பழிவாங்கும் இறைவன் அவர்;
மக்களினங்களை எனக்குக் கீழ்ப்படுத்தியவரும் அவரே!


48 என் பகைவரிடமிருந்து என்னை விடுவித்தவரும் அவரே!
ஆண்டவரே! என் எதிரிகளுக்கு மேலாக என்னை உயர்த்தினீர்!
என்னைக் கொடுமைப்படுத்தியவரிடமிருந்து நீர் என்னைக் காத்தீர்!


49 ஆகவே, பிற இனத்தாரிடையே உம்மைப் போற்றுவேன்;
உம் பெயருக்குப் புகழ்மாலை சாற்றுவேன். [2]


50 தாம் ஏற்படுத்திய அரசருக்கு மாபெரும் வெற்றியை அளிப்பவர் அவர்;
தாம் திருப்பொழிவு செய்த தாவீதுக்கும்
அவர்தம் மரபினருக்கும்
என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே.


குறிப்புகள்

[1] 18:33 = அப 3:19.
[2] 18:49 = உரோ 15:9.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 19 முதல் 20 வரை