திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 19 முதல் 20 வரை

விக்கிமூலம் இலிருந்து
தாவீது அரசர் யாழ் இசைப்பது போன்ற மரச் சிற்பம். ஆண்டு: 1701. காப்பிடம்: பாடுநர் தனியிடம், அடைப்பு மடம், ஃப்ரீட்ரிஸ்காஃபென், செருமனி.

திருப்பாடல்கள்[தொகு]

முதல் பகுதி (1-41)
திருப்பாடல்கள் 19 முதல் 20 வரை

திருப்பாடல் 19[தொகு]

படைப்பில் கடவுளின் மாட்சி[தொகு]

(பாடகர் தலைவர்க்கு; தாவீதின் புகழ்ப்பா)


1 வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன;
வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது.


2 ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது;
ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது.


3 அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை;
அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.


4 ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது;
அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது.
இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார். [*]


5 மணவறையிலிருந்து புறப்படும் மணமகனைப் போல அது வருகின்றது;
பந்தயத்தில் ஓடும் வீரரைப்போல் அது தன் பாதையில் ஓடுகின்றது.


6 அது வானத்தின் ஒரு முனையிலிருந்து புறப்படுகின்றது;
அதன் பாதை மறுமுனை வரையிலும் செல்கின்றது;
அதன் வெப்பத்திற்கு மறைவானது ஒன்றுமில்லை.

ஆண்டவரின் திருச்சட்டம்[தொகு]


7 ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது;
அது புத்துயிர் அளிக்கின்றது.
ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது;
எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது.


8 ஆண்டவரின் நியமங்கள் சரியானவை;
அவை இதயத்தை மகிழ்விக்கின்றன.
ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை;
அவை கண்களை ஒளிர்விக்கின்றன.


9 ஆண்டரைப் பற்றிய அச்சம் தூயது;
அது எந்நாளும் நிலைத்திருக்கும்.
ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை;
அவை முற்றிலும் நீதியானவை.


10 அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை;
தேனினும் தேனடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை.


11 அவற்றால் அடியேன் எச்சரிக்கப்படுகின்றேன்;
அவற்றைக் கடைப்பிடிப்போர்க்கு மிகுந்த பரிசுண்டு.


12 தம் தவறுகளை உணர்ந்து கொள்பவர் யார்தாம்?
என் அறியாப் பிழைக்காக என்னை மன்னியும்.


13 மேலும், ஆணவமிக்கோரிடமிருந்து உம் அடியானைக் காத்தருளும்.
அவர்கள் என்னை ஆட்டிப் படைக்காதிருக்கட்டும்;
அப்பொழுது, நான் மாசற்றிருப்பேன்;
பெரும்பிழை எதையும் செய்யாதிருப்பேன்.


14 என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே!
என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்;
என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும்.


குறிப்பு

[*] 19:4 = உரோ 10:18.

திருப்பாடல் 20[தொகு]

அரசரின் வெற்றிக்காக வேண்டல்[தொகு]

(பாடகர் தலைவர்க்கு; தாவீதின் புகழ்ப்பா)


1 நெருக்கடி வேளையில் உமக்கு ஆண்டவர் பதிலளிப்பாராக!
யாக்கோபின் கடவுளது பெயர் உம்மைப் பாதுகாப்பதாக!


2 தூயகத்திலிருந்து அவர் உமக்கு உதவி அனுப்புவாராக!
சீயோனிலிருந்து அவர் உமக்குத் துணை செய்வாராக!


3 உம் உணவுப் படையலை எல்லாம் அவர் நினைவில் கொள்வராக!
உமது எரி பலியை ஏற்றுக்கொள்வாராக! (சேலா)


4 உமது மனம் விரும்புவதை அவர் உமக்குத் தந்தருள்வாராக!
உம் திட்டங்களையெல்லாம் நிறைவேற்றுவாராக!


5 உமது வெற்றியைக் குறித்து மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போமாக!
நம் கடவுளின் பெயரால் வெற்றிக்கொடி நாட்டுவோமாக!
உம் விண்ணப்பங்களையெல்லாம் ஆண்டவர் நிறைவேற்றுவாராக!


6 ஆண்டவர் தாம் திருப்பொழிவு செய்தவருக்கு வெற்றி தருகின்றார்.
தமது தூய வானத்திலிருந்து அவருக்குப் பதிலளிக்கின்றார்.
வெற்றியளிக்கும் தமது வலக்கையின் ஆற்றலைக் காட்டுகின்றார் என்று
இப்பொழுது நான் அறிந்து கொள்கிறேன்.


7 சிலர் தேர்ப்படையிலும், சிலர் குதிரைப் படையிலும் பெருமை கொள்கின்றனர்;
நாமோ நம் கடவுளாகிய ஆண்டவரின் பெயரில் பெருமை கொள்கின்றோம்.


8 அவர்கள் தடுமாறி வீழ்ந்தார்கள்;
நாமோ நிமிர்ந்து உறுதியாய் நிற்கின்றோம்.


9 ஆண்டவரே, அரசருக்கு வெற்றியருளும்;
நாங்கள் கூப்பிடும் வேளையில் எங்களுக்குப் பதிலளியும்.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 21 முதல் 22 வரை