திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 21 முதல் 22 வரை

விக்கிமூலம் இலிருந்து
தாவீது அரசர் யாழ் இசைப்பது போன்ற நிறக் கண்ணாடி ஓவியம். ஆண்டு: சுமார் 1864. காப்பிடம்: "நோட்ர டாம்" புனித மரியன்னை கோவில், பாரிசு.

திருப்பாடல்கள்[தொகு]

முதல் பகுதி (1-41)
திருப்பாடல்கள் 21 முதல் 22 வரை

திருப்பாடல் 21[தொகு]

அரசரின் வெற்றிக்காக இறைவனுக்கு நன்றி செலுத்தல்[தொகு]

(பாடகர் தலைவர்க்கு; தாவீதின் புகழ்ப்பா)


1 ஆண்டவரே, உமது வல்லமையில் அரசர் பூரிப்படைகின்றார்;
நீர் அளித்த வெற்றியில் எத்துணையோ அவர் அக்களிக்கின்றார்!


2 அவர் உள்ளம் விரும்பியதை நீர் அவருக்குத் தந்தருளினீர்;
அவர் வாய்விட்டுக் கேட்டதை நீர் மறுக்கவில்லை. (சேலா)


3 உண்மையில் நலமிகு கொடைகள் ஏந்தி
நீர் அவரை எதிர்கொண்டீர்;
அவர் தலையில் பசும்பொன்முடி சூட்டினீர்.


4 அவர் உம்மிடம் வாழ்வு வேண்டி நின்றார்;
நீரும் முடிவில்லா நீண்ட ஆயுளை அவருக்கு அளித்தீர்.


5 நீர் அவருக்கு வெற்றியளித்ததால்
அவரது மாட்சிமை பெரிதாயிற்று;
மேன்மையையும் மாண்பையும் அவருக்கு அருளினீர்.


6 உண்மையாகவே, எந்நாளும் நிலைத்திருக்கும் ஆசிகளை
அவர் பெற்றுள்ளார்;
உமது முகத்தை அவர் மகிழ்ச்சியுடன் கண்டு களிக்கச் செய்தீர்.


7 ஏனெனில், அரசர் ஆண்டவரில் நம்பிக்கை வைக்கின்றார்;
உன்னதரின் பேரன்பினால் அவர் அசைவுறாதிருப்பார்.


8 உமது கை உம் எதிரிகளையெல்லாம் தேடிப்பிடிக்கும்;
உமது வலக்கை உம்மை வெறுப்போரை எட்டிப்பிடிக்கும்.


9 நீர் காட்சியளிக்கும் பொழுது, அவர்களை நெருப்புச்சூளை ஆக்குவீர்;
ஆண்டவர் சினங்கொண்டு அவர்களை அழிப்பார்;
நெருப்பு அவர்களை விழுங்கிவிடும்.


10 அவர்கள் தலைமுறையைப் பூவுலகினின்று ஒழித்துவிடுவீர்;
அவர்கள் வழிமரபை மனுமக்களிடமிருந்து எடுத்துவிடுவீர்.


11 உமக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தாலும், சதித்திட்டம் தீட்டினாலும்,
அவர்களால் வெற்றிபெற இயலாது.


12 நீரோ அம்புகளை நாணேற்றி அவர்களது முகத்தில் எய்வீர்;
அவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்வீர்.


13 ஆண்டவரே, உமது வலிமையோடு எழுந்து வாரும்;
நாங்கள் உமது வல்லமையைப் புகழ்ந்து பாடுவோம்.


திருப்பாடல் 22[தொகு]

துயர்மிகு புலம்பல்[தொகு]

(பாடகர் தலைவர்க்கு; "காலைப் பெண் மான்" என்ற மெட்டு;
தாவீதின் புகழ்ப்பா)


1 என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?
என்னைக் காப்பாற்றாமலும், நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும்
ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்? [1]


2 என் கடவுளே,
நான் பகலில் மன்றாடுகின்றேன்;
நீர் பதில் அளிப்பதில்லை,
இரவிலும் மன்றாடுகின்றேன்;
எனக்கு அமைதி கிடைப்பதில்லை.


3 நீரோ தூயவராய் விளங்குகின்றீர்;
இஸ்ரயேலின் புகழ்ச்சிக்கு உரியவராய் வீற்றிருக்கின்றீர்;


4 எங்கள் மூதாதையர் உம்மில் நம்பிக்கை வைத்தனர்;
அவர்கள் நம்பியதால் நீர் அவர்களை விடுவித்தீர்.


5 உம்மை அவர்கள் வேண்டினார்கள்; விடுவிக்கப்பட்டார்கள்;
உம்மை அவர்கள் நம்பினார்கள்; ஏமாற்றமடையவில்லை.


6 நானோ ஒரு புழு, மனிதனில்லை;
மானிடரின் நிந்தைக்கு ஆளானேன்;
மக்களின் இகழ்ச்சிக்கு உள்ளானேன்.


7 என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்;
உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து,


8 'ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும்;
தாம் அன்பு கூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டும்' என்கின்றனர்.


9 என்னைக் கருப்பையினின்று வெளிக்கொணர்ந்தவர் நீரே;
என் தாயிடம் பால்குடிக்கையிலேயே என்னைப் பாதுகாத்துவரும் நீரே!


10 கருப்பையிலிருந்தே உம்மைச் சார்ந்திருந்தேன்;
நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல்
என் இறைவன் நீரே!


11 என்னைவிட்டுத் தொலையில் போய்விடாதேயும்;
ஏனெனில், ஆபத்து நெருங்கிவிட்டது;
மேலும், உதவி செய்வார் யாருமில்லை.


12 காளைகள் பல என்னைச் சூழ்ந்து கொண்டுள்ளன;
பாசானின் கொழுத்த எருதுகள் என்னை வளைத்துக் கொண்டன.


13 அவர்கள் என்னை விழுங்கத் தங்கள் வாயை அகலத் திறக்கின்றார்கள்;
இரை தேடிச் சீறி முழங்கும் சிங்கம்போல் பாய்கின்றார்கள்.


14 நான் கொட்டப்பட்ட நீர்போல் ஆனேன்;
என் எலும்புகள் எல்லாம் கழன்று போயின;
என் இதயம் மெழுகுபோல் ஆயிற்று;
என் உள்ளுறுப்புகளின் நடுவே உருகிப் போயிற்று.


15 என் வலிமை ஓடுபோலக் காய்ந்தது;
என் நாவு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டது;
என்னைச் சாவின் புழுதியிலே போட்டுவிட்டீர்.


16 தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது;
நாய்கள் என அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள்;
என் கைகளையும், கால்களையும் துளைத்தார்கள்.


17 என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம்;
அவர்கள் என்னை முறைத்துப் பார்க்கின்றார்கள்.


18 என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக் கொள்கின்றனர்;
என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர். [2]


19 நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத் தொலையில் போய்விடாதேயும்;
என் வலிமையே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும்.


20 வாளுக்கு இரையாகாதபடி என் உயிரைக் காத்தருளும்;
இந்த நாய்களின் வெறியினின்று என் ஆருயிரைக் காப்பாற்றும்;


21 இந்தச் சிங்கங்களின் வாயிலிருந்து என்னைக் காப்பாற்றும்;
காட்டெருமைகளின் கொம்புகளில் சிக்கியுள்ள என்னைக் காத்தருளும்.

புகழ்ச்சிப் பாடல்[தொகு]


22 உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்;
சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன். [3]


23 ஆண்டவருக்கு அஞ்சுவோரே, அவரைப் புகழுங்கள்;
யாக்கோபின் மரபினரே, அனைவரும் அவரை மாட்சிமைப்படுத்துங்கள்;
இஸ்ரயேல் மரபினரே, அனைவரும் அவரைப் பணியுங்கள்.


24 ஏனெனில், எளியோரின் சிறுமையை அவர் அற்பமாக எண்ணவில்லை;
அதைக் கவனியாமல் இருந்துவிடவில்லை;
தமது முகத்தை அவர்களுக்கு மறைக்கவுமில்லை;
தம்மை நோக்கி அவர்கள் மன்றாடுகையில்
அவர்களுக்குச் செவிசாய்த்தார்.


25 மாபெரும் சபையில் நான் செலுத்தும் புகழ் உம்மிடமிருந்து எழுவதாக!
உமக்கு அஞ்சுவோர் முன்னிலையில் என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.


26 எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்;
ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வராக!
அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக!


27 பூவுலகின் கடையெல்லைவரை உள்ளோர் அனைவரும்
இதை உணர்ந்து ஆண்டவர் பக்கம் திரும்புவர்;
பிற இனத்துக் குடும்பத்தார் அனைவரும்
அவர் முன்னிலையில் விழுந்து பணிவர்.


28 ஏனெனில் அரசு ஆண்டவருடையது;
பிற இனத்தார்மீதும் அவர் ஆட்சி புரிகின்றார்.


29 மண்ணின் செல்வர் யாவரும் அவரைப் பணிவர்;
புழுதிக்குள் இறங்குவோர் யாவரும்
தம் உயிரைக் காத்துக்கொள்ளாதோரும் அவரை வணங்குவர்.


30 வருங்காலத் தலைமுறையினர் அவரைத் தொழுவர்;
இனிவரும் தலைமுறையினருக்கு ஆண்டவரைப்பற்றி அறிவிக்கப்படும்.


31 அவர்கள் வந்து, அவரது நீதியை அறிவிப்பர்;
இனி பிறக்கப்போகும் மக்களுக்கு 'இதை அவரே செய்தார்' என்பர்.


குறிப்புகள்

[1] 22:1 = மத் 27:46; மாற் 15:34.
[2] 22:18 = மத் 27:35; மாற் 15:24; லூக் 23;34; யோவா 19:24.
[3] 22:22 எபி 2:12.
[4] 22:29 "உணவுண்டு அவரைப் பணிவர்" என்பது எபிரேய பாடம்.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 23 முதல் 24 வரை