திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 53 முதல் 54 வரை

விக்கிமூலம் இலிருந்து
தாவீது அரசர் சிலை. காப்பிடம்: எருசலேம்.

திருப்பாடல்கள்[தொகு]

இரண்டாம் பகுதி (42-72)
திருப்பாடல்கள் 53 முதல் 54 வரை

திருப்பாடல் 53[தொகு]

இறைப்பற்று இல்லார்[தொகு]

(பாடகர் தலைவர்க்கு;
'நோயுற்று' என்ற மெட்டு;
தாவீதின் அறப்பாடல்)



1 'கடவுள் இல்லை' என அறிவிலிகள்
தம் உள்ளத்தில் சொல்லிக் கொள்கின்றனர்;
அவர்களுள் சிலர் கெட்டு
அருவருப்பான செயல்களில் ஈடுபடுகின்றனர்;
நல்லது செய்வார் யாரும் இல்லை.


2 கடவுள் விண்ணகத்தினின்று
மானிடரை உற்றுநோக்குகின்றார்;
மதிநுட்பமுள்ளவர், கடவுளை நாடுபவர் எவராவது உண்டோ
என்று பார்க்கின்றார்.


3 எல்லோரும் நெறிபிறழ்ந்தனர்;
ஒருமிக்கக் கெட்டுப் போயினர்;
நல்லது செய்வார் யாரும் இல்லை;
ஒருவர் கூட இல்லை. [*]


4 'தீங்கிழைக்கும் யாவரும்
அறிவை இழந்துவிட்டார்களோ?
உணவை விழுங்குவதுபோல்
என் மக்களை விழுங்கப் பார்க்கின்றார்களே!'


5 எனவே அவர்கள் இதுவரை கண்டிராத முறையில்
பேரச்சத்தால் நடுநடுங்குவர்;
இறைமக்களை ஒடுக்கியோரின் எலும்புகளைக்
கடவுள் சிதறடிப்பார்;
கடவுள் அவர்களைக் கைவிட்டதால்
அவர்கள் மானக்கேடு அடைவர்.


6 சீயோனிலிருந்து இஸ்ரயேலருக்கு மீட்பு வருவதாக!
கடவுள் தம் மக்களுக்கு மீண்டும்
வளமான வாழ்வை அருளும்போது,
யாக்கோபின் இனத்தார் களிகூர்வராக!
இஸ்ரயேல் மக்கள் அகமகிழ்வராக!


குறிப்பு

[*] 53:1-3 = உரோ 3:10-12.


திருப்பாடல் 54[தொகு]

எதிரியிடமிருந்து காக்க வேண்டுதல்[தொகு]

(பாடகர் தலைவர்க்கு;
நரம்பிசைக் கருவிகளுடன்;
தாவீது தங்களிடம் ஒளிந்து கொண்டிருப்பதாகச்
சிப்பியர் சவுலிடம் தெரிவித்தபோது
தாவீது பாடிய அறப்பாடல்)



1 கடவுளே, உமது பெயரின் வல்லமையால் என்னைக் காப்பாற்றும்;
உமது ஆற்றலினால் எனது நேர்மையை நிலைநாட்டும்.


2 கடவுளே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்;
என் வாயின் சொற்களுக்குச் செவிகொடுத்தருளும்.


3 ஏனெனில், செருக்குற்றோர் எனக்கு எதிராய் எழுந்துள்ளனர்;
கொடியவர் என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றனர்;
அவர்கள் கடவுளை அறவே நினைப்பதில்லை. (சேலா)


4 இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார்;
என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்;


5 என் எதிரிகள் எனக்குச் செய்ய விரும்பும் தீமையை
அவர்கள் மேலேயே அவர் திருப்பிவிடுவாராக!
'உம் வாக்குப் பிறழாமைக்கு ஏற்ப அவர்களை அழித்தொழியும்!


6 தன்னார்வத்தோடு உமக்குப் பலி செலுத்துவேன்;
ஆண்டவரே, உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்;
இதுவே நன்று.'


7 ஏனெனில், அவர் என்னை
எல்லா இன்னல்களினின்றும் விடுவித்துள்ளார்;
என் எதிரிகளின் வீழ்ச்சியை நான் கண்ணாரக் கண்டுள்ளேன்.


குறிப்பு

[*] 54 தலைப்பு: 1 சாமு 23:19; 26:1.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 55 முதல் 56 வரை