திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 57 முதல் 58 வரை

விக்கிமூலம் இலிருந்து
"கடவுளே! எனக்கு இரங்கும், எனக்கு இரங்கும்" (திபா 57 [56]). விவிலிய ஓவிய நூல். இலத்தீன் அணியெழுத்து. காலம்: 15ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: ஷாந்தீயி, பிரான்சு.

திருப்பாடல்கள்[தொகு]

இரண்டாம் பகுதி (42-72)
திருப்பாடல்கள் 57 முதல் 58 வரை

திருப்பாடல் 57[தொகு]

உதவிக்காக வேண்டல்[தொகு]

(பாடகர் தலைவர்க்கு;
'அழிக்காதே' என்ற மெட்டு;
சவுலுக்குத் தப்பியோடிக் குகையில்
ஒளிந்துகொண்டிருந்த பொழுது,
தாவீது பாடிய கழுவாய்ப் பாடல்)



1 கடவுளே! எனக்கு இரங்கும், எனக்கு இரங்கும்;
நான் உம்மிடம் தஞ்சம் புகுகின்றேன்;
இடர் நீங்கும்வரை உம் இறக்கைகளின் நிழலையே
எனக்குப் புகலிடமாகக் கொண்டுள்ளேன்.


2 உன்னதரான கடவுளை நோக்கி,
எனக்காக யாவையும் செய்து முடிக்கும் இறைவனை நோக்கியே
நான் மன்றாடுகின்றேன்.


3 வானகத்தினின்று அவர் எனக்கு உதவி அனுப்பி
என்னைக் காத்தருள்வார்;
என்னை நசுக்குவோரை இழிவுபடுத்துவார். (சேலா)
கடவுள் தம் பேரன்பையும்
வாக்குப் பிறழாமையையும் வெளிப்படுத்துவார்.


4 மனிதரை வெறியோடு விழுங்கும்
சிங்கங்கள் போன்றவரிடையே நான் கிடக்கின்றேன்;
அவர்களின் பற்கள் ஈட்டியும் அம்பும் போன்றவை;
அவர்களின் நா கூர்மையான வாள் போன்றது.


5 கடவுளே! வானங்களுக்கு மேலாக நீர் உயர்த்தப்பெறுவீராக!
பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக!


6 நான் நடக்கும் வழியில் எனக்குக் கண்ணி வைக்கின்றனர்;
நான் மனம் ஒடிந்து போனேன்;
என் பாதையில் குழி வெட்டினர்;
அவர்களே அதில் விழுந்தனர்.


7 என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது;
கடவுளே! என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது;
நான் பாடுவேன்; உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.


8 என் நெஞ்சே, விழித்தெழு!
வீணையே, யாழே, விழித்தெழுங்கள்;
வைகறையை நான் விழித்தெழச் செய்வேன்.


9 என் தலைவரே!
மக்களினங்களிடையே உமக்கு நன்றி செலுத்துவேன்;
எல்லா இனத்தாரிடையேயும் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.


10 ஆண்டவரே!
உமது பேரன்பு வானளவு உயர்ந்துள்ளது!
உமது வாக்குப்பிறழாமை முகில்களைத் தொடுகின்றது!


11 கடவுளே! வானங்களுக்கு மேலாக நீர் உயர்வு பெறுவீராக;
பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக.

திருப்பாடல் 58[தொகு]

பொல்லாரின் தண்டிப்புக்காக வேண்டல்[தொகு]

(பாடகர் தலைவர்க்கு;
'அழிக்காதே' என்ற மெட்டு;
தாவீதின் கழுவாய்ப் பாடல்)



1 ஆட்சியாளரே!
நீவிர் வழங்கும் தீர்ப்பு உண்மையில் நீதியானதா?
மாந்தர்க்கு நேர்மையுடன் தீர்ப்பு வழங்குகின்றீரா?


2 இல்லை; அநீதியானவற்றைச் செய்வதற்கே
நீங்கள் திட்டமிடுகின்றீர்கள்;
நீங்கள் நாட்டில் நடக்கும் அநீதிக்கு உடந்தையாய் இருக்கின்றீர்கள்.


3 பொல்லார் கருவிலிருந்தே நெறிதவறிச் செல்கின்றனர்;
பிறப்பிலிருந்தே பொய் பேசித் திரிகின்றனர்.


4 அவர்களது நச்சுத்தன்மை நாகத்தின் நஞ்சு போன்றது;
செவிட்டு விரியன் தன் காதை அடைத்துக்கொள்வதுபோல,
அவர்களும் தங்களைச் செவிடாக்கிக் கொள்கின்றனர்.


5 பாம்பாட்டியின் மகுடியோசை அவ்விரியனின் காதில் விழாது;
அவன் திறமையுடன் ஊதினாலும் அதற்குக் கேளாது.


6 கடவுளே, அவர்கள் வாயின் பற்களை நொறுக்கிவிடும்;
ஆண்டவரே, அந்த இளஞ்சிங்கங்களின்
கடைவாய்ப் பற்களை உடைத்துவிடும்.


7 காட்டாற்று நீர்போல அவர்கள் மறைந்தொழியட்டும்;
அவர்கள் தம் வில்லை நாணேற்றியவுடன்
அம்புகள் முறிந்து போகட்டும்!


8 ஊர்ந்து ஊர்ந்து தேய்ந்து போகும் நத்தைபோல் ஆகட்டும்;
பிறந்தும் கதிரொளி காணாத பெண்வயிற்றுப்
பிண்டம்போல் ஆகட்டும்.


9 முள் நெருப்பினால் உங்கள் பானை சூடேறுமுன்னே,
பச்சையானதையும் வெந்து கொண்டிருப்பதையும்
சுழற்காற்றினால் அவர் அடித்துக் கொண்டு போவார்.


10 தீயோர் தண்டிக்கப்படுவதை நேர்மையாளர் காணும்போது மகிழ்வர்;
அவர்கள் தம் பாதங்களைப் பொல்லாரின் இரத்தத்தில் கழுவுவர்.


11 அப்போது மானிடர்:
'உண்மையிலேயே நேர்மையாளருக்குக் கைம்மாறு உண்டு;
மெய்யாகவே பூவுலகில்
நீதியுடன் ஆளும் கடவுள் ஒருவர் இருக்கின்றார்'
என்று சொல்வர்.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 59 முதல் 60 வரை