திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/தொடக்க நூல் (ஆதியாகமம்)/அதிகாரங்கள் 34 முதல் 35 வரை

விக்கிமூலம் இலிருந்து
இஸ்ரயேல் என்று பெயர் மாற்றம் பெற்ற யாக்கோபு. உருசிய விவிலிய ஓவியக் கலை. காலம்: 18ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: கிசி துறவியர் இல்லம், உருசியா.

தொடக்க நூல்[தொகு]

அதிகாரங்கள் 34 முதல் 35 வரை

அதிகாரம் 34[தொகு]

தீனாவுக்கு ஏற்பட்ட அவமானம்[தொகு]


1 யாக்கோபுக்கு லேயா பெற்றெடுத்த மகளான தீனா
அந்நாட்டு மகளிரைப் பார்க்க வெளியே புறப்பட்டுப் போனாள்.
2 இவ்வியனான ஆமோரின் மகனும் அந்நாட்டின் தலைவனுமான செக்கேம்
அவளைக் கண்டு தூக்கிச்சென்று
அவளுடன் உறவு கொண்டு சிறுமைப்படுத்தினான்.
3 யாக்கோபின் மகள் தீனாவிடம் அவன் மனம் மேலும் ஈர்க்கப் பெற,
அவன் அப்பெண்ணின்மேல் காதல் கொண்டு
அவளது மனத்தைக் கவரும் முறையில் பேசினான்.
4 எனவே செக்கேம் தன் தந்தை ஆமோரிடம்,
"இந்தப் பெண்ணை எனக்கு மணமுடித்துவையுங்கள்" என்று கூறினார்.


5 தம் மகள் தீனா தீட்டுப்படுத்தப்பட்டாள்
என்று யாக்கோபு கேள்விப்பட்டபோது,
அவருடைய புதல்வர் புல்வெளியில் மந்தைகளோடு இருந்தனர்.
எனவே அவர்கள் திரும்பி வரும்வரை யாக்கோபு அமைதியாய் இருந்தார்.
6 செக்கேமின் தந்தை ஆமோர் யாக்கோபோடு பேச வந்தார்.
7 யாக்கோபின் புதல்வர் இதைப்பற்றிக் கேள்விப்பட்டுப்
புல்வெளியிலிருந்து வந்தனர்.
அவர்கள் துயரமும் கடுஞ் சீற்றமும் கொண்டனர்.
ஏனெனில் யாக்கோபின் மகளுடன் உறவு கொண்டதால்
செய்யத் தகாததைச் செய்து செக்கேம்
இஸ்ரயேலை அவமானப்படுத்தினான் என்று நினைத்தனர்.


8 அப்பொழுது ஆமோர் அவர்களை நோக்கி,
"என் மகன் செக்கேமின் மனம் உங்கள் மகள்மீது ஈர்க்கப்பட்டுள்ளது.
அவளை அவனுக்கு மணமுடித்துத் தாருங்கள்.
9 நீங்கள் எங்களோடு கலப்பு மணம் செய்துகொள்ளுங்கள்.
உங்கள் பெண்களை எங்களுக்குக் கொடுத்து
எங்கள் பெண்களை உங்களுக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
10 நீங்கள் எங்களோடு இந்நாட்டில் எங்கும் தங்கலாம்.
அதில் குடியிருந்து, வணிகம் செய்து,
செல்வம் சேர்த்துக் கொள்ளுங்கள்" என்றார்.
11 அப்பொழுது செக்கேம் தீனாவின் தந்தையையும்,
சகோதரர்களையும் நோக்கி,
"உங்கள் பார்வையில் எனக்குத் தயை கிடைக்கட்டும்.
நீங்கள் கேட்பதைத் தருவேன்.
12 பெண்ணுக்குரிய பணமும் பரிசமும்
எவ்வளவு வேண்டுமானாலும் கேளுங்கள்.
நீங்கள் கேட்பதைத் தருவேன்.
பெண்ணை மட்டும் எனக்கு மணமுடித்துத் தாருங்கள்" என்றான்.


13 யாக்கோபின் புதல்வர் தங்கள் சகோதரியைச் செக்கேம் தீட்டுப்படுத்தியதால்,
அவனையும் அவன் தந்தை ஆமோரையும் நோக்கிக்
கபடமாய்க் கூறிய மறுமொழியாவது:
14 "நீங்கள் கேட்டபடி செய்ய எங்களால் முடியாது.
ஏனெனில் விருத்தசேதனம் செய்துகொள்ளாத ஆடவனுக்கு
எங்கள் சகோதரியைக் கொடுப்பது அவமானமாகும்.
15 ஆனால் நீங்களும் உங்களுள் ஆண்மக்கள் யாவரும்
விருத்தசேதனம் செய்து கொண்டால் மட்டும்
16 எங்கள் பெண்களை உங்களுக்குக் கொடுத்து
உங்கள் பெண்களை எங்களுக்கு எடுத்துக்கொள்வோம்.
உங்களிடையே வாழ்ந்து ஓரினமாக ஆவோம்.
17 எங்கள் சொற்படி நீங்கள் விருத்தசேதனம் செய்துகொள்ள
இசையாவிட்டால் நாங்கள் எங்கள் பெண்ணை
அழைத்துக் கொண்டு போய்விடுவோம்" என்றனர்.


18 அவர்கள் சொன்னது ஆமோருக்கும்
அவன் மகன் செக்கேமுக்கும் நலமாகத் தோன்றியது.
19 அந்த இளைஞன் யாக்கோபின் மகள்மீது கொண்ட காதலினால்
அவர்கள் சொன்னதை நிறைவேற்றுவதில் காலம் தாழ்த்தவில்லை.
மேலும் அவன் தன் தந்தை வீட்டார் அனைவரிடையிலும்
பெருமதிப்புக்குரியவனாய் இருந்தான்.
20 எனவே, ஆமோரும் அவன் மகன் செக்கேமும்
தம் நகரவாயிலுக்கு வந்து மக்களை நோக்கி,
21 "இந்த மனிதர்கள் நம்முடன் நட்புறவு கொள்பவர்கள்.
ஆகவே நம் நாட்டில் குடியிருந்து வணிகம் செய்யட்டும்.
அவர்கள் வாழ்வதற்கு நம் நாட்டில் நிறைய நிலம் இருக்கிறது.
அவர்களிடம் பெண் எடுத்து,
அவர்களுக்குப் பெண் கொடுப்போம்.
22 ஆனால் இவர்கள், தாங்கள் செய்து கொண்டது போல,
நம் ஆண்கள் அனைவரும் விருத்தசேதனம் செய்துகொண்டால் மட்டும்
நம்முடன் ஒரே இனமாகச் சேர்ந்து வாழ இசைவு தருகிறார்கள்.
23 அப்படிச் செய்தால் அவர்களுடைய மந்தைகள், சொத்துக்கள்,
அனைத்துக் கால்நடைகள் ஆகியன நமக்குரியன ஆகுமன்றோ!
எனவே நாம் அவர்களுக்கு ஒப்புதல் கொடுப்போம்.
அவர்களும் நம்முடன் குடியிருக்கட்டும்" என்றார்கள்.
24 ஆகவே நகரவாயிலுக்கு வெளியே வந்த அனைவரும்
ஆமோரும் அவன் மகன் செக்கேமும் கூறியதை ஏற்றுக் கொண்டனர்.
நகரிலிருந்த அனைத்து ஆண்களும் விருத்தசேதனம் செய்து கொண்டனர்.


25 மூன்றாம் நாளன்று அவர்கள் அனைவரும் வலியால் வருந்தியபோது,
யாக்கோபின் புதல்வர்களும் தீனாவின் சகோதரர்களுமான
சிமியோன், லேவி என்னும் இருவரும் அவரவர் வாளை எடுத்துக் கொண்டு,
சந்தேகம் எழாதபடி நகருக்குள் புகுந்து
அனைத்து ஆண்களையும் வெட்டி வீழ்த்தினர்.
26 அவர்கள் ஆமோரையும், அவன் மகன் செக்கேமையும்
வாளினால் வெட்டி வீழ்த்தியபின்
தீனாவை செக்கேம் வீட்டினின்று அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள்.
27 அதன்பின் யாக்கோபின் புதல்வர்கள் வந்து,
வெட்டுண்டவர்களின் சடலத்தின் மீது மிதித்துச் சென்று
தங்கள் சகோதரியைத் தீட்டுப்படுத்திய அந்நகரைக் கொள்ளையிட்டனர்.
28 நகரிலும் வெளிப்புறத்திலும் இருந்த
அவர்களுடைய ஆடு, மாடு, கழுதைகளைக் கைப்பற்றினர்.
29 அவர்களுடைய எல்லாச் செல்வங்களையும் எடுத்துக் கொண்டு,
எல்லாக் குழந்தைகள் பெண்டிரையும் கைதிகளாக்கி,
வீடுகளிலிருந்த அனைத்தையும் கொள்ளையடித்தனர்.
30 யாக்கோபு சிமியோனையும் லேவியையும் நோக்கி,
"நீங்கள் என்னைத் தொல்லைக்கு உட்படுத்திவிட்டீர்கள்.
இந்நாட்டில் வாழ்வோரிடத்திலும் கானானியரிடத்திலும்
பெரிசியரிடத்திலும் என்னை இழிவுபடுத்திவிட்டீர்கள்.
என்னிடமோ சில ஆள்களே உள்ளனர்.
அவர்கள் ஒன்று சேர்ந்து என்னைத் தாக்கினால்
நானும் என் குடும்பத்தாரும் அழிந்து போவோம்" என்றார்.
31 அதற்கு, "அவன் மட்டும் எங்கள் சகோதரியை
ஒரு விலைமாதைப் போல நடத்தலாமோ?"
என்று அவர்கள் மறுமொழி கூறினர்.


அதிகாரம் 35[தொகு]

பெத்தேலில் கடவுள் யாக்கோபுக்கு ஆசி வழங்குதல்[தொகு]


1 அப்பொழுது கடவுள் யாக்கோபை நோக்கி,
"நீ எழுந்து பெத்தேலுக்குப் போய் அங்கே குடியிரு.
உன் சகோதரன் ஏசாவிடமிருந்து தப்பியோடியபோது
உனக்குத் தோன்றின இறைவனுக்கு
அவ்விடத்தில் ஒரு பலிபீடத்தை எழுப்பு" என்றார். [1]
2 யாக்கோபு தம் வீட்டாரையும்
அவரோடிருந்த அனைவரையும் நோக்கி,
"உங்களிடம் உள்ள வேற்றுத் தெய்வங்களின் சிலைகளை அகற்றிவிட்டு
உங்களைத் தூய்மைப்படுத்தி,
உங்கள் உடைகளை மாற்றிக் கொள்ளுங்கள்.
3 எழுந்து வாருங்கள்;
பெத்தேலுக்குச் செல்வோம்.
அங்கே, என் துன்ப நாளில் என் மன்றாட்டைக் கேட்டருளி
நான் சென்றவிடமெல்லாம் எனக்கு வழித்துணையாய் இருந்த இறைவனுக்கு
ஒரு பலிபீடத்தை எழுப்புவேன்" என்றார்.
4 அப்படியே அவர்கள் தங்களிடமிருந்த
எல்லா வேற்றுத் தெய்வங்களின் சிலைகளையும்
தங்கள் காதணிகளையும் யாக்கோபின் கையில் கொடுக்க,
அவர் அவற்றைச் செக்கேம் அருகிலிருந்த
ஒரு கருவாலி மரத்தின் அருகே புதைத்தார்.


5 அவர்கள் புறப்பட்டுச் சென்றபொழுது,
அவர்களைச் சூழ்ந்திருந்த எல்லா நகரத்தினருக்கும்
கடவுள் திகிலூட்டினார்.
எனவே, அவர்கள் யாக்கோபின் புதல்வரைத் துரத்திச் செல்லவில்லை.
6 இவ்வாறு யாக்கோபும் அவரோடிருந்த எல்லா மக்களும்
கானான் நாட்டிலுள்ள லூசு என்ற பெத்தேலுக்கு வந்து சேர்ந்தனர்.
7 யாக்கோபு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி எழுப்பித்
தம் சகோதரனிடமிருந்து தப்பி ஓடினபொழுது,
கடவுள் தம்மை அங்கே அவருக்கு வெளிப்படுத்தியதால்,
அந்த இடத்திற்கு ஏல்-பெத்தேல் என்று பெயரிட்டார்.
8 அப்பொழுது ரெபேக்காவின் பணிப்பெண்ணாகிய தெபோரா இறந்தாள்.
பெத்தேலின் அடிவாரத்திலிருந்த ஒரு கருவாலி மரத்தடியில்
அவள் அடக்கம் செய்யப்பட்டாள்.
எனவே அவ்விடத்திற்கு 'அல்லோன்-பாகூத்து' [2]
என்னும் பெயர் வழங்கலாயிற்று.


9 யாக்கோபு பதான்-அராமிலிருந்து திரும்பி வந்தபின்
கடவுள் மீண்டும் அவருக்குத் தோன்றி, ஆசி வழங்கினார்.
10 கடவுள் அவரை நோக்கி,
"உன் பெயர் யாக்கோபு.
இனிமேல் நீ யாக்கோபு என்று அழைக்கப்படமாட்டாய்;
உன் பெயர் 'இஸ்ரயேல்' எனப்படும்" என்றுரைத்து
'இஸ்ரயேல்' என்று அவருக்குப் பெயரிட்டார். [3]
11 மேலும், கடவுள் அவரை நோக்கி,
"நானே எல்லாம் வல்ல இறைவன்.
நீ பலுகிப் பெருகக்கடவாய்.
ஓரினமும் மக்களினங்களின் கூட்டமும் உன்னிடமிருந்து தோன்றும்.
அரசர்களும் உன் வழிமரபில் உதிப்பார்கள்.
12 ஆபிரகாம், ஈசாக்குக்கு நான் அளித்த நாட்டை
உனக்கும் உனக்குப்பின் உன்வழி மரபினருக்கும் கொடுப்பேன்" என்றார். [4]
13 பின்னர் கடவுள் அவரோடு பேசிய இடத்தினின்று மேலெழும்பிச் சென்றார்.
14 யாக்கோபு தம்மோடு கடவுள் பேசிய அந்த இடத்தில்
ஒரு கல்தூணை நினைவுத் தூணாக நாட்டி,
அதன் மேல் நீர்மப் பலியையும் எண்ணெயையும் வார்த்தார்.
15 யாக்கோபு தம்மோடு கடவுள் பேசிய அந்த இடத்திற்குப்
'பெத்தேல்' [5] என்று பெயரிட்டார். [6]

ராகேலின் இறப்பு[தொகு]


16 பின்பு அவர்கள் பெத்தேலைவிட்டுப் புறப்பட்டனர்.
எப்ராத்திற்குச் சற்றுத் தொலைவில் அவர்கள் இருந்தபொழுது,
அங்கே ராகேலுக்குப் பேறுகாலம் வந்தது.
அப்பொழுது அவர் மிகவும் வேதனைப்பட்டார்.
17 பேறுகால வேதனையால் அவர் துடித்துக் கொண்டிருக்கையில்,
மருத்துவப் பெண் அவரை நோக்கி,
'அஞ்சாதே! உனக்கு இன்னொரு மகன் பிறந்துள்ளான்!' என்றாள்.
18 அவர் சாகக்கிடந்து உயிர்பிரியும் வேளையில்
அவனுக்குப் 'பென்-ஓனி' [7] என்று பெயரிட்டார்.
அவன் தந்தையோ அவனைப் 'பென்யமின்' [8] என்று அழைத்தார்.
19 இவ்வாறு ராகேல் இறந்துபோக,
பெத்லகேம் என்ற எப்ராத்திற்குச் செல்லும் வழியில் அடக்கம் செய்யப்பட்டார்.
20 யாக்கோபு அவருடைய கல்லறையின் மேல்
ஒரு நினைவுத்தூணை நாட்டிவைத்தார்.
இன்றுவரை அது ராகேலின் கல்லறைக்கு நினைவுத்தூணாக இருக்கின்றது.
21 மீண்டும், இஸ்ரயேல் அங்கிருந்து புறப்பட்டு
மிக்தால் ஏதேருக்கு அப்பால் கூடாரம் அடித்தார்.


22 இஸ்ரயேல் அந்நிலப்பகுதியில் குடியிருந்தபொழுது,
ரூபன் தன் தந்தையின் மறுமனைவியாகிய
பிலகாவுடன் உடலுறவு கொண்டான்.[9]
இஸ்ரயேல் அதைக் கேள்விப்பட்டார்.
யாக்கோபின் புதல்வர்கள் பன்னிருவரின் பெயர்களாவன:
23 லேயாவின் புதல்வர்கள்:
யாக்கோபின் தலைமகன் ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்.
24 ராகேலின் புதல்வர்கள்: யோசேப்பு, பென்யமின்.
25 ராகேலின் பணிப்பெண் பிலகாவின் புதல்வர்கள்: தாண், நப்தலி.
26 லேயாவின் பணிப்பெண் சில்பாவின் புதல்வர்கள்: காத்து, ஆசேர்.
இவர்கள் யாக்கோபுக்கு பதான் அராமில் பிறந்தவர்கள்.

ஈசாக்கின் இறப்பு[தொகு]


27 ஆபிரகாமும், ஈசாக்கும் வாழ்ந்த இடம்
கிரியத்து அர்பா என்ற எபிரோன் ஆகும்.
யாக்கோபு தம் தந்தை ஈசாக்கிடம் மம்ரே என்னும்
கிரியத்து அர்பாவுக்கு வந்தார்.
அதுவே ஆபிரகாமும் ஈசாக்கும் குடியிருந்த எபிரோன் ஆகும். [10]
28 ஈசாக்கு நூற்றெண்பது ஆண்டுகள் வாழ்ந்தார்.
29 அவர் வயது முதிர்ந்தவராய் இறந்து,
தம் மூதாதையருடன் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
அவர் புதல்வர்கள் ஏசாவும் யாக்கோபும்
அவரை அடக்கம் செய்தனர்.


குறிப்புகள்

[1] 35:1 = தொநூ 28:11-17.
[2] 35:8 எபிரேயத்தில், 'அழுகையின் கருவாலி மரம்' என்பது பொருள்.
[3] 35:10 = தொநூ 32:28.
[4] 35:11-12 = தொநூ 17:4-8.
[5] 35:15 எபிரேயத்தில், 'இறைவனது இல்லம்' என்பது பொருள்.
[6] 35:14-15 = தொநூ 28:18-19.
[7] 35:18 எபிரேயத்தில், 'என் வேதனையின் மகன்' என்பது பொருள்.
[8] 35:18 எபிரேயத்தில், 'என் வலக்கையின் மகன்' என்பது பொருள்.
[9] 35:22 = தொநூ 49:4.
[10] 35:27 = தொநூ 13:18.

(தொடர்ச்சி): தொடக்க நூல்:அதிகாரங்கள் 36 முதல் 37 வரை