திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/நாகூம்/அதிகாரங்கள் 2 முதல் 3 வரை

விக்கிமூலம் இலிருந்து
"போர் அணியில் இயங்கும் தேர்ப்படையிலிருந்து தீப்பொறி பறக்கின்றது; குதிரைகள் போருக்குத் துடிக்கின்றன." - நாகூம் 3:2-3.

நாகூம் (The Book of Nahum)[தொகு]

அதிகாரங்கள் 2 முதல் 3 வரை

அதிகாரம் 2[தொகு]

நினிவேயின் வீழ்ச்சி[தொகு]


1 உன்னைச் சிதறடிப்பவன் உனக்கு எதிராய் வருகின்றான்;
கோட்டை மதில்களில் வீரர்களை நிறுத்து;
வழிகளில் காவலர்களை அமர்த்து;
உன் இடையே வரிந்து கட்டிக்கொள்;
உன் படை வலிமையை மிகுதிப்படுத்து.


2 இஸ்ரயேலின் மேன்மை போலவே யாக்கோபின் மேன்மையை
ஆண்டவர் மீண்டும் நிலைநாட்டுகின்றார்;
கொள்ளைக்காரர்கள் அவர்களைக் கொள்யையடித்தனர்;
அவர்களின் திராட்சைக் கொடிகளையும் அழித்துப்போட்டனர்.


3 எதிரியுடைய வீரர்களின் கேடயங்கள் சிவப்பானவை;
அவனுடைய போர்வீரர் செந்நிற ஆடை உடுத்தியுள்ளனர்;
போர் அணியில் இயங்கும் தேர்ப்படையிலிருந்து
தீப்பொறி பறக்கின்றது;
குதிரைகள் போருக்குத் துடிக்கின்றன.


4 வெறிபிடித்தவனைப்போல் தேர்கள் தெருக்களில் ஓடுகின்றன;
திறந்த வெளியில் அவை அங்குமிங்குமாய் விரைகின்றன;
தீப்பந்தங்களைப்போலச் சுடர்விடுகின்றன;
மின்னலைப்போலப் பாய்கின்றன.


5 படைத்தலைவர்கள் அழைக்கப்படுகின்றார்கள்;
அவர்கள் செல்லும்போது இடறுகின்றார்கள்;
கோட்டை மதில் நோக்கி விரைந்தோடுகின்றார்கள்;
காப்புக் கருவி அமைத்தாயிற்று.


6 ஆறுகளின் மதகுகள் திறந்துவிடப்பட்டன.
அரண்மனை இடிந்து கரைந்தது.


7 அரசி அணிகள் களையப்பெற்று நாடு கடத்தப்படுகின்றாள்;
அவளுடைய பணிப்பெண்கள் புறாக்களைப்போலப் பெருமூச்செறிந்து,
மாரடித்துப் புலம்பகின்றார்கள்.


8 உடைத்துக்கொண்ட குளம்போல ஆனது நினிவே நகர்;
'நில்லுங்கள், நில்லுங்கள்!' என அவர்கள் அலறுகிறார்கள்;
ஆனால் எவனும் திரும்பிப் பார்க்கிறதில்லை.


9 வெள்ளியைக் கொள்ளையடியுங்கள்;
பொன்னைக் கவர்ந்து கொள்ளுங்கள்;
கருவூலங்கள் மிகப்பெரியவை;
அங்குள்ள விலையுயர்ந்த பொருள்களுக்கு அளவே இல்லை.


10 வெறுமை! பாழ்! அழிவு!
உள்ளம் சோர்ந்துவிட்டது;
கால்கள் தள்ளாடுகின்றன;
திகில் அனைவரையும் முற்றிலும் ஆட்கொள்கிறது;
முகங்ளெல்லாம் வெளிறிப் போகின்றன.


11 சிங்கங்களின் குகை எங்கே?
சிங்கக் குட்டிகள் உலாவும் உறைவிடம் எங்கே?
அச்சமின்றி இருந்த தன் குட்டிகளுக்கு அது
இரை தேடிக்கொணர்ந்து போட்ட இடம் இதுவன்றோ?


12 சிங்கம் தன் குட்டிகளுக்கும் பெண் சிங்கத்திற்கும்
தேவையான அளவு இரையைப் பீறிக் கிழித்து,
இரையினால் தன் உறைவிடங்களையும்,
கிழித்த சதையால் தன் குகைகளையும் நிரப்பிற்று.


13 இதோ! படைகளின் ஆண்டவர் கூறுகிறார்;
உனக்கு எதிராக நான் எழும்புவேன்;
உன் தேர்களைச் சுட்டுச் சாம்பலாக்குவேன்;
உன் இளம் சிங்கங்கள் வாளுக்கு இரையாகும்;
நாட்டில் உனக்கு இரை இல்லாதபடி செய்வேன்;
உன் தூதர்களின் குரலை இனி யாரும் கேட்கமாட்டார்கள்.


அதிகாரம் 3[தொகு]


1 இரத்தக்கறை படிந்த நகருக்கு ஐயோ கேடு!
அங்கு நிறைந்திருப்பதெல்லாம் பொய்களும் கொள்ளைப் பொருளுமே!
சூறையாடலுக்கு முடிவே இல்லை!


2 சாட்டையடிகளின் ஓசை!
சக்கரங்களின் கிறிச்சிடும் ஒலி!
தாவிப் பாயும் புரவிகள்! உருண்டோடும் தேர்கள்!


3 குதிரை வீரர்கள் பாய்ந்து தாக்குகின்றனர்;
வாள் மின்னுகின்றது;
ஈட்டி பளபளக்கின்றது;
வெட்டுண்டவர்கள் கூட்டமாய்க் கிடக்கின்றனர்;
பிணங்கள் குவிந்து கிடக்கின்றன;
செத்தவர்களுக்குக் கணக்கே இல்லை;
அந்தப் பிணங்கள் மேல் மனிதர் இடறிவிழுகின்றனர்.


4 அழகும் கவர்ச்சியும் நிறைந்தவளாய்,
தன் வேசித்தனங்களால் மற்ற வேற்றினத்தாரையும்
தன் மயக்கும் கவர்ச்சியால் பல இனங்களையும் ஏமாற்றிய
அந்த விலைமகளின் எண்ணற்ற வேசித்தனங்களே இதற்குக் காரணம்!


5 இதோ! படைகளின் ஆண்டவர் கூறுகிறார்:
உனக்கெதிராக நான் எழும்புவேன்;
நீ உடுத்தியிருக்கும் ஆடையை
உன் முகத்துக்கு மேலாகத் தூக்குவேன்;
மற்ற வேற்றினத்தார் உன் திறந்த மேனியையும்
அரசுகள் உன் அவமானத்தையும் பார்க்கும்படி செய்வேன்.


6 அருவருப்பானவற்றை உன்மீது எறிவேன்;
உன்னை இகழ்ச்சியுடன் நடத்திப் பகடிப் பொருள் ஆக்குவேன்.


7 உன்னை நோக்குவோர் எல்லாரும் உன்னிடமிருந்து பின்வாங்கி,
'நினிவே பாழாய்ப் போனது;
அவளுக்காகப் புலம்புவோர் யாரேனும் உண்டோ?' என்று சொல்வார்கள்.
உன்னைத் தேற்றுவோரை எங்கே தேடுவேன்?


8 நைல் நதியின் கரையருகில் நீரால் சூழப்பட்ட,
கடலை அரணாகவும் தண்ணீரை மதிலாகவும் கொண்ட
தீப்சு நகரைவிட நீ சிறப்புற்று இருந்தாயோ?


9 எத்தியோப்பியாவும் எகிப்தும் அந்த நகருக்கு வலிமையாய் இருந்தன;
அதன் வலிமைக்கோ எல்லை இல்லை;
பூத்தும் லிபியாவும் அதற்குத் துணையாய் இருந்தன.


10 இருந்தும், அதன் மக்கள் சிறைப்பிடிக்கப்பட்டு
அடிமைகளாய் நாடு கடத்தப்பட்டனர்;
அதன் குழந்தைகள் தெருக்கள் தோறும் மோதியடிக்கப்பட்டனர்;
அதன் உயர்குடி மக்கள் மேல் சீட்டுப் போடப்பட்டது;
அதன் பெரிய மனிதர் அனைவரும்
சங்கிலிகளால் இறுகக் கட்டப்பட்டனர்.


11 நீயும் குடிவெறியில் மயங்கிக் கிடப்பாய்;
நீயும் உன் பகைவனிடமிருந்து தப்புமாறு புகலிடம் தேடி அலைவாய்.


12 உன் அரண்கள் யாவும் முதலில் பழுத்த
கனிகள் நிறைந்த அத்தி மரங்களுக்கு ஒப்பானவை;
அந்த மரங்களைப் பிடித்து உலுக்கும்போது
பழங்கள் தின்பதற்கு வாயில் விழும்.


13 உன் போர்வீரர்கள் உன் பெண்களைப் போன்றவர்களே!
உன் நாட்டு வாயில்கள் பகைவர்களுக்காகத்
திறந்து கிடக்கின்றன;
உன் தாழ்ப்பாள்கள் நெருப்புக்கு இரையாயின.


14 முற்றுகை நாள்களுக்காகத் தண்ணீர் சேமித்து வை;
உன்னுடைய அரண்களை வலிமைப்படுத்து;
களிமண்ணைப் பிசைந்து சேறாக்கு;
செங்கல் அறுக்கச் சட்டங்களை எடு.


15 ஆயினும் நெருப்பு உன்னை விழுங்கும்;
வாளால் நீ வெட்டுண்டு மடிவாய்;
வெட்டுக்கிளிபோல் அது உன்னை விழுங்கிவிடும்;
வெட்டுக்கிளிபோல் நீங்கள் பலுகுங்கள்;
பச்சைக்கிளிபோல் நீங்கள் பெருகுங்கள்.


16 விண்மீன்களைவிட மிகுதியாக உன் வணிகர்களைப் பெருகச் செய்தாய்;
இந்த வெட்டுக்கிளிகள் இறக்கையை விரித்துப் பறந்தோடிவிடும்.


17 உன் காவல் வீரர்கள் பச்சைக் கிளிகளுக்கும்
உன் அரசு அலுவலர் வெட்டுக்கிளிக் கூட்டத்திற்கும் ஒப்பானவர்;
குளிர்ந்த நாளில் அவை வேலிகள் மேல் உட்கார்ந்துள்ளன;
கதிரவன் எழுந்ததும் பறந்தோடிவிடுகின்றன;
அதன்பின் அவை இருக்குமிடம் யாருக்கும் தெரியாது.


18 அசீரிய மன்னனே! உன் ஆயர்கள் துயில் கொண்டனர்;
உன் படைத் தலைவர்கள் உறக்கத்தில் ஆழ்ந்தனர்;
கூட்டிச் சேர்க்க யாருமின்றி உன் மக்கள் மலைகளில் சிதறிப் போயினர்.


19 உன் காயத்துக்கு மருந்தில்லை, உன் புண் குணமாகாது;
உன்னைப்பற்றிய செய்தி கேட்கும் யாவரும் கைகொட்டுவர்;
ஏனெனில், உன் இடைவிடாத கொடுமையால்
துன்புறாதவர் ஒருவரும் இல்லை.


(நாகூம் நூல் நிறைவுற்றது)


(தொடர்ச்சி): அபக்கூக்கு:அதிகாரம் 1