திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்)/அதிகாரங்கள் 13 முதல் 14 வரை

விக்கிமூலம் இலிருந்து
ஞானத்தோடு நீதிவழங்கும் சாலமோன் அரசர். கண்ணாடி நிறப்பதிகை ஓவியம். காப்பிடம்: ஸ்ட்ராஸ்பர்க் மறைமாவட்டக் கோவில், பிரான்சு.

நீதிமொழிகள் (The Book of Proverbs)[தொகு]

அதிகாரங்கள் 13 முதல் 14 வரை

அதிகாரம் 13[தொகு]


1 ஞானமுள்ள மகன் தந்தையின் நற்பயிற்சியை ஏற்றுக்கொள்வான்;
இறுமாப்புள்ளவனோ கண்டிக்கப்படுதலைப் பொருட்படுத்த மாட்டான்.


2 நல்லோர் தம் சொற்களின் பலனான நல்லுணவை உண்கிறார்;
வஞ்சகச் செயல்களே வஞ்சகர் உண்ணும் உணவு.


3 நாவைக் காப்பவர் தம் உயிரையே காத்துக் கொள்கிறார்;
நாவைக் காவாதவன் கெட்டழிவான்.


4 சோம்பேறிகள் உண்ண விரும்பகிறார்கள், உணவோ இல்லை;
ஊக்கமுள்ளவரோ உண்டு கொழுக்கிறார்.


5 நல்லார் பொய்யுரையை வெறுப்பர்;
பொல்லாரோ வெட்கக்கேடாகவும் இழிவாகவும் நடந்துகொள்வர்.


6 நேர்மையாக நடப்போரை நீதி பாதுகாக்கும்;
பொல்லாரை அவர்களின் பாவம் கீழே வீழ்த்தும்.


7 ஒன்றுமில்லாதிருந்தும் செல்வர் போல நடிப்போருமுண்டு;
மிகுந்த செல்வமிருந்தும் ஏழைகள் போல நடிப்போருமுண்டு.


8 அச்சுறுத்தப்படும்போது செல்வர் தம் பொருளைத் தந்து
தம் உயிரை மீட்டுக்கொள்வர்.
ஏழையோ அச்சுறுத்துதலுக்கு அஞ்சான்.


9 சான்றோரின் ஒளி சுடர்வீசிப் பெருகும்;
பொல்லாரின் விளக்கோ அணைக்கப்படும்.


10 மூடன் தன் இறுமாப்பினாலே சண்டை மூட்டுவான்;
பிறருடைய அறிவுரைகளை ஏற்போரிடம் ஞானம் காணப்படும்.


11 விரைவில் வரும் செல்வம் விரைவில் கரையும்;
சிறிது சிறிதாய்ச் சேர்ப்பவனின் செல்வமே பெருகும்.


12 நெடுநாள் எதிர்நோக்கியிருப்பது மனச்சோர்வை உண்டாக்கும்;
விரும்பியது கிடைப்பது சாகாவரத்தைப் பெறுவது போலாகும்.


13 அறிவுரையைப் புறக்கணிக்கிறவர் அழிவுறுவார்;
போதிக்கிறவரின் சொல்லை மதிக்கிறவர் பயனடைவார்.


14 ஞானமுள்ளவரது அறிவுரை வாழ்வளிக்கும் ஊற்றாகும்;
அது ஒருவரைச் சாவை விளைவிக்கும் கண்ணிகளிலிருந்து தப்புவிக்கும்.


15 நல்லறிவு மக்களின் நல்லெண்ணத்தை வருவிக்கும்;
நம்பிக்கைத் துரோகமோ கேடு அடையச் செய்யும்.


16 கூர்மதிவாய்ந்த எவரும் நல்லறிவோடு நடந்துகொள்வார்;
மூடர் தன் மடமையை விளம்பரப்படுத்துவார்.


17 தீய தூதர் தொல்லையில் ஆழ்த்துவார்;
நல்ல தூதரோ அமைதி நிலவச் செய்வார்.


18 நல்லுரையைப் புறக்கணிப்பவர் வறுமையும் இகழ்ச்சியும் அடைவார்;
கண்டிப்புரையை ஏற்பவரோ புகழடைவார்.


19 நினைத்தது கிடைப்பின் மனத்திற்கு இன்பம்;
மூடர் தம் தீமையை வெறுக்காதிருப்பதும் இதனாலேயே.


20 ஞானமுள்ளவர்களோடு உறவாடுகிறவர் ஞானமுள்ளவராவார்;
மூடரோடு நட்புக்கொள்கிறவர் துன்புறுவார்.


21 பாவிகளைத் தீங்கு பின்தொடரும்;
கடவுளுக்கு அஞ்சி நடப்போருக்கு நற்பேறு கிட்டும்.


22 நல்லவரது சொத்து அவருடைய மரபினரைச் சேரும்;
பாவி சேர்த்த செல்வமோ கடவுளுக்கு அஞ்சி நடப்போரை வந்தடையும்.


23 தரிசு நிலம் ஏழைக்கு ஓரளவு உணவு தரும்;
ஆனால் நியாயம் கிடைக்காத இடத்தில் அதுவும் பறிபோகும்.


24 பிரம்பைக் கையாளதவர் தம் மகனை நேசிக்காதவர்;
மகனை நேசிப்பவரோ அவனைத் தண்டிக்கத் தயங்கமாட்டார்.


25 கடவுளுக்கு அஞ்சி நடப்போருக்கு வயிறார உணவு கிடைக்கும்;
பொல்லாரின் வயிறோ பசியால் வாடும்.


அதிகாரம் 14[தொகு]


1 ஞானமுள்ள பெண்கள் தம் இல்லத்தைக் கட்டியெழுப்புகின்றனர்;
அறிவற்றவரோ தம் கைகளைக் கொண்டே அதை அழித்துவிடுகின்றனர்.


2 நேர்மையாக நடப்பவர் ஆண்டவரிடம் அச்சம் கொள்வார்;
நெறிதவறி நடப்பவன் அவரைப் பழிப்பான்.


3 மூடனது இறுமாப்பு அவனை மிகுதியாகப் பேசச் செய்யும்;
ஞானமுள்ளவருடைய சொற்களோ அவரைப் பாதுகாக்கும்.


4 உழவு மாடுகள் இல்லையேல் விளைச்சலும் இல்லை;
வலிமைவாய்ந்த காளைகள் மிகுந்த விளைச்சலை உண்டாக்கும்.


5 வாக்குப் பிறழாத சாட்சி பொய்யுரையான்;
பொய்ச்சாட்சியோ மூச்சுக்கு மூச்சு பொய் பேசுவான்.


6 ஒழுங்கீனன் ஞானத்தைப் பெற முயலுவான்;
ஆனால் அதை அடையான்;
விவேகமுள்ளவரோ அறிவை எளிதில் பெறுவார்.


7 மூடனைவிட்டு விலகிச் செல்;
அறிவுடைய பேச்சு அவனிடம் ஏது?


8 விவேகமுள்ளவரது ஞானம் அவரை நேர்வழியில் நடத்தும்;
மதிகேடர் மடமை அவனை ஏமாறச் செய்யும்.


9 பாவக்கழுவாய் தேடுவதை மூடர் ஏளனம் செய்வர்;
மூடரின் இல்லத்தில் குற்றப்பழி தங்கும்;
நேர்மையாளரின் இல்லத்தில் மகிழ்ச்சி தவழும்.


10 ஒருவரது இன்பமோ துன்பமோ, அது அவருடையதே;
வேறெவரும் அதைத் துய்க்க இயலாது.


11 பொல்லாரின் குடி வேரோடழியும்;
நேர்மையாளரின் குடும்பம் தழைத்தோங்கும்.


12 ஒரு பாதை ஒருவருக்கு நல்வழி போலத் தோன்றலாம்;
முடிவிலோ அது சாவுக்கு நடத்தும் பாதையாகிவிடும். [*]


13 நகைப்பிலும் துயரமுண்டு;
மகிழ்ச்சியை அடுத்து வருத்தமும் உண்டு.


14 உண்மையற்றவர் தம் நடத்தையின் விளைவைத் துய்ப்பார்;
நல்லவர் தம் செயல்களின் பயனை அடைவார்.


15 பேதை தன் காதில் விழும் எதையும் நம்புவார்;
விவேகமுள்ளவரோ நேர்வழி கண்டு அவ்வழி செல்வார்.


16 ஞானமுள்ளவர் விழிப்புடையவர்; தீமையை விட்டு விலகுவர்.
மதிகேடரோ மடத்துணிச்சலுள்ளவர்; எதிலும் பாய்வார்.


17 எளிதில் சினங்கொள்பவர் மதிகேடானதைச் செய்வார்;
விவேகமுள்ளவரோ பொறுமையோடிருப்பார்.


18 பேதையர் அறியாமையுடையோர்;
விவேகமுள்ளவர்கள் சூடும் மணிமுடி அறிவாகும்.


19 தீயவர் நல்லார்முன் பணிவர்;
பொல்லார் சான்றோரின் வாயிற்படியில் காத்து நிற்பர்.


20 ஓர் ஏழையை அடுத்திருப்போர் அவரை அருவருப்பானவர் எனக் கருதுவர்;
செல்வருக்கோ நண்பர் பலர் இருப்பர்.


21 அடுத்திருப்பாரை இகழ்தல் பாவமாகும்;
ஏழைக்கு இரங்குகிறவர் இன்பம் துய்ப்பார்.


22 தீய சூழ்ச்சி செய்பவர் தவறிழைப்பவர் அன்றோ?
நலம் தரும் திட்டம் வகுப்போர் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவர்.


23 கடும் உழைப்பு எப்போதும் பயன் தரும்;
வெறும் பேச்சினால் வருவது வறுமையே.


24 ஞானிகளுக்கு அவர்களது விவேகமே மணிமுடி;
மதிகேடருக்கு அவர்களது மடமைதான் பூமாலை.


25 உண்மைச் சான்று உயிரைக் காப்பாற்றும்;
பொய்ச் சான்று ஏமாற்றத்தையே தரும்.


26 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் ஒருவருக்குத் திடநம்பிக்கை அளிக்கும்;
அவர் தம்முடைய பிள்ளைகளுக்கு அடைக்கலமாயிருப்பார்.


27 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் வாழ்வளிக்கும் ஊற்றாகும்;
சாவை விளைவிக்கும் கண்ணிகளுக்கு அது மனிதரைத் தப்புவிக்கும்.


28 மக்கள் தொகை உயர, மன்னரின் மாண்பும் உயரும்;
குடி மக்கள் குறைய, கோமகனும் வீழ்வான்.


29 பொறுமையுள்ளவர் மெய்யறிவாளர்;
எளிதில் சினங்கொள்பவர் தம் மடமையை வெளிப்படுத்துவார்.


30 மன அமைதி உடல் நலம் தரும்;
சின வெறியோ எலும்புருக்கியாகும்.


31 ஏழையை ஒடுக்கிறவர் அவரை உண்டாக்கினவரை இகழ்கிறார்;
வறியவருக்கு இரங்குகிறவர் அவரைப் போற்றுகிறார்.


32 பொல்லார் தம் தீவினையால் வீழ்ச்சியுறுவார்;
கடவுளுக்கு அஞ்சி நடப்பவர் சாகும்போதும்
தம் நேர்மையைப் புகலிடமாகக் கொள்வார்.


33 விவேகமுள்ளவர் மனத்தில் ஞானம் குடிகொள்ளும்;
மதிகேடரிடம் அதற்கு இடமேயில்லை.


34 நேர்மையுள்ள நாடு மேன்மை அடையும்;
பாவம் நிறைந்த எந்த நாடும் இழிவடையும்.


35 கூர்மதியுள்ள பணியாளனுக்கு அரசர் ஆதரவு காட்டுவார்;
தமக்கு இழிவு வருவிப்பவன்மீது சீற்றங்கொள்வார்.


குறிப்பு

[*] 14:12 = நீமொ 16:25.


(தொடர்ச்சி):நீதிமொழிகள்:அதிகாரங்கள் 15 முதல் 16 வரை