திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்)/அதிகாரங்கள் 15 முதல் 16 வரை

விக்கிமூலம் இலிருந்து
"அகமகிழ்ச்சியால் முகம் மலரும்; மனத்துயரால் உள்ளம் உடையும்" - நீதிமொழிகள் 15:13.

நீதிமொழிகள் (The Book of Proverbs)[தொகு]

அதிகாரங்கள் 15 முதல் 16 வரை

அதிகாரம் 15[தொகு]


1 கனிவான மறுமொழி கடுஞ்சினத்தையும் ஆற்றிவிடும்;
கடுஞ்சொல்லோ சினத்தை எழுப்பும்.


2 ஞானமுள்ளவர்களின் நா அறிவை வழங்கும்;
மதிகேடரின் வாயோ மடமையை வெளியிடும்.


3 ஆண்டவருடைய கண்கள் எங்கும் நோக்கும்;
நல்லாரையும் பார்க்கும், பொல்லாரையும் பார்க்கும்.


4 சாந்தப்படுத்தும் சொல், வாழ்வளிக்கும் மரம் போன்றது;
வஞ்சகப் பேச்சாலோ மனமுடைந்துபோகும்.


5 தன் தந்தையின் நல்லுரையைப் புறக்கணிப்பவர் மூடர்;
கண்டிப்புரையை ஏற்பவர் விவேகமுள்ளவர்.


6 நல்லாரின் வீட்டில் நிறைசெல்வம் நிலைத்திருக்கும்;
பொல்லாரின் வருவாயால் விளைவது தொல்லையே.


7 ஞானிகளின் பேச்சு அறிவை வளர்க்கும் தன்மையது;
மதிகேடரின் உள்ளம் அத்தகையதல்ல.


8 பொல்லார் செலுத்தும் பலி ஆண்டவருக்கு அருவருப்பைத் தரும்;
நேர்மையானவர்களின் மன்றாட்டு அவருக்கு உகந்ததாயிருக்கும்.


9 பொல்லாரின் செயல்கள் ஆண்டவருக்கு அருவருப்பு;
நீதியைப் பின்பற்றுவோரிடம் அவர் அன்புகொள்கிறார்.


10 நெறி தவறிச் செல்பவருக்குத் தண்டனை கடுமையாயிருக்கும்;
கண்டிப்பை வெறுப்பவர் மரணம் அடைவார்.


11 பாதாளமும் படுகுழியுமே ஆண்டவர் பார்வையில் இருக்க,
மனிதரின் உள்ளம் அவர் பார்வைக்கு மறைவாயிருக்குமா?


12 ஏளனம் செய்வோர் தம்மைக் கடிந்து கொள்பவரை விரும்பார்;
ஞானமுள்ளவரிடம் செல்லவும் மாட்டார்;


13 அகமகிழ்ச்சியால் முகம் மலரும்;
மனத்துயரால் உள்ளம் உடையும்.


14 விவேகமுள்ளவர் மனம் அறிவை நாடும்;
மதிகேடர் வாய்க்கு மடமையே உணவு.


15 ஒடுக்கப்பட்டோருக்கு ஒவ்வொரு நாளும் தொல்லை நாளே;
மனமகிழ்ச்சி உள்ளவருக்கோ எல்லா நாள்களும் விருந்து நாள்களே.


16 பெருஞ்செல்வமும் அதனோடு கவலையும் இருப்பதைவிட,
சிறுதொகையும் அதனோடு ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமும் இருப்பதே மேல்.


17 பகை நெஞ்சம் கொண்டோர் படைக்கும் நல்ல இறைச்சி உணவைவிட,
அன்புள்ளம் உடையவர் அளிக்கும் மரக்கறி உணவே மேல்.


18 எளிதில் சினங்கொள்பவர் சண்டையை மூட்டுவார்;
பொறுமை உடையவர் சண்டையைத் தீர்த்து வைப்பார்.


19 சோம்பேறிக்கு எவ்வழியும் முள் நிறைந்த வழியே;
சுறுசுறுப்பானவர்கள் செல்லும் பாதையோ நெடுஞ்சாலையாகும்.


20 ஞானமுள்ள மகன் தன் தந்தையை மகிழ்விப்பான்;
அறிவற்ற மகனோ தன் தாயை இகழ்வான்.


21 மூடன் தன் மடமை குறித்து மகிழ்ச்சியடைகின்றான்;
மெய்யறிவுள்ளவன் நேர்மையானதைச் செய்வான்.


22 எண்ணிப் பாராமல் செய்யும் செயல் தோல்வியடையும்;
பலர் திட்டமிட்டுச் செய்யும் செயல் வெற்றியடையும்.


23 தக்க மறுமொழி அளிப்பவன் மிக்க மகிழ்ச்சி அடைவான்;
காலமும் வேளையும் அறிந்து சொல்லும் சொல்லால் வரும் மகிழ்ச்சி இன்னும் பெரிது.


24 விவேகமுள்ளவன் செல்லும் பாதை பாதாளத்திற்குச் செல்லும் பாதை அல்ல;
அது வாழ்விற்குச் செல்லும் பாதையாகும்.


25 இறுமாப்புள்ளவர் வீட்டை ஆண்டவர் இடித்துத் தள்ளுவார்;
கைம்பெண்ணினது நிலத்தின் எல்லைகளைப் பாதுகாப்பார்.


26 தீயோரின் எண்ணங்களை ஆண்டவர் அருவருக்கிறார்;
மாசற்றோரின் சொற்களே உவப்பளிப்பவை.


27 வன்முறையில் செல்வம் சேர்ப்பவர்
தம் குடும்பத்திற்குத் தொல்லை வருவிப்பார்;
கைக்கூலி வாங்க மறுப்பவர் நீடித்து வாழ்வார்.


28 சான்றோர் எண்ணிப் பார்த்து மறுமொழி கூறுவர்;
பொல்லாரின் வாய் தீய சொற்களைப் பொழியும்.


29 ஆண்டவர் பொல்லாருக்கு நெடுந்தொலையில் இருக்கிறார்;
தமக்கு அஞ்சி நடப்போரின் மன்றாட்டுக்குச் செவிசாய்க்கிறார்.


30 இன்முகம் மனத்திற்கு மகிழ்ச்சி தரும்;
நல்ல செய்தி உடம்புக்கு உரமளிக்கும்.


31 நலம் தரும் அறிவுரையைக் கவனமாகக் கேட்பவர்,
ஞானிகளோடு உறவு கொண்டிருப்பதை விரும்புவார்.


32 கண்டிக்கப்படுவதைப் புறக்கணிக்கிறவர்
தமக்கே கேடு வருவித்துக் கொள்கிறார்;
அறிவுரையைக் கவனமாகக் கேட்பவர் உணர்வை அடைவார்.


33 ஆண்டவரிடம் அச்சம்கொள்ளுதல் ஞானத்தைத் தரும் பயிற்சி;
மேன்மை அடையத் தாழ்மையே வழி.


அதிகாரம் 16[தொகு]


1 எண்ணங்களை மனிதர் எண்ணலாம்;
ஆனால், எதற்கும் முடிவு கூறுபவர் ஆண்டவர்.


2 மனிதருடைய நடத்தையெல்லாம் அவர் பார்வையில்
களங்கமற்றதாய்த் தோன்றலாம்;
ஆனால், ஆண்டவர் அவர் உள்ளெண்ணத்தைச் சீர்தூக்கிப் பார்க்கிறார்.


3 உன் செயல்களை ஆண்டவரிடம் ஒப்படை;
அவற்றை வெற்றியுடன் நிறைவேற்றுவாய்.


4 ஆண்டவர் படைத்த ஒவ்வொன்றிற்கும் குறிக்கப்பட்ட ஒரு முடிவு உண்டு;
பொல்லாத மனிதரை அழிவு நாளுக்கென்று குறித்து வைத்திருக்கிறார்.


5 இறுமாப்புள்ளவர் யாராயிருந்தாலும் அவரை ஆண்டவர் அருவருக்கிறார்;
அவர் தண்டனைக்குத் தப்பவேமாட்டார்; இது உறுதி.


6 அன்பும் வாய்மையும் தீவினையைப் போக்கும்.
ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் ஒருவரைத்
தீமையினின்று விலகச் செய்யும்.


7 ஒருவருடைய செயல்கள் ஆண்டவருக்கு
உகந்தவையாயிருக்குமானால்,
அவர் அவருடைய எதிரிகளையும் அவருக்கு நண்பராக்குவார்.


8 தீய வழியில் சம்பாதிக்கும் பெரும் பொருளைவிட,
நேர்மையோடு ஈட்டும் சிறு தொகையே மேல்.


9 மனிதர் தம் வழியை வகுத்தமைக்கின்றார்;
ஆனால் அதில் அவரை வழிநடத்துபவரோ ஆண்டவர்.


10 அரசன் வாயினின்று பிறக்கும் வாக்குப் பொய்க்காது;
தீர்ப்பு வழங்கும் போது அவன் தவறு செய்யமாட்டான்.


11 நிறைகோலும் துலாக்கோலும் ஆண்டவருக்கே உரியன;
பையிலுள்ள எடைக்கற்களெல்லாம் அவரால் உண்டானவை.


12 தீச்செயலை அரசர்கள் அருவருப்பார்கள்;
ஏனெனில், நீதியே அரியணையின் உறுதியான அடிப்படையாகும்.


13 நேர்மையான பேச்சை அரசர் வரவேற்பார்;
நேரியவற்றைச் சொல்லுகிறவரிடம் அவர் அன்புசெலுத்துவார்.


14 அரசரின் சீற்றம் மரண தூதன் போன்றது;
ஆனால் ஞானமுள்ளவர் அதைத் தணித்துவிடுவார்.


15 அரசரின் முகமலர்ச்சி வாழ்வளிக்கும்;
அவரது கருணை பருவமழை பொழியும் மேகம் போன்றது.


16 பொன்னைவிட ஞானத்தைப் பெறுவதே மேல்;
வெள்ளியைவிட உணர்வைப் பெறுவதே மேல்.


17 நேர்மையானவர்கள் செல்லும் பாதை
தீமையை விட்டு விலகிச் செல்லும்;
தன் நடையைக் குறித்து அவ்வாறு விழிப்புடனிருப்பவன்
உயிரைக் காப்பாற்றிக்கொள்வான்.


18 அழிவுக்கு முந்தியது அகந்தை;
வீழ்ச்சிக்கு முந்தியது வீண்பெருமை.


19 மேட்டிமையானவர்களோடு கொள்ளையடித்த
பொருளைத் பகிர்ந்து மகிழ்வதைவிட,
மனத்தாழ்மையுடன் சிறுமைப்படுகிறவர்களோடு
கூடியிருப்பது நலம்.


20 போதனைக்குச் செவிகொடுப்பவன் வாழ்வடைவான்;
ஆண்டவரை நம்புகிறவன் நற்பேறு பெற்றவன்.


21 ஞானமுள்ளவர் பகுத்துணரும் ஆற்றல் பெற்றவர்
என்று கொள்ளப்படுவார்;
இனிமையாகப் பேசினால் சொல்வதை எவரும் ஏற்பர்.


22 விவேகமுள்ளவர்களுக்கு அவர்களது விவேகமே
வாழ்வளிக்கும் ஊற்றாகும்;
மூடருக்கு அவரது மடமையே போதிய தண்டனையாகும்.


23 ஞானமுள்ளவரின் மனம் அவரது பேச்சை விவேகமுள்ளதாக்கும்;
அவருடைய சொற்களை எவரும் ஏற்பர்.


24 இன்சொற்கள் தேன்கூடு போன்றவை;
மனத்திற்கு இனிமையானவை, உடலுக்கு நலம் தருபவை. [*]


25 ஒரு பாதை ஒருவருக்கு நல்ல வழிபோலத் தோன்றலாம்;
முடிவிலோ அது சாவுக்கு நடத்தும் பாதையாகிவிடும்.


26 உழைப்பவர் பசி அவரை மேலும் உழைக்கச் செய்கிறது;
உண்ண விரும்பும் அவரது வயிற்றுப்பசி அவரை அதற்குத் தூண்டுகிறது.


27 பிறர் குற்றங்களைக் கிண்டிக் கிளறித் தூற்றுபவர் கயவர்;
எரிக்கும் நெருப்புப் போன்றது அவரது நாக்கு.


28 கோணல் புத்திக்காரர் சண்டையை மூட்டிவிடுவர்;
புறங்கூறுவோர் நண்பரைப் பிரித்துவிடுவர்.


29 வன்முறையாளர் அடுத்தவரை ஏமாற்றி,
கெட்ட வழியில் அவரை நடக்கச் செய்வார்.


30 கண்ணை மூடிக்கொண்டிருப்போர்
முறைகேடானதைச் சிந்திப்பர்;
வாயை மூடிக்கொண்ருப்போர்
தீமை செய்யத் திட்டமிடுவர்.


31 நரைமுடி மதிப்பிற்குரிய மணிமுடி;
அது நேர்மையான நடத்தையால் வரும் பயன்.


32 வலிமை உடையவரைவிடப்
பொறுமை உடையவரே மேலானவர்;
நகரை அடக்குகிறவரைவிடத்
தன்னை அடக்குகிறவரே சிறந்தவர்.


33 மடியிலுள்ள திருவுளச் சீட்டை ஒருவர் குலுக்கிப் போடலாம்;
ஆனால், திருவுளத் தீர்ப்பை வெளிப்படுத்துபவர் ஆண்டவரே.


குறிப்பு

[*] 16:25 = நீமொ 14:12.


(தொடர்ச்சி):நீதிமொழிகள்:அதிகாரங்கள் 17 முதல் 18 வரை