திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்)/அதிகாரங்கள் 21 முதல் 22 வரை

விக்கிமூலம் இலிருந்து
"'வெளியே சிங்கம் நிற்கிறது;
வீதியில் கால் வைத்தால் கொல்லப்படுவேன்' என்கிறான் சோம்பேறி." - நீதிமொழிகள் 22:13

நீதிமொழிகள் (The Book of Proverbs)[தொகு]

அதிகாரங்கள் 21 முதல் 22 வரை

அதிகாரம் 21[தொகு]


1 மன்னவன் மனம் ஆண்டவரின் கைக்குள் அடங்கியிருக்கிறது;
வாய்க்கால் நீரைப்போல அவர் அதைத் தம் விருப்பப்படி திருப்பி விடுகிறார்.


2 மனிதருடைய நடத்தையெல்லாம் அவர் பார்வையில்
குற்றமற்றதாய்த் தோன்றலாம்.
ஆனால் ஆண்டவர் அவர் உள்ளெண்ணத்தைச் சீர்தூக்கிப் பார்க்கிறார்.


3 பலிசெலுத்துவதைவிட
நேர்மையாகவும் நியாயமாகவும் நடப்பதே
ஆண்டவருக்கு உவப்பளிக்கும்.


4 மேட்டிமையான பார்வை, இறுமாப்புக்கொண்ட உள்ளம் -
இவை பொல்லாரிடம் பளிச்சென்று காணப்படும் பாவங்கள்.


5 திட்டமிட்டு ஊக்கத்துடன் உழைப்பவரிடம்
செல்வம் சேரும் என்பது திண்ணம்;
பதற்றத்துடன் வேலைசெய்பவர் பற்றாக்குறையில் இருப்பார்.


6 ஒருவர் பொய் பேசிச் சேர்க்கும் பொருள், காற்றாய்ப் பறந்துவிடும்;
அவரது உயிரையும் அது வாங்கி விடும்.


7 பொல்லார் நேர்மையானதைச் செய்ய மறுப்பதால்,
அவர்களது கொடுமை அவர்களையே வாரிக் கொண்டுபோகும்.


8 குற்றம் செய்பவர் வழி கோணலானது;
குற்றமற்றவர் செய்கை நேர்மையானது.


9 மாடி வீட்டில் நச்சரிக்கும் மனைவியோடு வாழ்வதைவிட,
குடிசை வாழ்க்கையே மேல்.


10 பொல்லார் மனம் தீமை செய்வதில் நாட்டங்கொள்ளும்;
தமக்கு அடுத்திருப்பாரை அவர்கள் கனிவுடன் பார்ப்பதும் இல்லை.


11 ஏளனம் செய்வோரை அடிக்கும்போது
அதைக் காணும் பேதையராவது படிப்பினை பெறுவர்;
உணர்வுள்ளவருக்கு அறிவு புகட்டும் போது
அவர் மேலும் அறிவுடையவராவார்.


12 நீதிமிகு இறைவன் பொல்லாருடைய வீட்டைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்;
அவர்களைத் தீச்செயல் காரணமாகத் தூக்கி எறிந்து அழித்துவிடுகிறார்.


13 ஏழை கூக்குரலிடும்போது எவன் காதைப் பொத்திக்கொள்கிறானோ,
அவன் தானே உதவிக்காக மன்றாடும்போது
எவரும் அவனுக்குச் செவி கொடுக்கமாட்டார்.


14 மறைவாக நன்கொடை கொடுத்து சினத்தைத் தணிப்பார்கள்;
மடியில் கைக்கூலி திணித்துச் சீற்றத்தை ஆற்றுவார்கள்.


15 நீதி நிலைநாட்டுவது நேர்மையானவருக்கு மகிழ்ச்சியளிக்கும்;
தீமை செய்வோருக்கோ அது திகிலுண்டாக்கும்.


16 விவேகம் காட்டும் வழியை விட்டு விலகிச் செல்பவர்,
செத்தாரிடையே தங்க விரைபவர்.


17 ஒய்யாரமான வாழ்க்கையை நாடுகிறவர் ஏழையாவார்;
மதுவையும் நறுமணப் பொருள்களையும் விரும்புகிறவர் செல்வராகமாட்டார்.


18 நல்லவருக்குப் பொல்லாங்கு செய்யப் பார்ப்பவர்
தாமே அவருக்குப் பதிலாள் ஆகிவிடுவார்;
நேர்மையானவரை வஞ்சிக்கப் பார்ப்பவர்
அவருக்குப் பதிலாகத் தாமே வஞ்சனைக்கு ஆளாவார்.


19 நச்சரிப்பவளும் சிடுசிடுப்பவளுமான மனைவியுடன் வாழ்வதைவிட,
பாலை நிலத்தில் தனியே வாழ்வதே மேல்.


20 ஞானமுள்ளவர் வீட்டில் செல்வமும் அரும்பொருள்களும் இருக்கும்;
மதிகேடர் தம் செல்வத்தைக் கரைத்துவிடுவார்.


21 நேர்மையையும் இரக்கத்தையும் கடைப்பிடித்து நடப்பவர்,
நீடித்து வாழ்வார், மேன்மையும் அடைவார்.


22 வீரர் நிறைந்த பட்டணத்தையும் நல்வாழ்வையும்
ஞானமுள்ளவர் கைப்பற்றுவார்;
அவர்கள் நம்பியிருந்த அரணையும் இடித்துக் தள்ளுவார்.


23 தம் வாயையும் நாவையும் காப்பவர்,
இடுக்கண் வராமல் தம்மைக் காத்துக்கொள்வார்.


24 ஏளனம் செய்யும் செருக்குடையோரின் பெயர் இறுமாப்பு;
அளவு கடந்த பெருமையுடன் நடப்பதே அவர் போக்கு.


25 சோம்பேறியின் அவா அவரைக் கொல்லும்;
ஏனெனில், அவர் கைகள் வேலை செய்ய மறுக்கின்றன.


26 அவர் நாள் முழுதும் பிறர் பொருளுக்காக ஏக்கங்கொண்டிருப்பார்;
ஆனால் சான்றோர் தம் பொருளை இல்லையென்னாது வழங்குவர்.


27 பொல்லார் செலுத்தும் பலி அருவருக்கத்தக்கது;
தீய நோக்கத்தோடு அவர்கள் செலுத்தும் பலி இன்னும் அருவருக்கத்தக்கதன்றோ?


28 பொய்ச்சான்று கூறுபவன் கெட்டழிவான்;
உன்னிப்பாய்க் கேட்பவன் பேச்சோ என்றைக்கும் ஏற்புடையதாகும்.


29 பொல்லார் முகத்தில் போலி வீரம் காணப்படும்;
நேர்மையானவர் தம் நடத்தை சீரானது என்னும் உறுதியுடனிருப்பார்.


30 ஆண்டவரின் எதிரில் நிற்கக் கூடிய ஞானமுமில்லை,
விவேகமுமில்லை, அறிவுரையுமில்லை.


31 போர் நாளுக்கென்று குதிரையை ஆயத்தமாக வைத்திருக்கலாம்;
ஆனால் வெற்றி கிடைப்பது ஆண்டவராலேயே.


அதிகாரம் 22[தொகு]


1 திரண்ட செல்வத்தைவிட நற்பெயரைத் தெரிந்துகொள்வது மேல்;
வெள்ளியையும் பொன்னையும்விடப் புகழைப் பெறுவதே மேல்.


2 செல்வருக்கும் வறியவருக்கும் பொதுவான ஒன்று உண்டு;
ஏனெனில், அனைவரையும் உண்டாக்கியவர் ஆண்டவரே.


3 எதிரில் வரும் இடரைக் கண்டதும் விவேகமுள்ளவர் மறைந்து கொள்வார்;
அறிவற்றோர் அதன் எதிரே சென்று கேட்டுக்கு ஆளாவர்.


4 தாழ்மையுள்ளவர்களுக்கும்
ஆண்டவரிடம் அச்சம் உடையவர்களுக்கும் கிடைக்கும் பயன்
செல்வமும் மேன்மையும் நீடித்த ஆயுளுமாகும்.


5 நேர்மையற்றவர் வழியில் முள்ளும் கண்ணியும் இருக்கும்;
விழிப்புடன் இருப்பவர் அவற்றினருகில் செல்லமாட்டார்.


6 நல்வழியில் நடக்கப் பிள்ளையைப் பழக்கு;
முதுமையிலும் அவர் அந்தப் பழக்கத்தை விட்டு விடமாட்டார்.


7 செல்வர் ஏழையை அடக்கி ஆளுவார்;
கடன்பட்டவர் கடன் கொடுத்தவருக்கு அடிமை.


8 அநீதியை விதைப்பவன் கேட்டை அறுப்பான்;
அவனது சீற்றம் அவனையே எரித்துவிடும்.


9 கருணை நிறைந்தவர் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பார்;
அவரே ஆசி பெற்றவர்.


10 ஏளனம் செய்வோனை வெளியே துரத்து, சண்டை நின்றுவிடும்;
சச்சரவும் பழிச்சொல்லும் ஒழியும்.


11 ஆண்டவர் தூய உள்ளத்தினரை விரும்புகிறார்;
இன்சொல் கூறுவோர் அரசனது நட்பைப் பெறலாம்.


12 அறிவுடையோரைக் காப்பதில் ஆண்டவர் கண்ணாயிருக்கிறார்;
கயவனின் வழக்கைத் தள்ளுபடி செய்கிறார்.


13 "வெளியே சிங்கம் நிற்கிறது;
வீதியில் கால் வைத்தால் கொல்லப்படுவேன்" என்கிறான் சோம்பேறி.


14 பரத்தையின் வாய் ஓர் ஆழமான படுகுழி;
ஆண்டவரின் சினத்திற்காளானவர் அதில் போய் விழுவார்.


15 பிள்ளையின் இதயத்தில் மடமை ஒட்டிக்கொண்டிருக்கும்;
கண்டித்துத் திருத்தும் பிரம்பால் அதை அகற்றி விடலாம்.


16 செல்வராகும் பொருட்டு ஏழைகளை ஒடுக்குகிறவனும்,
செல்வருக்குப் பொருள் கொடுக்கிறவரும் ஏழையாவார்கள்.

முப்பது முதுமொழிகள்[தொகு]


17 ஞானிகள் போதித்ததை நான் உனக்குக் கூறுகின்றேன், செவி கொடுத்துக் கேள்;
நான் புகட்டும் அறிவை மனத்தில் ஏற்றுக்கொள்.
18 அவற்றை நீ உள்ளத்தில் பதிய வைத்துக் கொண்டு,
தேவைப்படும்போது எடுத்துரைக்கக் கூடுமானால்
உனக்கு மகிழ்ச்சியுண்டாகும்.
19 நீ ஆண்டவரை நம்பவேண்டுமென்று,
அவற்றை நான் உனக்கு இன்று தெரியப்படுத்துகிறேன்.
20 அறிவும் நல்லுரையும் தரக்கூடிய முப்பது முதுமொழிகளை
நான் உனக்கென்றே எழுதி வைத்திருக்கிறேன் அல்லவா?
21 அவற்றைக் கொண்டு மெய்ம்மையை உன்னால் விளக்கக் கூடும்.


1


22 ஒருவர் ஏழையாய் இருக்கிறார் என்று அவரை வஞ்சிக்காதே;
ஒருவர் ஆதரவின்றி இருக்கிறார் என்று
அவரை நீதிமன்றத்தில் சிறுமைப்படுத்தாதே.
23 ஏனெனில், ஆண்டவர் அவர்களுக்காக வாதாடுவார்;
அவர்களது உயிரை வாங்கப் பார்க்கிறவர்களின் உயிரை
அவர் பறித்துக்கொள்வார்.


2


24 கடுஞ்சினங்கொள்பவனோடு நட்புக்கொள்ளாதே;
எரிச்சல்கொள்பவனோடு தோழமை கொள்ளாதே.
25 அப்படிச் செய்தால் அவர்களின் போக்கை நீயும் கற்றக்கொள்வாய்;
உன் உயிர் கண்ணியில் சிக்கிக் கொள்ளும்.


3


26 பிறருக்காக ஒருபோதும் பிணையாய் நில்லாதே;
பிறர் கடனுக்காக ஒருநாளும் பிணையாய் நிற்காதே.
27 அந்த கடனை திருப்பிக்கொடுக்க உனக்கு ஒரு வழியும் இல்லாதிருந்தால்,
நீ படுத்திருக்கையில் உன் படுக்கையும் பறிபோய்விடுமன்றோ?


4


28 வழிவழிச் சொத்துக்கு உன் மூதாதையர் குறித்து வைத்த எல்லையை
நீ மாற்றி அமைக்காதே.


5


29 தம் அலுவலில் திறமை காட்டுகின்ற ஒருவரைப் பார்;
அவர் பாமர மனிதரிடையே இரார்; அரசு அவையில் இருப்பார்.


(தொடர்ச்சி):நீதிமொழிகள்:அதிகாரங்கள் 23 முதல் 24 வரை