திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/யோபு/அதிகாரங்கள் 27 முதல் 28 வரை

விக்கிமூலம் இலிருந்து
யோபு தம் நண்பர்களுடன். சுவரோவியம். காலம்: நடுக்காலம். காப்பிடம்: ஹாட்டெம், கெல்ட்லாந்து, நெதர்லாந்து.

யோபு (The Book of Job)[தொகு]

அதிகாரங்கள் 27 முதல் 28 வரை

அதிகாரம் 27[தொகு]

கடவுளின் ஆற்றலும் யோபின் மாசின்மையும்[தொகு]


1 யோபு தமது உரையைத் தொடர்ந்து கூறியது:


2 என்றுமுள்ள இறைவன்மேல் ஆணை!
அவர் எனக்கு உரிமை வழங்க மறுத்தார்;
எல்லாம் வல்லவர் எனக்கு வாழ்வைக் கசப்பாக்கினார்.


3 என் உடலில் உயிர் இருக்கும்வரை,
என் மூக்கில் கடவுளின் மூச்சு இருக்கும்வரை,


4 என் உதடுகள் வஞ்சகம் உரையா;
என் நாவும் பொய்யைப் புகலாது.


5 நீங்கள் சொல்வது சரியென ஒருகாலும் ஒப்புக்கொள்ள மாட்டேன்.
சாகும்வரையில் என் வாய்மையைக் கைவிடவும் மாட்டேன்.


6 என் நேர்மையை நான் பற்றிக் கொண்டேன்;
விடவே மாட்டேன்;
என் வாழ்நாளில் எதைக் குறித்தும் என் உள்ளம் உறுத்தவில்லை.


7 என் பகைவர் தீயோராக எண்ணப்படட்டும்;
என் எதிரிகள் நேர்மையற்றோராகக் கருதப்படட்டும்.


8 கடவுள் இறைப்பற்றில்லாதோரை அழித்து,
அவர்களின் உயிரைப் பறிக்கும்போது,
அவர்களுக்கு என்ன நம்பிக்கை?


9 அவர்கள்மேல் கேடுவிழும்போது
இறைவன் அவர்களின் கூக்குரலைக் கேட்பாரா?


10 எல்லாம் வல்லவர் தரும் மகிழ்ச்சியை அவர்கள் நாடுவார்களா?
கடவுளைக் காலமெல்லாம் அழைப்பார்களா?


11 இறைவனின் கைத்திறனை நான் உங்களுக்குக் கற்பிப்பேன்;
எல்லாம் வல்லவரின் திட்டங்களை மறைக்கமாட்டேன்.


12 இதோ! நீங்கள் யாவருமே இதைக் கண்டிருக்கின்றீர்கள்;
பின், ஏன் வறட்டு வாதம் பேசுகின்றீர்கள்?


13 இதுவே கொடிய மனிதர் இறைவனிடமிருந்து பெறும் பங்கு;
பொல்லாதவர் எல்லாம் வல்லவரிடம் பெறும் சொத்து.


14 அவர்களின் பிள்ளைகள் பெருகினும் வாளால் மடிவர்;
அவர்களின் வழிமரபினர் உண்டு நிறைவடையார்.


15 அவர்களின் எஞ்சியோர் நோயால் மடிவர்;
அவர்களின் கைம்பெண்கள் புலம்ப மாட்டார்.


16 மணல்போல் அவர்கள் வெள்ளியைக் குவிப்பர்;
அடுக்கடுக்காய் ஆடைகளைச் சேர்ப்பர்.


17 ஆனால் நேர்மையாளர் ஆடைகளை அணிவர்;
மாசற்றவர் வெள்ளியைப் பங்கிடுவர்.


18 சிலந்தி கூடு கட்டுவதுபோலும்,
காவற்காரன் குடில் போடுவதுபோலும்
அவர்கள் வீடு கட்டுகின்றனர்.


19 படுக்கைக்குப் போகின்றனர் பணக்காரராய்; ஆனால் இனி அவ்வாறு இராது;
கண் திறந்து பார்க்கின்றனர்; செல்வம் காணாமற் போயிற்று.


20 திகில் வெள்ளம்போல் அவர்களை அமிழ்த்தும்;
சுழற்காற்று இரவில் அவர்களைத் தூக்கிச் செல்லும்.


21 கீழைக் காற்று அவர்களை அடித்துச் செல்லும்;
அவர்களின் இடத்திலிருந்து அவர்களைப் பெயர்த்துச் செல்லும்;


22 ஈவு இரக்கமின்றி அவர்களை விரட்டும்;
அதன் பிடியிலிருந்து தலைதெறிக்க ஓடுவர்.


23 அவர்களைப் பார்த்து அது கைகொட்டி நகைக்கும்;
அதன் இடத்திலிருந்து அவர்கள்மேல் சீறிவிழும்.


அதிகாரம் 28[தொகு]

ஞானத்தின் மேன்மை[தொகு]


1 வெள்ளிக்கு விளைநிலம் உண்டு;
பொன்னுக்குப் புடமிடும் இடமுண்டு.


2 மண்ணிலிருந்து இரும்பு எடுக்கப்படுகின்றது;
கல்லிலிருந்து செம்பு உருக்கப்படுகின்றது.


3 மனிதர் இருளுக்கு இறுதி கண்டு,
எட்டின மட்டும் தோண்டி,
இருட்டிலும் சாவின் இருளிலும்
கனிமப் பொருளைத் தேடுகின்றனர்.


4 மக்கள் குடியிருப்புக்குத் தொலையில்
சுரங்கத்தைத் தோண்டுவர்;
வழிநடப்போரால் அவர்கள் மறக்கப்படுவர்;
மனிதரிடமிருந்து கீழே இறங்கி ஊசலாடி வேலை செய்வர்.


5 மேலே நிலத்தில் உணவு விளைகின்றது;
கீழே அது நெருப்புக் குழம்பாய் மாறுகின்றது.


6 நீலமணிகள் அதன் கற்களில் கிட்டும்;
பொன்துகளும் அதில் கிடைக்கும்.


7 அதற்குச் செல்லும் பாதையை,
ஊன் உண்ணும் பறவையும் அறியாது;
கழுகின் கண்களும் அதைக் கண்டதில்லை.


8 வீறுகொண்ட விலங்குகள் அதன் மேல் சென்றதில்லை;
சிங்கமும் அவ்வழி நடந்து கடந்ததில்லை.


9 கடின பாறையிலும் அவர்கள் கைவைப்பர்;
மலைகளின் அடித்தளத்தையே பெயர்த்துப் புரட்டிடுவர்.


10 பாறைகள் நடுவே சுரங்க வழிகளை வெட்டுகின்றனர்;
விலையுயர் பொருளையே அவர்களது கண் தேடும்.


11 ஒழுகும் ஊற்றுகளைத் தடுத்து நிறுத்துகின்றனர்;
மறைவாய் இருப்பதை ஒளிக்குக் கொணர்கின்றனர்.


12 ஆனால், ஞானம் எங்கே கண்டெடுக்கப்படும்?
அறிவின் உறைவிடம் எங்கேயுள்ளது?


13 மனிதர் அதன் மதிப்பை உணரார்;
வாழ்வோர் உலகிலும் அது காணப்படாது.


14 'என்னுள் இல்லை' என உரைக்கும் ஆழ்கடல்;
'என்னிடம் இல்லை' என இயம்பும் பெருங்கடல்.


15 தங்கத்தைக் கொடுத்து அதைப் பெறமுடியாது;
வெள்ளியால் அதன் விலையை நிறுக்க இயலாது.


16 ஓபீர்த் தங்கமும் கோமேதகமும்
அரிய நீலமணியும் அதற்கு மதிப்பாகா!


17 பொன்னும் பளிங்கும் அதற்கு நிகராகா;
பசும்பொன் கலன்களும் பண்டமாற்றாகா.


18 மணியும் பவளமும் அதற்கு இணையில்லை;
மதிப்பினில் முத்தினை ஞானம் விஞ்சும்.


19 எத்தியோப்பிய புட்பராகம் அதற்கு இணையல்ல;
பத்தரை மாற்றுத் தங்கமும் அதற்கு நிகரல்ல.


20 அவ்வாறாயின், எங்கிருந்து வருகிறது ஞானம்?
எங்குள்ளது அறிவின் உறைவிடம்?


21 வாழ்வோர் அனைவர்தம் கண்களுக்கும் ஒளிந்துள்ளது;
வானத்துப் பறவைகளுக்கும் மறைவாய் உள்ளது.


22 படுகுழியும் சாவும் பகர்கின்றன;
அதைப் பற்றிய பேச்சு காதில் விழுந்தது;


23 அதன் வழியைத் தெரிந்தவர் கடவுள்;
அதன் இடத்தை அறிந்தவரும் அவரே!


24 ஏனெனில், வையகத்தின் எல்லைவரை அவர் காண்கின்றார்;
வானத்தின்கீழ் உள்ளவற்றைப் பார்க்கின்றார்.


25 காற்றுக்கு எடையைக் கடவுள் கணித்தபோது,
நீரினை அளவையால் அளந்தபோது,


26 மழைக்கு அவர் கட்டளை இட்டபொழுது,
இடி மின்னலுக்கு வழியை வகுத்த பொழுது,


27 அவர் ஞானத்தைக் கண்டார்;
அதைப்பற்றி அறிவித்தார்;
அதை நிலைநாட்டினார்;
இன்னும் அதை ஆய்ந்தறிந்தார்.


28 அவர் மானிடர்க்குக் கூறினார்:
ஆண்டவர்க்கு அஞ்சுங்கள்; அதுவே ஞானம்;
தீமையை விட்டு விலகுங்கள்; அதுவே அறிவு. [*]


குறிப்பு

[*] 28:28 = திபா 111:10; நீமொ 1:7; 9:10.


(தொடர்ச்சி): யோபு:அதிகாரங்கள் 29 முதல் 30 வரை